PDA

View Full Version : ஒரு மாலை இளவெயில் நேரம்..!



பூமகள்
02-12-2007, 08:12 AM
ஒரு மாலை இளவெயில் நேரம்..!

http://img01.picoodle.com/img/img01/5/12/2/poomagal/f_nightroadm_aceca5a.jpg



"ச்சே....! மணி ஆறு ஆச்சு... ஒரு சேர் ஆட்டோ கூட காணோமே..! இத்தன நேரம் காத்திருக்க வச்சி.. ரெண்டு நாள் கழிச்சா வரச் சொல்லுவாங்க.. இத மதியமே ஃபஸ்ட் ரவுண்ட் ஆன்லைன் டெஸ்ட் முடிஞ்சதுமே சொல்லியிருக்கலாமே..!" என்று மனசுக்குள் புலம்பியபடியே ஃபைலோடு மைலாப்பூரின் ஒரு எம்.என்.சி நிறுவனத்துக்கு இண்டர்வியூவுக்காக சென்று விட்டு வடபழனியில் காத்திருந்தாள் சந்தியா.

மெல்ல சூரியன் மேற்கு நோக்கி பயணப்பட்டிருந்தது. வெள்ளை நிற சுடிதாரும், வையலட் நிய ஃபைலும், களையான முகமும் கொண்டு சந்தியா ஒரு குட்டி தேவதைப் போலத்தான் நின்றிருந்தாள். மெல்லிய தூரலோடு சில்லென்ற காற்றும் வீசத் துவங்கியிருந்தது.

நேரம் மாலை 6.30 ஆகியது. ஆட்டோ பிடிக்கலாம் என்றால், ஆட்டோவையும் காணோம். வரும் ஷேர் ஆட்டோக்களும் வேறு ஊரின் பெயர் போட்டிருந்தது.

ஒரு ஷேர் ஆட்டோ, "கோல்டன் ஃப்ளாட்ஸ்/அண்ணாநகர்" என்று பெயர் பலகை இட்டு வந்துகொண்டிருந்தது. சந்தியா கையசைக்க, அங்கு வந்து நின்றது.

ஷேர் ஆட்டோவினுள் ஓட்டுநர் தவிர யாருமே இல்லை. சந்தியா சற்று யோசித்து பின்வாங்கினாள், பின் இன்னும் நேரமானால் ரொம்ப சிரமமாயிடுமே என்று எண்ணி, "திருமங்கலம் போகுமாங்க??" என்று கேட்டாள்.

ஓட்டுநர், போகும் என்பது போல் தலையசைத்து ஏறச் சொல்லி சைகை காட்டினார்.

ஏறி, மெல்லிய தூரலில் நனைந்த தனது கூந்தலை கைக்குட்டையால் துடைத்துக் கொண்டே வெளியே பார்த்த வண்ணம் வந்தாள்.

அடுத்த நிறுத்தத்தில், ஒரு கால் நூற்றாண்டு மதிக்கத்தக்க ஒருவர் மட்டும் ஏறினார். அவர் வலது ஓரத்தில் உட்கார, சந்தியா இடது ஓரத்தில் கம்பியைப் பிடித்து ஓட்டி அமர்ந்து கொண்டாள். சற்று நேரத்துக்கெல்லாம், இன்னொருவரும் ஏற, கிட்டத்தட்ட, சந்தியா ஓரத்தில் கம்பியோடு ஒட்டி அமர்ந்து கொண்டாள்.

மாலை இருட்டத்துவங்கியது.

ஷேர் ஆட்டோ ஓட்டுநரிடம், "ஏங்க, திருமங்கலம் வந்தா சொல்லுங்க.." என்று சொன்னாள் சந்தியா. ஷேர் ஆட்டோவின் ஓட்டுனர், புன்னகைத்தபடியே சரி என்று தலையாட்டினான்.

வேறு திசை நோக்கி ஆட்டோ பயணப்பட்டிருந்தது. சந்தியாவின் அருகில் அமர்ந்திருந்தவர்கள் ஓரப்பார்வையில் இவளை நோட்டமிட்டதை சந்தியா கவனித்தாள். சட்டென்று துப்பட்டாவை இழுத்துப் போர்த்திக் கொண்டாள். அவர்கள், நமட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டனர்.

கொஞ்ச நேரத்தில், எந்த நிறுத்தத்திலும் நில்லாமல், ஷேர் ஆட்டோ வேறு ஒரு குறுகிய வழியில் போய்க்கொண்டிருந்தது. சந்தியாவுக்கு வியர்க்க ஆரம்பித்திருந்தது. பயத்தோடு, "ஏங்க, எந்த வழியா போறீங்க? மெயின்ரோடு மாதிரி தெரியலையே" என்று தைரியத்தை வரவழைத்து
கேட்டாள் சந்தியா.

"இது குறுக்கு வழி மா... மெயின் ரோட்டில் ட்ராப்கினால இந்த வழியா போகச் சொல்லியிருக்காங்க" என்று சொன்னார் ஓட்டுநர். அவரது பதில் சமாளிப்பு என்று சந்தியாவுக்கு மெதுவாகத்தான் விளங்கிற்று.

