PDA

View Full Version : பரணின் தூசிலிருந்து..! - நானும் கனவும்



பூமகள்
03-01-2008, 03:50 PM
என் பழைய சுவடுகளைத் தேடும் வேளையில் கையில் சிக்கிப் படபடத்தது ஒரு காகிதப்பூ..!

என் கனவும் நானும் உரையாற்றிக் கொண்டதன் உணர்வுக்குவியலை வார்த்தை கொண்டு வடித்து கவிதை(??) அல்லது உணர்வுப் பகிர்வு போல் நான் சில வருடம் முன் எழுதியதை திறந்து காட்டியது காகிதப்பூ..!

இது கவிதையா இல்லையா என்று முடிவெடுப்பது உங்கள கையில்..!:icon_ush:

அதனை மன்றத்தோடு பகிர விரும்பி இங்கு பதிக்கிறேன்.

பழைய புலம்பல் - கனவு

நட்சத்திரமும் கண்சிமிட்டி
ஓய்ந்து நல்தூக்கம்
ஒல்கும் நல்லிரவு நேரம்..!

அன்றே வெளிவந்த
அழகுக் குருவிக்குஞ்சினைத்
தாய்க்குருவி
தழுவிக் கொடுக்கும்
கதகதப்பில் உறங்கும்
குருவியைப் போல..!

எத்தனையோ மலர்
தேடி சேகரித்த தேனைச்
சேமித்த சந்தோஷத்தில்
கண்மூடும்
தேனீ போல..!

நிறைய எதிர்பார்ப்புகளுடன்
ஆசைகளுடன்
நம்பிக்கைகளுடன்..
நிதர்சனங்களை
அசை போட்டபடியே
ஒவ்வொரு இரவும்
கண்மூடுகிறேன்..

புதிய உலகத்தில்..
பழகிய மனிதர்கள்..!
நிஜத்தில் நடவாதது
நிழலில்..!
சில சமயம்
சந்தோசமாய்..
ஏனோ
பல சமயம்..
பயமாய்..
துயரமாய்..
வலி உணர்ந்து
சட்டென எழுந்து
சுதாரித்துக் கொள்ளும்
தருணங்கள்..

கண்ணில்
மழை வந்து
பார்த்ததுண்டா...??

இதோ பலத்த
சுனாமி இதயத்தில்...
புயலோ கண்ணில்...

நெஞ்சம் சுடும்
நினைவுகள்..
அள்ளிக் கொட்ட
ஆளில்லை..!
தொட்டால் சுடுமென்ற
பயமோ..??

நினைவுகள்
கனவுகளாய்
துரத்தும்
ஆக்டோபஸ்களா??
ஒவ்வொருமுறையும்
ஒதுங்க முயன்றால்
ஒடித்து இழுக்கிறதே
எலும்பு வரை
அழுத்தி...!

நிறைய கனவு
காணுங்கள்..!
சொன்னது
அக்னிச் சிறகுகள்..!

கண்மூடி
கனவு மட்டுமே
கண்டு களிப்பது தான்
விதியா இல்லை
அது தான் மதியா??

கனவுகள்
துரத்தும்...!
துரத்தும் வரை
முயற்சி தொடரும்..!
முன்னேற்றத்திற்காய்...!!

பாரதி
03-01-2008, 04:12 PM
பத்திரமாய் இருக்கவேண்டியவை எல்லாம் பரணில்..!
நல்லவேளை தூசி தட்ட எடுத்தீர்கள்.
அப்துல்கலாமின் வரிகளை சிறகுகளாக்கிய அழகு தனி.
அண்ணா சொன்னது போல தவழும் குழந்தையின் தளிர்நடையாய் அழகாய் இருக்கிறது.
தொடருங்கள்.. பாராட்டுக்கள்.

பூமகள்
03-01-2008, 04:25 PM
அண்ணா சொன்னது போல தவழும் குழந்தையின் தளிர்நடையாய் அழகாய் இருக்கிறது.
தொடருங்கள்.. பாராட்டுக்கள்.
முதல் பின்னூட்டம் உங்களிடம் வந்தமை கண்டு மிகுந்த சந்தோசம் பாரதி அண்ணா.
மழலைக் கவியைப் புரிந்து வாழ்த்தியமைக்கு நன்றிகள் கோடி..! :)

ஆதி
03-01-2008, 04:27 PM
புதிய உலகத்தில்..
பழகிய மனிதர்கள்..!
நிஜத்தில் நடவாதது
நிழலில்..!
சில சமயம்
சந்தோசமாய்..
ஏனோ
பல சமயம்..
பயமாய்..
துயரமாய்..
வலி உணர்ந்து
சட்டென எழுந்து
சுதாரித்துக் கொள்ளும்
தருணங்கள்..
[/FONT]

கனவுகளின் வெவ்வேறு
முகங்களை எளிமையாய்
சொன்னது அழகு..

