PDA

View Full Version : நானும் தமிழும்! - நிறைவு



தாமரை
02-12-2007, 07:02 AM
சும்மா கிடந்த சங்கு!


சும்மா நான் பாட்டுக்கு ஏதோ ஸ்கூல்ல ஒழுங்கா படிச்சுகிட்டு இருந்தேன். +2 படிச்சிட்டுகிட்டு இருந்தப்ப ஆண்டுவிழா போட்டிகள் வந்தது.

எங்க ஸ்கூல்ல G.A. கண்ணன். மு.பிரபு (முத்துப்பிரபு) இரண்டு பேரும் தனியா ஒரு புலவர் கிட்ட ட்யூஷன் படிச்சாங்க. எதுக்குத் தெரியுமா? பேச்சு, கவிதை, கட்டுரை இது மாதிரி போட்டிகளில் கலந்துக்கத் தான். இவங்க அ.தி.மு.க மேடையில் கூட பேசி விஜயலட்சுமி பழனிச்சாமி அவர்களிடம் பரிசு வாங்கியதுண்டு..

நான் கணக்கு டியூஷன் கிளாஸில் இருந்தேன்.. (டியூஷனா ன்னு கேட்கறது புரியுது)

எங்க கணக்கு வாத்தியாருக்கு என்னை ரொம்பப் பிடிக்கும். 9, 10, +1, +2 நாலுவருஷமும் அவர்தான் எனக்குக் கணக்குப் பாடம் எடுத்தார். நான் புத்தகமும் படிப்பதில்லை.. என் வழி தனி வழி என்று ஏதோதோ சம்பந்தமில்லா ஃபார்முலா எல்லாம் போட்டு கணக்குகளை தீர்த்து வைத்திருப்பேன்.

அதனாலேயே என்னை டியூஷனுக்கு ஃபிரீயாக வரச் சொல்லி இருந்தார். அவர் வைக்கும் தேர்வுகளை எழுத வேண்டும். அவர் கணக்கு சொல்லித்தரும் போது கவனிக்க வேண்டும் அவ்வளவுதான் கண்டிஷன். டியூஷன் முடிந்த பின் வாத்தியார்களும், மாணவர்களும் பால் பேட்மிண்டன் ஆடி விட்டு வீட்டிற்குச் செல்வோம்..

அன்று பிரபுவும் கண்ணனும் டியூஷன் கிளாசுக்கு வந்து கெஞ்சினார்கள்.. எதுக்குத் தெரியுமா?

பேச்சுப் போட்டிக்கு யாருமே பேர் கொடுக்கலையாம்.. இரண்டு பேர் மட்டும் பேர்கொடுத்ததால போட்டியை கேன்சல் பண்ணறதா தமிழையா சொல்லிட்டாராம்.. வந்து யாராச்சும் பேர் குடுங்க என்று காலில் விழாத குறையாய் கெஞ்சினார்கள்.. கணக்கு வாத்தியர் நாலுபேர் போய் பேர் குடுத்துட்டு வாங்க என அனுப்பினார்.. எங்க கிளாஸ் பசங்க நாலுபேர் பேர் கொடுத்தோம்..

தொடரும்

மலர்
02-12-2007, 07:50 AM
இதுக்கு பேரு தான் வேலியில போற ஓணானை எடுத்து
சட்டைப்பைக்குள் விட்டுக்கிறதுங்கிறது...

இந்த தடவை பரிசு கண்ணனுக்கும்,பிரபுக்கும் உண்டா..
இல்லை வேற யாராச்சும் தட்டிட்டாங்களா...

தொடருங்க,,,,அண்ணா..:D:D

சிவா.ஜி
02-12-2007, 07:57 AM
கண்டிப்பா தாமரைக்குத் தான் பரிசு கிடச்சிருக்கும்.யானைக்குத் தன் பலம் தெரியாது என்று சொல்வார்கள்(அதுக்காக தாமரையை நான் யானைன்னு சொல்லல...ஆமா)அதுமாதிரி அவருக்குள்ள தூங்கிகிட்டிருந்த(விவேக் வெச்சிருந்த மாதிரி பூணையில்ல)திறமை வெளியே வர அந்த கட்டாய பேர் கொடுப்பு உதவியிருக்கு....எப்டி நம்ம யூகம்......ஹா..ஹா...

ஓவியன்
02-12-2007, 07:59 AM
ஆகா செல்வண்ணா..!!

அடுத்த ஞாபகப் பகிர்வு தொடங்கியாச்சா....
அசத்துங்க, அசத்துங்க....!!

ஆனா என்ன பேச்சுப் போட்டியில் யார் யார் தலை உருளப் போகிறதோனு தான் கவலையாக் கிடக்கு.....!! :confused:

ஓவியன்
02-12-2007, 08:02 AM
இதுக்கு பேரு தான் வேலியில போற ஓணானை எடுத்து
சட்டைப்பைக்குள் விட்டுக்கிறதுங்கிறது...

செல்வன் அண்ணாவை ஓணான் என்று சொல்லும் மலரை நான் கண்டிக்கிறேன்.......!! :icon_rollout:

இதயம்
02-12-2007, 08:03 AM
கண்டிப்பா தாமரைக்குத் தான் பரிசு கிடச்சிருக்கும்.யானைக்குத் தன் பலம் தெரியாது என்று சொல்வார்கள்(அதுக்காக தாமரையை நான் யானைன்னு சொல்லல...ஆமா)அதுமாதிரி அவருக்குள்ள தூங்கிகிட்டிருந்த(விவேக் வெச்சிருந்த மாதிரி பூணையில்ல)திறமை வெளியே வர அந்த கட்டாய பேர் கொடுப்பு உதவியிருக்கு....எப்டி நம்ம யூகம்......ஹா..ஹா...

சரியா சொல்லுங்க.. தாமரை யானையா..? இல்ல.. பூனையா..?? (அதென்ன பூணை..! ஒரு வேளை பெரிய பூனையோ..??:D:D)

மலர்
02-12-2007, 08:05 AM
செல்வன் அண்ணாவை ஓணான் என்று சொல்லும் மலரை நான் கண்டிக்கிறேன்.......!! :icon_rollout:
ஹீ... நான் ஒண்ணும்
செல்வன் அண்ணாவை சொல்லலை...
பழமொழிய தான் சொன்னேனாக்கும்...

பிரித்து பொருள் மேயும் ஓவியனை கூட..
நான் கொலைவெறியில கண்டிக்கிறேன்...:D:D

சிவா.ஜி
02-12-2007, 08:07 AM
சரியா சொல்லுங்க.. தாமரை யானையா..? இல்ல.. பூனையா..?? (அதென்ன பூணை..! ஒரு வேளை பெரிய பூனையோ..??:D:D)

அய்யா சாமி ஆளை விடுங்க இந்த கீபோர்ட் தொல்லைத் தாங்க முடியல..ரெண்டு சுழி போட்டா மூணு வருது...மூணு சுழி போட்டா ரெண்டு வருது...பேஜாராக் கீது.

மலர்
02-12-2007, 08:07 AM
சரியா சொல்லுங்க.. தாமரை யானையா..? இல்ல.. பூனையா..??

தோடா...
விளக்கம் கேக்குறதுக்கு வந்திட்டாரு..
விளக்கம் வீராச்சாமியோட தம்பி...

இதயம்
02-12-2007, 08:26 AM
அய்யா சாமி ஆளை விடுங்க இந்த கீபோர்ட் தொல்லைத் தாங்க முடியல..ரெண்டு சுழி போட்டா மூணு வருது...மூணு சுழி போட்டா ரெண்டு வருது...பேஜாராக் கீது.

இதெல்லாம் ஒரு தொல்லையா சிவா..? உங்க பதில்லேயே தீர்வும் இருக்கே.. அப்புறமென்ன பிரச்சினை..?? உங்களுக்கு எத்தனை சுழி வேணும்..?? ரெண்டு சுழி வேணும்னா மூணு போடுங்க.. மூணு சுழி வேணும்னா ரெண்டு போடுங்க..! அவ்ளோ தானே..?!!!:icon_rollout::icon_rollout:

இதயம்
02-12-2007, 08:28 AM
தோடா...
விளக்கம் கேக்குறதுக்கு வந்திட்டாரு..
விளக்கம் வீராச்சாமியோட தம்பி...
என்ன வீராச்சாமின்னாலும் என்னை சொல்லிக்கங்க.. ஆனா, விஜய டி.ராஜேந்தரோட வீராசாமின்னு சொன்னா உங்க பேரை எழுதி வச்சிட்டு நாண்டுகிட்டு சாவேன்.!!:lachen001::lachen001:

யவனிகா
02-12-2007, 01:05 PM
கணக்கு வாத்தியாருக்கு பொண்ணு இருந்துச்சா தாமரை,,,இருந்திருந்தா அவங்களும் கணக்கு ட்யூசனுக்கே வந்திருப்பார்கள்...

மயூ
02-12-2007, 01:22 PM
எங்க எங்க எங்க ?????
மிகுதி எங்க?????? அரைவாசியில இப்படித் தவிக்க விடலாமா????

மயூ
02-12-2007, 01:27 PM
ஹீ... நான் ஒண்ணும்
செல்வன் அண்ணாவை சொல்லலை...
பழமொழிய தான் சொன்னேனாக்கும்...

பிரித்து பொருள் மேயும் ஓவியனை கூட..
நான் கொலைவெறியில கண்டிக்கிறேன்...:D:D

கண்டிக்கும் போது எதற்கு சிரிக்கும் பொம்மை போடுறீங்க??? :lachen001:
இப்படியான பொம்மைகளைப் போடவேண்டும்... :sauer028::sauer028:

மலர்
02-12-2007, 01:30 PM
கண்டிக்கும் போது எதற்கு சிரிக்கும் பொம்மை போடுறீங்க??? :lachen001:
இப்படியான பொம்மைகளைப் போடவேண்டும்... :sauer028::sauer028:
போட்டிரலாம் மயூ..
கோவத்தில் ஓவியண்ணா.. டென்ஷனாகி இருக்கிற எல்லாத்தையும் பிரிச்சி மேய்ஞ்சிட்டாருன்னா... அதான்,.....:D

மயூ
02-12-2007, 01:33 PM
போட்டிரலாம் மயூ..
கோவத்தில் ஓவியண்ணா.. டென்ஷனாகி இருக்கிற எல்லாத்தையும் பிரிச்சி மேய்ஞ்சிட்டாருன்னா... அதான்,.....:D
அது சரி... அப்படியெல்லாம் செய்யக் கூடியாள்த்தான் அவர்!!! :lachen001:

மலர்
02-12-2007, 01:34 PM
எங்க எங்க எங்க ?????
கதையை கேக்குறீங்களா...
இல்லை
கணக்கு வாத்தியார் பொண்ணை கேக்குறீங்களா...???

மயூ
02-12-2007, 01:36 PM
கதையை கேக்குறீங்களா...
இல்லை
கணக்கு வாத்தியார் பொண்ணை கேக்குறீங்களா...???

ஹி... ஹி....
அவர் ரெடியெண்டால் நான் ஓ.கே!!! :cool:

தாமரை
02-12-2007, 02:18 PM
கவலையே வேண்டாம் என் கணக்கு வாத்தியாருக்கு நன் 9 வது படிக்கும் பொழுதுதான் கல்யாணமே ஆயிற்று..

என்னுடைய ஆங்கில / தமிழ் ஆசியர்களைத் தவிர வேறு யாருக்கும் 30 வயதுக்கு மேல் இல்லை. இளைஞர் கூட்டமப்பா அது.. இன்று என்னுடன் வேலை செய்கிறவர்கள் கிட்ட தோழமையா பழகுறேன்னா அதற்கு என் ஆசிரியர்கள் எங்களுடன் விளையாடியது தான் காரணம்..

(ஒரு வேளை கதையில் திகிலைக் கூட்டினால் எல்லாரும் பேயடிச்சுப் போய் லூட்டி அடிக்காமப் போயிருவாங்களே???)

ஓ நான் (ஓணான்)
பூ நஹின் (பூனை)
யா நஹி ஔர் (யானை)
குச் பீ நஹின்
சிர்ஃப் தேரே யாத் மே
தும்ஹே தேக்னே
கிலா ஹூவா
ஏக் ஃபூல் ஹைன் (இதில ஃபூலுக்கு அர்த்தம் எடுக்க போட்டா போட்டி நடக்குமே!)

மலர்
02-12-2007, 02:35 PM
ஒரு வேளை கதையில் திகிலைக் கூட்டினால் எல்லாரும் பேயடிச்சுப் போய் லூட்டி அடிக்காமப் போயிருவாங்களேஆமா,,,
திகிலில் எப்படி லூட்டி வரும்...
பேய் தான் வரும்....:sprachlos020::sprachlos020:

ஏக் ஃபூல் ஹைன் (இதில ஃபூலுக்கு அர்த்தம் எடுக்க போட்டா போட்டு நடக்குமே!)மயூ இங்க ஓடியாயேன்...
செல்வன் அண்ணா என்னமோ சொல்லுராரு..:D:D

மயூ
02-12-2007, 02:42 PM
உணமை அர்த்தம் தேட பலரிடம் கேட்டு கடைசியாக இராகவன் அண்ணா ஜிசட்டில் சொன்னார்...
ஒரு பூ இருக்காம்!!!

மயூ
02-12-2007, 02:44 PM
எங்கள் பாணியில் யோசித்தால்
ஏக்- ஒரு
ஃபூல் - முடடாள்
ஹைன் - அதுதான் நம்ம பீட்டர் ஹைனை சொல்கின்றார்

மொத்தத்தில் பீட்டர் ஹைன் ஒரு முட்டாள் என்று அர்த்தம் வருகின்றது... அடப் பாவமே... அவர் கண்ணில் பட்டால் மான நஷ்ட வழக்கு போட்டுவிடப்போகின்றார்!! :)

மலர்
02-12-2007, 02:44 PM
உணமை அர்த்தம் தேட பலரிடம் கேட்டு கடைசியாக இராகவன் அண்ணா ஜிசட்டில் சொன்னார்...
ஒரு பூ இருக்காம்!!!
அட போ... மயூ..
ஏதாச்சும்
புரியித மாதிரி சொல்லுவன்னு
உன்னைய கூப்பிட்டா....

மயூ
02-12-2007, 02:45 PM
அட போ... மயூ..
ஏதாச்சும்
புரியித மாதிரி சொல்லுவன்னு
உன்னைய கூப்பிட்டா....
அதுதான் மலர் சொல்லியிருக்கனே.. மேல் இருக்கும் பதிலைப் பாருங்க!!! :)

ஓவியன்
02-12-2007, 02:51 PM
அது சரி... அப்படியெல்லாம் செய்யக் கூடியாள்த்தான் அவர்!!! :lachen001:

என்ன மயூ அடி மனசிலே இருந்து வருகிற மாதிரி இருக்கு...!! :)

மயூ
02-12-2007, 03:00 PM
என்ன மயூ அடி மனசிலே இருந்து வருகிற மாதிரி இருக்கு...!! :)

நல்லா நொந்துபோய் இருக்கீங்க...
வெந்த புண்ணில வேலைப் பாய்ச்ச நான் ஒன்றும் இதயம் அற்றவனல்ல....
ஆசுவாசப் படுத்துங்க ஓவியரே!!! :aetsch013: :lachen001: :lachen001:

ஓவியன்
02-12-2007, 03:08 PM
ஆசுவாசப் படுத்துங்க ஓவியரே!!! :aetsch013: :lachen001: :lachen001:

யாரு உங்களையா...?? :lachen001:

தாமரை
02-12-2007, 03:22 PM
முளச்சி மூணு இலை விட்டகதை!

குறளும் வாழ்வும் இதுதான் தலைப்பு. தலைப்பு கிடைத்த பத்து நிமிடத்தில் பேசணும்.. மத்தவங்க என்ன பேசினாங்கன்னு தெரியலை.. நானும் எனக்குத் தெரிஞ்ச புது விளக்கங்களை எல்லாம் சொன்னேன்.. (புத்தகம் படிச்சாதானே நேர் விளக்கம் சொல்ல)..