யாருமற்ற ஒரு காலி இடத்தின் அருகில் நின்றது ஷேர் ஆட்டோ.

சந்தியா, திடுக்கிட்டு, "ஏங்க.. என்ன ஆச்சு? எங்கே இருக்கோம்??" என்று பதட்டமாகி கேட்டாள். நடத்துனர், பதில் சொல்லாமல், திரும்பி... வில்லத்தனமாய் சிரித்தான். கூட அது வரை அமைதியாய் வந்த ஆண்களில் ஒருவன் சந்தியாவின் கையைப் பிடிக்க, அவள் கத்தும் முன், இன்னொருவன் அவள் வாயில் கை வைத்து, சத்தமெழுப்பா வண்ணம் அழுத்த, ஓட்டுனர், இறங்கி பின்னே ஏற... சந்தியா திமிறி விட்டு வெளியே வர முயல அந்த மூவரின் பலத்திற்கு நடுவில் எதுவும் முடியாமல் பூனைக்குட்டி போல் நடுநடுங்கி போய்விட்டாள்.

சந்தியா கத்த முயன்று, தோற்று, வாயின் வைத்த கையின் விரலை பலம் கொண்ட மட்டும் கடிக்க, அவன், "ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்......ஆ.....!" என்று கத்திக்கொண்டு கையை அகற்ற, அது தான் தருணமென்று,
சந்தியா,
"ஆ.........! காப்பாத்துங்க....ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ!" என்று கத்தினாள்.
..
...
...
...
...
...
...
...
...

"ஏம்மா.. ஏம்மா... உன்ன தாமா... திருமங்கலம்னு தானே கேட்டீங்க??" என்று சத்தமாய் கேட்டார் ஓட்டுநர்.
அதுவரை, நினைத்தது எல்லாம் பிரமை என்று உணர்ந்து, சட்டென்று நினைவு வந்தவளாய், சந்தியா, "ஆமாங்க!" என்று சொன்னாள்.

"இது அண்ணா நகர் போகுதுமா.. நீங்க இங்கயே இறங்கிக்கோங்க. திருமங்கலம் திரும்பி நடந்து ஒரு வளைவு திரும்பினா போதும்." என்று சொன்னார் ஓட்டுநர்.

சந்தியா, பத்து ரூபாய் நோட்டை நீட்ட, ஓட்டுனர், ஐந்து ரூபாய் காயினை எடுத்துக் கொடுத்தார். சந்தியா,"ரொம்ப நன்றிங்க..!" என்று சொல்லிப் புன்னகைத்து விலகினாள்.

அவளது, நன்றி நவிழலும், புன்னகைக்கும் அர்த்தம் விளங்காமல் ஷேர் ஆட்டோவை இயக்க ஆரம்பித்தார் ஓட்டுநர்.

மெல்ல, இருள் படர, சந்தியாவின் இதயத்தில் நிம்மதி பரவத் துவங்கியிருந்தது.

மதி
02-12-2007, 08:34 AM
அட...
சில உண்மை சம்பவங்களை பத்தின கதையோன்னு நினைச்சேன்..
கடைசியில எல்லாம் கனவா போயிட்டு...
ஹ்ம்..
வாழ்த்துக்கள் பூமகள்..

சிவா.ஜி
02-12-2007, 08:34 AM
பூமகள் சூப்பர்.சின்னச் சம்பவம்...சொன்ன விதம் அருமை.நல்லவேளை ஆட்டோ ஓட்டுநரை நல்லவராகக் காட்டிவிட்டீர்கள்.ஆனால் சந்தியாவின் உள் நினைவைப் போல நடக்கத்தான் செய்தாலும்,இப்படி நல்லவர்களையும் அடையாளம் காட்டுவது தேவைதான்.பாராட்டுக்கள் பூ.

செல்வா
02-12-2007, 08:45 AM
அடடா கொஞச நேரத்துல என்னவோ ஏதோண்ணு பதறி போய்ட்டன்... கதை நல்லாருக்குங்க....

பூமகள்
02-12-2007, 08:45 AM
அட...
சில உண்மை சம்பவங்களை பத்தின கதையோன்னு நினைச்சேன்..

