PDA

View Full Version : ஒரு வீடும் சில மனிதர்களும்



யவனிகா
10-01-2008, 10:12 AM
"பால்காரரே... இன்னிலிருந்து ஒரு மாசத்துக்கு 2 லிட்டர் பால் சேர்த்து ஊத்துங்க..." சொன்ன கோகிலா அறுபதுகளின் ஆரம்பத்தில் இருந்தாள். அறுபது வயதில்... என்ன அப்படி ஒரு சந்தோசம் இருந்து விடப்போகிறது?... என்று நாம் யோசிக்கும் வண்ணம்... முகம் மகிழ்ச்சியில் பூரித்திருந்தது.

"என்ன கோகிலாம்மா... பையனும் பொண்ணும் வெளிநாட்டிலிருந்து வந்திட்டாங்க போல... எங்களுக்கொண்ணும் விசேமில்லையா... எப்பம்மா வந்தாங்க... பேரம் பேத்திய பாத்த சந்தோசத்தில பத்திருபது வயது கொறைஞ்சு போயிடுச்சு போல...." பாலை ஊற்றிய படி பேச ஆரம்பித்தார் பால்கார கோணார்.

ஆமாம்பா... முந்தாநாளே வந்திட்டாங்க. மூணு வருசம் கழிச்சு அண்ணனும் தங்கச்சியும் ஒட்டுக்கா லீவு போட்டிட்டு வந்திருக்காங்க.. உனக்குத் தான் தெரியுமே... நம்ம சிவசு இருக்கிறது அமெரிக்காவில... கல்யாண முடிஞ்சவுடனேயே மருமகனோட ஆஸ்திரேலியா போயிட்டா மீரா... ரெண்டு பேரும் சொல்லி வெச்சி லீவு வாங்கி அம்மாவப் பாக்க வந்திருக்காங்க... அந்த ஊரிலெல்லாம் லீவு கிடைக்கறதே கஷ்டம்பா....

சரிம்மா, நம்ம குழந்தகளைப் பத்தித் தான் எனக்கு நல்ல தெரியுமே... நான் பால் ஊத்தி வளந்த பசங்க... பேரக்குட்டிங்க சேதி என்ன அத சொல்லுவீங்களா.....

பேரக் குழந்த என்று சொன்னவுடன் தனிச்சோபை வந்து உக்காத்து கொண்டது கோகிலாம்மா முகத்தில்.

அய்யோ... அதை ஏன் கேக்கறீங்க... அப்படியே வாத்தியாரய்யாவ உரிச்சு வெச்சிருக்கு சிவசுவோட சின்னக்குட்டி அர்ஜூன். பெரிய பொண்ணு அனாமிகா ரொம்ப அமைதி. நம்ம மீராவோட குட்டி சோனு இருக்கானே ரெட்டை வாலு... பால்காரரே இதுகெல்லாம் தஸ்ஸு புஸ்ஸுன்னு அதுகளுக்குள்ள இங்கிலீஸ்ல தான் பேசிக்குது. ஆனா தமிழும் தக்கி முக்கி பேசுதுக... சும்மா சொல்லக் கூடாது... என் கூடவே சுத்திட்டு இருக்குதுக...

சரி மருமகப் பொண்ணு அமெரிக்காக்காரப் பொண்ணாமே?... சிவசு மனசுக்குப் புடிச்சுப் போயி கண்ணாலம் கட்டிக்கிச்சாமே.. அப்படியா?

ஆமாங்க கோணாரே... அமெரிக்காவில கூட வேலை செய்யறவங்களாம். பூர்வீகம் இந்தியா தானாம். அங்கியே பிறந்து வளந்த ஐயர் வீட்டுப் பொண்ணு ... பேரு என்ன தெரியுமா... அங்கையர்கண்ணி... அம்முனு சிவசு கூப்பிடுறான்... நல்ல பாந்தமான பொண்ணு... யாரை கல்யாணம் செஞ்சா என்ன? கடைசி வரை பசங்க நிம்மதியா இருந்தா சரி...

அம்மா.... அம்மா... என்று மீராவின் குரல் கேட்டு...

சரி பால்காரரே.... புள்ளங்க எந்திருச்சுட்டாங்க போல..... சாவகாசமா சாய்ந்திரம் வாங்க... சிவசு கூட உங்களப் பத்திக் கேட்டான். நான் காப்பி போடறேன். மீரா பல்விளக்காமயே காப்பி குடிக்கற புள்ள... உங்களுக்குத் தான் தெரியுமே...

என்ன மீரா... காப்பியா... என்ன சீக்கிரம் எந்திருச்சிட்டே....

அம்மா இங்க வாயேன்... சோனு கை, காலப்பாரேன்... அம்மை போட்ட மாதிரி தடிச்சிருக்கு...

அடிப்பாவி மகளே... என்ன சொல்ற, புள்ளையக் கொண்டா இங்கே... ஆமாமா... இதென்ன இது நேத்துக் கூட நல்லாத்தானே இருந்தான்... உடம்பெல்லாம் முத்து முத்தா இருக்கே... போ சிவசுவ கூப்பிடு...

அண்ணா... அண்ணா... தூங்கினது போதும் இங்க கொஞ்சம் வாயேன்... எந்திரி.... சரியான தூங்கு மூஞ்சி...

சத்தத்தில் தூக்கம் கலைந்து எழுந்து வந்த சிவசுசுக்கு 35 வயது. மருத்துவருக்கே உரிய அந்த தோரணையும் கம்பீரமும் முகத்தில் இருந்தது.

என்ன ஆச்சு மீரா... என்னம்மா ஆச்சு.... லீவுக்கு வந்தாக்கூட நிம்மதியா தூங்க விடமாட்டீங்களா?

'புள்ளய பாரு சிவசு... கை காலெல்லாம் கொப்பளம்... என்னாச்சுனு தெரியல..' பதறியபடி கோகிலாம்மாள்.

இது தானா... சோனுக்கு கொசுக்கடி புதுசும்மா... அலர்ஜியாயிருக்கு... மீராவப் பத்தி தெரியாதா? எறும்பு கடிச்சாலே தேள் கொட்டின மாதிரி அழுது ஆர்ப்பாட்டம் செய்வா... நீயும் அவ பேச்ச கேட்டிக்கிட்டு.... பார்மஸில மருந்து வாங்கிப் போட்டா சரியாகும். நீதான் மஞ்சள அரைச்சுப் பூசுவியே எல்லாத்துக்கும்... இதுக்கும் பூசு... அது போதும்.

சோனு.. யு வில் பீ ஆல்ரைட் மேன்.... டோன் வொர்ரி... ஏண்டி வந்தவுடன் ஆரம்பிச்சிட்டியா... உங்கூட 40 நாள் எப்படித்தான் இருக்கப் போறேனோ தெரியலயே...

போடா உனக்கென்ன... புள்ளைக்கு ஏதாவது ஒண்ணுன்னா அந்த மனுசன் எம்மேல தான் பாய்வாரு... தெரிஞ்ச கதைதான?

ஹாரிபிள்... ஐ கேன்ட் இமேஜின் திஸ்... ஐ வாண்ணா கோ பேக் டு மை கண்ட்ரி" பாய் கட் வெட்டப்பட்ட தலை முடியை சிலுப்பிக் கொண்டே... சிணுங்கலுடன் வந்தாள் 8 வயது அனாமிகா... சிவசுவின் சீமந்த புத்திரி.
"வாட் ஹேப்பண்ட்... வாட்ஸ் யுவர் ப்ராப்ளம்" சிவா கேட்பற்குள், மீரா குறுக்கிட்டாள்.
என்னம்மா பினாமி என்ன ஆச்சு?...
ஆண்ட்டி எனக்கு டாய்லெட் போகணும்...
அதுக்கென்ன போ...
"வ்வேர் இஸ் வெஸ்டெர்ன் குளோசெட்... எனக்கு இந்த டைப் பழக்கம் இல்ல"
இப்படி ஒரு பிரச்சனையை யாரும் எதிர் பார்க்கவில்லை...
இதை நான் யோசிக்கவே இல்லையே� பாவம் குழந்தைகள் அதுங்களுக்கு இதெல்லாம் பழக்கமில்லியே! பாட்டியப் பாக்க வந்து கஷ்டப்படுதுக.. கோகிலம்மாவின் முகம் வாடியது.

அதனால தான் அப்பவே சொன்னேன். வீட்ட இடிச்சிட்டு மாத்திக் கட்டலாம்னு. நீதான் அப்பா கட்டின வீடு.. ஒரு செங்கல்லக் கூட தொந்தரவு செய்யக் கூடாதுன்னு அடம் புடிக்கிற. காலத்தோட மாறப் பழகிக்கணும்மா.. இது சிவசு.

இத்தன வருசம் சொல்லியும் அம்மா கேக்கல. இப்ப சொன்னா மட்டும் கேக்கப் போறாங்களா. இப்ப அனாமிகாவோட பிரச்சினைக்கு வழியப் பாருன்னா.
இன்னைக்கு ஒரு நாள் ... ட்ரை டு அட்ஜஸ்ட்... அப்புறம் பாக்கலாம்... இது சிவசு.
வாட் டேட்... டாய்லெட் உள்ள விழுந்துட்டா... பயம்மா இருக்கு டேட்... அனாமிகா.
அம்மா... இவளுக்கு இரண்டு ஸ்பூன் விளக்கெண்ணையும் ஒரு வாழப்பழமும் குடு... அப்புறம் எங்க போகச் சொன்னாலும் போவா பாறேன்..
அண்ணி எங்க அண்ணா... தூங்கறாங்களா... புருசனும் பொண்டாட்டியும் சரியான ஜோடி தான்... சரியான தூங்கு மூஞ்சிக் குடும்பம்... எங்க நீ பெத்தெடுத்த அடுத்த முத்து அர்ஜூன். ஏன்னா இதென்ன பேரு அனாமிகான்னு.... அமானுஷ்யமா இருக்கு... வேற பேரே கிடைக்கலையா உனக்கு? , இது மீரா.