நீங்க எதிர்பாக்குறதும் நடந்தது.. எதிர்பாக்காததும் நடந்தது.. அதாவது முதல் பரிசு எனக்குக் கிடைச்சது.. இரண்டாம் பரிசு அண்ணாதுரைக்கு.. பிரபுவும் கண்ணனும் தோத்துப் போயிட்டாங்க..

இதுக்குப் பின்னாடிதான் கண்ணன் கலைநிலவு அப்படின்னு ஒரு கையெழுத்துப் பத்திரிக்கை ஆரம்பிச்சான். அதாவது கதை, கட்டுரை, கவிதைன்னு சேர்க்க வேண்டியது.. அதைப் பேப்பர்ல கையால் எழுதி சில பிரதிகள் எடுத்து ஆசிரியர்களுக்குப் படிக்கக் கொடுப்பது. அப்புறம் அந்தப் பிரதிகளை எல்லாம் கொண்டுபோய் பல லைப்ரரிகளில் போட்றது.

இதுக்காக என்னை எழுதிக் கொடுக்க நச்சரிக்க, நானும் வெண்பா, ஆசிரிய விருத்தம், ஆசிரியப்பா ன்னு நிறைய எழுதிக் கொடுத்தேன். எம்.ஜி.ஆருக்கு உடம்பு சரியாக எழுதின பாட்டு, இந்திரா காந்திக்கு இரங்கல் பாட்டு, கலைஞருக்கு வாழ்த்துப் பாட்டு இப்படி பாட்டும் செய்யுளுமாய் வாழ்க்கை மாறிச்சு.. தமிழுக்கு ஒரு தாலாட்டு, ஆசிரியருக்கு ஒரு ஆசிரியப்பா, பொதுவாழ்த்து, தங்கத் தலைவன் இப்படி மன்றத்தில் நான் பதிந்த செய்யுள்கள் பிறந்த காலம் அது. 1984-85. 20 வருஷம் கழிச்சும் வரி மாறாமல் ஞாபகம் இருக்கு.

இதுக்கு பின்னாடி ஆண்டு விழாவிற்கு மத்த கிளாஸ் மக்கள் எல்லாம் குட்டி நாடகங்களை (அப்பல்லாம் பிரபலமான சில சினிமாக் காட்சிகளே உல்டா செய்யப்பட்டு நாடகமாக்கப்படும்,, அதாவது கள்ள லாட்டரி வச்சிகிட்டு தருமி பிரைஸ் கேட்கறது.. இந்த மாதிரி) தயார் செய்ய எங்க கிளாஸ் மக்கள் என்னை எதாவது எழுதச் சொல்ல

கீசகவதம் வில்லுப்பாட்டு ரெடியாச்சு.. அதில பலப்பலப் பாடல்கள் இருந்தன..

அண்டரண்டமெலாம் கலங்கிட கலங்கிட
உண்ட சோறெலாம் செரித்திடும் செரித்திடும் வீரன்
படா படா படா சூரன்

சமையல் கார மச்சானே! அவன்
கண்ணை என் மேல் வச்சானே
மசயன் மாதிரி நின்னிருந்தா அவன்
நாமம் போட்டுட்டு போயிடுவான்

இந்த மாதிரி பல உற்சாகமூட்டும் பாடல்களைக் கொண்ட வில்லுப்பாட்டு எழுதப்பட்டது.. அதே சமயம் பேக்கப்புக்காக இன்னும் இரண்டு நாடகங்கள் எழுதினோம்.. ஏன்னா இந்த வில்லுப்பாட்டில எங்களுக்கு தெரிஞ்ச அத்தனை வாத்தியார்களுடைய பட்டப்பேரும் வரும். வாத்தியாருங்களுக்கும் அந்தப் பேர் தெரியும்கறதினால இதைக் கண்டிப்பா தள்ளுபடி செய்வாங்கன்னு எதிர்பார்த்தோம்.. இரண்டாவது நாடகம், பரமேஸ், குரமேஸ், ஸாரி பமரேஸ், குமரேஸ், ஸாரி பரமேஸ், குமரேஸ் (அதாங்க நம்ம ஈஸ்வரனும் முருகனும்) பூலோகம் வந்து சினிமாப் புகழுக்கு மயங்கி நடிப்பு சான்ஸ் வாங்க அலையற கதை.. மூன்றாவது நாடகம், ஒரு பைத்தியம் பைத்தியக்கார ஆஸ்பிடலை விசிட் செஞ்சு அங்கிருக்கற வைத்தியரை பைத்தியமாக்கற கதை (விசு எங்ககிட்ட இருந்து காப்பி அடிச்சுட்டார்:))

மூணும் வாத்தியாருங்களுக்கு முன்னால ரிகர்சல் செய்யப்பட்டு, வில்லுப்பாட்டும், பைத்தியம் வைத்தியம் பைத்தியம் நாடகமும் அரங்கேறின.


ஸ்கூல்ல தமிழ்ல எனக்கு ஆராய்ட்சி ஆர்வமெல்லாம் கிடையாது.. சும்மா எழுதிகிட்டு இருந்தேன். ஸ்கூல் முடிஞ்சு ஆர்ட்ஸ் காலேஜ்ல பி.எஸ்.ஸி மேத்ஸ் எடுத்தேன்.

முதல் மாதமே ஒரு பேச்சுப் போட்டியில ஆர்வமா கலந்துகிட்டேன். மாவட்ட அளவிலான போட்டி.. கீதை காட்டும் பாதை.. பகவத் கீதையில எனக்குத் தெரிஞ்சது ஒண்ணே ஒண்ணுதான்.. கடமையைச் செய் பலனை எதிர்பாராதே!

ஆனால் எனக்கு முன்னால் பேசியவர்களின் பேச்சைத் தொகுத்து பார்வையை மாற்றி புது கோணத்தில் பேச..

மாவட்ட அளவிலான மூன்றாம் பரிசு கிடைச்சது..

மூணுமாசம் தான் ஆர்ட்ஸ் காலேஜ். அப்புறம் எஞ்ஜினியரிங் சீட்டு கிடைச்சது. ஆரம்பத்தில் அங்க மௌனமாத்தான் இருந்தேன்..

புத்தாண்டு வந்தப்ப தான் எதாச்சும் செய்யறியான்னு கேட்டப்ப சரின்னு ஒரு கவிதை எழுதினேன்.. படித்தேன்

புத்தாண்டு வருக புதுவாழ்வு தரவே
பொன்னான நாளே வருக - எந்தன்
பூவான நெஞ்சில் தேனான நினைவில்
புதைந்தாடி இனிக்கும் சுவையே வருக
சத்தான அறிஞர் சதிராடும் நாவில்
சன்மானம் பெற்றே வருக - வாழ்வில்
வித்தாகி அறிவு விளக்காகி என்னை
அறங்கேற்ற வந்த குருவே வருக

-இதுதான் மேடையில் படிக்கப்பட்ட எனது முதல் பாட்டு..

இப்படி செய்யுள், பாட்டு கூத்துன்னு இருந்த என்னோட தமிழ் புதுக்கவிதைக்கு டிராக் மாறினது அந்த ஆண்டில்தான்.

தொடரும்

தாமரை
02-12-2007, 03:26 PM
உணமை அர்த்தம் தேட பலரிடம் கேட்டு கடைசியாக இராகவன் அண்ணா ஜிசட்டில் சொன்னார்...
ஒரு பூ இருக்காம்!!!


அதுக்கு ஜி-சாட்டில் என்னிடமே கேட்டிருக்கலாம்

மனோஜ்
02-12-2007, 03:30 PM
அருமையான தங்களின் மீள் பார்வை சிறப்பு தாமரை அண்ணா
முதல் பாடல் மிகவும் அருமை அண்ணா

ஓவியன்
02-12-2007, 03:36 PM
உங்களுக்குள் உறங்கிக் கொண்டிருந்த இப்போது நாம் காணும் தாமரைசெல்வனைத் தட்டி எழுப்பியது அந்த பேச்சு போட்டி தானா...!! :)

ஆரவாரமான தயார்படுத்தல், எதிர்பார்ப்புக்கள் இன்றி ஆழமான பார்வையும் வித்தியாசமான கோணத்தில் சிந்திப்பவர்களும் வெற்றிக் கனியைப் பறிப்பது உண்மையென மீண்டுமொருமுறை உங்கள் வாழ்வில் நிரூபணமாகியுள்ளது. :)

அந்த நாட்களில் எழுதியவையை இன்றும் ஞாபகப் பேழைக்குள் அடக்கி வைத்திருக்கின்றீர்களே, அதுவும் உங்கள் தமிழ் புலமைக்கு ஒரு காரணம்....! :)

mukilan
02-12-2007, 04:30 PM
நாவன்மை, சொல்வன்மை, மேலாண்மை என எல்லாவற்றிலும் வளம் கொண்ட உங்களை செல்வன் என்று அழைப்பதே மிகப் பொருத்தமாக இருக்கிறது. இருந்தாலும் உங்கள் உள்ளத்தனைய உயர்வதால்..... தாமரை செல்வன் (ஆமாம்! அந்த "ச்" சமா'ச்'சார் என்ன ஆயிற்று?)

தாமரை
02-12-2007, 04:33 PM
நாவன்மை, சொல்வன்மை, மேலாண்மை என எல்லாவற்றிலும் வளம் கொண்ட உங்களை செல்வன் என்று அழைப்பதே மிகப் பொருத்தமாக இருக்கிறது. இருந்தாலும் உங்கள் உள்ளத்தனைய உயர்வதால்..... தாமரை செல்வன் (ஆமாம்! அந்த "ச்" சமா'ச்'சார் என்ன ஆயிற்று?)

இப்பொழுதுதான் 1985 முடிந்து 1986-ல் காலடி எடுத்து வைத்திருக்கிறோம்.. அது நடந்தது 1999 ல்

mukilan
02-12-2007, 04:39 PM
இப்பொழுதுதான் 1985 முடிந்து 1986-ல் காலடி எடுத்து வைத்திருக்கிறோம்.. அது நடந்தது 1999 ல்

சரி காத்திருக்கிறோம்!. கட்டுண்டோம்!! பொறுத்திருப்போம்!!!

அமரன்
02-12-2007, 08:37 PM
ஹி...ஹி...கேட்கநினைத்த, அறிந்துகொள்ள நினைத்த விடயம். நன்றி அண்ணா..
முதன் முதல் நீங்கள் மேடையேறி, திருக்குறளுக்குப் பெயர்சொன்னதைப் படித்தபோது, நீங்கள் எழுதியவிதமோ அல்லது வேறு ஏதாவதோ தெரியவில்லை. அழகியதமிழ்மகனில் வில்லன் விஜய் கவிதைசொல்வதை ஞாபகமூட்டியது. சிரித்துவிட்டேன்... கரிக்கோச்சியிலிருந்து எலக்ட்ரிக்ட்ரெயினுக்கு மாறியதைத் தெரிந்துகொள்ள ஆவல்மிகுந்துள்ளது..

தாமரை
03-12-2007, 04:39 AM
நதிமூலம்!

என்னவோ இதுக்கு முன்னால தமிழே படிக்காம எழுதாம இருந்த மாதிரி +2 வில இருந்து எழுதறானேன்னு யோசிக்காதீங்க. தமிழுக்கும் எனக்குமான பந்தம் ஆரம்பிச்சது 3 ஆவது வயசில.

ஹீரோ எண்ட்ரி ஒரு பரபரப்பா இருக்கட்டுமேன்னு தான் +2 ல ஆரம்பிச்சேன்.

எனக்கு தமிழ் எழுதப் படிக்க கத்துக் கொடுத்தது என் அக்காக்கள். பள்ளிக்கு போறதுக்கு முன்பே கதை படிக்கிற அளவிற்கு தமிழ் தெரியும்.

எங்க அப்பா பெங்களுர்ல வேலை செஞ்சுகிட்டு இருந்தாரு. வாரம் ஒருமுறைதான் வீட்டுக்கு வருவாரு. வரும்பொழுது அம்புலிமாமா, பொம்மைவீடு, பாலமித்ரா, கல்கண்டு, முத்து காமிக்ஸ் இப்படி எதாவது புத்தகம் வாங்கிட்டு வருவாரு.

அவர் வந்து சாப்பிட்டு உறங்கிய உடனே மிகப் பெரிய சண்டையே நடக்கும். யாரு முதல்ல புத்தகம் படிக்கறதுன்னு. அக்காக்கள், படிச்சு சின்ன அண்ணன் பொம்மையெல்லாம் பாத்தப்பறம்தான் என் கைக்கு வரும்.

நான் முதன் முதலா அம்புலிமாமா படிச்சப்ப அதில் மஹாபரதம் தொடர், விக்கிரமாதித்தன் வேதாளம் தொடர், மந்திரத் தடாகம் என்கிற தொடர், போதிசத்துவர் கதைகள் என நிறைய இருக்கும். முத்து காமிக்ஸ்ல இரும்புக்கை மாயாவி, வேதாள மாயாவி, லாரன்ஸ்/டேவிட், மந்திரவாதி மாண்ட்ரேக் இப்படி பல ஹீரோக்கள்..

என்னுடைய கெட்ட பழக்கம் என்னன்னா, புத்தகத்தை எடுத்தா படிச்சு முடிக்காம கீழே வைக்க மாட்டேன். நான் 1 வது முடிக்கும் நேரத்தில் தான், மஹாபாரதம் முடிந்து வீர அனுமான் தொடர் ஆரம்பித்தது அம்புலிமாமாவில்..

மூணாவது படிக்கும் போதுதான் திடீர்னு நான் ஒரு மாதிரி படிப்புன்னா என்ன என்பதைப் புரிஞ்சுகிட்டேன். ஒரு செல்ஃப் ரியலைசேஷன்.. மூணாவது வகுப்பு காலாண்டுத் தேரிவில தான் முதல்ல ஸ்கூல் ஃபர்ஸ்ட் மார்க் வாங்கினேன். படிக்கிறது இவ்வளவு ஈஸியாங்கற மாதிரி ஒரு ஃபீலிங். அதே சமயம் நல்லா படிச்சிகிட்டு இருந்த எங்க அண்ணன் மார்க் குறைய ஆரம்பித்தது. 3 ஆம் வகுப்பு படிக்கும் போது வேப்பம்பட்டி புதூருக்கு போய் ஒரு வருஷம் இருந்தோம்.

அனுமான் என் ஃபேவரைட் ஹீரோ.. நான் அனுமான் என்று கற்பனை செய்து கொண்டு ரிப்பன் வால் வச்சுகிட்டு டயலாக் பேசின காலம் அது. இப்படி குழ்ந்தைகள் புத்தகம் படிச்ச நான் 4 வது படிக்கும் போது சேலம் வந்தேன்.

நான் 4 ஆம் வகுப்பு புதூரில் கொஞ்ச நாள், அப்புறம் காடையம்பட்டி (நம்ம சாமக் கோடங்கி ஊர்) கொஞ்ச நாள் படிச்சும் முழு ஆண்டுத்தேர்வு எழுதாத காரணத்தினால சேலத்தில் வீரலட்சுமி வித்யாலயத்தில் 4 ஆம் வகுப்பிலேயே சேர நேர்ந்தது.

ருக்மணி டீச்சர் என் நினைவில் நிற்கிற டீச்சர், இதற்கு முன்னால எந்த டீச்சர், எந்த வாத்தியார் பேரும் நினைவில்லை. பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்த சில நாட்களிலேயே என்னைப் புரிஞ்சிகிட்டார். அவர் பாடம் நடத்தும் போது அதெல்லாம் நான் ஏற்கனவே நான் படிச்ச பாடங்கள் என்பதால் அதிகம் கவனிக்க மாட்டேன். என் கவனத்தை ஈர்க்கணும்கறதுக்காக கஷ்டமான கேள்வி கேட்பார். பாராட்டுவார்..
என்னை மைக் முன்னால முதல் முதல்ல நிக்க வச்சதும் அவர்தான்.