இப்படியான சம்பவங்கள் நிறைய நடந்து கொண்டு தான் இருப்பதாக நான் கேள்விப்பட்டேன். ஆகவே, ஓரு விழிப்புணர்வு கதையாக இதை உங்கள் முன் வைக்கிறேன்.:icon_rollout:

கடைசியில எல்லாம் கனவா போயிட்டு...ஹ்ம்..
வாழ்த்துக்கள் பூமகள்..
கனவானதில் இத்தனை வருத்தமா??!!! :rolleyes: :aetsch013:

நன்றிகள் மதி அண்ணா. :)

பூமகள்
02-12-2007, 08:56 AM
பூமகள் சூப்பர்.சின்னச் சம்பவம்...சொன்ன விதம் அருமை.நல்லவேளை ஆட்டோ ஓட்டுநரை நல்லவராகக் காட்டிவிட்டீர்கள்.ஆனால் சந்தியாவின் உள் நினைவைப் போல நடக்கத்தான் செய்தாலும்,இப்படி நல்லவர்களையும் அடையாளம் காட்டுவது தேவைதான்.பாராட்டுக்கள் பூ.
உண்மை தான் சிவா அண்ணா.
சில கயவர்களால் பல நல்ல மனிதரையும் கண்டு பயப்பட வேண்டிய நிர்பந்தம்.
உங்களின் பாராட்டுதலுக்கு நன்றிகள் சிவா அண்ணா. :)

அடடா கொஞச நேரத்துல என்னவோ ஏதோண்ணு பதறி போய்ட்டன்... கதை நல்லாருக்குங்க....
நன்றிகள் சகோதரர் செல்வா. :)

யவனிகா
02-12-2007, 09:30 AM
சில நேரங்களில் இப்படித்தான்...மனம் நடக்காத ஒன்றை ...பலவாறு நினைத்து கவலைப் படும்.பெண்கள் விசயத்தில் அவர்களுக்கு கவலைப் படுவதற்கென்றே கற்பனை ஓவர் டைம் வேலை செய்யும். குட்டிக் கதை
நன்றாக இருந்தது. பூ. வாழ்த்துக்கள்.

பூமகள்
02-12-2007, 09:37 AM
குட்டிக் கதை நன்றாக இருந்தது. பூ. வாழ்த்துக்கள்.
நன்றிகள் யவனி அக்கா.
இந்த குட்டி பூவின் குட்டிக் கதை உங்களுக்குப் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி.:)

அன்புரசிகன்
02-12-2007, 09:51 AM
நானும் ஏதோ என்னவோ என்று வாசித்துக்கொண்டிருக்க... கடசியில் எல்லாம் சப் என்றது.... முன்னகர்வு நன்றாக இருந்தது..



இந்த குட்டி பூவின் குட்டிக் கதை உங்களுக்குப் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி.:)


அப்போ இந்த கதையை சிறுவர் :icon_rollout: பகுதிக்கு மாற்றிடவா??? :confused:

பூமகள்
02-12-2007, 10:08 AM
நானும் ஏதோ என்னவோ என்று வாசித்துக்கொண்டிருக்க... கடசியில் எல்லாம் சப் என்றது.... முன்னகர்வு நன்றாக இருந்தது..
நன்றிகள் அன்பு அண்ணா.. :)

அப்போ இந்த கதையை சிறுவர் :icon_rollout: பகுதிக்கு மாற்றிடவா??? :confused:
அவ்வளோ.... சின்னப்புள்ளத்தனமாவா இருக்கு என் கதை??!! :icon_rollout:

அன்புரசிகன்
02-12-2007, 10:17 AM
அவ்வளோ.... சின்னப்புள்ளத்தனமாவா இருக்கு என் கதை??!! :icon_rollout:
உங்க கதைய சொல்லல.. உங்கள சொன்னேன். நீங்கள் சின்னப்பிள்ளை என்றால் உங்கள் கதையும் சிறுவர் பகுதிக்கு மாற்றவேண்டியது தானே...

பூமகள்
02-12-2007, 10:19 AM
உங்க கதைய சொல்லல.. உங்கள சொன்னேன். நீங்கள் சின்னப்பிள்ளை என்றால் உங்கள் கதையும் சிறுவர் பகுதிக்கு மாற்றவேண்டியது தானே...
உண்மையில் கதை எழுதுபவரை விட, கதையின் தன்மை வைத்து தான் பதிவு இடமாற்றம் நடக்கும் என்று நினைக்கிறேன்.:icon_b::rolleyes:

தாங்கள் சொல்வது புதிதாக இருக்கிறது.:aetsch013:

மலர்
02-12-2007, 12:37 PM
அழகான தலைப்பு..
பாத்ததுமே படிக்கணும்ன்னு இழுத்திடுச்சி....
முதல்ல கதையை படிக்கும் போது உண்மைசம்பவத்தை
தழுவி எழுதின கதைன்னு நினைச்சேன்....



ஏம்மா.. ஏம்மா... உன்ன தாமா... திருமங்கலம்னு தானே கேட்டீங்க??" என்று சத்தமாய் கேட்டார் ஓட்டுநர்.
அதுவரை, நினைத்தது எல்லாம் பிரமை என்று உணர்ந்து,

நான் முன்பு பேப்பரில் படிச்ச அந்த சம்பவத்தையே மனசில வச்சி படிச்சிட்டு இருந்தேன்..
ஆனா தீடீர்ன்னு கதைக்கு எதிர்பாராத நல்ல திருப்பம்..

வர வர உன்னுடைய எழுத்து நல்லா மெருகேறிட்டே போகுது அக்கா.....
வாழ்த்துக்கள்...