கனவுக்குதான்
எத்தனை முகங்கள் !!
எத்தனை குணங்கள் !!



நிறைய கனவு
காணுங்கள்..!
சொன்னது
அக்னிச் சிறகுகள்..!


கனவுகள்
துரத்தும்...!
துரத்தும் வரை
முயற்சி தொடரும்..!
முன்னேற்றத்திற்காய்...!!
[/FONT]

அக்னிச் சிறகுகளின்
சாரத்தை
ஒரு சில வரிகளில் சொல்ல
உங்களால்
இயன்றிருக்கிறது..

அதற்கு தனிப் பாராட்டுக்கள் சொல்லி தீர வேண்டும்..

உங்களின் தற்காலக் கவிதைக்கும் இந்த கவிதைக்கும் நிறைய வேறுபாடு உள்ளது.. சாரத்தில் எழுதும் விதத்தில்..

வார்த்தைகள் தடைப்படாமல் வந்து விழுந்திருக்கிறது.. இதுவே இந்தக் கவிதைக்கு கிடைத்த வெற்றி என்றும் சொல்லிவிடலாம்..

பாராட்டுக்கள் பூமகள்..

அன்புடன் ஆதி

பூமகள்
03-01-2008, 04:40 PM
உங்களின் தற்காலக் கவிதைக்கும் இந்த கவிதைக்கும் நிறைய வேறுபாடு உள்ளது.. சாரத்தில் எழுதும் விதத்தில்..
பாராட்டுக்கள் பூமகள்..
இரு பெரும் தலைகளின் கண்ணில் பட்டு விமர்சனம் கிடைத்து நின்றதே என் கவிதைக்கு பெரும் சந்தோசத்தைத் தருகிறது. :D

ஆதியின் அலசல் அசர வைக்கிறது. புரிந்து, பல புரிய வைத்தமைக்கு நன்றிகள் ஆதி. :)

இளசு
03-01-2008, 11:27 PM
கனவுகளுக்கு வண்ணமில்லை - அறிவியல்....
கனவுகள் மனக்கடல் பிரளயங்கள் - உளவியல்..
கனவுகள் +கற்பனைகள் +காகிதங்கள் = கவிதையியல்..

உறக்க நிலைக்கு உவமைகளில் தொடங்கி
உள்மன தெறிப்புகளை தொடுத்து
உயர்ந்த மனிதரின் வாசகத்தைக் கோர்த்து...

பாமகளின் மழலைப்பூக்கரம் பிசைந்த கதம்பக் கவிச்சோறு..
பாசத்தோடு பு(ர)சித்தால் அதுவும் அமுதமாய் இனிக்கிறது..

தாமரை
04-01-2008, 12:18 AM
கனவுகள் பயம் தரல்
கனவுகள் சுகம் தரல்
கனவுகள் உரம் தரல்
கனவுகள் உள்ளம் தரல்
கனவுகள் கனவு தரல்
கன்வுகள்

பூமகள்
04-01-2008, 01:55 AM
கனவுகளுக்கு வண்ணமில்லை - அறிவியல்....
கனவுகள் மனக்கடல் பிரளயங்கள் - உளவியல்..
கனவுகள்+கற்பனைகள் +காகிதங்கள் = கவிதையியல்..
மிக உண்மை இளசு அண்ணா. :)
கனவுகள் வண்ணமயமானால் உடல் உபாதையைக் குறிக்கும் என்றும் அறிவியல் சொல்வதாக எங்கோ படித்த நினைவு.
ஆக, கலர் கனவுகள் காண்பவர்கள் கொஞ்சம் எச்சரிக்கையாகி விழித்துக் கொண்டு உடல் நலனில் அக்கறையாகச் சொல்லும் செய்தி..!