வீரலட்சுமி வித்யாலயத்தில மாணவர் மன்றம் உண்டு. அது நடுநிலைப் பள்ளி. எட்டாம் வகுப்பு வரை. 8 வதில் சிறந்த மாணவன் தான் மாணவர் மன்றத் தலைவர். அவருக்கு என்ன வேலைன்னா, திங்கள் கிழமை பிரேயர் அசெம்ப்ளியில் கொடியேத்தணும். தமிழ்த்தாய் வாழ்த்து, ஒருமைப்பாட்டு உறுதி மொழி, தேசியகீதம் படிக்கணும் (கூடவே கோரஸா மத்த மாணவர்கள் பாடுவார்கள். அப்புறம், மாதம் ஒரு முறை பேச்சுப் போட்டி வகுப்பு வாரியா நடக்கும். அதை நடத்த வேண்டியது இப்படி.

ருக்மணி டீச்சர் நான் சென்ற சுற்றுலா என்கிற தலைப்பில என்னைபேசச் சொன்னாங்க. பழனி தவிர வேற எங்கயும் சுற்றுலா போயிருக்காத நான் (காணமல் போன கதை படிங்க.. ) எங்க அண்ணாவைக் கெஞ்சிக் கூத்தாடி எழுதித்தரச் சொல்ல அவர் ஏற்காடு பத்தி எழுதிக் கொடுத்தார். முதல் பரிசு.. கிடைச்சது..

அதன் பின் தமிழ் வேகமாய் படிக்கும் போட்டிகள் நடக்கும். எப்பயுமே நான் எல்லோத்தையும் ஒரங்கட்டி ஜெயிப்பேன். அந்த வருஷ ஆண்டுவிழாவிற்கு இருபது அம்சத் திட்டம் பற்றி ஒரு நாடகம் போடறதா இருந்தது.

ஏலே ராசாமன்னாரு! என்னலே இம்புட்டு குஷி என்று திருநெல்வேலி பாஷையில் ஆரம்பிக்கும் என்னுடைய பாத்திரத்தை கஷ்டப்பட்டு ரிகர்ஷல் எல்லாம் செய்தால் தேர்தல் வந்து அம்மையார் தோற்று எங்க நாடகத்தை அரங்கேற விடாமல் செய்து விட்டார்.

விட்டுருவமா சோதனை வந்தா! நானே நாடகம் எழுத ஆரம்பித்தேன் எங்க பக்கத்து வீட்டு ஓபுளி, மகாலட்சுமி, தேவராஜ், உமா மற்றும் எங்க சின்ன அண்ணன் சிவா உதவியோட நானே நாடகம் எழுதி நடிக்க ஆரம்பிச்சேன்.

சும்மா நம்ம மயூ வோட கதையை ஒரு உதாரணத்துக்கு கற்பனைப் பண்ணிக்குங்க.. அப்படித்தான் இருக்கும் எங்க நாடகங்கள்.. பாண்டிய நாட்டு மன்னன் விருந்துக்கு தயார் செஞ்ச முறுக்கை சமையல் காரர் சாப்பிட்டு விட, முறுக்கு விக்கற கோவலனுக்குத் தண்டனை.

கண்ணகி வந்து அரிசிமாவு முறுக்குக்கும், கடலை மாவு முறுக்குக்கும் வித்தியாசம் காட்டி வாதட, முறுக்கு தொண்டையில் சிக்கி மன்னவன் செத்துடுவாரு,, அப்பக் கூட கடிகள் உண்டு..

அதோ அங்க கவுந்து படுத்திருக்காங்களே அதாருன்னு கோவலன் கேக்க, அதாங்க கவுந்தியடிகள்னு கண்ணகி பதில் சொல்லுவா! இப்படி சிலப்பதிகாரம் படாத பாடு பட்டது..

அப்புறம் திருவிளையாடல்.. ஒருத்தர் ஒருமனைவிக்கு மேல கட்டலாம்னு சிவன் வாதாட நக்கீரர் கூடாதும்பார். சிவன் ஒவ்வொரு கடவுளா காட்டி அவருக்கு அத்தனை பொண்டாட்டி இவருக்கு இத்தனைப் பொண்டாட்டி ன்னு சொல்ல அவங்க அப்படி நிறைய கல்யாணம் கட்டினதால பட்ட அவஸ்தையை நக்கீரர் சொல்ல அதி பயங்கர விவாதம் நடக்கும்.

ம்ம்ம்.. அதெல்லாம் ஒருகாலம். இந்த காலத்தில்தான், மாயாஜாலக் கதைகளை அதிகம் படித்தேன். இன்னிக்கு வார்த்தைகளை வச்சி கதை சொல்றேன்னா அதுக்குக் காரணம் நாலாவது படிக்கும் போது நான் ஆங்கிலத்தில் செய்த பிராக்டீஸ்னா நம்ப முடியுதா?

தொடரும்

lolluvathiyar
03-12-2007, 09:34 AM
ஆகா தாமரை நிரைய பள்ளி அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறீர்கள். குறிப்பாக தமிழில் அந்த வயசிலேயே படைத்த விசயங்களை பகிர்ந்து கொண்டதை நினைத்து மிகவும் சந்தோசமும் பெருமையும் அடைகிறேன்.

எனக்கு தான் பகிர்ந்து கொள்ள எந்த அனுபவுமும் இல்லை. ஏனா நான் பள்ளியில் அவ்வளவு நல்ல பையன். எத்தனைய நான் சொல்லரது.
தினமும் முட்டீங்கால் போடரத சொல்லரதா
இல்ல பெஞ்சு மேல நிக்கவச்சத சொல்லரதா
கிளாச விட்டு வெளிய தாட்டியத சொல்லரதா
சில முரை பெயிலானத சொல்லரதா
ஒரு கட்டத்துல டிசி கூட கொடுத்துட்டாங்க அத சொல்லரதா

இத்தன பெருமைகளில நான் எத சொல்லரதுனு தெரியல. ம் என்ன பன்ன காலம் கடந்து போச்சு,
மேலும் தொடருங்கள் படிக்க ஆர்வமா இருகிறது

சிவா.ஜி
03-12-2007, 09:50 AM
அய்யோ..... வாத்தியார் இம்புட்டு பெருமைகளை வெச்சுக்கிட்டா ஒண்ணும் சொல்லாம இருக்கீங்க....ஒவ்வொண்னா சொல்லுங்க...

பூமகள்
03-12-2007, 10:19 AM
இப்ப தான் அண்ணா மொத்த பதிவையும் படித்து முடித்தேன்.
ஒரு அசாத்திய தமிழறிஞர் ஆவதற்கான ஒளிக்கீற்று அப்போதே உங்க கண்ணில் வீரலட்சுமி ஆசிரியைக்கு தெரிஞ்சிருக்கு.

அப்பவே நீங்க,
சகலகலாவல்லவர் ஆக இருந்திருக்கீங்க அண்ணா.. ! :icon_b:

ஹேட்ஸ் ஆஃப் டூ யூ..!!

மேலும் பல விறுவிறுப்பான சம்பவங்களை அறிய ஆவலாய் இருக்கிறேன்.:rolleyes:
சூப்பர் தாமரை அண்ணா. :)

தாமரை
03-12-2007, 11:31 AM
டீச்சருங்கன்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும்!

ஆமாம். எங்கள நாலாம் வகுப்பில் ஆங்கிலத்தில் கடைசிக் கேள்வி கட்டுரைக் கேள்வி. அதுவும் குறிப்புகள் (ஹிண்ட்ஸ்) கொடுத்து இருப்பாங்க. அதை வைத்து கட்டுரை எழுதனும். எல்லா மக்களும் கிளாஸ்ல எழுதின கட்டுரைங்களை உருவேற்றி எழுத நான் மட்டும் கூலாக அந்த ஹிண்டஸை டெவலப் பண்ண்ணி கதை எழுதி வைப்பேன்.

ஆரம்பத்தில அந்தக் கட்டுரையைப் படிச்சு மண்டையைப் பிச்சுகிட்டு ருக்மணி டீச்சர் லஞ்ச் டயத்தில கூப்டு, என்னடா எல்லாம் ஒழுங்கா எழுதி இருக்க, இந்தக் கட்டுரையை ஏண்டா இப்படி குதறி வச்சிருக்கன்னு கேட்க.. நான் திருட்டு முழி முழிச்சேன்..

அடுத்த முறை ஒழுங்கா படிச்சு எழுதனும், 500 க்கு 492 எடுத்திருக்க, இந்தக்கட்டுரையை ஒழுங்கா எழுதியிருந்தா முழுசா எடுத்திருக்கலாமேன்னாங்க.. அப்பயும் தலையைக் குனிஞ்சிகிட்டு கொறப்பார்வை பார்த்து அப்ப எதுக்கு ஹிண்ட்ஸ் குடுக்கறீங்கன்னு முனகினேன்.. என்ன.. என்னடா சொன்னேன்னு கேட்டாங்க.. ஒண்னுமில்லை டீச்சர் அப்படின்னேன்

சரி உனக்கு நீயா எழுதனும் அவ்வளவு தானேன்னு ஒரு 10, 15 கொஸ்டின் பேப்பர் குடுத்து, எல்லாக் கட்டுரையும் எழுதிகிட்டு வான்னு சொல்லிட்டாங்க.

நான் எழுத அவர் திருத்த, நான் எழுத அவர் திருத்த ஆங்கிலம் கொஞ்சம் வசப்பட்டது.. சில சமயம் தப்பான அர்த்தம் பண்ணிகிட்டு நான் எதெதோ எழுதி இருப்பேன்.. அப்ப சொல்லிக் குடுப்பாங்க.. ஆனா ஒரே ஒரு கண்டிஷன்.. நான் பரிட்சையில இந்த மாதிரி செய்யக்கூடாது..

ஒரு வார்த்தையில ஒரு பத்தி எழுத புத்தி தயாராயிட்டது அப்பவே!!..

4, 5, 6, 7 வகுப்புகள், வருஷம் ஒரு பேச்சுப் போட்டி, எல்லாத்திலயும் முதல் பரிசு.. வகுப்பு மட்டுமில்ல ஸ்கூல்லயும் முதலாம் இடம்.. என்னைப் பார்த்து பொறாமைப்பட்ட பெண்கள் கூட்டம் அதிகம். வழக்கமா எதாவது சண்டை.. எல்லாத்துக்கும் கடைசியில இவன் பேசியே டீச்சரைக் கவுத்துர்ரான்னு கமெண்ட் ஒளிஞ்சு இருக்கும்.. (டீச்சர்னா 100 / 100 போட்டுருவாங்க.. இந்த வாத்தியாருங்க ஒண்ணு ரெண்டு மார்க்கு கஞ்சம் பிடிச்சிருவாங்க)

இந்த கால கட்டத்தில் தான் நான் என் முதல் குருவைச் சந்தித்தேன்..

குருன்னா ஒரு வாத்தியார், எனக்குத் தமிழ் பாடம் நடத்தினவர்னெல்லாம் தப்புக் கணக்குப் போடாதீங்க.. ஓ அந்த வீதியில இல்லை ஏரியாவில என்னைக் கூப்பிட்டு எனக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தார்னும் தப்புக் கணக்குப் போடாதீங்க..

ஏகலைவன் மாதிரி தூரம் இருந்து இவரோட புராண, இதிகாச, பக்தி கதாகாலட்சேபங்களைக் கேட்டு வளர்ந்தேன்.. இன்றும் இவர் மேல் நான் இத்தனை மரியாதை வைத்திருக்கிறேன் என்று இவருக்குத் தெரியாது (கட்டை விரலைக் கேட்டுடுவார்னு பயமில்லை.. வெட்கம்.) அவருக்கு முன்னால நிக்கக் கூட எனக்கு ஒரு பரவச உணர்வு இருக்கும். தமிழுக்கும் வைணவத்துக்கும் மிகப் பாடுபட்டு பல நூட்கலள் எழுதி வைணவக்கடல் எனப் புகழப்பட்ட கிருஷ்ணமூர்த்தி அவர்கள்தான் அவர்.

தொடரும்

மலர்
03-12-2007, 03:46 PM
கடைசி மூன்று பதிவையும் இப்போ தான் படிச்சேன்...
உங்களுடைய ஞாபகசக்திக்கு ஒரு ஓஓஓ..
உங்கள் கட்டுரைய படிச்சதும் இருக்குற கொஞ்ச முடியையும் பிச்சி என்னுடைய சிறுவயது பருவத்தை யோசிச்சி பாத்தேன்....
பாதிக்கு மேல சுத்தமாய் நினைவுக்கு வரலை. ஒருவேளை அமைதியா ஒரேசிந்தனையாய் யோசிச்சா வரும்ன்னு நினைக்கிறேன்....


இந்தக் கட்டுரையை ஏண்டா இப்படி குதறி வச்சிருக்கன்னு கேட்க.. நான் திருட்டு முழி முழிச்சேன்..
இப்பிடியா....
:icon_wacko::icon_shok::icon_wacko::icon_shok: :icon_wacko::icon_shok::icon_wacko::icon_shok: :icon_wacko::icon_shok::icon_wacko::icon_shok: :icon_wacko::icon_shok::icon_wacko::icon_shok:


அப்பயும் தலையைக் குனிஞ்சிகிட்டு கொறப்பார்வை பார்த்து அப்ப எதுக்கு ஹிண்ட்ஸ் குடுக்கறீங்கன்னு முனகினேன்.. என்ன.. என்னடா சொன்னேன்னு கேட்டாங்க.. ஒண்னுமில்லை டீச்சர் அப்படின்னேன் எப்பவுமே டீச்சர கூட எதிர்த்து பேசியிரலாம்.. ஆனா என்னன்னு கேக்கும் போது வாயை விட்டு வார்த்தயே வராது...

ஒரு வார்த்தையில ஒரு பத்தி எழுத புத்தி தயாராயிட்டது அப்பவே!!..
அப்ப எல்லாம் எனக்கு ஆங்கிலம் என்றாலே வேப்பங்காயாய் கசக்கும்... ஒரு வரி என்ன ஒரு வார்த்தை கூட சொந்தமாய் எழுத தெரியாது...

எல்லாத்துக்கும் கடைசியில இவன் பேசியே டீச்சரைக் கவுத்துர்ரான்னு கமெண்ட் ஒளிஞ்சு இருக்கும்.. (டீச்சர்னா 100 / 100 போட்டுருவாங்க.. இந்த வாத்தியாருங்க ஒண்ணு ரெண்டு மார்க்கு கஞ்சம் பிடிச்சிருவாங்க)
ஆமா.. அது உண்மை தான.. இந்த டீச்சருங்க எல்லாம் எப்பவுமே பசங்க பக்கம் தான்.. எங்க தமிழ்டீச்சரை பாத்தாலே நாங்க பயப்படுவோம்.. ஆனா சில பசங்க அவங்ககிட்டயும் வம்பிழுத்து ஜாலியா பேசுவாங்க.. அடியும் வாங்குவானுங்க..

தாமரை
03-12-2007, 04:12 PM
அஸ்திவாரம்!

வைணவக்கடல் புலவர் மா.கிருஷ்ண மூர்த்தி.. கணீர் குரல் தெளிந்த ஞானம். மிகுந்த தெளிவு, கம்ப இராமயணத்தையும், வில்லிபாரத்தையும் இவர் குரலில் கேட்டோருக்கு வாழ்நாளில் என்றுமே மறவாது.. மார்கழி மாதம் எனக்கு மிகவும் கொண்டாட்டமான மாதம், அரையாண்டுத்தேர்வே வந்தாலும் கவலை இல்லை.

காலை 3:30 மணிக்கு எழுந்து, பச்சைத்தண்ணீரில் குளித்து விட்டு பால் வாங்க காசு வாங்கிக்கொண்டு புறப்பட்டால், காலை 4:00 to 6:00 கதா காலட்சேபம், காலையில் திருப்பாவை, திருவெம்பாவை, கந்தபுராணம், தேவிபுராணங்கள் இப்படி எதாவது இருக்க மாலையில் இராமாயணம், மகாபாரதம், இராமாயணச் சார்புக் கதைகள் (அரிச்சந்திரன், யயாதி, விசுவாமித்திரர் இப்படி) மஹாபாரதச் சார்புக்கதைகள் என வருடம் ஒன்றுக்கு இரு தலைப்புகளில் அவர் உரையாற்றுவார். மாலை 6:00 லிருந்து எட்டு வரை.. இவர் வழி கற்ற இவையே எனது புராண அறிவின் ஆதிமூலம்.