இலக்கியன்
02-12-2007, 01:23 PM
வணக்கம் பூமகள் உங்கள் கதை நகர்த்தும் பாங்கு நன்றாக உள்ளது. சிறிய கருவாகினிலும் சிறப்பாக சொன்னீர்கள். கவிதைகளில் கலக்கும் நீங்கள் கதைகளிலும் மிறுளுவதியிட்டு மகிழ்ச்சி

ஜெயாஸ்தா
02-12-2007, 01:35 PM
போகிற போக்கைப் பார்த்தால் இனிமேல் அகஸ்தாகிறிஸ்டியைவிட அருமையாய் சஸ்பென்ஸ் வைத்து எழுவீர்கள் என்று நினைக்கிறேன். ஒரு சாதாரண நிகழ்சிக்குள் இவ்வளவு சஸ்பென்ஸா? உண்மையிலேயே விழிப்புணர்வூட்டும் கதைதான்.

தாமரை
02-12-2007, 02:35 PM
ஷேர் ஆட்டோவில் ஏறி நிம்மதியாய் தூக்கம். அதில் பயங்கரக் கனவு!
சென்னையில் மேற்கில் கடலை நோக்கிச் செல்லும் சூரியன்

மற்றபடி இயல்பான நடை இருக்கிறது. உங்கள் எல்லாப் பதிவுகளையும் தேடிப் பிடித்து படித்து விட்டு விமர்சிக்கிறேன்

பூமகள்
02-12-2007, 05:22 PM
அழகான தலைப்பு..
பாத்ததுமே படிக்கணும்ன்னு இழுத்திடுச்சி....
வர வர உன்னுடைய எழுத்து நல்லா மெருகேறிட்டே போகுது...
வாழ்த்துக்கள்...
நன்றிகள் அன்புத் தங்கை மலர்..
கஜினி படப்பாட்டை மறக்க முடியுமா? அதான் பெயரை வைத்தேன்.
உன் பாராட்டு கண்டு மகிழ்ச்சி. :)

பூமகள்
02-12-2007, 05:44 PM
வணக்கம் பூமகள் உங்கள் கதை நகர்த்தும் பாங்கு நன்றாக உள்ளது. சிறிய கருவாகினிலும் சிறப்பாக சொன்னீர்கள். கவிதைகளில் கலக்கும் நீங்கள் கதைகளிலும் மிறுளுவதியிட்டு மகிழ்ச்சி
ஓ... வெகு நாட்கள் பின் மன்றம் வந்த இலக்கியரை வரவேற்கிறேன்.
மீண்டும் எங்களைக் கவி மழையில் நனைப்பீர்கள் என்று நம்புகிறேன். ;)

உங்களின் பாராட்டுக்கும் விமர்சன பின்னூட்ட ஊக்கத்திற்கும் நன்றிகள் பல.:)

பூமகள்
02-12-2007, 05:51 PM
ஷேர் ஆட்டோவில் ஏறி நிம்மதியாய் தூக்கம். அதில் பயங்கரக் கனவு!
சென்னையில் மேற்கில் கடலை நோக்கிச் செல்லும் சூரியன்
அன்பு நக்கீரரே..!
கதை எழுதும் ஆசையில் திசை அறிய மறந்தமைக்கு மன்னிக்கவும். இனி, இப்பிழை வராமல் இந்தியா வரைபடத்தின் உதவி கொண்டே கதை எழுதுகிறேன்.

மற்றபடி இயல்பான நடை இருக்கிறது. உங்கள் எல்லாப் பதிவுகளையும் தேடிப் பிடித்து படித்து விட்டு விமர்சிக்கிறேன்ஆஹா...!! என் பதிவுகள் அனைத்தும் தாமரை அண்ணாவின் மலர்விழிகளுக்கு விருந்தாகும் பாக்கியம் பெறப் போகிறதா???!!:huepfen024:
சந்தோசமா இருக்கு னா..!! :icon_dance:
மிகுந்த நன்றிகள்.. :)

நேசம்
02-12-2007, 06:18 PM
சர்வ சதாரணமாக சமுகத்தில் நடப்பதை தான் தனக்கு நேர்வதாக நினைத்து இருக்கிறாள் சந்தியா.கதை கொண்டு சென்ற விதம் அருமையாக இருக்கும்படி இயல்பான எழுத்து நடை.வாழ்த்துக்கள்
இன்னும் எழுதுங்கள்.எழுத எழுத எழுத்துக்கள் மேலும் உங்கள் வசப்படும்

பூமகள்
02-12-2007, 06:47 PM
சர்வ சதாரணமாக சமுகத்தில் நடப்பதை தான் தனக்கு நேர்வதாக நினைத்து இருக்கிறாள் சந்தியா.கதை கொண்டு சென்ற விதம் அருமையாக இருக்கும்படி இயல்பான எழுத்து நடை.வாழ்த்துக்கள்
இன்னும் எழுதுங்கள்.எழுத எழுத எழுத்துக்கள் மேலும் உங்கள் வசப்படும்
ஆஹா.. நன்றிகள் நேசம் அண்ணா. உங்களின் வாழ்த்தும் பாராட்டும் மிகுந்த உற்சாகத்தைத் தருகின்றன. :)