பாமகளின் மழலைப்பூக்கரம் பிசைந்த கதம்பக் கவிச்சோறு..
பாசத்தோடு பு(ர)சித்தால் அதுவும் அமுதமாய் இனிக்கிறது..பெரியண்ணாவின் பாராட்டு தத்தி நடந்த மழலைப் பருவத்தில் தேன் சுவை கொடுத்து சிரிப்பூட்டிய நினைவை ஏற்படுத்துகிறது.
மிக மிக நன்றிகள் இளசு அண்ணா. :)

பூமகள்
04-01-2008, 01:59 AM
கனவுகள் பயம் தரல்
கனவுகள் சுகம் தரல்
கனவுகள் உரம் தரல்
கனவுகள் உள்ளம் தரல்
கனவுகள் கனவு தரல்
கன்வுகள்
கனவுகள் பரிணாமத்தை இப்படி சில வார்த்தைகளில் சொல்லி முடித்துவிட்டீரே தாமரை அண்ணா..!! :icon_b:
பின்னூட்ட ஊக்கத்துக்கு நன்றிகள். :)

சிவா.ஜி
04-01-2008, 05:15 AM
வண்னக்கனவுகள் காணும் சின்ன வயது...ஆனால் சொன்ன செய்தியோ ரொம்ப பெருசு.வலியும்,பயமும்,அழுகையும்,சிரிப்பையும் தரும் கனவுகளை காணமாட்டேன் போ என்றால் போயா விடுகிறது.போய்விடட்டுமென்று விட்டுவிடவும் முடியவில்லை...தொடர்ந்து முன்னேற கனவுமல்லவா கைகொடுக்கிறது.
பரணிலிருந்து எடுத்தாலும் தூசியில்லாமல் ஜொலிக்கிறது.பூமகளின் எண்ணத்தைப் போல.வாழ்த்துகள் பூ.

அமரன்
04-01-2008, 06:17 PM
பயம், துயரம் இரண்டும் தந்தாலும்
தாய் இறுதியில் தருவது சந்தோசம்.

கவிதையில் அன்னையைக் கண்டேன்.:icon_b:

அமரன்
04-01-2008, 06:18 PM
கனவுகள் பயம் தரல்
கனவுகள் சுகம் தரல்
கனவுகள் உரம் தரல்
கனவுகள் உள்ளம் தரல்
கனவுகள் கனவு தரல்
கன்வுகள்
கனவுகள் கனவுகள்தான்.

பூமகள்
29-01-2008, 10:11 AM
பயம், துயரம் இரண்டும் தந்தாலும்
தாய் இறுதியில் தருவது சந்தோசம்.
கவிதையில் அன்னையைக் கண்டேன்.:icon_b:
மிகுந்த நன்றிகள் அமரன் அண்ணா. :)

சுகந்தப்ரீதன்
29-01-2008, 12:59 PM
அழகிய நடையில்.. கவிதை கவர்கிறது பூ..!

தனக்குதானே பேசிக்கொள்வதையும் கேள்விகேட்டு பதிலில்லாமல் பரிதவிப்போடு சமாதனம் சொல்லிக்கொள்வதையும் அருமையாக வெளிபடுத்தி இருக்கிறாய் பூ.. வாழ்த்துக்கள்..!

யவனிகா
29-01-2008, 01:36 PM
அழகான கவிதை.

கனவில் கவிதை வந்ததுண்டா...

கனவிலே எழுதி வைத்த கவிதை
உறங்கி எழுந்ததும் நினைவுகள்,
பிழை திருத்துகிறேன் என்ற பேரில்
ஒற்றை வரி விடாமல் அடித்துத் திருத்தி
வெறும் தாளை மட்டும்
கையில் திணித்து விட்டுப்
போய் விடுகின்றன சில நேரம்...

வாழ்த்துக்கள் தங்கையே....

ஷீ-நிசி
30-01-2008, 01:03 AM
கண்ணில்
மழை வந்து
பார்த்ததுண்டா...??

இதோ பலத்த
சுனாமி இதயத்தில்...
புயலோ கண்ணில்...

பரணில் இருந்து வந்த இந்த கவிதைக்கும், இன்றைய கவிதையிலும் ஆதி அவர்கள் சொல்வது போல வேறுபாடுகள் நன்றாக தெரிகிறது.

இந்த கவிதையில் சொல்லழகு மிக நன்றாக உள்ளது...

வாழ்த்துக்கள் பூ!