என்னுடைய மாயாஜாலக்கதை படித்தலும், இந்த மாதிரி பிரசங்கங்கள் கேட்டலும் மட்டுமில்லாமல், ரேடியோ படைப்புகளும் என் தமிழ் அறிவிற்கு விருந்தளித்தன. பட்டி மன்றங்கள், வழக்காடு மன்றங்கள், உரைகள் என பலவற்றைக் கேட்டேன். எனது ஞாபக சக்தி அதிகரித்தது.. 80 பக்க புத்தகமானாலும் ஒரேமூச்சில் படித்து விட்டு அந்தக்கதையை முழுமையாக திருப்பி சொல்லும் ஆற்றல் பெற்றேன். என் அக்காமார்களும் எனக்குச் சளைத்தவர்கள் அல்ல. ஒரு சினிமாவை ஷாட் பை ஷாட்டாக கதை சொல்பவர்கள் சமர்த்தர்கள். எங்கள் வீதியில் இருந்த உமா, போன்றவர்கள் எங்கள் வீட்டிற்கு வந்து சினிமா கதை பேசிக் கொண்டே மாவரைத்து எடுத்துப் போவார்கள்.

ஞாபகச் சக்தி, பிரஸன்ஸ் ஆஃப் மைண்ட், போட்டி மனப்பான்மை, எதையும் திருப்பிப் பார்த்தல் இவையெல்லாம் என்னுடைய சொத்தாகின.

ஏழாவது முடிக்கும் பொழுது மாயாஜாலக்கதைகள் போய் நாவல்கள் படிக்க ஆரம்பித்திருந்தேன். தமிழ் வாணன், முதற்கொண்டு கையில் கிடைத்த தமிழச்சுகளை எல்லாம் படித்தேன். கடலைப் பொட்டலாமாய் இருப்பினும் அந்த ஒரு பக்கத்தில் உள்ள செய்திகள், துணுக்குகளைப் படிப்பேன்,. எதையும் விட்டு வைப்பதில்லை. சேலம் மாவட்ட நூலகத்தில் உறுப்பினன் ஆனேன்,

8வது படிக்கும் பொழுது மாணவர் மன்றத தலைவன் ஆனேன், பெருமையுடன் தேசியக்கொடி ஏற்றி சல்யூட் அடித்தேன்.

தொடரும்

இளசு
03-12-2007, 07:34 PM
அகலத்திறந்த கண்களும் ( வாயும்தான்)
ஆச்சரியமான மகிழ்ச்சியான மதிப்புமாய் உங்களைத் தொடர்கிறேன் செல்வன்..

''கண்டதைக் கற்றவன் பண்டிதனாவான்'' -
கடலைப்பொட்டலக் காகிதமும் தப்பவில்லை!

500 -க்கு 492 என இருக்கவேண்டுமல்லவா?

உங்களை இத்தனை நெருக்கமாய் எங்களுக்கு அறியத்தருவதில்
ஓர் அந்நியோன்ய இதம் மனதில்...


தொடருங்கள்....!

ஜெயாஸ்தா
04-12-2007, 10:16 AM
500 -க்கு 492 என இருக்கவேண்டுமல்லவா?


மன்றத்து நக்கீரர் இளசுவின் பார்வையில் எதுவுமே தப்பாது போலிருக்கு...!

அமரன்
04-12-2007, 02:29 PM
தாமரையண்ணா.. எங்கோ மின்னுகின்றது.. எங்கோ முழங்குகின்றது,, எங்கோ மழைபெய்கின்றது.. கடைசியில் பார்த்தால் செழிப்பான விளைச்சல் கிடைக்கின்றது. அந்தமாதிரி இந்தப்பதிவு.
காண்பதை, கேட்பதை எல்லாம் உங்களுக்குத் தீனியாக்கி இருக்கின்றீர்கள். ஆற்றலை எவ்வாறு பெருக்கலாம் என எண்ணுவோருக்கு பயனுள்ள பதிவு. மலைப்பாம நினைத்ததை எல்லாம் நீங்கள் சொல்லும்போது மலைப்பு ஏனோ குறைகின்றது. மதிப்பு அதிகரிக்கின்றது. நெருக்கம் கூடுகின்றது. நானும் இப்படியான் சேட்டைகளைச் செய்திருக்கின்றேனே என்ற எண்ணமே காரணம் (சேட்டைகள்)

தாமரை
04-12-2007, 04:47 PM
ஏணிப்படிகள்!

8 ஆம் வகுப்பில் தான் நிறைய பொறுப்புகள் இருந்தன. மாணவர் மன்றம் மாதந்தோறும் கூட்டம். வாரந்தோறும் பரேடுன்னு அடுக்கடுக்கா வேலை. ஆனால் சந்தோஷமான வேலை.. மக்களுக்கு பேச்சுப் போட்டிக்கு புதுப்புது தலைப்பு கொடுப்பது சவாலான வேலை..அப்புறம் பள்ளியில் நடக்கும் ஆண்டு விழா, குழந்தைகள் தின விழாவிற்கு மாணவர்களை காந்தி ஸ்டேடியம் அழைத்துப் போய் ஒரு பரேடு..

மைக்கில் பேசும் வாய்ப்பு நிறைய வந்தது,, வாத்தியாருங்க மத்தியில கம்பீரமா உட்காந்து நாட்டாமை தீர்ப்பு சொல்லுங்க அப்படின்னு கேட்டு பரிசுகளைச் சொல்லி நன்றி சொல்லி ஆஹா ஒரு பொதுக்கூட்டம் நடத்த தேவையான எக்ஸ்பீரியன்ஸ் அப்பவே கிடைச்சது..

ஒன்பதாம் வகுப்பில தமிழ் இலக்கணம்,. கத்துக் கொடுத்தவர் வெ.சு.பழனிச்சாமி. இவர் கதைப்பிரியர், நெப்போலியன் அரிஸ்டாட்டில் னு ஈரோப்பியக் கதையும் சொல்வார் அதே சமயம் ஆட்டனத்தி, ஆதிமந்தி, ஆதிரை ன்னு சங்க இலக்கியமும் சொல்வார்

10ம் வகுப்பில் பிள்ளார் செட்டி ஆசியரானார்.. இவர் எழுதி பிரசுரமான சில புத்தகங்களைப் பார்த்த பிறகே நாமும் கவிதை எழுதினால் என்னன்னு தோணுச்சி. வெண்பா. ஆசிரிய விருத்தம் எல்லாம் எழுத ஆரம்பித்தேன்.. சில சமயம் இவர் கவிதையைத் திருத்தியும் தந்திருக்கிறார்.

இனி கல்லூரிக்குப் போவோமா!
தொடரும்

அமரன்
04-12-2007, 04:51 PM
ஐ அடுத்துக் கல்லூரியா.. ரகளை அதிகமாக இருக்குமே.. போவோம் போவோம்.

மலர்
04-12-2007, 05:43 PM
எட்டாம் வகுப்பிலே இந்த மாதிரி அநுபவம் கிடைச்சிதா...
ஆச்சரியம்... ஏனென்றால் எங்க ஸ்கூலில் அதை 11வது அல்லது 12வது படிக்கும் அண்ணா தான் செய்வார்...

பள்ளிக்குறும்பு முடிஞ்சி போச்சா...
அடுத்து காலேஜா... :D:D

தாமரை
04-12-2007, 11:04 PM
எட்டாம் வகுப்பிலே இந்த மாதிரி அநுபவம் கிடைச்சிதா...
ஆச்சரியம்... ஏனென்றால் எங்க ஸ்கூலில் அதை 11வது அல்லது 12வது படிக்கும் அண்ணா தான் செய்வார்...

பள்ளிக்குறும்பு முடிஞ்சி போச்சா...
அடுத்து காலேஜா... :D:D

நடுநிலைப் பள்ளிதானே! 8 வது தான் பெரிய கிளாஸாக்கும்

9, 10, +1, +2 எல்லாம் குகை மேல்நிலைப் பள்ளியில்

தாமரை
05-12-2007, 12:22 AM
புதிய பூவிது, பூத்தது!

காலேஜ்ல, என்னோட மரபுக் கவிதைகள் மதிக்கப்படவில்லை. புரியலை என்று ஒரு கூட்டம், பீடா மாதிரி வார்த்தைகளை மடித்துப் போட்டு வந்து கொண்டிருந்த புதுக் கவிதைகள் மக்கள் மனசை ஆக்ரமித்திருந்தன. வார்த்தைகள் வசப்பட்ட பிறகு வடிவா கஷ்டம்.

நான் முதன்முதல் எழுதிய அந்தப் புதுக்கவிதை கல்லூரியில் ஒரு புயலையேக் கிளப்பி விட்டது. அந்தக் கவிதை அப்போதைய வயசுக் கோளாறு.. அதனால் சொல்ல விரும்பவில்லை. இப்படியும் யோசிப்பாய்ங்களோ, ரூம்போட்டு யோசிப்பாய்ங்களோ என மக்கள் கலங்கி விட்டனர்..


சடாரென என்னைச் சுற்றி இருந்த அப்பாவி நண்பர்களை ஓரங்கட்டி புது நண்பர்கள் முளைத்தனர்.. தினம் தினம் கவிதை மழை ஆரம்பித்தது. என்னுடைய நோட்டுப்புத்தகங்கள் இல்லாத காதலிக்காக எழுதிய கவிதைகளால் நிறைந்தன. நடு வரிசையில் அமர்ந்திருந்த நான் கடைசி பெஞ்சுக்கு ஷிப்ட் ஆனேன்,

எனக்குன்னு செல்லம் குடுக்க ஆரம்பிச்சாங்க.. எனக்கு துக்காராம் என்ற பட்டப் பெயர் வந்தது .. (அதுக்கு காரணம் புதையல், சிவாஜி கணேசன் படத்தில் வரும் சந்திர பாபுவைப் போல இருந்தேனாம்)

கணக்கு பீரியட், எனக்கு வசதியாய் இருந்தது கவிதை எழுத, ஏன்னா வாத்தியார் சொல்லிக்கொடுக்கறது ஆரம்பத்திலயே புரிஞ்சுடும்.. நிறைய நேரம் கிடைக்கும் எழுத,,

அதே சமயம், இங்க்லீஷ் பீரியட்ல எழுத ரொம்ப விஷயம் கிடைக்கும்.:rolleyes:

அப்போதெல்லாம் நான் பேசினாவே அதிரும்.. ஓங்கி ஒலிக்கும் என் குரலால் இரண்டாவது மாடியில இருக்கறங்க கூட தூங்க முடியாம கஷ்டப்படுவாங்க.. ஒல்லிக்குச்சி உடம்பு (46 கிலோ), இடிச்சிரிப்பு, கணீர்குரல் இதெல்லாம் தான் என் அடையாளங்கள்..

ஹாஸ்டல் வார்டன்களுக்கு நான்னா தலைவலி.. ஆனால் ரெண்டு பேரும் எங்க கிட்ட மாட்டிகிட்டாங்க ..

வேற என்ன காதல்தான்...

தொடரும்

ஓவியன்
05-12-2007, 02:03 AM
சிறுவயதில் தீராத புத்தக வாசிப்புப் பழக்கமுடையவர்களாக இருந்த நிறையப் பேர் இந்த மன்றில் கலக்கோ கலக்கு என கலக்குகிறார்களே...!!

இளசு அண்ணா கூட தான் சிறுவயதில் ஏராளமான புத்தகங்கள் படித்ததாகக் கூறியுள்ளார்...!! :)

செல்வன் அண்ணா...!!

ஒருவரின் வளர்சிப்பாதையை அறிவதில் எத்தனை எத்தனையோ அனுகூலங்கள்.......!! :icon_b:

மிக்க நன்றி உங்கள் அரும்படைப்புக்கு....!!

மதி
05-12-2007, 02:07 AM
அட இவ்ளோ அட்டூழியம் எல்லாம் பண்ணீருக்கீங்களா...?
சபாஷ்.. கல்லூரியில் நடந்தது.. சொல்லுங்கோ...

lolluvathiyar
05-12-2007, 05:55 AM
அருமையான அனுபவங்கள், கவிதிறனை வளர்த்தி வந்த உங்கள் கல்லூரி வாழ்கை ஆரம்பத்தில் ஆதரவுகள் இருந்திருக்காது. நான் படிச்ச கல்லூரியில் கலையை சுத்தமாக மதிக்க மாட்டார்கள்.
ஆகா காதல் ஆரம்பிச்சாச்சா அதையும் சொல்லிருங்க கேக்க இன்ட்ரரிஸ்டிங்கா இருக்கோம்

தாமரை
05-12-2007, 06:07 AM
அதில்தான் இருக்கு ட்விஸ்ட்.. நான் நர்ஸரிப் பள்ளியில எஞ்ஜினியரிங் படிச்சவனாக்கும். அதாவது நாங்கதான் ஃபர்ஸ்ட் செட். முதலாம் ஆண்டு ஒரு நர்சரிப் பள்ளியில்தான் வகுப்புகள். கல்யாண மண்டபம்தான் லேப். 6 பிளாட்கள் கொண்ட அபார்ட்மெண்ட் தான் ஹாஸ்டல்

சிவா.ஜி
05-12-2007, 06:13 AM
அதில்தான் இருக்கு ட்விஸ்ட்.. நான் நர்ஸரிப் பள்ளியில எஞ்ஜினியரிங் படிச்சவனாக்கும். அதாவது நாங்கதான் ஃபர்ஸ்ட் செட். முதலாம் ஆண்டு ஒரு நர்சரிப் பள்ளியில்தான் வகுப்புகள். கல்யாண மண்டபம்தான் லேப். 6 பிளாட்கள் கொண்ட அபார்ட்மெண்ட் தான் ஹாஸ்டல்

ஆஹா...நர்ஸரிப் பள்ளியில எஞ்சினியரிங்கா....படு வித்தியாசமா இருக்கே...அனுபவங்களை பகிர்ந்துக்கற விதமே ரொம்ப வித்தியாசமா இருக்கு.இவ்ளோ கோர்வையா சொல்றீங்க.நீங்க சொன்ன மாதிரியே உங்க நினைவுத்திறன் டாப் தான் தாமரை.

அமரன்
05-12-2007, 06:27 AM
ஆஹா...நர்ஸரிப் பள்ளியில எஞ்சினியரிங்கா....படு வித்தியாசமா இருக்கே...அனுபவங்களை பகிர்ந்துக்கற விதமே ரொம்ப வித்தியாசமா இருக்கு.இவ்ளோ கோர்வையா சொல்றீங்க.நீங்க சொன்ன மாதிரியே உங்க நினைவுத்திறன் டாப் தான் தாமரை.
நீங்க ஒண்ணு.. அந்த வயசுல வெளாட்டு பொருட்களை எல்லாம் அண்ணாத பிரிச்சு மேய்ஞ்சிருப்பார். ஆய்வு அவருக்கு கைவந்த கலை ஆச்சே..

அமரன்
05-12-2007, 06:31 AM
அண்ணா.. மேல் நிலைப்பள்ளி தமிழை சொல்லாமல் விட்டு விட்டீங்களே. அப்படியே நீங்க எழுதின முதலாவது புதுக்கவிதையை கண்ணுல காட்டுறது.



கணக்கு பீரியட், எனக்கு வசதியாய் இருந்தது கவிதை எழுத, ஏன்னா வாத்தியார் சொல்லிக்கொடுக்கறது ஆரம்பத்திலயே புரிஞ்சுடும்.. நிறைய நேரம் கிடைக்கும் எழுத,,
அதே சமயம், இங்க்லீஷ் பீரியட்ல எழுத ரொம்ப விஷயம் கிடைக்கும்.:rolleyes:

இந்த விசயத்துல எனக்கும் உங்களுக்கும் ஒற்றுமை அதிகம். நீங்க கவிதை நான் பேச்சு. அவ்வளவுதான் வித்தியாசம். அடுத்தது வாலிபவிருந்தா??