இதயம்
03-12-2007, 03:38 AM
நல்ல முன்னேற்றம்..! தங்கை பூவின் இந்த கதையின் வர்ணனைகளில், உரையாடல்களில், கதையின் நடையில் நிறைய முன்னேற்றம் தெரிகிறது. ஒரு எழுத்தா(ளினி)ளர் மெல்ல, மெல்ல உருவாகிக்கொண்டிருப்பது புரிகிறது. நடைமுறை வாழ்க்கையில் நடக்கும் ஒரு இயல்பான சம்பவத்தை விறுவிறுப்பாக கொண்டு சென்று, சஸ்பென்ஸ் வைத்து, மிக இலாவகமாக முடிச்சை அவிழ்த்திருக்கிறார். அதுவும், ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என்பதை வாசகர்களுக்கு உணர்த்த அழகான இளம்பெண், இருட்டும் நேரம், தனிமை, கூட வெறும் ஆண்கள் மட்டும் போன்றவற்றை சேர்த்த யுக்தி குறிப்பாக பாராட்டத்தக்கது. பூவின் எழுத்தில் மட்டும் முன்னேற்றமில்லை, கனவு காண்பதிலும் தான். ஆம்..மாடியில் இருந்து விழுந்த பெண், ஆண்களால் பலவந்தப்படுத்தப்படுவது போன்ற கனவு முன்னேற்றம்(!) தானே..?!! அப்துல் கலாம் முன்னேற வேண்டுமானால் கனவு காணுங்கள் என்று சொன்னது உண்மை தான். ஆனால், அவர் சொன்னது இந்த கனவுகளை அல்ல...!

பூ தன் எழுத்துலக வாழ்க்கை இனிதே அமைய தொடர்கதைகளை விட இது போன்ற சிறுகதைகளை அதிகம் எழுதுவது நல்லது..! சிறுகதைகளின் பரிச்சயம் நிச்சயம் எதிர்காலத்தில் இவர் ஒரு நல்ல எழுத்தாளர் ஆக வழிவகுக்கும். இப்போதே என் கண்களில் கண்மணி, மங்கையர் மலர், தேவி, ராணி முத்து போன்ற புத்தகங்களில் இவர் பெயர் போட்டு கதைகள் வருவது போல் நான் கனவு காண ஆரம்பித்து விட்டேன் (உங்களுக்கு மட்டும் தான் கனவு காணத்தெரியுமா..?). நீங்கள் பூமகள் என்ற பெயரிலேயே கடைசி வரை எழுத வேண்டும் என்பது என் விருப்பம் + வேண்டுகோள்..! அன்புத்தங்கையின் அழகான எழுத்துக்கு நானும் வாசகன் என்பதில் எனக்கு பெரும் பெருமை. பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் என் அன்பின் பூமகளுக்கு..!

lolluvathiyar
03-12-2007, 08:58 AM
]ஒரு சின்ன சம்பவம், அரை மனி நேர ஆட்டோ பயனம். இதற்க்குள் ஒரு மிக பெரிய கதை. ஆரம்பமே வேலை கொடுக்க இழுத்தடிக்கபடும் வரிகளோடு தொடங்கிறார்.
சென்னையில் ஆங்காங்கு சில இடங்களில் நடந்த சம்பவங்கள் பத்திரிகையில் படித்ததால் அனைவருக்கு ஏற்படும் கற்பனை அதன் மூலம் ஏற்படும் பயம் கதையாக வந்திருகிறது. எச்சரிகையாகவும் இருக்க வேண்டும்
கதை கொண்டு போனவிதம் மிக அருமை பாராட்டுகிறேன்.

அறிஞர்
03-12-2007, 05:06 PM
பலருக்கு ஏற்படும் பக் பக் அனுபவங்களை இங்கு காண முடிகிறது....

உண்மையோடு... சற்று கற்பனை கலந்த கதைகள்..... பலரது நினைவில் சில நாட்கள் நிற்கும்...

வாழ்த்துக்கள்.. பூம்மா....

இளசு
03-12-2007, 07:17 PM
முன்னெச்சரிக்கை உணர்வும், விரிவான - சுகமோ/சோகமோ - கற்பனையும் இளம்பெண் நெஞ்சத்தின் பிரத்தியேக சொத்துகள்..

படிக்கும் செய்திகள், பெண்மையின் பாதுகாப்பு ஆண்டென்னா - இரண்டும் கூட்டணி அமைத்தால் - இந்த மாலை இளவெயில் நேரம் கிடைக்கும்.

சொன்ன கரு - பாஸ் மார்க்!
சொன்ன விதம் - கூடுதல் போனஸ் மார்க்!

வாழ்த்துகள் பூமகள் !