அனாமிகான்னா பேரே இல்லாதவள்ன்னு அர்த்தம்... இதுக்கெல்லாம் ஒரு ரசனை வேணும்டி... உன் பையனுக்கு வெச்சிருக்க பாரு சுப்பிரமணின்னு... அனாமிகா பக்கத்தில் நிக்க முடியுமா...

நான் ஒண்ணும் வெக்கல சுப்பிரமணின்னு... அது அவரோட அப்பா பேரு ... என் மாமியாரு செலக்சன்... என்றாள் மீரா.

இருக்கட்டும்... உன்னைக் வெக்கச் சொன்னா மட்டும் என்ன சொல்லிருப்ப.... கமலஹாசன்னு வெச்சிருப்ப... கூடவே பத்மஷ்ரின்னு பட்டத்தோட வெச்சிருப்ப... அதும் இல்லன்ன பத்தாப்பு படிக்கும் போது உன் பின்னாலே சுத்தனானே... அவன் பேரு என்ன... மோகன் விஜி... அவன் பேரு வெச்சிருப்ப... அவன் மேல உனக்கொரு சாப்ட் கார்னர் இருந்த மாதிரி தெரிஞ்சிதே... இது சிவசு.

அம்மா... பாரும்மா அண்ணாவ... என்கிட்ட மட்டும் எப்பப்பாரு வம்ப்பிழுப்பான்... அவன் பொண்டாட்டிகிட்ட பேசச் சொல்லு... அம்மு.. அம்முன்னு ஒரே வழிசல்...

என் பிரச்சினைக்கு ஒரு வழி சொல்லுங்க டேட், சிணுங்கினாள் அனாமிகா.

பொறு டியர், உள்ள போனா வெளிய வந்து தான தீரணும். தீர்வில்லாத பிரச்சனைகள் எதுவுமே கிடையாது, மரணத்தைத் தவிர. மரணம் பல பிரச்சனைகளுக்குத் தீர்வா அமையும். ஆனா அது கூட இன்னொரு பிரச்சனைக்கு ஆரம்பம் தான், மறுபடி பிறக்கனும். அம்மா வயித்தில இருந்து வெளியே வந்ததும் அழணும் புணரபி மரணம் புணரபி ஜனனம்- சிவசு.

என்ன ஆண்ட்டி, ஷிவா பிலாசபி பேச ஆரம்பிச்சிட்டாரா? திடிருன்னு ஒரு நாள் உங்க புள்ளையாண்டான் கசாயம் கட்டிண்டு, கமண்டலம் எடுத்துட்டுப் போயிருவாரோன்னு பயமா இரூக்கு ஆண்ட்டி நீங்க கொஞ்சம் அட்வைஸ் பண்ணப் படாதோ? இப்பத்தான் எழுந்து வருகிற அம்மு என்கிற அங்கயர்கண்ணி. தூக்கக் கலக்கத்தில் அங்கங்கே வேண்டுமென்றே கலைத்து விடப்பட்ட மாடர்ன் ஓவியம் போல் இருந்தாள்.

வாம்மா நீ காப்பி குடிப்பியா�

ஓ பேஷா, குடிப்பனே. தாங்க்ஸ் ஆண்ட்டி.

சிவசு அந்த மேஸ்திரியக் கூப்பிட்டு பாத்ரூம மாத்தி உங்க வசதிக்கு கட்டிக்கலாம். நான் போய் சொல்லிட்டு வரேன்.

இரும்மா என்ன அவசரம். பசங்க எல்லாரும் எந்திரிக்கட்டும். என்ன டிபன் பண்ணிருக்க.

இட்லி, புதினாச் சட்னி கேட்டா மீரா . உனக்கு அடைன்னா பிடிக்குமே! வெல்லமும், வெண்ணையும் கூட இருக்கு, உனக்கு என்னம்மா வேணும்?�மருமகளைப் பார்த்துக் கேட்டாள், கோகிலம்மாள்.

எனக்கு எதுவா இருந்தாலும் ஒ.கே. ஆண்ட்டி. நான் பசிக்கு சாப்பிடறவ. ருசிக்கு இல்லை. உங்க புள்ளைக்குத்தான் நாக்கு நீளம் அதிகம். நான் எது செஞ்சாலும் அம்மா மாதிரி இல்லைம்பார். அவர கவனிங்க அது போறும். ஆனாலும் இப்படி பிள்ள வளத்தக் கூடாது ஆண்ட்டி. இப்ப நான்னா சிரமப் படறேன்.

இதற்குள் பொடிப் பட்டாளங்கள் எல்லாம் எழுந்து விட்டன போலும். அமளி துமளி ஆரம்பித்து விட்டது. தினமும் நெட்டில் சாட் செய்தாலும் நேரில் பார்த்து பேசுவது போல ஆகுமா?

யு னோ வாட் ஹேப்பண் இன் மை ஸ்கூல். பொடிசுகள் அததுகள் கதைகளை நெல்லிக் காய் மூட்டையாய், அவிழ்த்து விட்டுக் கொண்டிருந்தனர். கொண்டு வந்த டாய்ஸ் , புக்ஸ் எல்லாம் இறைத்து வைத்துக் கொண்டு.

ஒரு வழியாக சாப்பாட்டுக் கடை ஓய்ந்தது.

அம்மா உனக்கும் வயசாயிடுச்சு. தனியாத் தான் இருப்பேன்னு அடம் பண்ணறே. ஒண்ணு எங்ககூட அமெரிக்கா வந்திடு. இல்ல மீரா கூட ஆஸ்திரேலியா போ. இப்படி தனியா உன்ன விட்டிட்டு போக எங்களுக்கு மனசே வரலை. ஏம்மா வர மாட்டேங்கிற. அப்படி என்ன தான் இருக்கு இந்த வீட்டில? பழைய காலத்துக் கட்டு வீடு. உதிந்து போன காரையும், கல்லுமா! இடிச்சிட்டாவது கட்டித்தர்றேம்மா. கொஞ்சம் வசதியாவாவது இரேன். நான் கொஞ்சமாவது சந்தோசப் படுவேன், என்றான் சிவசு.

ஆமா பாட்டி ரெம்ப சூடா இருக்கு பாட்டி. சென்ரலைஸ்டு ஏஸி பண்ணித்தாங்க, டேட்..அனாமிகா முனகிக் கொண்டே வரவும். அவள் பின்னேயே அர்ஜுனும், சோனுவும் வந்தார்கள்.

பாட்டி முறுக்கு சூப்பர். இன்னொன்னு வேணும். இது சோனு.

அம்மா இங்க பாரு கதவு நெலவெல்லாம் உளுக்க ஆரம்பிச்சிட்டு உள்ள கரையான் வெச்சிருக்கு போல - மீரா

நெலவுன்னா என்ன மம்மி. யு மீன் மூன்? இது சோனு.

கோகிலம்மா மெல்ல எழுந்து கதவின் அருகே போய் நிலைப்படியை தடவினாள்.

இந்த நெலவு வைக்கும் போது மீரா மூணு வயசு குழந்த. என்ன செஞ்சா தெரியுமா. எங்களுக்குத் தெரியாம, பாத்ரூம் கழுவ வெச்சிருந்த ஆசிட் பாட்டில் எடுத்து தண்ணி குடிக்கிற மாதிரி குடிச்சிட்டா. புள்ள செத்துட்டான்னே நினைச்சோம். எப்படியோ பொழைச்சு வந்தா. எம் மாமியாரு மீராவோட பாட்டி, சிவன் கோயில் போயி 3 நாளு பழியாக் கிடந்தாங்க. எம் பேத்தி பிழைச்ச சேதி வந்தாத் தான் நான் வீட்டுக்குப் போவேன்னுட்டு. அவங்க வேண்டுதல் தான் மீரா பிழைச்சது..கோகிலாம்மாவின் கண்கள் பழைய கால நினைவுகளால் முன்னை விட ஒளிர ஆரம்பித்தது.

ரியல்லி பாட்டி. வெரி ஃபன்னி? இது அனாமிகா.

ஆமாண்டா கண்ணு. உங்க அப்பா மாத்திரம் சாதாரணப் பட்டவன் இல்ல. இந்த வீடு கட்ட பூஜை செஞ்சப்ப, தேங்கா உடைச்சோமா. தேங்காய நான் தான் உடைப்பேன்னு ஒரே அழுகை. தேங்கா சரியா உடையனுமே, அது தான சாஸ்திரம். அப்புறம் ஒரு வழியா சமாதானம் பண்ணி மேஸ்திரியும், அவனும் சேந்து தேங்கா உடைச்சாங்க. பூ விழுந்த தேங்கா, எவ்வளவு சந்தோசம் சிவசு அப்பா முகத்தில. எம் பிள்ள ராசிக்காரண்டா, அப்படின்னு தலைல தூக்கி வெச்சு ஆடினார். அப்பவும் விட்டானா! தேங்காத் தண்ணி தனக்குத்தான் வேணும்னு, மண்ணில தெளிக்கக் கூடாதுன்னு புரண்டு புரண்டு அழ ஆரம்பிச்சிட்டான். அவன் அழுதது எனக்கு இன்னும் கண்ணுக்குள்ளையே இருக்கு.