மயூ
05-12-2007, 10:11 AM
பாடசாலை முதல் கல்லூரி வரை நினைவுகளை கிளறி விட்டிருக்கிறீங்க.... உங்களைப் பார்த்தால் பொறாமையாக உள்ளளது, எங்கள் பாடசாலையில் இந்தளவிற்குச் சந்தர்ப்பம் தரவில்லை.

ஆண்டில் ஒரு தடவை தமிழ் தினப் போட்டி நடக்கும் அதில் பங்கு பற்றினால்தான உண்டு மற்றும் படி தமிழ் வளர்க்கும் போட்டிகள் நடந்ததில்லை.

மேடையேறி நான் பேசியது 12ம் வகுப்பில்தான்... இப்போது வலைப்பதியும் மு.மயூரன் போன்றோர் எல்லாம் ஒன்றாகப் பாடசாலையில் படடித்தோம்.

கல்லூரியில் தமிழ் மூச்சே இல்லை. நாங்கள் 5 பேர்தான் தமிழ் மற்றவர் எல்லாம் சிங்கள சகோதர சகோதரிகள். பேசுவது எழுதுவது எல்லாம்் 50 வீதமம் சிங்களம் 50 வீதம் ஆங்கிலம்...!!!!!1

பொறாமையாக உள்ளது...

அந்தக் காலத்திலேயே என்னோட கதைகளை மாதிரி கதை எழுதத் தொடங்கீட்டீங்களா???? அந்தக் காலத்தில் நான் இருந்திருந்தால் தவளை இளவரசி நாடகத்தை அரங்கேற்றியிருக்கலாம்!!!

அக்னி
05-12-2007, 10:58 AM
ஊற்றுக்கண் திறந்து தமிழ் பிரவகித்த நினைவுகள், கோர்வையான வாடாமலர்ச்சரப் பதிவு அருமை...
தொடருங்கள் செல்வரே...

தாமரை
05-12-2007, 12:32 PM
காதலும் கவிதையும்!

காதல்னா மனசில மட்டுமில்ல மன்றத்தில கூட ஒரு புத்துணர்ச்சி வந்திருது பாருங்க.. அதுதான் காதலோட பெருமை.. எங்க பாய்ஸ் ஹாஸ்டலுக்கு இரண்டு வார்டன்கள்.. ஒருத்தர் இங்கிலீஸ் லெக்சரரை காதலிக்க இன்னொரு வார்டன் லேடீஸ் ஹாஸ்டல் வார்டனைக் காதலிக்க...

சனிக்கிழமை ஃபிரீ நைட்.. அன்னிக்கு எங்க மட்டும் போகலாம்.. எப்ப மட்டும் வரலாம்.. பசங்க எல்லாம் செகண்ட் ஷோ பார்த்துட்டு வந்தா பயங்கர மழை.. அந்த மழையில தேர்ட் ஷோ..

ஹி ஹி ஆமாங்க அவங்க ரெண்டு பேரும் ஒரே குடையில நனைஞ்சுகிட்டு போறதை மக்கள் பார்த்துட்டாங்க.. குடைக்குள் மழை.. காதல் மழை..

மறுநாள்ல இருந்து வார்டன்கள் (பிஸிக்ஸ் -னு வச்சுக்கவோம், கேர்ள்ஸ் ஹாஸ்டல் வார்டன் - மேத்ஸ், இன்னொரு வார்டன் - டிராயிங், இங்க்லீஸ்) எங்க கையில.. பீச்சில் முறுக்கு, சுண்டல் விற்கும் பையனை எப்படி காதலர்கள் பகைச்சிக்க முடியாதோ (;)) அப்படி எங்களை ஒண்ணும் சொல்ல முடியாம போச்சு..

புது நண்பர்கள் சகவாசத்தால் நான் இரண்டாம் மாடிக்கு அறை மாறினேன்.. (நான் என் அறையிலேயே வாழ்ந்தது கடைசி வருடம் மட்டும் தான்).

உமாசங்கர் (ஆப்பு) கவிதைகளோட தீவிர ரசிகன். சக்திவேல்(பந்தா) பார்க்க அசப்பில சினிமா நடிகர் பழைய கார்த்திக் மாதிரியே இருப்பான். பயங்கரமான ஆதிக்க மனப்பான்மை இருக்கிறவன்.. அவன் என்.எஸ்.எஸ் (நேஷனல் சோஷியல் சர்வீஸஸ்) சேர்மன் ஆனான். வாசு(தகதகா) அற்புதமாக பாடுவான். பி.கே. "கரண்ட்" குமரேசன் ஆக நாலு பேர் ரூம்மேட்ஸ். நான் போய் ஒட்டிகிட்டேன்..

என்னுடைய கவிதைகளுக்காக எல்லோரும் அவங்க நோட்டுகளையெல்லாம் எனக்குத் தருவாங்க.. நோட்டு ஃபுல்லாயிட்டா வாங்கிட்டுப் போயிடுவாங்க.. என்னுடைய நோட்டுகளும் என்னிடத்தில் நிற்பதில்லை..

ஒரு நாள் மேத்ஸ் கூப்பிட்டாங்க.. தாமரை உன் கவிதைகள் நோட்டை கிளாஸ்லயே விட்டுட்டுப் போயிட்டியேன்னு குடுத்தாங்க.. (அப்ப கூட அவங்களுக்கு நாம பாடம் நடத்தும் போது இவன் கவிதை எழுதறான்னு கோபம் வராதா என்ன?)

எனக்குத் தெரியும் அது இரண்டு மாசத்துக்கு முன்னால எழுதிய கவிதைகள்னு.. அது வாங்கியது பிஸிக்ஸ்.. நம்ம கவிதை இப்படி வேற பாலம் கட்டுதான்னு நினைச்சேன்..

இதே மாதிரி என் கவிதை பந்தா சக்திவேலால் பயன்படுத்தப் பட்டதும் லேட்டாதான் தெரிஞ்சது எனக்கு.. எப்படியோ நல்லா இருந்தாச் சரின்னு விட்டுட்டேன்.

ஹாஸ்டல்ல இரண்டு கோஷ்டி ரொம்ப பலமா இருந்தது. ஒண்ணு மெட்ராஸ் கோஷ்டி இன்னொன்னு மதுரை கோஷ்டி.. நான் எல்லோருக்கும் பொது.. எல்லோரடவும் பேசுவேன்..

முதல் வருஷம் முடிஞ்சது.. எல்லோரும் காசு கலெக்ட் பண்ணி, பாட்டில் பாட்டிலா வாங்கி பக்கெட்ல கலந்து காக்டெய்ல் அடிச்சாங்க.. அப்பல்லாம் நான் ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப நல்லவன்..

வீட்டுக்குக் கிளம்பும் பொழுது ஆப்பு அந்தத் தப்பைச் செஞ்சான்.. என்ன தெரியுமா? துக்கா, போனா கண்டிப்பா லட்டர் போடணும்னு சொல்லி அட்ரஸ் குடுத்துட்டுப் போனான். :lachen001:

அப்புறம்... தொடரும்

அக்னி
05-12-2007, 01:25 PM
முதல் வருஷம் முடிஞ்சது.. எல்லோரும் காசு கலெக்ட் பண்ணி, பாட்டில் பாட்டிலா வாங்கி பக்கெட்ல கலந்து காக்டெய்ல் அடிச்சாங்க.. அப்பல்லாம் நான் ரொம்ப்ப்ப்ப்ப்ப் நல்லவன்..

இப்போ எப்பிடீன்னு, நல்ல்ல்ல்லாவே புரியுதுங்க...:D

தாமரை
05-12-2007, 04:58 PM
ஆப்புக்கு ஆப்பு!

ஆப்பு செய்த பாவம் என்ன? என்னை டேய் மறந்திடாத, வீட்டுக்குப் போய் லட்டர் போடு.. போட்லன்ன திரும்ப வந்தா இருக்குடீ என மிரட்டலாய்ச் சொன்னதுதான்,...

வீட்டிற்கு வந்தவுடன் ஒரு லாங் சைஸ் 80 பக்க நோட்டு வாங்கினேன். கடகடவென ஜூன் 1 ஆம் தேதி ஹாஸ்டல்ல இருந்து புறப்பட்டதிலிருந்து, வீடு வந்து சேர்ந்தது வரை நான் மாறி வந்த பஸ்களின் ரெஜிஸ்ட்ரேஷன் நம்பரிலிருந்து, மாட்டு மேல் உட்கார்ந்திருந்த காக்காய் வரை எல்லாத்தையும் எழுதி புக் போஸ்ட் செய்தேன்.. இரண்டு வாரத்தில் மன்னிப்புக் கடிதம் வந்துடுச்சி,,


தட்சன் (ஈரோடு) கடாச் (ஈரோடு) பெரியசாமி (எலச்சிப்பாளையம்) என எனது ஆரம்ப நண்பர்களுக்கும் கடிதம் எழுதினேன்.. கல்லூரி திறந்தது..

மூன்றாம் செமஸ்டர் ஆரம்பித்த பொழுது ஒரு வாரம் கழித்துதான் காலேஜ் போனேன். காலேஜ் இப்போது களமாவூர் (கீரனூர்) போய்விட்டிருந்தது.. மெக்கானிகல் ஷெட் தான் ஹாஸ்டல்.. ஐந்தே ஐந்து கிளாஸ் ரூம்.. ஆமாம் அந்த பாழடைந்த மண்டபமும் கூடத்தான். அதைத்தான் தனியா எழுதியாச்சுல்ல.. அழிச்சிருங்க..

வந்த உடனே முதல் ஷாக் என்னன்னா, நான் மூகாம்பிகை முத்தமிழ் மன்றத்திற்குச் செயலாளராம்.. புளுகர் பொன்னிவளவன் தலைவராம், பழனியப்பன் இன்னொரு செயலாளராம்.. எப்ப நடந்திச்சு என்ன நடந்திச்சுன்னு தெரியாது.,.. ஆனால் என் பெயர் இல்லாம மன்றம் அமையாதுங்கற அவங்க நம்பிக்கை பளிச்சுன்னு தெரிஞ்சது.

ஹாஸ்டல் ஒரே ஷெட் தானே.. நாங்கள் நீச்சல் கத்துக்க ஆரம்ப்பிச்சோம்..

அதே சமயம் ஹாஸ்டலில் அந்தப் போட்டி ஆரம்பமானது.. ஒரு வாரம் தொடர்ந்து நடந்த அந்தப் போட்டி...


தொடரும்

அக்னி
05-12-2007, 05:28 PM
என்னதான் லெட்டர் போடுன்னு சொன்னாலும், அதுக்காக இப்பிடி கடிதப்புத்தகம் எழுதி அனுப்பினது ஓவராயில்ல...

ஆப்புக்கு ஆப்படித்த செல்வர்...
வாழ்க...ஆமா... இப்ப sms போடுன்னு கூட உங்களக் கேட்க மாட்டாரே...

ஓவியன்
05-12-2007, 06:20 PM
மயூ கூறியது போன்று நமக்கும் பாடசாலைக் காலங்களில் இந்தளவு சந்தர்பங்கள் கிடைக்கவில்லையென்றே நினைத்திருந்தேன், ஆனால் இப்போது சந்தர்பங்களை நாமாக அமைத்துக் கொள்ளத் தவறிவிட்டோமோ என ஏங்குகிறேன் செல்வன் அண்ணா...!!

நம் பாடசாலை நாட்களெல்லாம் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தலைக்கு மேல் குண்டு வீசும் விமானங்களை பார்த்து ஓடி ஒதுங்கியே கழிந்துவிட்டன.... :frown:

மலர்
05-12-2007, 06:39 PM
வீட்டிற்கு வந்தவுடன் ஒரு லாங் சைஸ் 80 பக்க நோட்டு வாங்கினேன். கடகடவென ஜூன் 1 ஆம் தேதி ஹாஸ்டல்ல இருந்து புறப்பட்டதிலிருந்து, வீடு வந்து சேர்ந்தது வரை நான் மாறி வந்த பஸ்களின் ரெஜிஸ்ட்ரேஷன் நம்பரிலிருந்து, மாட்டு மேல் உட்கார்ந்திருந்த காக்காய் வரை எல்லாத்தையும் எழுதி புக் போஸ்ட் செய்தேன்.. இரண்டு வாரத்தில் மன்னிப்புக் கடிதம் வந்துடுச்சி,, இருந்தாலும் இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியலை..
பிரிச்சி படிச்சி கண்ணீர் உட்டு அழுதுருப்பார்...


அதே சமயம் ஹாஸ்டலில் அந்தப் போட்டி ஆரம்பமானது.. ஒரு வாரம் தொடர்ந்து நடந்த அந்தப் போட்டி...என்ன போட்டி...??
ஆகா இப்பிடி எல்லாரும் சஸ்பென்ஸ் வச்சா எப்பிடி...!!!

மலர்
05-12-2007, 06:47 PM
எங்க பாய்ஸ் ஹாஸ்டலுக்கு இரண்டு வார்டன்கள்.. ஒருத்தர் இங்கிலீஸ் லெக்சரரை காதலிக்க இன்னொரு வார்டன் லேடீஸ் ஹாஸ்டல் வார்டனைக் காதலிக்க... அப்புறம்... தொடரும்
ஹா..ஹா....எங்களுக்கெல்லாம் ஒரே ஒரு வார்டன் தான்..
அவங்களும் ரொம்.....ப நல்லவங்க...

உண்மையில் கல்லூரி வாழ்க்கை எப்படி மறக்க முடியாதோ..
அதேமாதிரி தான் ஹாஸ்டல் வாழ்க்கையும்...
எங்க சீனியர் பொண்ணுங்களே எங்களை ராகிங் பண்ணினாங்க..
ஆனால் எங்களை விட்டு பிரிந்து போதும் அதிகமாய் அழுதவர்களும் அவங்க தான்...

நேசம்
05-12-2007, 09:47 PM
ஆனால் எங்களை விட்டு பிரிந்து போதும் அதிகமாய் அழுதவர்களும் அவங்க தான்...

அது ஆனந்த கண்ணிர்.எதற்கு அழுதார்கள் என்று அவர்களுக்கு தெரியுமாம்

தாமரை
06-12-2007, 12:47 AM
மெல்லத் திறந்தது கதவு!!


அந்தப் போட்டி, கடி போட்டி.. மொத்தம் 64 பேர் ஹாஸ்டலில் மாலை 5:00 மணியிலிருந்து நடுராத்திரி வரைக்குமே போட்டி தொடரும்..

எதற்கெடுத்தாலும் கடி.. மாறி மாறிக் கடி, ஆரம்பத்தலியே நிறையபேர் அவுட் என்றாலும் மூணு பேர் கடைசி நாள் வரைத் தாங்கினோம்.. நான் சிவா, (எலே பென்ஸூ உங்க ஊருக்கார பயமக்கா, பேசும் போது திக்கும், பாடும் போது திக்காது மைக் மோகன் பாட்டா பாடுவான் (அவனுக்கும் ஒரு காதல் கதை இருக்கு மக்கா))அப்புறம் டிஎஸ் ஆர்..
இதுவரை சாதா எஞ்ஜினில் ஓடிக் கொண்டிருந்த என் கடி எஞ்ஜின், இப்போ ஜெட் எஞ்ஜினாகி ராக்கெட் எஞ்ஜினாகவும் மாறிடிச்சி..

கடிக்கு கடி.. கடியையே கடி... மத்தவங்க சரக்கு தேடி மூளையைக் கசக்க, நான் கூலாக அவர்கள் சொல்வதிலே இருந்தே புது கடிக்கான கருவை எடுத்துக் கடித்துக் கொண்டே இருக்க, டிஎஸ் ஆர் அம்பேல்,.. நானும் சிவாவும் மட்டும்தான் அந்தக் கடைசி அரைமணி நேரம்..