இதயம் கண்ட கனவு - அந்த வரிசை பத்திரிகைகள் தாண்டி உயர்ந்தும் பலிக்கட்டும்!

mukilan
03-12-2007, 11:40 PM
பாமகள் எப்போது கதைமகள் ஆனார். கதை முடிவில் இது போன்று ஒரு திருப்பம் வைத்து எழுதுவதும் சிறுகதைகளில் ஒரு வகை. பாக்யா, குமுதம் ஆனந்த விகடன் போன்ற ஜனரஞ்சக பத்திரிகைகளில் இவ்வாறான கதைகளைப் படித்திருக்கிறேன். மன்றத்திலும் தங்கையின் படைப்பாக காண்பதில் ஏக மகிழ்ச்சி! 25 வயதை கால் நூற்றாண்டு என்று வர்ணிப்பதை பார்த்தால் வயது கூடிவிட்டதை நினைவு படுத்துகிறது (எனக்குத்தான்!!!). இருந்தாலும் பரவாயில்லை ரசிக்கும்படி இருக்கிறது.

பூமகள்
04-12-2007, 02:26 PM
போகிற போக்கைப் பார்த்தால் இனிமேல் அகஸ்தாகிறிஸ்டியைவிட அருமையாய் சஸ்பென்ஸ் வைத்து எழுவீர்கள் என்று நினைக்கிறேன். ஒரு சாதாரண நிகழ்சிக்குள் இவ்வளவு சஸ்பென்ஸா? உண்மையிலேயே விழிப்புணர்வூட்டும் கதைதான்.
ஒரு திகில் கொண்ட கதையை எழுத முனைந்து எழுதியது. உங்களின் கருத்து அந்த முனைப்பில் சிறிதெனினும் வெற்றி பெற்றுள்ளேன் என்று தெரிகிறது.

நிதர்சனமான பல சம்பவங்களைக் கேட்ட நிகழ்வும் பத்திரிக்கைகளில் படித்த நிகழ்வும் எப்படி ஒரு பெண்ணினை பயமுறுத்தும் என்று சொல்ல விழைந்தேன்.

உங்களின் பாராட்டுக்கு நன்றிகள் அன்பர் ஜெயாஸ்தா. :)
எல்லாம் சரி, யாருங்க அது அகஸ்தாகிறிஸ்டி??:confused::confused::confused:
பூவுக்கு நிஜமாவே தெரியாதுங்க..!:icon_ush::icon_ush::icon_ush:

பூமகள்
04-12-2007, 03:40 PM
நல்ல முன்னேற்றம்..! தங்கை பூவின் இந்த கதையின் வர்ணனைகளில்,உரையாடல்களில்,கதையின் நடையில் நிறைய முன்னேற்றம் தெரிகிறது.ஒரு எழுத்தா(ளினி)ளர் மெல்ல,மெல்ல உருவாகிக்கொண்டிருப்பது புரிகிறது.
எப்போதுமே இதயம் அண்ணாவின் ஆழமான கருத்து கொண்ட பின்னூட்டத்தை என் எல்லாப்பதிவிலும் எதிர்பார்ப்பேன். அது போலவே இம்முறையும் ஆவலோடு இருந்தேன். அவர் சற்று தாமதமானாலும் அவருக்கே உரிய அசத்தல் பின்னூட்டத்தில் மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டார்.
மிக மிக மிக......... நன்றிகள் இதயம் அண்ணா. :)

நீங்கள் பூமகள் என்ற பெயரிலேயே கடைசி வரை எழுத வேண்டும் என்பது என் விருப்பம் + வேண்டுகோள்..! அன்புத்தங்கையின் அழகான எழுத்துக்கு நானும் வாசகன் என்பதில் எனக்கு பெரும் பெருமை. பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் என் அன்பின் பூமகளுக்கு..!
நிச்சயம் உங்கள் விருப்பம் போலவே பூமகள் பெயரிலேயே என் பதிவுகள், படைப்புகள் எப்போதும் கொடுப்பேன் என்று வாக்களிக்கிறேன். உங்களின் எழுத்துகளில் கற்றதையே என் எழுத்தில் சிற்றெறும்பு போல் சிறிது சிறிதாக வனப்பாக்கிக் கொண்டிருக்கிறேன் இதயம் அண்ணா. உண்மையில் நான் தான் உங்களின் ரசிகை.

உங்களின் பாராட்டும் வாழ்த்தும் என்றும் கிடைக்கும் படி கண்களில் நீர் பனிக்க இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.:traurig001:

மனமார்ந்த நன்றிகளோடு,

அமரன்
04-12-2007, 03:43 PM
நல்லா இருக்குக் கதை. எல்லாரும் சொன்னது போலவே வளர்ச்சி வரைபு சீராக ஏறுமுகம் காட்டுகின்றது. கனவி நிகழ்வு என்பது ஏற்கனவே நீங்கள் பயன்படுத்திய உத்தி என்பதே கனவாக இருக்காது என்று என்னை நம்பவைத்தது. ஒரே உத்தியைப் பயன்படுத்துவதும் சிலநேரங்களில் சாதகமானதுதானோ?