யூ டூ டாட். வெரி இண்டெஸ்டிங். பாட்டி வேறென்ன ஸ்டோரி சொல்லுங்க பாட்டி. அதீத ஆர்வத்துடன் அனாமிகா.

வெளிய தெரியுதே தென்னை மரம். அதில முதல்ல இருக்கே அது சிவசு வெச்சது. ரெண்டாவது மீரா வெச்சது. இரண்டு பேரும் போட்டி போட்டுட்டு தண்ணி ஊத்துவாங்க. சிவசு கீழே விழுந்த அவனோட பல் எல்லாத்தையும் அந்த மரத்துக்குக் கீழ தான் புதைச்சி வெச்சிருக்கான்.

அய்யே சேம் சேம் பல் விழுந்தா அத டூத் பேரி கிட்டத் தான் குடுக்கணும். இது அர்ஜூன்.

ஐ வாண்ணா டிக் தட் ப்ளேஸ். கமான் யார்மரத்தின் கீழே தோண்டி, பல்லை எடுத்து விடும் ஆர்வத்துடன் அனாமிகா வெளியே ஓடினாள்.

எல்லாரும் அவளைத் தொடர்ந்து வெளியே வந்தனர்.

அம்மா இது தான் உங்க தென்ன மரமா? லவ்லி. இது சோனு மீரா பெத்த வாண்டு.

உங்க அம்மாவுக்கு தென்ன மரத்தை விட அதோ அந்த மாமரம் தான் ரொம்பப் பிடிக்கும் பாவாடைய வழிச்சுக் கட்டிட்டு ஏறுவா பாரு.. பசங்க தோத்தாங்க.. ஒரு நாள் அப்படித்தான் மாங்கா பறிக்க மரமேறி.. மரத்து மேல இருந்த பச்சோந்தியப் பாத்து பயந்து கீழ விழுந்தா. மோவாய்க்கட்டைல 4 தையல் போட்டோம். அதோட மரமேறுறதை நிறுத்திட்டா.

மீரா அழகாய் சிரித்தாள். கீழே விழுந்த போது அணிந்திருந்த பாவாடை மேலேறி விட்டது. அருகில் விளையாடிக் கொண்டிருந்த அண்ணனின் தோழர்கள் வேறு� அப்போது அநியாயத்துக்கு வெட்கப்பட்டது. இப்போது நினைத்தால் கூட முகத்தில் சிவப்பைத் தந்தது.

இந்த வேப்ப மரத்துக்குக் கீழ தான் சிவசு சைக்கிள் நிறுத்துவான். ஒரு நாளைப் போல, காக்கா வந்து அவன் சீட்டு மேலயே கழிஞ்சு வைக்கும். தினமும் காக்காவைத் திட்டிட்டுத்தான் சைக்கிள் எடுப்பான். காக்காக்கு சோறு வைக்காதேன்னு கலாட்டா பண்ணுவான்.

இப்போது சிவசு முகம் விசகித்தது, கண்களில் லேசான கண்ணீர்.

இந்த இடத்தில தான் மீராவும் எதித்த வீட்டு நிம்மியும் எப்பப் பாத்தாலும் கோடு வரைஞ்சு பாண்டி விளையாடுவாங்க. மீரா இடைக்கண்ணால பாத்துட்டே. ரைட்டா ராங்கான்னு அழுகுணி அட்டம் ஆடுவா.

அம்மா அழுகுணியா. ஐய்யே ஷேம் ஆப் யூ மாம்..சோனு.

இது என்ன இவ்வளவு பெரிய கண்டைனர். தண்ணியா பாட்டி இதுல? அர்ஜூன்.

இது தண்ணித் தொட்டி கண்ணு. இதில தான் தண்ணி புடிச்சு நெறைச்சு வெப்போம். சிவசு குழந்தையா இருந்தப்ப இதில தான் டயர் கட்டி நீச்சல் அடிப்பான். புள்ள டாக்ரருக்குப் படிக்கும் போது விடிய விடிய படிப்பான். தூக்கம் வந்தா நடு ராத்திரி தலைல தண்ணி ஊத்திட்டு ஈரத் தலையோட படிப்பான் உள்ள டாக்டர் ஆகணும்னு ஒரு தீ இருக்கும்மா. இந்த பச்சத்தண்ணி தான் அந்த தீக்கு பெட்ரோல், அப்படீனு எனக்குப் புரியாத மாதிரி பேசுவான். இந்த புள்ள நல்லாயிருக்கணும்ன்னு எனக்குள்ளே ஓயாம ஒரு பிரார்த்தனை இருக்கும்.

சிவசு அந்தக்கால நினைவுகளுக்கு போய் விட்டதை அவன் மௌனம் காட்டிக் குடுத்தது.

ஆண்ட்டி இது துவைக்கிற கல் தான்� இதிலயா இன்னும் துவைக்கறீங்க. மெஷின் பாத்தனே ஆத்துல. சிவசுவின் மனைவி. அம்மு.

ஆமாம்மா. மெசின்ல தான் போடுறேன் .குனிஞ்சு துவைக்க முடியரது இல்ல. இது மீராவோட கல்லு துக்கமோ சந்தோசமோ எது வந்தாலும் இந்தக் கல்லு மேல தான் உக்காந்துக்கும். ஒரு கையில டீ டம்ளரும். மறு கையில ஏதாவது புக்கும் வெச்சிட்டு மீரா உக்காந்திருக்கும். மீரான்னு சரியா தான் பேரு வெச்சிருக்காங்க உனக்கு. எப்பப் பாத்தாலும் தனியா புக்கும் கையுமா உக்காந்திட்டு சரி தம்புராக்கு பதிலாத் தான் டீ க்ளாசா? அப்படின்னு சிவசு கிண்டல் பண்ணுவான் அவள.

ஆண்ட்டி இது என்ன பூவு பச்சைக் கலர்ல. நல்ல மணமா இருக்கே? பச்சைக் கலரில் இலை போலும் இருந்த பூவைப் பறித்த படி கேட்டாள் அம்மு.

இது மனோரஞ்சிதம். சிவசுவுக்கு இந்த வாசம் ரொம்பப் பிடிக்கும். பக்கத்தில ஜாதி மல்லி, சாயந்திரம் விரிய ஆரம்பிக்கும், தொடுத்துத் தரேன்.

மீராவுக்கு அப்ப நல்ல முடி. நெகு நெகுன்னு நாகப் பாம்பு மாதிரி சிக்கெடுத்து பின்னல் போடறதுக்குள்ள கை கடைஞ்சு போயிரும். ஜாதி மல்லி அவ பின்னலுக்குன்னே பூத்த மாதிரி இருக்கும்.

தலை குளிக்கறதுன்னா அவ்வளவுதான் சீயக்காய் தேய்ச்சு குளிச்சு, காயவெச்சு... அப்படியே விரிச்சுப் போட்டுட்டு ஊஞ்சல்ல படுத்து தூங்கிடுவா. எந்திருக்கும் போது தல வலி வராம என்ன செய்யும். ஈரத் தலையோட படுக்காதேன்னா கேப்பாளா. சாம்பிராணி போட்டு முடிக்கும் வரை கூட பொறுமையா இருக்க மாட்டா. கண்ணு சொக்கி விழுவா. இப்பப்பாரு அத்தனை முடியயையும் கன்னா பின்னான்னு வெட்டி வெச்சிருக்கா முடி தானே பொண்ணுங்களுக்கு அழகுன்னு சொன்னா அவளுக்கு சுருக்குன்னு கோபம் வருது இப்ப பொண்ணுகள முடியாவும் முகமாவும் மட்டும் தான் பாக்கணுமான்னு கேக்கறா என்ன செய்ய அவ முடிய வெட்டி எறிஞ்ச மாதிரி என்னால இந்த ஞாபகங்களை வெட்டி எறிய முடிஞ்சா எப்பவோ நான் வீட்ட இடிக்க ஒத்துருப்பேன்.

வீட்டுக்கு முன்னால் இருக்கே இந்த வராந்தா. இதில தான் உங்க தாத்தா கடைசியா படுத்திருந்தார் கண்ணுங்களா. ஸ்கூலுக்கு பொறப்புடும் போதே நெஞ்சில சுருக்குன்னு இருக்கு. இனிமே வாழைக்கா சமைக்காத அப்படின்னு சொன்னார். போகும் போது மீராவுக்கும், சிவசுவுக்கும் ஏதாவது வேணுமானு கேட்டார்.

திரும்பி வரும்போது, மாலையும், கழுத்துமா தான் வந்தார். சிரிச்ச மாதிரியே உயிர் போயிருந்தது. மாரடைப்பு. கண்ண மூடி தூங்கிறாப்பில இருந்தார், சத்தம் போட்டா முழிச்சு திட்டுவார்ன்னு பயந்தேன். கத்தி அழக் கூட முடியல. இந்த வராண்டால தான் உக்காந்து பொழுதன்னைக்கும் எழுதுவார். பேப்பர் படிப்பார்...குயில் கத்துச்சின்னா பதிலுக்கு இவரும் கூட விசிலடிப்பார். அதுவும் இவருக்கு பதில் குடுக்கற மாதிரி திரும்பக் கூவும்.

கோகிலம்மாவின் கண்களினின்றும் முத்துப் போல உருண்டு வந்த கண்ணீர்த் துளி சிவசு, மீரா, அம்முவின் உள்ளம் நனைத்து, உதிர்ந்து போனது.