சிவா திணறினான்.. இதுவரை என் நேரடிக் கடியிலிருந்து தப்பி வந்துகொண்டிருந்த அவனுக்கு பதிலடிக் கடி பயங்கர நெருக்கடி கொடுக்க சரண்டரானான்..

இப்படி பலகடிகளை தாங்கி போராடி பெற்ற அந்த நாலெட்ஜ் தான் எந்த ஒரு பிளேடுக்கும் அதைவிட மொக்கையான இன்னொரு பிளேடு உண்டு என்பது. இதில் தீவிரமாய் நம்புபவன் நான்.. மொக்கைகள் மூளையைச் செலவிட்ட பிளேடுகள்.. மொக்கையாய் பேசத் தனித் திறமை வேண்டும்..

கடிமன்னனாக கிரீடம் சூட்டப்பட்ட நாங்கள் விரைவிலேயே கட்டப் பட்டுக்கொண்டிருந்த உண்மையான ஹாஸ்டலுக்குப் போனோம்..

தமிழ் மன்றத்தில் முதன் முதலாக இரு மாத இதழ் ஒன்று ஆரம்பிக்கலாம் என்று முடிவு செய்து அதற்கான முயற்சியில் இறங்கினோம்..

நமக்கு படிக்கற ஆசையோ போயிருச்சிங்க.. பின்ன, உயிரைக் கொடுத்து எல்லாத்துக்கும் நான் சொல்லிக் கொடுத்த கெமிஸ்ட்ரிலேயே அரியர் வச்சா, அதுவும் ரொம்ப நல்லா எழுதி இருக்கன்னு திருப்தியா எழுதியிருந்த பரிட்சை அது.. 75 க்கு 70 க்கு மேல எதிர் பார்த்தவனுக்கு 17 மார்க்கு கிடைச்சா என்ன செய்யறது? ரீ வேல்யூவேஷன் கேட்டா முதல் வருஷத்துக்கு அது கிடையாதுன்னு சொன்னாங்க. ரீ டோட்டலிங் பண்ணுங்கப்பா பேப்பர் மிஸ்ஸாகி இருக்கப் போகுதுண்ணு சொன்னா அதுக்கும் முடியாதுண்ணுட்டானுங்க.. மனுஷனுக்குக் கோவம் வராதா? வந்துச்சு, மனசு நிறையக் கோபம்,.

இதனாலயே பாடத்தில என் கவனம் குறைஞ்சிருச்சி,, தமிழ் எனக்குள்ளே இருந்து ததிங்கண்தோம் ஆடிச்சு.. முன்னால சும்மா கவிதை எழுதின நான் இப்ப டேய் எதாவது ஒரு வார்த்தை சொல்லுன்னு சொல்லி அந்த வார்த்தையில இருந்து ஆரம்பிச்சு கவிச்சமர் எழுத ஆரம்பிச்சேன்.. மலை மலையாய் எழுதினேன்..

முதல் தமிழ் மன்ற இதழ் கவிநிலவு, சைக்ளோஸ்டைல் காபி, 200 ப்ரிண்டுகள் போட்டோம்.. மன்றத்து உறுப்பினர்களே நிறைய எழுத வேண்டியதாய் இருந்தாலும்.. முதலாண்டு மாணவர்கள் மாணவிகள் எல்லாம் கலந்துகிட்டாங்க...

இந்த இதழுக்காக நானும் பழனியப்பனும் கி,ஆ,பெ. விசுவநாதன் அவர்களை பேட்டி எடுத்தோம்..

ஒரு தமிழ்கடலில் போய் என் கால்களை நனைத்து விட்டு வந்தேன்.. புதுக்கவிதையில் மொழியை எப்படி எல்லாம் கொல்கிறார்கள் என்ற ஆதங்கம் அவருக்கு.. எனக்கு மரபு தெரிந்திருந்தது அவருக்குப் பிடிச்சிருந்தது.. படுக்கையில் இருந்தவர், அவருடைய ஆதங்கங்களை நான் பகிர்ந்து கொண்டதும் எழுந்து உட்கார்ந்து பேச ஆரம்பித்தார். கேள்வி பதிலாக பழனி ஆரம்பித்த பேட்டி நம்ம பென்ஸூ கூட பேசற பேச்சு மாதிரி வளர ஆரம்பித்தது.. எனக்கும் பேச்சை முடிக்கத் தெரியாது.. அவருக்கும் விருப்பமில்லை. மாலை 4 மணிக்குப் போனவர்கள் 8:00 மணி வரை பேசிக்கொண்டே இருந்தோம்.. நாலு பேப்பர் வச்சுகிட்டு ஆரம்பித்த பேட்டி எழுதப்படாமல் இருந்தது.. தமிழ்க்கடல் ஒரம் பீச்சில் (வீட்டில்) சுண்டலும்(சாப்பாடு) கிடைத்தது.

பிரிய மனசில்லாம வந்தேன்.. பழனியப்பனுக்கு பேட்டியை எப்படி எழுதறதுன்னு புரியலை.. என் மனசில பதிந்த உரையாடல்களை எல்லாம் வெட்டி ஒட்டி ஒரு பேட்டி தயார் பண்ணி கொடுத்தேன்..

இதழும் தயாரானது.. அதன் ஒரு காபியை கி,ஆ.பெ. விசுவநாதன் அவர்களுக்கு கொடுத்த போது அவர் கண்கலங்கிச் சொன்னார்.. மக்கள் தமிழை மறந்துகிட்டே வர்ராங்க.. நீங்களெல்லாம் முயற்சி எடுத்தால் தமிழ் நீண்ட நாள் நிற்கும்னு.. அவர் அவருக்கான சமாதியை தயார் செய்து, தயாராய் இருந்தார்.

முதல் இதழ் பிரச்சனை இல்லாமல் ரிலீஸ் ஆனது.. 200 இதழ்களும் விற்றுத் தீர்ந்தன...

என்.எஸ்.எஸ். ஆரம்பிச்சு ஒருவருஷம் ஆச்சு!.. பந்தா சக்திவேலுக்கு அதை சிறப்பா கொண்டாடணும்னு ஆசை. டைரக்டர் சேர்மன் கை கால்ல விழுந்து நடிகர் ஜெய்சங்கரை அழைச்சு ஒரு விழா அரேஞ்ச் பண்ணினான்...

எந்த விழான்னாலும் அந்த மேடையில் எனக்கென்று ஒரு தனி இடம் இருக்கும், இந்த விழாவில் மட்டும் கிடையாது.. சக்திவேலுக்கு தன்னை முன்னிறுத்திக்க ஆசை! என்னை அவாய்ட் செய்தான்..

நானும் விட்டுவிட்டேன்.. இந்த ஆண்டு கோபி, செல்வராஜ், நான் சுந்தர் நாலுபேரும் கோஷ்டி ஆயாச்சு.. எங்கள் கோணமே வேற.. கண்டுக்கலை..

விழா நடந்தது.. நாட்டுப் பற்று பற்றி நான் முதலாண்டு எழுதிய இரண்டு பக்க கவிதையை சக்திவேல் வாசிக்க, மேடைக்குக் கீழே என்னைப் பார்த்து பலர் பரிதாபப்பட்டார்கள்.. ஜெய்சங்கரும் அவர் உரையில் இது அருமையான கவிதை.. இந்தமாதிரி சரளமான வார்த்தைப் பிரயோகம் கண்ணதாசனுக்கு மட்டுமே வரும்ணு பாராட்டோ பாராட்டுன்னு பாராட்ட, இதயத்தில் எனக்கு ஊசி குத்தியது..

மனமுடைந்தேன்.. இப்படியும் செய்வாங்களா? இந்தப் போலி கௌரவத்தால என்ன லாபம்?

இதுக்குப் பின்னால எனக்கும் சக்திவேலுக்கும் தூரம் அதிகமாயிடுச்சி. உமாசங்கர் பேசிப்பார்த்தான்.. நான் சொன்னேன்.. அவன் அவனாக இருக்கட்டும் நான் நானா இருக்கேன்.. அவன் என் கவிதையைப் படித்தது என் வருத்தமில்லை. அவன் மட்டுமே மேடையில் பேசணும்னு நினைச்சானே அதுதான் வருத்தம்.. ஏன் நான் மேடையில் ஏறினால் அவன் தோற்றுவிடுவான் என்கிற பயமா? என் கவிதைக்கெதிரே என் கவிதைதானே போராடப் போகுது.. அப்ப எதுக்கு பயம்? ஒரு மனிதனுக்கு ஆசை இருக்கலாம். சுயநலம் இருக்கக் கூடாது. புகழ் தேவைதான் அதுக்காக அடுத்தவனை மிதிக்கக் கூடாது என என் மனதில் இருந்ததை எல்லாம் கொட்டி விட்டேன்..

சக்திவேலிடமிருந்து நான் விலகியதில் மதுரை கோஷ்டிக்கு மகிழ்ச்சி. மதுரைக்கார பசங்க பாசக்கார பசங்க.. அவர்கள் என்னுடன் நெருங்க ஆரம்பித்தனர்,.. சென்னை கோஷ்டியும் மதுரை கோஷ்டியும் தனித்தனியே இருந்தாலும் இப்ப சண்டை கிடையாது...

அப்பதான் இரண்டாம் முறை மறுபடியும் என்னை பின்னுக்குத் தள்ள முயற்சி நடந்தது .. நம்ம நாவலர் நெடுஞ்செழியன் வந்த கல்லூரி திறப்பு விழா மேடையில்...

தொடரும்

சிவா.ஜி
06-12-2007, 03:49 AM
அருமையான கல்லூரி அனுபவங்கள்.சைக்ளோஸ்டைலில் புத்தகம் தயாரிப்பதென்பது எவ்வளவு கடிணம் என்பது தெரியும்.நிறைய கூட்டுமுயற்சி தேவைப்படும்.
இரவல் குழந்தையை வாங்கித் தன் குழந்தையென்று சொல்லி அதன் அழகைப்பாராட்டும் சொற்களை தனக்காக்கிக் கொள்வது எத்தனைக் கேவலமோ அத்தனைக் கேவலம் மற்றொருவரின் படைப்பை தன்னுடையது என்று சொல்லி பாராட்டு பெறுவது.அந்த பந்தா ஆள் இருக்குமிடம் தெரியாமல் போய்விடுவார்.ஆனால் உண்மையான படைப்பாளி ஒளிவீசுவதை யாராலும் தடுக்கமுடியாது.
இப்பதான் தெரியுது...எல்லா வார்த்தைகளுக்கும் நீங்கள் கொடுக்கின்ற ஆன் தி ஸ்பாட் கமெண்ட்-டின் மூலம்.கடிப் போட்டியில் வெற்றிபெற்று கலக்கியது சூப்பர் தாமரை.அசத்துறீங்க.

தாமரை
06-12-2007, 06:00 AM
நடமாடும் பல்கலைக் கழகம்

நான் மக்களோட ஃபுட்பால் ஆடிகிட்டு இருந்தப்ப ஒரு பியூன் வந்து (பிரின்சிபல் கிடையாது எங்க காலேஜூக்கு, அப்ப டைரக்டர் தான்).. டைரக்டர் கூப்பிடறாருன்னு சொன்னார்.. சரின்னு போனா பெரிய பெரிய தலையெல்லாம் சேர் போட்டு உட்கார்ந்து பேசிகிட்டு இருந்தாங்க.. காலேஜ் டிரஸ்ட் சேர்மன், இவனாங்கற மாதிரி ஒரு சுளிப்புப் பார்வை பார்க்க, ஆள் உருவத்தைப் பார்த்து ஏமாந்திராதீங்க.. பையன் பலே கில்லாடின்னு சொல்லிட்டு டைரக்டர் எங்கிட்ட, தாமரை, நாளை நெடுஞ்செழியனுக்கு ஒரு வாழ்த்துக் கவிதை மாதிரி பெருசா எழுதி ஃபிரேம் போட்டுக் கொடுக்கனும்.. ஒரு கவிதை வேணும் எப்ப கிடைக்கும்னு கேட்க.. அரைமணி நேரத்தில் கொண்டு வர்ரேன் சார்னேன்..

நல்லா டைம் எடுத்துக்கோ, நாளை நீ மேடையில அதை வாசிச்சுக் குடுக்கணும் அப்படின்னார். ஹாஸ்டலுக்கு ஓடி என் நோட்டை எடுத்துகிட்டு மொட்டை மாடிக்கு ஓடினேன்...

முத்தமிழ் தந்த எம்தமிழ் நாட்டு
பத்தரை மாற்றுத் தங்கமே
சித்திரை நிலவே செந்தமிழ் நாட்டில்
முத்திரை பதித்த நித்திலமே

வரிகள் குதித்து விழுந்தன.. தமிழில் சிறப்பு ""ழ" ன்னு சொல்லுவாங்க.. நான் ""த"" ன்னு சொல்லுவேன்,

முத்தைத்தரும் பக்தித் திருநகை
அத்திக்கிரை சக்திச் சரவண
வித்துக்கொரு முத்துக் குருபர
எனவோதும்..

அருணகிரியார் நாவில் குதித்து விளையாடிய அந்த "த" தான் எதுகையில் சிறந்தது.. இரண்டு பாக்கள் எழுதிக் கொண்டுபோய் கொடுத்தேன் அரைமணி நேரத்தில்..

சத்தத்தில், இரத்தத்தில், யுத்தத்தில், மொத்தத்தில், தத்திக் குதித்து விளையாடும் தகரம் இல்லையா..

கவிதையை வாங்கிப் படித்த சேர்மன், நாவலருக்கு நடமாடும் பல்கலைகழகம் என்று ஒரு பட்டம் உண்டு.. அதை எப்படியாவது இதில் சேர்க்கண்ணுமே என்று சொல்ல, "ட" கர எதுகையில் மத்தியில் ஒரு பா எழுதி, அண்ணா, நடமாடும் பல்கலைக்கழகம் எல்லாம் ஒட்ட வைத்துக் கொடுத்தேன்..

எனக்கு இருப்புக் கொள்ளலை.. என்ன ஓசை..எனது கணீர் குரலுக்கு மேடையில் இந்த தகர டகர எதுகை எவ்வளவுக் கைதட்டல் கிடைக்கும்னு நினைச்சுப் பார்க்கும் பொழுது தூக்கம் வரலை.. பயங்கரச் சந்தோஷமா இருந்தது...

அடுத்த நாள் காலை 10 மணிக்கு டைரக்டர் கூப்பிட்டார். அவர் முகத்தில சங்கடம் குடியேறி இருந்தது,,

தொடரும்.

அக்னி
06-12-2007, 07:30 AM
காலங்கள் மாறிப் போனாலும், இன்னமும் இந்த புறக்கணிப்புக்கள் தொடரத்தான் செய்கின்றன.
பாடசாலைகளில் கிடைத்த, கிடைக்காத சலுகைகளால், திசைமாறிப் போனவர்கள் நிறையவே உள்ளனர்.

தாமரை
06-12-2007, 08:34 AM
சங்கநாதம்

தாமரை நீ வரவேற்புரை வாசிக்கிறியா, அவர் குரல்ல சுரத்து இல்லை..

சார் நான் கவிதை

அதைச் சேர்மன் வாசிச்சுக் கொடுக்கிறாராம்.. சொன்னார்..

எனக்குக் கோபமாய் இருந்தது.. சரி சார் அதை அவர் படிக்கட்டும்.. நான் வேற கவிதை சொல்றேன்.. அஜெண்டாவில எனக்குப் பத்து நிமிஷம் கவிதைக்குக் குடுங்க அதுபோதும்..

டைரக்டர் யோசிச்சார், சரி நான் பாத்துக்கறேன்.. நல்ல கவிதையா ரெடிபண்ணு..