தாமரை அண்ணா சொன்ன மற்றவற்றையும் கவனத்தில் கொண்டு அடுத்த படையல் செய்வீர்கள் என்பது எனது நம்பிக்கை.

பாராட்டுக்கள் பூமகள்..

பூமகள்
04-12-2007, 03:49 PM
]சென்னையில் ஆங்காங்கு சில இடங்களில் நடந்த சம்பவங்கள் பத்திரிகையில் படித்ததால் அனைவருக்கு ஏற்படும் கற்பனை அதன் மூலம் ஏற்படும் பயம் கதையாக வந்திருகிறது. எச்சரிகையாகவும் இருக்க வேண்டும்
கதை கொண்டு போனவிதம் மிக அருமை பாராட்டுகிறேன்.
உண்மை தான் வாத்தியார் அண்ணா.
இது போன்ற சம்பவங்கள் மலிந்து போகட்டும் இனியேனும்..!
கனவிலும் வராமல் இருக்கட்டும்..!
பாராட்டுக்கு நன்றிகள் வாத்தியார் அண்ணா.

பலருக்கு ஏற்படும் பக் பக் அனுபவங்களை இங்கு காண முடிகிறது....
உண்மையோடு... சற்று கற்பனை கலந்த கதைகள்..... பலரது நினைவில் சில நாட்கள் நிற்கும்...
வாழ்த்துக்கள்.. பூம்மா....
மிகுந்த நன்றிகள் அறிஞர் அண்ணா. :)
ஒரு குட்டி சந்தேகம்.. நீங்களும் எனக்கு பூம்மான்னு பேரு வச்சிட்டீங்களா??:rolleyes:
எப்பவும் மனோஜ் அண்ணா தான் இப்படி "பூ மா" என்று பேரு வைச்சி கூப்பிடுவாரு...!:)

ஷீ-நிசி
04-12-2007, 03:56 PM
ஏ! ரொம்ப நல்லாருக்குபா.... நமக்கு இதுபோல கதைகள் தான் படிக்க வசதி.. இதுபோல் கதைகள் படித்திருந்தாலும், சத்தியமா இந்த ட்விஸ்ட்ட நான் எதிர்பார்க்கல...

வரியமைப்புலாம் பலே!

வாழ்த்துக்கள் பல!

பூமகள்
04-12-2007, 04:10 PM
எனது ஒவ்வொரு படைப்புகளுக்கும் என் மதிப்பிற்குரிய மன்ற மணிகளின் பின்னூட்டம் எதிர்பார்ப்பது வழக்கம். அதில் என் அன்பு பெரியண்ணாவின் பின்னூட்டம் இருந்துவிட்டால், அந்த நாளில் இரு கைப்பிடி அதிகமாவே சாப்பிடுவேன். :)

சொன்ன கரு - பாஸ் மார்க்!
சொன்ன விதம் - கூடுதல் போனஸ் மார்க்!
இதைப் படித்ததும்.. மகிழ்ச்சியின் உச்சத்துக்கே போய்விட்டேன் இளசு அண்ணா. என் கதை பிடிக்குமா என்று பயத்துடனே கதையைப் போட்டேன். ஆனால், மன்றத்தின் பெரியண்ணாவிடம் இருந்தே மார்க் வாங்கி பாஸ் ஆனது மிக மிக ஆனந்தத்தைத் தருகிறது.
மிக்க நன்றிகள்.

வாழ்த்துகள் பூமகள் !
இதயம் கண்ட கனவு - அந்த வரிசை பத்திரிகைகள் தாண்டி உயர்ந்தும் பலிக்கட்டும்!
இந்த வாழ்த்து ஒன்று போதுமே... கோடி சாதனை புரிய..!!:huepfen024:
மிக மிக நன்றிகள் இளசு அண்ணா.:icon_03:

பூமகள்
04-12-2007, 04:21 PM
பாமகள் எப்போது கதைமகள் ஆனார். கதை முடிவில் இது போன்று ஒரு திருப்பம் வைத்து எழுதுவதும் சிறுகதைகளில் ஒரு வகை. பாக்யா, குமுதம் ஆனந்த விகடன் போன்ற ஜன்ரஞ்சக பத்திரிகைகளில் இவ்வாறான கதைகளைப் படித்திருக்கிரேன். மன்றத்திலும் தங்கையின் படைப்பாக கான்பதில் ஏக மகிழ்ச்சி! 25 வயதை கால் நூற்றாண்டு என்று வர்ணிப்பதை பார்த்தால் வயது கூடிவிட்டதை நினைவு படுத்துகிறது (எனக்குத்தான்!!!). இருந்தாலும் பரவாயில்லை ரசிக்கும்படி இருக்கிறது.
அப்போ முகல்ஸ் கால்(25) தான் கடந்திருக்கிறாரா??!!:aetsch013::aetsch013::lachen001:
பரவாயில்லையே..!:rolleyes: நான் கூட அரையைக்(50) கடந்திருப்பாருன்னுல்ல நினைத்தேன்..!!:cool::icon_b: (சும்மா லுலூவாயிக்கு சொன்னேன்:D:D)
வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றிகள் முகிலன் அண்ணா. :)