இப்ப என் பிள்ளைங்க நியாபகங்களோட தினமும் வாழ்ந்திட்டு இருக்கேன். இனி நீங்க போன பின்னால, என் பேரக் குழந்தைகள் விட்டுட்டுப் போன செருப்பும் அழுக்குத்துணியும் வீடு பூரா கேட்ட பேச்சுச் சத்தமும். சோனு வோட சிரிப்பும் உடைச்சுப் போட்ட சாமான்களும் பிள்ளைகளுக்கு நான் சொன்ன கதைகளும் பிள்ளைகள் என்னைக் கேட்ட கேள்விகளும் என்னை அடுத்த முறை நீங்க வர்ற வரை உயிரோட வைக்கும். என்னைப் பத்திக் கவலைப் பட ஒண்னுமில்லை.. ஞாபகங்களை எங்கிட்ட இருந்து யாரும் பிரிச்சுக் கூட்டிட்டுப் போக முடியாது.

வெறும் காற்று வீசும் சத்தமும் குயில் கூவும் சத்தமும் மட்டும் அங்கே கேட்டது கொஞ்ச நேரம். கனத்த அமைதி. மௌனம் மனித மனங்களை புதுப்பித்துக் கொண்டிருந்தது.

அனாமிகா வாய் திறந்தாள்.

பாட்டி. அடுத்த முறை நான் வரும் போது பார்பி கேர்ள் மாதிரி நிறைய முடி வளத்துட்டு வர்றேன். எனக்குத் தலைபின்னி அந்த வொயிட் கலர் பூ வெச்சு விடுவீங்ளா..?



(முற்றும்)

பூமகள்
10-01-2008, 10:42 AM
அப்பப்பா..!!
படிச்சு.. கண்ணு கலங்குது..!!
யவனிகா அககாவினுள் இப்படி ஒரு அனாசிய திறமை ஒளிஞ்சிட்டா இருந்தது????!!

கதை மனதை வருடிவிட்டது..! இதற்கு மேல் எழுத என்னால் ஏனோ முடியவில்லை. குரல் கம்மி... தொண்டை அடைத்து வார்த்தை வரமாட்டீங்குது..!!

எதார்த்தம்-மண் வாசம்..
இவற்றை அழகாய் காட்டுவதில் யவனி அக்காவுக்கு நிகர் யவனி அக்காவே தான்.

அசத்திட்டீங்க..!!

பாராட்டுகள் அக்கா. :)

மதி
10-01-2008, 10:45 AM
அக்கா.. என்ன சொல்றதுன்னே தெரியல... விதவிதமான உணர்ச்சிகள்.. சின்ன வயசில கிராமத்துக்கு போனது...இத்யாதி இத்யாதி...எல்லாம் ஞாபகத்துக்கு வருது. வேகமாகிவிட்ட வாழ்க்கையில் இம்மாதிரி நினைவுகள் தான் பல வலிகளுக்கு ஒத்தடமாயிருக்கும். அது போல கலாச்சார மாறுபாட்டையும் சரியா சொல்லியிருக்கீங்க... மொத்தத்தில்ல்ல்ல்ல்ல் சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ப்..

ஒரு இடத்தில் கோகிலம்மா பேர சொர்ணத்தம்மாள்னு எழுதியிருக்கீங்க.. மாத்திடுங்களேன்..

சிவா.ஜி
10-01-2008, 11:07 AM
தலைமுறை இடைவெளி,தாய்பாசம்,நினவுகளின் மேலுள்ள நேசம்,உயிரற்ற பொருட்களின் மீதும் உயிராய் இருக்க வைக்கும் ஆழ்ந்த பிணைப்பு...ஆஹா....இதை ஒரு கதையென்று என்னால் சொல்ல முடியவில்லை.

லா.ச.ரா வும்,தி.ஜானகிராமனும்,கரிச்சான்குஞ்சுவும் இப்படித்தான் வாசகர்களின் உணர்வுகளோடு விளையாடுவார்கள்.வாசித்துமுடித்ததும் அந்த பிரமையிலிருந்து வெளியில் வர கொஞ்ச நேரமாகும்.எனக்கு கொஞ்சம் அதிகமாகவே நேரமாகிவிட்டது. பதிவிட்ட அடுத்த நொடி படிக்க ஆரம்பித்தேன்.நிதானமாகப் படித்துவிட்டு அதைவிட நிதானமாக என் எண்ணங்களிலிருந்து மீண்டு வந்திருக்கிறேன்.

கோகிலாம்மாவைப் போன்ற அம்மாக்கள் இப்போது எத்தனையோபேர் தங்கள் பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு மின்னஞ்சலிலும்,செல்லிடை பேசியிலும் பாசத்தை பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள்.

வீடு என்பது ஜடப் பொருள் அல்ல என்பதை அதில் ஒட்டுணர்வோடு வாழ்ந்துபார்த்தவர்களுக்குத்தான் தெரியும்.ஒவ்வொரு இடமும் ஓராயிரம் நினைவுகளை கிளறும்.என்னற்ற கதைகளை மனதுக்கு மட்டும் கேட்கும் மொழியில் பேசும்.அதனோடு ஐக்கியமாகி வாழ்ந்தவர்கள் அதைவிட்டு பிரிந்துபோவதென்பது கிட்டத்தட்ட இயலவே இயலாத காரியம்.அந்த பிணைப்பை,பந்தத்தை இந்த கதையின் வரிகள் பூரணமாக வெளிப்படுத்தியிருக்கிறது.அதனாலேயே கதையின் கடைசி வரிகள் வலியுடன் விழுந்திருக்கிறது

இப்ப என் பிள்ளைங்க நியாபகங்களோட தினமும் வாழ்ந்திட்டு இருக்கேன். இனி நீங்க போன பின்னால, என் பேரக் குழந்தைகள் விட்டுட்டுப் போன செருப்பும்அழுக்குத்துணியும்வீடு பூரா கேட்ட பேச்சுச் சத்தமும்.சோனு வோட சிரிப்பும்உடைச்சுப் போட்ட சாமான்களும்பிள்ளைகளுக்கு நான் சொன்ன கதைகளும்பிள்ளைகள் என்னைக் கேட்ட கேள்விகளும்என்னை அடுத்த முறை நீங்க வர்ற வரை உயிரோட வைக்கும். என்னைப் பத்திக் கவலைப் பட ஒண்னுமில்லை..ஞாபகங்களை எங்கிட்ட இருந்து யாரும் பிரிச்சுக் கூட்டிட்டுப் போக முடியாது.

தேர்ந்த ஒரு எழுத்தாளரால் மட்டுமே இந்த வரிகளை எழுத முடியும்.

உரையாடல்கள் அத்தனை இயல்பாக இருக்கிறது.ஒவ்வொரு பாத்திரப் படைப்பையும் அவர்களின் வார்த்தைகளிலேயே உருவாக்கியிருப்பது மிக அருமை.போன தலைமுறையிலிருந்து இன்றைய ஹை-டெக் இளைய தலைமுறை வரை அவர்களை அவர்களாவே கொஞ்சமும் செயற்கைத் தன்மையின்றி காட்டியிருப்பது மிகப் பெரிய சிறப்பம்சம்.

மனம்நிறைந்த வாழ்த்துகள் தங்கையே.பெருமையாக இருக்கிறது.

IDEALEYE
10-01-2008, 03:03 PM
மனிதனுடைய அறிவு வளர்ச்சி, மனிதன் தான் வாழும் இடத்தை பூகோளக்கிராமம் என்ற நிலைக்கு கொண்டுவந்துள்ளது: இங்கு மொழி,கலாசாரம் என எல்லாமே கலப்பாகத்தான் கிடைக்கும்,
யவனியின் கதை நடை அபாரம், அதிலும் அவர் எடுத்துக்கொண்டா கதைக்கருவை களைக்காமல் தத்ரூபமாக நகர்த்தியிருப்பது அவரது திரமையைக்காட்டுகின்றது
வாழ்த்துக்கள் யவனி அக்கா...
அன்புடன்
ஐஐ

யவனிகா
11-01-2008, 06:28 PM
அசத்திட்டீங்க..!!

பாராட்டுகள் அக்கா. :)

நன்றி தங்கையே...

யவனிகா
11-01-2008, 06:29 PM
ஒரு இடத்தில் கோகிலம்மா பேர சொர்ணத்தம்மாள்னு எழுதியிருக்கீங்க.. மாத்திடுங்களேன்..

மாற்றி விட்டேன் மதி.நன்றி.

யவனிகா
11-01-2008, 06:42 PM
மனம்நிறைந்த வாழ்த்துகள் தங்கையே.பெருமையாக இருக்கிறது.

நன்றி அண்ணா...பேரப் பிள்ளகளின் பிஞ்சு விரல் ஸ்பரிசத்திற்காகக் காத்துக் கிடக்கும் பாட்டி,தாத்தாக்களுக்கும்...தங்களுடைய தேவதை மாயக் குச்சியால் தாத்தா பாட்டிகளின் உலகின் வண்ணத்தை, மகிழ்ச்சின் நிறமாக... தற்காலிக விடுமுறையில் மாற்றி விடும் பேரக் குழந்தைகளுக்கும் இந்தக் கதை அர்ப்பணம்.

விடைபெறும் நேரம் பேரனின் கையை தன் கையிலிருந்து என் அம்மா, விடுவிக்கும் போது...மலர்ந்திருந்த மலர் ஒன்று தீயும் பொசுங்கும் வாசம் முகர்கிறேன்.

என் பாட்டியிடம், வீட்டிலிருந்து விடை பெறும் போது,என்னிடம் என் பாட்டி சொன்ன அதே வாசகத்தை, ஏர்போர்டில் என் மகனிடம் என் அம்மா சொன்ன போது..நிஜமாகவே அந்த வேதனையிலும் வியந்து போனேன்.

அது என்ன தெரியுமா... "பாட்டி திடிருன்னு செத்துப் போனா நீ வந்திருவ தானே? எப்படியாவது வந்திரு..."