என் ஆவேசம் மண்டையில் ஏறி மனசு கனத்தது.. காலேஜ் மொட்டை மாடிக்குப் போனேன். எழுதினேன்.. கல்லூரியைப் பற்றி, கல்லூரி மாணவர்களைப் பற்றி, எங்கள் எதிர்காலக் கனவுகள் பற்றி, கூடவே இதுபோன்ற சில களவாணிகள் பற்றி.. வஞ்சப்புகழ்ச்சிதான் நம் கைவந்த கலையாயிற்றே! எழுதினேன்.

மாலை விழா ஆரம்பிக்க வரவேற்புரை முடிந்தவுடன் சேர்மன் எழுத்துகூட்டிப் படித்து என் கவிதையை ஆபரேஷன் செய்து நெடுஞ்செழியன் அவர்களுக்குப் பரிசளிக்க, மாணவர் கூட்டத்தில் பெரும் கைதட்டல்களைப் பெற்றிருக்க வேண்டிய அந்தக் கவிக்குழந்தை செத்துப் போயிருந்தது..

இரண்டு ஆட்கள் தள்ளி மேடையேறி மைக்கைப் பிடித்தேன்.. ஆரம்பித்தேன்.. வரிகள் வளர வளர மாணவர்கள் புரிந்து கொண்டார்கள்.. கைதட்டல்கள் வரிக்கு வரி முரசடிக்க சங்க நாதம் செய்தேன்.. மாணவர் துணைகொண்டு மடமையைக் கொளுத்துவேன் என முடித்த அந்தக் கவிதைக்குப் பிறகு மேடையில் இருந்த சிலரின் முகம் இருண்டது.. குத்தத்தானே செய்யும்..

நெடுஞ்செழியனும் புரிந்து கொண்டார் போலிருக்கிறது. தமிழுக்கு இக்கல்லூரியில் கிடைத்திருக்கும் சொத்துகள் கண்டு பூரிப்படைவதாய் சொன்னார். ஆங்கிலவழிக் கல்வி தமிழை அழிக்க முடியாது என்பதற்கு எங்கள் கல்லூரி ஒரு உதாரணம் என்றார்..

இந்த சங்கநாததிற்குப் பிறகு எனது அணுகுமுறை மாறியது.. என்னை சாதாரணமாய் நினைத்தவர்கள் என்னை மதிக்கத் தொடங்கினர்.. இன்னுமொரு புது நட்புக் குழுவும் கிடைத்தது. அ தில் சிகாமணி, தளபதி, அன்புச் செழியன், பாஸ்கர் போன்ற ஒதுக்கப்பட்ட இசை ஆர்வலர்கள்.

எங்கள் கல்லூரி ஆர்க்கெஸ்ட்ரா முழுவதும் பிராமண ஆதிக்கத்தின் கீழ் இருந்தது.. இதுபோன்ற சில பேர்களுக்கு இடமிருந்தும் சேர்ந்திசைக்க இசைய மறுத்தனர் முதல் கோஷ்டி.. என்னுடைய முழக்கம் இவர்களை என்னுடன் இணைத்தது..

நான்காம் செமஸ்டரில் இரண்டாவது புத்தக வேலை ஆரம்பித்தது.. இம்முறை 250 பிரதிகள் போட்டோம். தளபதி கதை எழுதித்தர இன்னொரு இயற்பியல் ஆசிரியர் (நாவலாசிரியர் விஜயநிலா, நீங்கள் கேள்விப்பட்டிருக்கக் கூடும், ராஜேஸ்குமார் போல பாக்கெட் நாவல் போன்ற மர்மக்கதைகளை எழுதுபவர்) தமது படைப்புகளைத் தந்தார். சில மாணவியரும் இம்முறை பங்கு கொண்டார்கள்.. இம்முறை அச்சுப்பிரதி..

இந்தப் புத்தகம் அடுத்த தகராறுக்கு வழிவகுத்தது..

தொடரும்

அக்னி
06-12-2007, 08:43 AM
இந்தக் கவிதைகள் மன்றத்தில் இருந்தால் அவற்றின் சுட்டிகளையும் இணைத்து தாருங்கள்...

அமரன்
06-12-2007, 10:19 AM
ஒரு நாள் மேத்ஸ் கூப்பிட்டாங்க.. தாமரை உன் கவிதைகள் நோட்டை கிளாஸ்லயே விட்டுட்டுப் போயிட்டியேன்னு குடுத்தாங்க.. (அப்ப கூட அவங்களுக்கு நாம பாடம் நடத்தும் போது இவன் கவிதை எழுதறான்னு கோபம் வராதா என்ன?)
எனக்குத் தெரியும் அது இரண்டு மாசத்துக்கு முன்னால எழுதிய கவிதைகள்னு.. அது வாங்கியது பிஸிக்ஸ்.. நம்ம கவிதை இப்படி வேற பாலம் கட்டுதான்னு நினைச்சேன்..

ஹஹ்ஹ்ஹ்ஹ்ஹா... பிசிக்ஸ் வாங்கினது மேத்ஸ் மூலம் திரும்பக் கிடைக்குதா..
கணக்கு நோட்டைத்தானே மேடம் கவிதை நோட்டுன்னு சொன்னாங்க..

பலதரப்பட்ட சுவைகள் பரிமாறப்படுகின்றன. உங்கள் மொக்கைகளின் நதிமூலம் அறிந்துகொண்டேன். சக்திவேலர்கள் பலரைக் கண்டிருக்கின்றேன்.

அண்ணா.. ஒரு சந்தேகம்..
மன்றத்தில் உள்ள உங்கள் கவிதைகளை அனேகமாகப் படித்து இருக்கின்றேன். அவற்றில் இந்தக்கவிதைகளைக் காணவில்லை. தமிழுக்காக நீங்கள் எழுதிய கவிதைப் படித்ததேன். மற்றவைகள் பல ஞாபகத்தில் இல்லை. படிக்கும் மார்க்கம் என்னவோ?

தாமரை
06-12-2007, 12:40 PM
ஹஹ்ஹ்ஹ்ஹ்ஹா... பிசிக்ஸ் வாங்கினது மேத்ஸ் மூலம் திரும்பக் கிடைக்குதா..
கணக்கு நோட்டைத்தானே மேடம் கவிதை நோட்டுன்னு சொன்னாங்க..

பலதரப்பட்ட சுவைகள் பரிமாறப்படுகின்றன. உங்கள் மொக்கைகளின் நதிமூலம் அறிந்துகொண்டேன். சக்திவேலர்கள் பலரைக் கண்டிருக்கின்றேன்.

அண்ணா.. ஒரு சந்தேகம்..
மன்றத்தில் உள்ள உங்கள் கவிதைகளை அனேகமாகப் படித்து இருக்கின்றேன். அவற்றில் இந்தக்கவிதைகளைக் காணவில்லை. தமிழுக்காக நீங்கள் எழுதிய கவிதைப் படித்ததேன். மற்றவைகள் பல ஞாபகத்தில் இல்லை. படிக்கும் மார்க்கம் என்னவோ?

பலகவிதைகளை மன்றத்தில் நான் பதிக்கவில்லை. எப்பொழுதாவது நேரம் கிடைக்கும் பொழுது பதிக்கிறேன்..

என்னுடைய ப்ரொஃபைல்ல threads started by தாமரை எனத் தேடலாமே..

அப்புறம் பென்ஸ் தொடங்கிய ""யாரையும் கைநீட்டி அடிக்காதே" யையும் படிக்கவும்,

அமரன்
06-12-2007, 12:44 PM
மன்றத்தில் உங்கள் உங்களால் கொளுத்தப்பட்ட திரிகளைப் படித்து இருக்கின்றேன். ஆனால் நீங்கள் திரித்த திரிகளைத் தேடிப்பிடித்துப் படிப்பதில்தான் சிக்கல்.. முயன்றால் முடியாதது ஏதுமில்லையம். முயல்கின்றேன்.

தாமரை
06-12-2007, 01:40 PM
இந்தச் சுட்டிகளை எல்லாம் பாருங்கள். அப்புறம் இடத்திற்குத் தகுந்த மாதிரி ஒட்டலாம்.

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9598
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6369
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6270
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6055
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6067
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6064
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6077
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7397
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6690
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6268
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6068
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6550
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6549
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6546
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6267
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6177
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6051
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6081
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6139
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6128
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6075
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6093
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6056
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6208

அமரன்
06-12-2007, 01:45 PM
ரொம்ப நன்றிங்கோவ்...

ஆதவா
06-12-2007, 02:14 PM
மொத்தமாக எல்லாவற்றையும் படித்து முடித்தேன்...

உங்கள் அனுபவங்கள் எனக்கும் நேர்ந்திருக்கக் கூடாதா என்ற பொறாமையும் எனக்கு வந்தது.. அனுபவத்தை ஆரம்பித்தவிதமும் கலக்கல்...

கலக்குங்க தமிழ்ராசா....

தாமரை
07-12-2007, 06:04 AM
இரண்டாம் புத்தகம் வெளிவந்ததும் நன்கு விற்பனயாச்சு. அதே சமயம் சக்திவேல் திருச்சி வானொலியில் இளையபாரதம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தான் என்.எஸ்.எஸ் மூலமாக. (இளைய பாரதம் இரவு 8:00 மணியிலிருந்து 8:30 மணி வரை).

இந்த முறை என்கவிதையை மட்டுமல்ல, புத்தகத்தில் வெளியாகி இருந்த ஒரு பெண்கவிஞரின் கவிதையயும் உபயோகப் படுத்தினான். கவிஞரின் பேரையும் சொல்லாமலே.. அது ஒளிபரப்பான அடுத்த நாள்தான் மத்தவங்களுக்குத் தெரியும்..

நமக்குத் தான் தங்கைகள் அப்படின்னா வே ஒரு சாஃப்ட் கார்னராச்சே! கல்லூரி வராண்டாவில் வைத்து கண்டபடித் திட்டி அவமானப் படுத்தினேன்.. புத்தகத்தில் வந்த கவிதை என்பதால் கையும் களவுமாய் மாட்டிகிட்டான்.. பழைய வண்டவாளங்களும் வெளியே வர வெட்டி பந்தா ஆப்பு வச்சது அவனது இமேஜூக்கு..

அந்த வருடம் அதுக்கு மேல அவ்வளவு சுதியில்லை.. பாழடைந்த மண்டபம் எங்க கவனத்தை திசை திருப்பி இருந்தது..

மூணாம் வருஷம்.. இதுதான் வெற்றி மேல வெற்றி வந்து குவிந்த வருஷம்..

வருஷம் தொடங்கின உடனே முடிவு பண்ணினோம்.. நம்முடைய தம்பி தங்கைகளை வளர்த்து மன்றத்தை அவங்க கையில ஒப்படைக்கண்ணும்னு..
வருட ஆரம்பத்தில போட்டிகள்ள் நடத்தினோம், கதை, கவிதை, கட்டுரை, பேச்சு இப்படி பலபோட்டிகள். அதில் கிடைத்த வாரிசுகள்

முருகானந்தம், பாலசுப்ரமணியம், லஷ்மி, சுமதி சாமுண்டீஸ்வரி இப்படிச் சிலர்.. இதில் முருகானந்ததைப் பத்திச் சொல்லணும்.

இந்த வருஷம் இவன் கல்லுரியில் சேர்ந்தவன்,, ஆனால் ஒருத்தர் திடீர்னு என்கிட்ட எதாவது ஒரு கேள்வி கேட்டா நான் என்ன பதில் சொல்வேனோ, ஏறத்தாழ அதே பதில்தான் அவன்கிட்ட இருந்து வரும். அவனுடைய அறை நண்பர்கள் என்கூட நல்லா பழகிட்டாங்க.. கோபி வேற ஸ்ட்ரைக் பிரச்சனையில் (யாரையும் கை நீட்டி அடிக்காதே) ஹாஸ்டலை விட்டுப் போயிட்டதால இவங்க ரூம்லதான் மூன்றாம் வருஷம் கழிஞ்சது.

இந்த முறை பத்திரிக்கைக்காக இளசை சுந்தரம் அவர்களை பேட்டி எடுத்தோம். வானொலி அண்ணா என அன்போடு அழைக்கப்படும் அவர் குழந்தைகள் நிகழ்ச்சிகளின் இயக்குனர். அவர் இளைய பாரதம் இயக்குனர் சக்ரவர்த்தியை அறிமுகம் செய்ய இளைய பாரதம் ஸ்லாட் கிடைச்சது..

நான், பழனியப்பன் இரண்டு பேரும் ஆலொசனை செஞ்சோம்.. முத்தமிழ் மன்றம் என்பதால மூணு தமிழும் இருக்கணும். 1 நாடகம், இரண்டு பாட்டு, மூணு கவிதை என முடிவானது..

பாட்டுக்கு சிகாமணி குழுவினரைத் தயார் பண்ணினோம். பாடலகளை நாங்களே எழுதினோம். நான் ஒரு பாட்டும் (சேரன் வில்லொன்று கண்டேன்) தளபதி ஒரு பாட்டும் (நீதானா அழைத்தது) எழுத சிகாமணி இசையமைத்தான்..

நாடகத்துக்கு நம்ம பாசக்கார மதுரைக் கோஷ்டியைத் தயார் செய்தேன், அதில் என்.எஸ்.கே என்று அறியப்பட்ட ராஜேந்திரன் ஒரு முதல் வருஷப் பொண்ணு பின்னால சுத்திகிட்டு இருந்தார். அவரையும் அந்தப் பொண்ணையும் மையமா வச்சு நாடகம் எழுதியாச்சு (கதாநாயகியா நடிச்சது நளினி என்ற தங்கை) மூணு கவிதை.. ஒண்ணு நான், ஒண்ணு சர்வாதிகாரி (முதல் வருட மாணவர்) ஒண்ணு பழனியப்பன்..

ஸ்கிரிப்டை சக்ரவர்த்தி அவர்களிடம் காட்டி ஓ.கே வாங்கினோம்.. மட மடவென ரிகர்ஷல் நடந்தது..

அது ஒரு வெள்ளிக்கிழமை மதியம். இரண்டு மணிக்கு ரெகார்டிங் ஆரம்பம்.. முதல்ல ஒரு கவிதை - பழனியப்பன் ஆரம்பித்தார். அரைமணி நேரத்தில் அது முடிய அடுத்து நீதானா அழைத்தது பாட்டு, அதுவும் முப்பது நிமிடம் எடுத்துகிச்சு. அப்புறம் நாடகம். இரண்டு மண்ணி நேரமாச்சு நாடகம் முடிய.. அப்புறம் சர்வாடிகாரியின் கவிதையும், சேரன் வில்லொன்று கண்டேன் பாட்டும் பதிவாகி முடிய மணி 7:00.. ரெகார்டிங் இதோட முடிச்சிக்கலாமா அப்படின்னு சக்ரவர்த்தி அவர்கள் கேட்க இல்லை இன்னும் ஒரே ஒரு கவிதை தானே முடிச்சிரலாம் என்றேன்..

சரி ஒரு அரைமணி நேரம்தானே என அவரும் ஒத்துழைத்தார்.

ஒரு கல்யாணத் தூது - இதுதான் அந்தக் கவிதை.. மைக் முன்னால் நின்று கண் மூடி சரளமாய்ச் சொல்ல ஆரம்பித்தேன்.. மூன்றரை நிமிடங்கள், தங்கு தடையின்ற்றி வெள்ளமாய் வார்த்தைகள் வழிந்தோட ஏதோ என் சொந்தக் கதையை நண்ண்பனுக்குச் சொல்லுவதாய் இயல்பாய் ..

முடித்த பொது பலமான கைதட்டுகள்.. சிங்கிள் ஷாட்.. ஷாட் ஓ.கே.. சக்ரவர்த்தி ஓடோடி வந்து என் கைகளைப் பிடித்துக் குலுக்கி கட்டிக்கொண்டார்.. இது காகிதத்தில எழுதினதா இல்லை மனசில எழுதினதா? உங்க அப்பா புரிஞ்சுக்குவாரில்லையா எனக் கேட்க, அவருக்கு இதெல்லாம் கற்பனை என்று விளங்க வைக்கவே எனக்கு வெகுநேரம் பிடித்தது.. ரெகார்டிங் சந்தோஷமாய் முடிய இரண்டு நாட்கள் கழித்து எடிட் செய்யப்பட்ட அந்த ஒலிப்பதிவை அவர் போட்டுக் காட்ட மிகச் சிறப்பாய் வந்திருந்தது அது..