நல்லா இருக்குக் கதை. எல்லாரும் சொன்னது போலவே வளர்ச்சி வரைபு சீராக ஏறுமுகம் காட்டுகின்றது.
தாமரை அண்ணா சொன்ன மற்றவற்றையும் கவனத்தில் கொண்டு அடுத்த படையல் செய்வீர்கள் என்பது எனது நம்பிக்கை.
பாராட்டுக்கள் பூமகள்..
அமரரிடமிருந்து வாழ்த்து வாங்குவது வஷிஸ்டர் கையால் பாராட்டு பெறுவது போல் தான் என்று பலமான நினைவு என்னக்குள் எப்போதும் இருக்கும். எப்பவும் எனக்கு அது அவ்வளவு எளிதில் கிடைக்காது. இன்று அமரன் அண்ணா கதையைப் படித்துக் கொண்டிருப்பதைப் பார்த்ததுமே பக் என்றது. என்ன சொல்லப் போறாரோ என்று. பாராட்டு கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.
உங்களின் ஊக்கத்துக்கும் பாராட்டுக்கும் நன்றிகள் அமரன் அண்ணா. :)

பூமகள்
04-12-2007, 04:24 PM
ஏ! ரொம்ப நல்லாருக்குபா.... நமக்கு இதுபோல கதைகள் தான் படிக்க வசதி.. இதுபோல் கதைகள் படித்திருந்தாலும், சத்தியமா இந்த ட்விஸ்ட்ட நான் எதிர்பார்க்கல...
வரியமைப்புலாம் பலே!
வாழ்த்துக்கள் பல!
ஓ.... ஷீ..! நிஜமா வா சொல்றீங்க??!! கேக்கறதுக்கே எவ்வளோ சந்தோசமா இருக்கு பா..!! :)
வந்து பாராட்டி ஊக்கமளித்ததற்கு ரொம்ப நன்றிகள் ஷீ..!!:icon_rollout:

Ram-Sunda
06-12-2007, 04:40 AM
ஒரு பருவமங்கையின் இயல்பான பயத்தை அருமையாக வெளிப்படுத்தியது உங்கள் கதை
அருமை
வாழ்த்துக்கள் பூமகள்

சுகந்தப்ரீதன்
06-12-2007, 05:02 AM
சில உண்மை சம்பவங்களின் தாக்கம்தான்.. எல்லோருக்கும் இது போன்ற கனவுகள் வருவதற்க்கு காரணம்.. அது எச்சரிக்கை மணியாக அமைந்தால் கூடுதல் பலமே பெண்களுக்கு.. நல்ல கவிதிறனுடம் கதை எழுதும் ஆற்றலும் இருக்கிறது தங்களிடம்.. வாழ்த்துக்கள் பூமகள்..! இனிமையான எளிமையான வடிவில் வாசிக்க தந்தமைக்கு..!

பூமகள்
06-12-2007, 06:45 AM
ஒரு பருவமங்கையின் இயல்பான பயத்தை அருமையாக வெளிப்படுத்தியது உங்கள் கதை அருமை வாழ்த்துக்கள் பூமகள்
நன்றிகள் சகோதரர் ராம். :)

சில உண்மை சம்பவங்களின் தாக்கம்தான்.. எல்லோருக்கும் இது போன்ற கனவுகள் வருவதற்க்கு காரணம்.. அது எச்சரிக்கை மணியாக அமைந்தால் கூடுதல் பலமே பெண்களுக்கு.. நல்ல கவிதிறனுடம் கதை எழுதும் ஆற்றலும் இருக்கிறது தங்களிடம்.. வாழ்த்துக்கள் பூமகள்..! இனிமையான எளிமையான வடிவில் வாசிக்க தந்தமைக்கு..!
மிக்க நன்றிகள் ப்ரீதன்..! உங்களின் உற்சாகமான பின்னூட்டங்கள் தான் என்னைச் செதுக்கிக் கொண்டிருக்கின்றன.
தொடர்ந்து விமர்சியுங்கள். :)

மனோஜ்
03-01-2008, 09:11 AM
நல்ல விழி(ப்) உணர்வு கதை அருமை பூ......மா
இன்னும் அதிகமாக சிறப்பாக எழுத வாழ்த்துக்கள்

மயூ
03-01-2008, 09:20 AM
என்னவாகப் போகுதோ ஏதாகப் போகுதோ என்று பயத்துடன் பட படப்புடன் இருந்த போது. இப்படியாக டப்புண்ணு முடிச்ச தங்கச்சியின் செயற்பாட்டை வன்மையாகக் கண்டிக்கின்றேன்!

அருமையான எழுத்து... க்ரைம் கதை எழுதும்மா!!! :)