யவனிகா
11-01-2008, 06:43 PM
கதைக்கருவை களைக்காமல் தத்ரூபமாக நகர்த்தியிருப்பது அவரது திரமையைக்காட்டுகின்றது
வாழ்த்துக்கள் யவனி அக்கா...
அன்புடன்
ஐஐ

என் திறமை ஒன்றுமில்லை தம்பி..பாசம் அதன் இருப்பை இட்டு கதையை நிரப்பி இருக்கிறது...அவ்வளவே..

பாரதி
11-01-2008, 11:49 PM
வீடு என்பது வெறும் மணலாலும் கல்லாலும் கட்டப்பட்டதல்ல என்பதை அருமையாக சொல்லி இருக்கிறீர்கள். சில நேரங்களில் எப்போதாவது வருவதாலோ என்னவோ பிரியம் அதிகமாகிறதோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. ஆனாலும் அத்தகைய சந்திப்புகள்தான் மனதை வாழ்க்கையுடன் கட்டிப்போடும் மந்திரக்கயிறு! எதிர்பார்ப்பு இருக்கக்கூடாதென்றாலும் அதுதான் ஏமாற்றத்தை தவிர்க்க உதவும் கருவியாகவும் இருக்கிறது என்பது விந்தை.. மரங்களும் உங்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்திருக்கின்றன என்பது எழுத்தில் புலனாகிறது. உங்கள் படைப்புகள் மெருகேறி வருகின்றன என்பதற்கு இந்தப் பதிவும் ஒரு எடுத்துக்காட்டு. பாராட்டுக்கள் யவனி(க்)கா!

யவனிகா
12-01-2008, 04:14 AM
பாராட்டுக்கள் யவனி(க்)கா!

நன்றி தோழரே...உண்மையில் இந்தக் கதையை நான் எழுதியதில் முக்கியப் பங்கு வகிப்பது உங்களது "வீடு" பற்றிய அனுபவம் தான். அதற்கு பின்னூட்டம் எழுதுவதற்கு வேண்டி ஆரம்பித்தேன்...அது இந்தக்கதைக்குள் என்னை இழுத்து வந்து விட்டது. உங்களது "வீடு" க்குத்தான் நன்றி சொல்ல வேண்டும் உண்மையில்...

செல்வா
12-01-2008, 06:02 AM
வழக்கம் போலவே... யவனியக்காவின் எளிய நடை. ஜாலியாக ஆரம்பித்து கண்ணீரில் முடிக்கும் காட்சிகள். வழக்கம் போலவே... இது போல எழுதவேண்டும் என்ற ஏக்கம் எனக்குள். ஆனால் வழக்கத்திற்கு மாறாக ஒரு ஆதங்கம். விருதுகள் பெறவேண்டிய இப்படைப்புக்கள் வெறுமனே தூங்குகின்றனவே என.....

யவனிகா
12-01-2008, 08:58 AM
வழக்கத்திற்கு மாறாக ஒரு ஆதங்கம். விருதுகள் பெறவேண்டிய இப்படைப்புக்கள் வெறுமனே தூங்குகின்றனவே என.....

ஆதங்கப் பட ஒன்றுமில்லை...நான் எழுதுவது என் ஆத்மதிருப்திக்குத் தான்..உங்கள் பாராட்டும் ஊக்கமுமே பெரிய விருது தான்.நன்றி செல்வா.

ஆர்.ஈஸ்வரன்
12-01-2008, 09:10 AM
பாராட்டுகள்

நுரையீரல்
14-01-2008, 10:06 AM
சற்றே பெரிய சிறுகதை எழுதிய யவனிகாவுக்கு வாழ்த்துக்கள்.. உங்கள் பணி தொடரட்டும்.

இதயம்
15-01-2008, 11:13 AM
கதையின் தலைப்பே ஒரு விதமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது நிஜம். தலைப்பின் மூலம் இந்த கதை அந்த வீட்டில் வாழும் கதை மாந்தர்களின் இயல்பை குறித்து பேசும் என்பது என் கணிப்பாக இருந்தது. ஆனால், அதையும் தாண்டி அவர்களின் உணர்வுகளை நிஜமாக பிழிந்து தந்ததில், சக்கையானது என்னவோ நம் மனம் தான்..!!

கதைகளில் மண்ணின் மணத்தோடு, நடை முறை வாழ்க்கையில் உறவுகளின் உணர்வுகளை அப்படியே இழைத்துக்காட்டி நெகிழ்வூட்டுவதில் யவனி(யக்)காவுக்கு நிகர் அவரே தான். அதை நான் அவரின் அறை எண் 406-இலிருந்து உணர்ந்து வருகிறேன். மனித உணர்வுகளை பிரதிபலிப்பதில் தான் கண்ணாடியாக இருக்கிறார் என்றால், மனிதர்களின் கொஞ்சமும் முரண்படாத உரையாடல்களை தந்ததன் மூலம் நம்மை இந்த கதையோடு ஒன்ற வைத்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும். அம்மா, மகன், பேரக்குழந்தைகள், பாட்டி, மாமியார், மருமகள் போன்ற உறவு முறைகளை பின்னி, பிணைத்து கதையை நகர்த்தும் போது உரையாடல்களில் தெரிந்த எளிமை, உண்மை, நேர்மை அந்த ஒரு வீட்டில் இருந்த சில மனிதர்களோடு, நம்மையும் ஒருவராக ஒன்ற வைத்துவிடுகிறது.

இந்த கதையில் வெறும் கதையாக மட்டும் இல்லாமல் கதாசிரியரின் பாதிப்பு இருப்பதற்கான சில அடையாளங்களையும் என்னால் உணர முடிகிறது. அதில் ஒன்றை உங்களுக்கு இங்கே சொல்கிறேன். மன்றத்தின் பாச மலராக பரிமளிக்கும் யவனி(யக்)கா, இக்கதையில் வரும் அண்ணன் கதாப்பாத்திரத்திற்கு அவர் மூச்சுக்கு முந்நூறு முறை அண்ணா, அண்ணா என்று பாசம் பொழியும் சிவாவின் பெயரை தேர்ந்தெடுத்தது இரசனைக்குரியது (சிவாவின் சுருக்கப்பெயர் சிவா அல்ல..சிவசு..!!). இந்த இரகசியத்தை வெளிப்படுத்திய எனக்கு பரிசு எதுவும் உண்டா..?:D (கதையில் என் பெயரை நுழைக்காத அவருக்கு என் கண்டனம்..!!:sauer028:)

பிரிவு என்பது உறவுகளை பிரித்து, அன்பை குறைத்து அழித்து விடுமா..? சிக்கலான கேள்வி தான்.. அந்த அன்பு உண்மையானதாக இல்லாத பட்சத்தில்..! உண்மையான அன்பிற்கு அழிவென்பது கிடையாது என்பது எத்தனை உண்மையோ...அப்படித்தான் பிரிவில் அந்த அன்பு பெரும் வளர்ச்சி பெறும் என்பதும். இந்த கதையில் இறுதியிலும் அது தான் நிகழ்கிறது. கோகிலாம்மாளின் மகன், மருமகள், பேரன் பேத்திகளின் மீதான அன்பு அவர்கள் விட்டுச்சென்ற வெற்றிடத்திலும், பொருட்களிலும் நிறைந்து நின்று அவருக்கு எதிர்காலத்தில் நிம்மதி கொடுப்பது மட்டுமல்லாமல், அவரின் இதயத்திலிருந்து அவர்கள் நீங்கா வண்ணம் நெருக்கி வைக்கும். கண்ணுக்கு தெரியா அன்பின் கண்கட்டு வித்தைகளில் இதுவும் ஒன்றோ..?!!

ஒவ்வொரு முறையும் பிடித்தவர்களை நாம் பிரியும் பொழுது அவர்களை பிரிகின்றோமே என்ற வேதனையை விட, அவர்களின் இனிய நினைவுகளை இழக்காமல் காப்பாற்ற வேண்டும் என்ற கவலை தான் அதிகம் ஏற்படுகிறது..! அந்த கவலை இருக்கும் வரை பிரிவுகள் என்றும் அன்பை வளர்க்கும் உரங்களாக இருந்து நினைவுகளால் ஊட்டம் கொடுக்கும்.. இங்கே கோகிலாம்மாளுக்கு கிடைத்த குழந்தைகளின் நினைவுகளைப்போலவே..!!

பொழுதை கவரும் வகையில் கதை எழுதுபவர்களுக்கு மத்தியில், மனதை கவரும் வகையில் கதை எழுதும் யவனி(யக்)காவுக்கு இதயம் நிறைந்த பாராட்டுக்கள்..!!

யவனிகா
15-01-2008, 12:34 PM
நிஜம் தான் இதயம்...உங்களுக்கும் தெரிந்து விட்டதா? சிவசு என்பது ரொம்பவும் எனக்கு பிடித்த பெயர்.பாலகுமாரனின் "அகல்யா" கதையின் நாயகன் சிவசு. என் இனிய அண்ணாவுக்கு அதே பெயர் இருக்கக் கண்டு ஆச்சர்யப்பட்டுப் போனேன்.மீரா யாரைக் குறிக்கிற கதாபாத்திரம் அப்படின்னும் கண்டு பிடிச்சிருப்பீங்களே..

எப்போதும் போல உடனுக்குடன் பூஸ்டாக உங்களின் பின்னூட்டம் இல்லாதது கண்டு ஏமாற்றம் அடைந்தேன். இப்ப ஓ.கே. நன்றி இத் யம் பிரதர்.

அடுத்த கதையில ஒரு ரொம்ப நல்லவன் கேரக்டர் வருது எல்லாக் கெட்ட குணங்களோட...அதுல உங்கள பிக்ஸ் செய்யவா?

சிவா.ஜி
15-01-2008, 01:02 PM
அடுத்த கதையில ஒரு ரொம்ப நல்லவன் கேரக்டர் வருது எல்லாக் கெட்ட குணங்களோட...அதுல உங்கள பிக்ஸ் செய்யவா?


????????????!!!!!!!!!!!!!!!!!!!?????????????

இதயம்
15-01-2008, 01:47 PM
????????????!!!!!!!!!!!!!!!!!!!?????????????

நான் தான் ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப நல்லவனாச்சே.. அவரோட கதைக்கு நாம பொருந்தமாட்டமேன்னு தான் பதில் சொல்லாம சும்மா இருந்தேன். ஏழரையை எட்டா மடிச்சி இடுப்பில் கட்டியிருக்கிற மாதிரி உங்களை பக்கத்தில் வச்சிருக்கிறதை நினைக்கிறேன்..! நீங்க பாய்ண்ட் எடுத்து கொடுக்கிறீங்களோ..??:sauer028::sauer028:

இருக்கட்டும்.. இருக்கட்டும்... செல்வாவை பார்க்க கூட்டிப்போகும் போது குப்பூஸ் ரொட்டி வாங்கிட்டு வரச்சொல்லி, ஷரஃபியால இறக்கிவிட்டுட்டு சத்தம் போடாம கம்பி நீட்டிடறேன். நீங்க எப்படி ராபிக்குக்கு திரும்புவீங்கன்னு நானும் பார்க்கிறேன். ராசாவுக்கு ஃபோன் அடிச்சி கேட்டாவெல்லாம் வழி தெரியாது..!! :icon_rollout::icon_rollout:

ஜெயாஸ்தா
15-01-2008, 02:46 PM
உரையாடல்களை வைத்தே சம்பவங்களை உருவகப்படுத்தும் அருமையான கலையை யவனிகா கைவரப்பெற்றுள்ளார். உறவுகளோடு பின்னிப்பிணைந்து கலகலப்பாய் இருந்த குடும்பத்தை, பணம் தன்னை சம்பாதிப்பதற்காக பிரிக்கிறது. மகன், மகள், மருமகள், மருமகன், பேரக்குழந்தைகள் ஆகியவர்களோடு அன்பு ராஜங்கம் நடத்திய அவர்கள், கடைசிகாலத்தில் நாடிழந்த மன்னன் போல் தனிமையில் வசிக்கும் கொடுமை சொல்லில் அடங்காது.
'தாத்தாவின் ஈயத்தட்டை எடுத்து அப்பாவுக்காக பாதுகாத்த மகன்' போல் இறுதியில் அனைவருக்கும் இதுதான் கதி. எங்கிருந்து வந்தோம்? எங்கே செல்கிறோம்? இலக்கில்லாத பயணத்தில் இதுவும் ஒரு காட்சி.

அருமையாய் உணர்வுகளோடு விளையாடிறீங்க யவனிகா. உங்க செண்பகமரத்துக்கு பிறகு உங்களின் இந்தப்படைப்பை படிக்கிறேன் என்று நினைக்கிறேன்.

அமரன்
18-01-2008, 11:10 AM
உணர்வுகளின் அழுங்குப் பிடியில்
அடிக்கடி சிக்கிக்கொள்பவன் நான்.
அதே நிலையில் இப்போதும்....!

செல்வண்ணாவின் கவி ஒன்று.

அருகில்
தூரப்பட்ட மனங்கள்
தூரமுள்ள மனங்கள்
அருகில்..

யவனிகாவின் சிருஸ்டியில்
தூரமுள்ள மனங்களின் அருகாமை.
------------------------------
வீடு கருவாகும் உருவாகும் போது
ஒவ்வொரு நொடி மாற்றத்தையும்
மங்கல, அமங்கல நிகழ்வுகளையும்
சொந்த பந்த பேதமின்றி
பிரதி எடுத்து பத்திரப்படுத்துகிறது..

பாடித்திரிந்த பறவைகள் பல
வேறு கூடு தேடி பறந்ததும்
மிஞ்சிய பறவைகளுக்கு கூண்டாக வீடு!

இரவு மலர்ந்த மிச்சபறவைகள் வாழ்வை
தான் பத்திரப்படுத்திய நிழல்படங்களால்
இரவி போல வெளுக்கின்றது வீடு..

அச்சுகத்தினைப் பகிர முனைகையில்
அண்டை(ட)ப் பறவைகளினால்-நிதம்
தொண தொணப்பு என்று சலிப்பு..
தகிக்கும் வார்த்தை தெளிப்பு..

அப்போதும் ஆறுதல் தூரலாக
நினைவுகளை தூவுகிறது வீடு!!

உறவுகள் கலைந்திருப்பதால்
வீடு
நினைவுகள் கலையாதிருப்பதால்
அது கருவூலம்!!!!

யாருக்கு தெரியும்..
நாம் காலி பண்ணும்போது
இடிந்து போகிறதோ வீடு.

யவனிகா
18-01-2008, 11:32 AM
இருக்கட்டும்.. இருக்கட்டும்... செல்வாவை பார்க்க கூட்டிப்போகும் போது குப்பூஸ் ரொட்டி வாங்கிட்டு வரச்சொல்லி, ஷரஃபியால இறக்கிவிட்டுட்டு சத்தம் போடாம கம்பி நீட்டிடறேன். நீங்க எப்படி ராபிக்குக்கு திரும்புவீங்கன்னு நானும் பார்க்கிறேன். ராசாவுக்கு ஃபோன் அடிச்சி கேட்டாவெல்லாம் வழி தெரியாது..!! :icon_rollout::icon_rollout:

அய்யோடி...இப்படி எல்லாம் சொன்ன எங்கண்ணன் பயந்திருவாரா...:traurig001:

அண்ணா கவலப் படாதீங்க...வாங்கின குபூஸ, லசூன்ல தொட்டு சாப்பிட்டிட்டு அங்கேயே வெயிட் பண்ணுவீங்களாமா...நான் ராஜாவ ஹெலிகாப்டர் எடுத்திட்டு வரச் சொல்றேன்.

ஏதும்மா ஹெலிகாப்டர்ன்னு தான கேக்கறீங்க...நேத்து தான்னா வாங்கினோம் அம்ருக்காக...2 ரியால் கடையில...சேப்புகலர் பாடி...மஞ்சக் கலர் பேன்..கருப்புச் சக்கரம்....சூப்ப்ப்ப்ர்ர்ர்ர்ர்ர் ஸ்பீடு...நேத்து நானே நயன் தாரா ரேஞ்சுக்கு ஓட்டிப்பாத்தேன்னா பாத்துகோங்களேன்...:icon_b:

உங்கள பிக்கப் பண்ணக்கூட நானே ஓட்டிட்டு வரலாம்னா...சவுதில தான் பொண்ணுங்க வண்டி ஓட்டக் கூடாதே?என்ன செய்ய...:confused:

யவனிகா
18-01-2008, 11:32 AM
அருமையாய் உணர்வுகளோடு விளையாடிறீங்க யவனிகா. .

நன்றி அண்ணா...

யவனிகா
18-01-2008, 11:34 AM
உறவுகள் கலைந்திருப்பதால்
வீடு
நினைவுகள் கலையாதிருப்பதால்
அது கருவூலம்!!!!

யாருக்கு தெரியும்..
நாம் காலி பண்ணும்போது
இடிந்து போகிறதோ வீடு.

அழகான பின்னூட்டக் கவிதை.நன்றி அமரன்.உங்களது கவிதை என் கதையை கவுரவப் படுத்தியதாக உணர்கிறேன்.

அன்புரசிகன்
18-01-2008, 05:26 PM
வெளிநாட்டிலிருந்து உறவுகள் வந்தாலே இந்த பாட்டிமாருக்கு பத்து வயது குறைந்துவிடும். படுத்த படுக்கையில் இருந்தவர் எழுந்து சமையல் விறகு பொறுக்குதல் போன்ற வேலைகள் எல்லாம் சரளமாக செய்வார்கள். (எனது அம்மம்மாவின் குணம் இது) ஆனால் ஊரை விட்டு வெளியில் வரமாட்டார்.

இது போன்ற கதையை அப்படியே உரித்துவைத்துள்ளீர்களக்கா.... பாராட்டுக்கள்.

வந்தவர்கள் திரும்பும் போது இருபுறமும் கண்களில் ஊற்றெடுக்கும். தவிர்க்கமுடியாதவை.

அமரன்
18-01-2008, 05:31 PM
வெளிநாட்டிலிருந்து உறவுகள் வந்தாலே இந்த பாட்டிமாருக்கு பத்து வயது குறைந்துவிடும். படுத்த படுக்கையில் இருந்தவர் எழுந்து சமையல் விறகு பொறுக்குதல் போன்ற வேலைகள் எல்லாம் சரளமாக செய்வார்கள். (எனது அம்மம்மாவின் குணம் இது) ஆனால் ஊரை விட்டு வெளியில் வரமாட்டார்.

இது போன்ற கதையை அப்படியே உரித்துவைத்துள்ளீர்களக்கா.... பாராட்டுக்கள்.

வந்தவர்கள் திரும்பும் போது இருபுறமும் கண்களில் ஊற்றெடுக்கும். தவிர்க்கமுடியாதவை.

உண்மைதான் அன்பு.. என்னால் நாட்டுக்கு போகமுடியாத நிலை. அண்மையில் பாட்டியும், தாத்தாவும் வந்திருந்தார்கள்.. பிஞ்சுமுதல்,நான் செய்த சேட்டைகளை சிலருக்கு அம்பலப்படுத்துவதிலேயே அதிக கவனம் செலுத்தினார்கள். அதை ஊரில் செய்தபோது பழஞ்சீலை கிழிந்த மாதிரி இருக்காதீங்க என்று கடிந்துகொள்வேன். இப்போ அது முடியவில்லை.. ரசித்தேன்..

இக்கவிதை படித்ததில் இருந்து இன்றும் முழுவதும் ஏதோ ஒன்று என்னைப் பிடித்து ஆட்டுகின்றது..

யவனிகா
18-01-2008, 05:31 PM
நன்றி அன்பு...உங்க அம்மம்மா கிட்ட என் அன்பை சொல்லுங்க...எனக்கும் சேர்த்து புட்டும் மீன்கறியும் செஞ்சு தரச் சொல்லி நீங்களே சாப்பிடுங்க...

அன்புரசிகன்
18-01-2008, 05:33 PM
இக்கவிதை படித்ததில் இருந்து இன்றும் முழுவதும் ஏதோ ஒன்று என்னைப் பிடித்து ஆட்டுகின்றது..

புரிகிறது அமரா.. இல்லாவிட்டால் கதையை கவிதை என்று கூறமாட்டீர்கள். உங்கள் மனநிலை எனக்கு புரிகிறது. :icon_b:

அன்புரசிகன்
18-01-2008, 05:39 PM
நன்றி அன்பு...உங்க அம்மம்மா கிட்ட என் அன்பை சொல்லுங்க...எனக்கும் சேர்த்து புட்டும் மீன்கறியும் செஞ்சு தரச் சொல்லி நீங்களே சாப்பிடுங்க...

நாமக்கு இந்த புட்டு மீன்கறி எல்லாம் சாதாரணம். யாழ்ப்பாணம் சென்றாலே உழுந்து தோசை (அதுவும் நல்லெண்ணெய் முட்டை என்று பலவிதம்) இட்டலி பாலப்பம் இது போன்றவை தான் நம்ம விசேடமாக இருக்கும். அத்துடன் கல்பேட் எனப்படும் ஊர்க்கோழிக்கறி....

இப்பவெல்லாம் உப்புச்சப்பற்ற புறெய்லர் கோழியை பார்த்தாலே அருவருக்கிறது. ஊரில் கிடாய் பங்கு போடுவர். அது சமைத்தாலே அக்கம் பக்கம் எல்லாம் வாசணை தூள் கிளப்பும். அப்புறம் மாலைநேரங்களில் ஊர் சுற்றல். மாங்காய் + உப்பு + தூள் கலந்து சாப்பிடுவது. அதுவும் யார்வீட்டு மதிலில் குத்தி சாப்பிடும் மாங்காய்க்கு மவுசு அதிகம் தான்.

காலையில் பழஞ்சோறு குழைப்பார்கள். அதனை வீட்டு முற்றத்திலுள்ள தேக்குமர இலையில் ஏந்தி உறிஞ்சி உறிஞ்சி சாப்பிடும் சுகம். அட அட அட.. (என்ன ஒரே சாப்பாடு பற்றியே கதைக்கிறான் என்று பார்க்குறீங்களா. எல்லாம் நம்ம அம்மம்மா சமைச்சது. வீட்ல சமைச்சது. இதை விட வேறு என்ன நம்வாழ்வில் முக்கியம்)

ம்ஹூம். பாழாய்ப்போன நாட்டுப்பிரச்சனையால் இம்முறை விடுமுறையில் இவை எல்லாம் எட்டாக்கனியாகவே உள்ளது.

யவனிகா
18-01-2008, 06:21 PM
நாமக்கு இந்த புட்டு மீன்கறி எல்லாம் சாதாரணம். யாழ்ப்பாணம் சென்றாலே உழுந்து தோசை (அதுவும் நல்லெண்ணெய் முட்டை என்று பலவிதம்) இட்டலி பாலப்பம் இது போன்றவை தான் நம்ம விசேடமாக இருக்கும். அத்துடன் கல்பேட் எனப்படும் ஊர்க்கோழிக்கறி....

இப்பவெல்லாம் உப்புச்சப்பற்ற புறெய்லர் கோழியை பார்த்தாலே அருவருக்கிறது. ஊரில் கிடாய் பங்கு போடுவர். அது சமைத்தாலே அக்கம் பக்கம் எல்லாம் வாசணை தூள் கிளப்பும். அப்புறம் மாலைநேரங்களில் ஊர் சுற்றல். மாங்காய் + உப்பு + தூள் கலந்து சாப்பிடுவது. அதுவும் யார்வீட்டு மதிலில் குத்தி சாப்பிடும் மாங்காய்க்கு மவுசு அதிகம் தான்.

காலையில் பழஞ்சோறு குழைப்பார்கள். அதனை வீட்டு முற்றத்திலுள்ள தேக்குமர இலையில் ஏந்தி உறிஞ்சி உறிஞ்சி சாப்பிடும் சுகம். அட அட அட.. (என்ன ஒரே சாப்பாடு பற்றியே கதைக்கிறான் என்று பார்க்குறீங்களா. எல்லாம் நம்ம அம்மம்மா சமைச்சது. வீட்ல சமைச்சது. இதை விட வேறு என்ன நம்வாழ்வில் முக்கியம்)

ம்ஹூம். பாழாய்ப்போன நாட்டுப்பிரச்சனையால் இம்முறை விடுமுறையில் இவை எல்லாம் எட்டாக்கனியாகவே உள்ளது.

பழைய நினைவுகளைத் தூண்டி விட்டு விட்டேன் போல...நீங்க சொன்னதிலேயே எனக்குத்தெரிந்தது இட்லி, பாலப்பம் அது வேண்டுமானால் செய்து தருகிறேன்.

அப்புறம் அருகில் ஒரு சவுதி வீட்டில் மாமரம் இருக்கு...மே, ஜூன்ல்ல காய்க்கும்...ஒருமுறை நானும் என் அம்மாவும் அந்த வழியா வாக்கிங் போன போது என் அம்மா மாங்காயப் பாத்து "எப்படி இருக்கு பாரும்மா..சாப்பிட்டா நல்லா இருக்கும்" அப்படின்னு சொன்னாங்களா?

"அம்மா ஆஸ்பட்டாங்க...அடையாம விட்மாட்டேன் " ன்னு அஜீத் ஸ்டைலில் சொல்லிட்டு...பக்கத்தில் கிடந்த கம்பை எடுத்து மாங்காயையை தட்றேன்...எட்டவே மாட்டீங்குது...நானும் விடுவனா? விடாம தட்டி கீழ விழுந்துட்டு....அப்பப் பாத்து அந்த வழியா வாக்கிங் போன் மளையாள ஏட்டன்மாருங்க எங்க ரெண்டு பேரையும் கம்பும் கையுமா பாக்கணுமா...நான் அசடு வழியச் சிரிச்சு வைச்சேன்.

அடுத்த வாரம் அந்த மளையாள கும்பல்ல்ல இருந்து ஒருத்தர் என் அம்மாவ பாக்க வந்தாங்க...கையில 4கிலோ மாங்கா வாங்கிட்டு வந்தாங்க பாரு...எனக்கு அப்படியே முகம் மாவடு மாதிரி சுருங்கிப் போச்சு...

அதுக்கப்புறம் நாங்க வாக்கிங் போன போதெல்லாம் அந்த சவுதியே மாங்கா கொடுக்க ஆரம்பிச்சிட்டாரு...ஏன்னா கம்ம்பில தட்டி கிளைய முறிச்சு விட்டுட்டன்னு சேப்டி மெசர்ஸ்...திருட்டு மாங்கா தான டேஸ்ட்..அதனால நாங்க வாங்கிங் வழிய மாத்திட்டம்...

நீங்க வந்தீங்கன்னா வேணா மீண்டும் மாங்கா திருடலாம் அன்பு...சரியா?

இதயம்
19-01-2008, 10:33 AM
அய்யோடி...இப்படி எல்லாம் சொன்ன எங்கண்ணன் பயந்திருவாரா...:traurig001:

அண்ணா கவலப் படாதீங்க...வாங்கின குபூஸ, லசூன்ல தொட்டு சாப்பிட்டிட்டு அங்கேயே வெயிட் பண்ணுவீங்களாமா...நான் ராஜாவ ஹெலிகாப்டர் எடுத்திட்டு வரச் சொல்றேன்.

ஏதும்மா ஹெலிகாப்டர்ன்னு தான கேக்கறீங்க...நேத்து தான்னா வாங்கினோம் அம்ருக்காக...2 ரியால் கடையில...சேப்புகலர் பாடி...மஞ்சக் கலர் பேன்..கருப்புச் சக்கரம்....சூப்ப்ப்ப்ர்ர்ர்ர்ர்ர் ஸ்பீடு...நேத்து நானே நயன் தாரா ரேஞ்சுக்கு ஓட்டிப்பாத்தேன்னா பாத்துகோங்களேன்...:icon_b:

உங்கள பிக்கப் பண்ணக்கூட நானே ஓட்டிட்டு வரலாம்னா...சவுதில தான் பொண்ணுங்க வண்டி ஓட்டக் கூடாதே?என்ன செய்ய...:confused:

ஆஹா.. கீழ்ப்பாக்கத்திலேர்ந்து ஒரு க்ரூப் அண்ணன், தங்கச்சி, மாமன், மச்சான்னு குடும்பத்தோட எஸ்கேப் ஆயிடிச்சி போலிருக்கே..!! அம்ரூ..... நௌஃபல்.. நீங்களாவது தப்பிச்சிக்கங்க..!! :lachen001:

இதயம்
19-01-2008, 10:36 AM
ம்ஹூம். பாழாய்ப்போன நாட்டுப்பிரச்சனையால் இம்முறை விடுமுறையில் இவை எல்லாம் எட்டாக்கனியாகவே உள்ளது.

எப்ப பார்த்தாலும் சாப்பாட்டு நினைவு தானா.? சாப்பாட்டு ராமா..?

நல்லவேளை நாட்டுப்பிரச்சினையால இதெல்லாம் எட்டாக்கனியா இருக்கு..! (உதாரணத்துக்கும் சாப்பிடுற ஐட்டம் தானா..?:D). இல்லேன்னா ஊருக்கு போனா பஞ்சம் வந்து பிரச்சினை வேற மாதிரி வரும்..!!:icon_rollout::icon_rollout:

சுகந்தப்ரீதன்
19-01-2008, 11:27 AM
அழகான நடையில் காட்சிகளை வடித்து எல்லோரையும் எழுத்தின் மூலம் எப்படிதான் கவர முடிகிறதோ இந்த யவனி அக்காவால்..! நிறைய பழைய ஞாபங்களை கிளறி விட்டுறாங்க ஒவ்வொரு படைப்ப படிக்கும் போது..! அலுப்பே இல்லாம படிச்சிகிட்டு இருக்கலாம் போலிருக்கு..! சரி சரி போதும் ரொம்ப புகழ்ந்தா மன்றத்துல ஒருத்தருக்கு புடிக்காது.. அதனால இப்ப இது போதும் அக்கா..! அடுத்த பின்னூட்டத்துல மிச்சத்த எழுதுறேன் இப்ப வாழ்த்துக்கள்.. வளமான எழுத்துக்கும் கதைக்கும்..!

ஆதவா
19-01-2008, 12:18 PM
வாவ்... என்ன அருமையான கதை யவனிக்கா..

இதே கரு குறித்து பத்திரப்படுத்துதலின் அவசியம் என்ற கவிதை ஒன்று எழுதி வைத்தேன்.... அது மேலோட்டமாக. இங்கோ ஆழமாக...

இயல்பான ஓட்டத்தோடு கதை நகர்கிறது.. பெரிய ப்ளஸ்.. தேர்ந்த ஆசிரியரின் நடை/// கதை என்றாலே சிலர் ஞாபகத்துக்கு வருவார்கள். அந்த வரிசையில் நீங்களும்.

பாட்டிகளைப் பொறுத்தமட்டில் எப்போதுமே இப்படித்தான். என் பாட்டி கூட தன் மகன்கள் வீட்டில் அத்தனை வசதிகளையும் அனுபவிப்பதில்லை. இன்றும் தன் துணிகளைக் கல்லில்தான் துவைக்கிறார். என் பாட்டியை எனக்கு மிகவும் பிடிக்கும். பழங்கதைகள் சொல்லக் கேட்டால் இந்த ஜென்மம் நீளாதா என்று ஆசை பிறக்கும்... கற்பனைக் கதைகள், அம்மா, மாமாக்கள் சிறுவயதில் செய்தவைகள் என்று அத்தனையும் பொளந்து கட்டுவார்..

இன்றைய சமுதாயத்தினர் குறிப்பாக பாட்டிகள் இந்த வழக்கத்திலிருந்து தள்ளி வருகிறார்கள்.. வருங்காலப் பேரப்பிள்ளைகளுக்கு என்ன சொல்லிக்கொடுக்கப் போகிறார்கள்? எல்லாருமே எப்படி அழுவது என்று மட்டும் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

மீராவின் கல் போல எனக்கும் இருக்கிறது... துவைக்கும் கல்லில் அமர்ந்து கொண்டு சிந்தித்த கவிதைகள் எத்தனையோ. அங்கே அரங்கேறிய அரட்டைகள், துக்கம், எனது கண்ணீரின் உப்பு.. எல்லாமே இருக்கிறது.... எனக்கு ஒவ்வொரு வீட்டின்போதும் கற்கள் மட்டுமே மாறுகிறது. அந்த பழக்கம் இன்னும் மாறவில்லை..........

நினைவுகளில் வாழ்வது, நினைவுகளைத் தள்ளிவிட்டு வாழ்வது, இரண்டில் எது சுவர்க்கமோ அதையே தேர்ந்தெடுத்து வாழலாம்.. நினைவுகள் சந்தோசமே தரும் என்றால் கோகிலாம்மா போன்றவர்கள் வசதிகளைப் பெருக்கி வாழவேண்டிய அவசியமே இல்லை.........

அந்தப் பெண் அனாமிகாவின் அழகான ஆசை, இது..இது.. இதுக்குத்தான் காத்திருந்தேன் என்பதைப் போல அந்தம்மாவின் கண்கள் சொல்லியிருக்கும்...

உள்ளத்தை உருக்கும் கதை.... அடுத்த மின்னிதழுக்கு பரிந்துரை செய்கிறேன்...

- ஆதவா

அன்புரசிகன்
19-01-2008, 12:41 PM
எப்ப பார்த்தாலும் சாப்பாட்டு நினைவு தானா.? சாப்பாட்டு ராமா..?
நல்லவேளை நாட்டுப்பிரச்சினையால இதெல்லாம் எட்டாக்கனியா இருக்கு..! (உதாரணத்துக்கும் சாப்பிடுற ஐட்டம் தானா..?:D). இல்லேன்னா ஊருக்கு போனா பஞ்சம் வந்து பிரச்சினை வேற மாதிரி வரும்..!!:icon_rollout::icon_rollout:

நன்றாக சாப்பிடுவதை விட பெரிய புண்ணியம் நாட்டில் வேறு என்ன உள்ளது? அம்மம்மா சமைச்சது வீட்ல சமைச்சது. மூக்குப்பிடிக்க சாப்பிடவேண்டியது தானே. :D

மனோஜ்
28-01-2008, 09:43 AM
சிறப்பான கதை யவனி(ய)க்கா
என் பாட்டி வீடு இப்படி தான் இருக்ககும் இதை படிக்கும் பொழுது எங்கள் பாட்டி வீட்டுக்கு படிக்கும் காலத்தில் சென்றது ஞாபகத்தில் வந்து மனதை மகிழ்சிப்படுத்தியது மிக்க நன்றி என்று வார்தையால் அல்ல மனதால் சொல்கிறோன் அக்கா

யவனிகா
05-02-2008, 02:46 PM
வேலைப்பளு காரணமாக உடனடியாக பின்னூட்டம் இட முடியாமல் போய் விட்டது. பின்னூட்டம் இட்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.

இளசு
16-02-2008, 06:17 AM
ஞாபகங்களை யாரும் எதுவும் கோகிலாம்மாவிடம் இருந்து பிரித்துவிட முடியாது....

அவரின் எண்ண ஓட்டமாய் வரும் இந்த பத்தியை - யவனிகா எழுதாமல் இருந்தால்கூட நம்மால் உணர்ந்துகொண்டிருக்க முடியும்.

அது இக்கதை, நடை, கோர்வையின் முழுவெற்றி!

படித்தபின் பல நிமிடம் எனக்குள் ஆழ்ந்து சமைந்த நிலை உருவாக்கியது...
கூடுதல் வெற்றி!

சாதனைப் படைப்பு இக்கதை..

யுத்தி சிறப்பானது - விசிறி வாழை போல.... வீடு, மனிதர்கள், மனங்கள், நினைவுகள் என விவரித்துப்போகும் பாணி அருமை!

ஒவ்வொரு நினைவடுக்கும் படிக்கும் ஒவ்வொருவர் மனவாசம் தட்டி எழுப்பும் சக்தி கொண்டவை... ஒன்றி மூழ்க முடிகிறது..

''எப்படியாவது வந்திரு'' - நானும் நெகிழ்ந்தேன், வியந்தேன் யவனிகா!

பாரதியின் வீடு பதிவால் இக்கதை விளைந்ததால், பாரதியின் தேதியில்லாக் குறிப்புகள் இன்னும் பெருமை பெறுகிறது..

கோகிலாம்மாவின் மாமியார், கோகிலா, மீரா...அனாமிகா..

தலைமுறைகள் மாறினாலும் அவர்களின் அன்பு வாழ்வின் இடைவெளிகளை நிரப்பும் ஊற்றாய் நிரப்பி, நிரவியபடிதான் தொடர்கிறது..

கதையின் இறுதிவரியில் அனாமிகா ஊன்றும் நம்பிக்கை விதையில்தான் வாழ்வின் சூட்சுமம் புதைந்திருக்கிறது!

வாழ்த்துகள் யவனிகா!

யவனிகா
16-02-2008, 08:18 AM
நன்றி இளசு அண்ணா...மிகவும் எதிர்பார்த்தேன்...உங்களின் பின்னூட்டத்தை...

சிலநேரம் சில பதிப்புகள்...ராமன் கால் படாத அகலியை போல கல்லாய் கிடக்கும் நிலை ஏற்பட்டு விடுகிறது...சிறந்த ரசிகர்களின் கண்களில் படாத படைப்புகள் போல..

எனது படைப்புகளில் இது எனக்கு மிகவும் பிடித்த கதை...எத்தனை பிள்ளை பெற்றாலும் மூத்தது மேல் தான் தாய்க்குப் பாசம் அதிகம்...அதுபோல...இந்தக் கதை எனக்கு நானே கிப்ட் ரேப்பர் சுற்றி அளித்து மகிழ்ந்த பரிசு.பிரித்து பார்த்த மன்றத்து உறவுகளுக்கும் பிடித்துப் போனதில் மகிழ்ச்சி.

நன்றி இளசு அண்ணா...