ஆக எங்களது படைப்புகள் காற்றில் கலந்து தமிழகமெங்கும் ஒலித்தன. கல்லூரியில் திடீர் ஹீரோக்கள் ஆனோம்.. சிகாமணிக்கும் அவன் குழுவிற்கும் கல்லூரி ஆர்கெஸ்ட்ரா டீமில் இடம் கிடைக்க, நானும் அதில் பாடல் எழுத ஒட்டிக் கொண்டேன்.. நளினியும் நன்றாகப் பாடுவார். அவர் முதலிலேயே ஆர்கெஸ்ட்ரா குழுவில் இருந்தார்..

கல்லூரியில் அந்தப்பாட்டைக் கேட்ட அத்தனைத் தங்கைகளும், தம்பிகளும் கவிதை நாயகி ஒருத்தி இருப்பதாகவே முடிவு கட்டினதுதான் உச்சகட்டம். அந்த வதந்தி அடங்கி விட்டது காலம் போகப் போக..

அடுத்த படையெடுப்பு புதுக்கோட்டை முற்ற்போக்கு எழுத்தாளர்கள் நடத்திய மாவட்ட அளவிலான கவிதை, கட்டுரை, ஒவியம், புத்தக அறிவு, கதை போட்டிகள் தான்..

நடுவர்கள் ஒரு கவிதையை, பாடலை அதன் வரிகளின் அழுத்தம் புரியாமல் மதிப்பிடுவது எவ்வளவு கடினம் எனப் புரிய வைத்தது அது..

அதே சமயம் ஒரு கிசு கிசு.. யாருமே எதிர்பார்க்காட அந்தப் போட்டியில் எனக்கு மாவட்ட அளவிலான இரண்டாம் பரிசு கிடைத்தது..
இது உங்களுக்கும் ஷாக்காக இருக்கும்.!!!

தொடரும்

ஓவியன்
07-12-2007, 07:29 AM
அரவணைத்தகல்...
உற்சாகமூட்டல்...
கால் வாரப்படல்...
நம்பிக்கைத் துரோகம்...

எல்லாத்தையும் வென்று காட்டிய
தளராத தன்னம்பிக்கை...

இவைதானா செல்வன் அண்ணாவை இப்படி புடம் போட்டது......?!!
சோதனைகளை சாதனைகளாக்கிய செல்வன் அண்ணாவின்
தமிழுடன் கொண்ட உறவை விளக்கும் இந்த பதிவு என்போன்ற
இளையவர்கள் பலருக்கு வழிகாட்டியாக அமையும்............!! :icon_b:

தாமரை
08-12-2007, 02:02 AM
முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கப் போட்டிகள் மூணு செண்டர்ல நடந்தது. அதில் கவிதை போட்டி ஆரம்பிச்சப்பவே கேட்டேன்.. அய்யா கவிதை எழுதணுமா இல்லைப் பாட்டூ எழுதணுமா என்று. எது வேணும்னாலும் எழுதுங்கா அப்படீன்னு சொல்லிட்டாங்க.. மூணு தலைப்புகள். என் இந்தியா, பழைய சோறும் பாதாம் கீரும் அப்புறம் இன்னொரூ மனசில் நிக்காத தலைப்பு.. நான் பழைய சோறும் பாதாம் கீரும் தலைப்பை எடுத்துகிட்டேன். ஏன்னா யாரும் அந்தத் தலைப்பை எடுக்கலை. நம்ம பாழாப் போன உலகமே பாட்டை எழுதினேன்.

அப்புறம் ஓவியப் போட்டி.. (ஓவியன், இதைக் கவனிங்க).. எது வேணும்னாலும் கருத்தா இருக்கலாம் ஓவியம் வரையுங்க என்று சொல்லிட்டாங்க.. நானும் ஒரு கோரமான விரிசல்கள் விழுந்த மண்டையோட்டுத் தலையை வரைந்து அதன் கீழ் இரத்தம் வழியும் வாயினை மூக்கு கையாய் மாறி பொத்தி இருக்க அதற்கு (சு)தந்திரம் என்று பெயரிட்டேன். இது வெறும் கோட்டோவியம்தான்.

அடுத்து கட்டுரை போட்டி, அதையடுத்து புத்தக அறிவுப்போட்டி..
எல்லாம் முடிந்ததும், முதலில் கவிதைப் போட்டி ரிசலட் சொன்னார்கள். பழனியப்பன் முதல் பரிசு, இரண்டாம் பரிசு வேறு கல்லூரிக்கு, தாமரைச் செல்வன் மூன்றாம் பரிசு..

மற்ற முடிவுகள் வரத்தாமதாமாகும் என்பாதால், பரிசு பெற்ற கவிதைகளை வாசிக்கச் சொன்னார்கள். பழனியப்பனும், அடுத்த மாணவனும் வாசிக்க, மூன்றாவதாய் நான் எழுந்து உணர்ச்சிகரமாய் பாடலை மெட்டுடன் பாடிக் காட்டினேன்.

மெட்டுடன் கூடிய போதுதான் வார்த்தைகளின் அர்த்தம் முகத்திலறைந்தார்போல இருந்ததை கவனித்த நடுவர்கள்.. வருத்தம் தெரிவித்தனர்.. இன்னொரு பட்டுக்கோட்டையார் எங்கள் எதிரில் நின்றிருப்பது தெரியாமல் எளிமையினை கண்டு இகழந்துவிட்டோம்.. இப்பொழுது தலைகுனிகிறோம் என்று "நாட்டாமை தீர்ப்பை மாற்ற நினைக்க, சொன்ன தீர்ப்பு சொன்னதாக இருக்கட்டும், இப்பொழுது உங்கள் கண்களுக்குப் புரியாத அர்த்தங்கள் (காதுகளுக்கு புரிந்த அர்த்தங்கள்) இன்னொரு நடுவருக்கு எப்படிப் புரியும், இதனால் உம்மேல் அவர்களும் சந்தேகம் கொள்ள வாய்ப்பளிக்காதீர்கள் என் மறுத்தேன். கட்டுரை, புத்தக அறிவு மற்றும் ஓவியம் :icon_b: மூன்றிலும் முதல் பரிசு. இவை மாவட்ட அளவு பரீசீலனைக்கு அனுப்பப் பட்டதில் கட்டுரை, புத்தக அறிவில் மாவட்ட முதலிடமும் ஓவியத்தில் இரண்டாம் பரிசும் பெற்றது. முதல்பரிசு வெண்புறாவாய் பாதி மாறிய இராணுவத் தொப்பி, தலைப்பு அமைதிப் படை.

புத்தக அறிவா வெறும் மாத வார பத்திரிக்கைகள் துண்டு பேப்பர்கள் படித்தவனுக்கா என்று யோசிக்காதீர்கள். நான் தீவிரப் படிப்பாளியாய் இருந்த காலம் 6வது முதல் +2 படித்த வரை.. கொஞ்சம் ஃபிளாஷ் பேக் போய் வரலாம் வாருங்கள்.

தொடரும்

தாமரை
08-12-2007, 02:16 AM
ஃபிளாஷ் பேக்!

6 ஆம் வகுப்பிலிருந்து நான் படிக்கும் புத்தகங்களின் எடை கூடிக் கொண்டே வந்தது.. தடித் தடிப் புத்தகங்களைத் தேடித் தேடிப் படித்தேன்.. கல்கி தீபாவளி மலர், வாரப்பத்திரிக்கைகளில் வரும் தொடர்கள் என ஆரம்பித்து பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், விக்கிரமாதித்தன் கதைகள், மதன் காமராஜன் கதைகள், நடுவழியில் ஒரு ரயில், உதிரிப் பூக்கள், பிரியா, யவனராணி, சேரமான் காதலி, கடல்புறா, மஞ்சள் ஆறு, நாற்பதினாயிரம் ரூபாய், எஸ்.எஸ்.66, சிவ புராணம், விஷ்ணுபுராணம், கந்த புராணம், பாகவதம், தேவி பாகவதம், இராமாயணத்தில் பல நூல்கள், மகாபாரதத்தில் பல் நூல்கள், இராஜ திலகம், என வகை தொகை இல்லாமல் படித்துக் கொண்டிருந்தேன்..

இந்தக்கால கட்டங்களில் இரண்டு சுவையான சம்பவங்கள் உண்டூ..

பத்தாவது பொதுத்தேர்வு காலம்.. நாளை வரலாறு புவியியல் பரிட்சை. அப்பதான் ராஜதிலகம் (சாண்டில்யன்) படிச்சு முடிச்சிருந்தேன்.. பக்கத்து வீட்டுப் பையன் ராஜபொம்மண்ணன். அவனது புத்தகம் தான் அது..

புத்தகத்தை, கொடுக்கும்போது பெருமையாய் வரலாற்றுப் பாடத்தில் என்னை யாரையும் மிஞ்ச முடியாது தெரியுமா? என்ன கேள்வி வேணும்னா கேளு என்று மார்தட்டினான்..

என்னுள் இருந்து சாத்தான் தலை தூக்கிச்சு.. சரி பல்லவ வமிசத்தில் அராசாண்டவர்கள் எத்தனைபேர்? ன்னு கேட்டேன்..

கெக்கே பிக்கே என முழிச்சான். நான் விடையைச் சொல்லி சிம்ம விஷ்ணு பல்லவர்ல ஆரம்பிச்சு, எல்லோர் பேரையும் சொன்னேன்.. அப்புறம் பிற்காலச் சோழர்கள்,, பாண்டிய வமிசங்கள், நலங்கிள்ளி நெடுங்கிள்ளி அப்படின்னு பேசிப் பேசி அவன் ஈக்கோவையே கிள்ளிட்டேன்..

ஆமாம் அதேதான்.. அவன் வரலாறு புவியியல் பாடத்தில் பெயில்.:icon_ush:


இரண்டாவது, நடுவழியில் ஒரு இரயில்.. இந்தப் புத்தகத்தை லைப்ரரியில் இருந்து எடுத்தது தாமோதிரன். நான் படிக்க வாங்கி இருந்தேன்.. படித்து முடித்து இரண்டு நாள் கழித்து புத்தகத்தைக் காண்வில்லை..

தாமோதிரனோ புத்தகம் இல்லாட்டி ஃபைன் காசு குடு என நெருக்க ஆரம்பித்தான்.

காசு இருந்தாத்தான் பிரச்சனை இல்லியே! என்ன பண்ணறதுன்னு புரியாம இருந்தேன்.. அப்பா கிட்ட கேட்கவும் பயம்..

ஒரு நாள் அவன் வீட்டுக்கு நான் போனப்ப அவங்க அம்மா ஒரு புத்தகம் படிச்சிகிட்டு இருந்தாங்க. பாத்தா நடுவழியில் ஒரு ரயில்..

அம்மா படிச்சுட்டு குடுக்கறேன் என்று சொல்லி இரவல் வாங்கி வந்தேன்.. அடுத்த முறை என்னை புத்தகம் குடு இல்லைன்னா காசு குடுன்னு கேட்டப்ப, புத்தகம் கெடைச்சிருச்சி இந்தான்னு எடுத்துக் கொடுத்தேன், அவன் திரு திருன்னு முழிச்சான்.. :lachen001: பெரிய சண்டையாகி ஃபிரண்ட் ஷிப் கட்டானது..

இதுக்கு மத்தியில் அண்ணாதுரை வீதியில் உள்ள பெரியவங்களுக்கு புராணங்கள் படிச்சிக் காட்டற வாய்ப்பு கிடைத்தது, அங்கா இருந்த கிருஷ்ணராஜ் ங்கற தாத்தா வீட்டில நிறையப் புத்தகங்கள் இருந்தத்து.. தினம் இரண்டு மணி-நேரம் நான் நாற்காலியில் உட்கார்ந்து சத்தமாய் படித்து சொல்லுவேன்.. பல பெரியவர்கள் சுற்றிலும் கயித்த்துக் கட்டிலில் உட்கார்ந்து கிட்டு அப்பப்ப விளக்கம் சொல்லுவாங்க.. அடிமனசில் ஆழப் பதிந்த கதை இப்ப புரிஞ்சிருக்குமே!

சரி மறுபடி கல்லூரிக்குப் போவோம்..

அடுத்த வெற்றி ஊர்வலத்துக்கு..

தொடரும்.

ஓவியன்
08-12-2007, 02:16 AM
அப்புறம் ஓவியப் போட்டி.. (ஓவியன், இதைக் கவனிங்க).. எது வேணும்னாலும் கருத்தா இருக்கலாம் ஓவியம் வரையுங்க என்று சொல்லிட்டாங்க.. நானும் ஒரு கோரமான விரிசல்கள் விழுந்த மண்டையோட்டுத் தலையை வரைந்து அதன் கீழ் இரத்தம் வழியும் வாயினை மூக்கு கையாய் மாறி பொத்தி இருக்க அதற்கு (சு)தந்திரம் என்று பெயரிட்டேன். இது வெறும் கோட்டோவியம்தான்

ஆஹா.....!!

அந்த கலையையும் விட்டு வைக்கவில்லையா நீங்கள்......
அருமையான கருத்துடன் ஓவியத்திலிறங்கி இருக்கிறீர்கள்....:icon_b:

யவனிகா
08-12-2007, 03:04 AM
இப்படித்தான் பிளாஷ் பேக் போறதா? பலகலை வல்லுனரா நீங்க? வாழ்த்துக்கள்.

ஆதவா
08-12-2007, 03:15 AM
இப்படித்தான் பல படைப்புகள் ஆராயமல் தோற்றுவிடுகின்றன....

அசராத உங்களுக்கு வாழ்த்துகள்ள்.

தாமரை- ஓவியன்..


சொல்லவேயில்லை.????

தாமரை
11-12-2007, 06:14 AM
அடுத்து நடந்த முக்கிய போட்டி, YMCA, திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் நடத்திய தஞ்சை, திருச்சி, புதுகை மாவட்டக் கல்லூரிகளுக்கிடையேயான போட்டி.

இந்தப் போட்டியில் நான், பழனியப்பன், தளப்தி, லஷ்மி, வளர்மதி, சிகாமணி ஆகியோர் கலந்து கொண்டோம். கவிதை, கட்டுரை, கதை, பாட்டு என பல பிரிவுகளில் போட்டி..

இந்த தடவை மன்றத்தில எல்லோரும் நல்ல ஃப்ரண்ட்ஸ். கொஞ்சம் திட்டம் போட்டுத்தான் செய்தோம்.. எப்படி எழுதுவதுன்னு சின்ன ப்ராக்டீஸ் கூட உண்டு.. பாட்டுப் போட்டிக்கு சிகாமணி, கவிதைக்கு ஐந்து பேர், அப்படி ஏரியா வாரியா பிரிச்சுகிட்டு வேலை செய்தோம்..

கவிதை(வானமே கூரை) முதலிரண்டு பரிசுகள் தாமரை மற்றும் தளபதி, கட்டுரை வளர்மதி முதலாவது தாமரை மூன்றாவது, கதை தளபதி முதலிடம் தாமரை இரண்டாமிடம், பாட்டு சிகாமணி முதலிடம் (பூஞ்சோலைக் காற்றே) என எக்கச்சக்க பட்டயங்களும் சுழற்கேடயமும் வாங்கினோம்..

இதுதான் எங்கள் கல்லூரியில் நாங்கள் வாங்கிய முதல் சுழற்கேடயம். தமிழ்மன்றம் தலைநிமிர்ந்தது. கலை நிகழ்ச்சிகளில் இனி யாரும் தமிழை ஓரங்கட்ட முடியாது என்ற நிலை உண்டாச்சு..

அடுத்து வந்தது லி-ஃபோனிக்ஸ். அதாங்க அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் கலைவிழா. ஃபெஸ்டெம்பரிலும், பி.எஸ்.ஜி யிலும் போய் சில பரிசுகளை மட்டுமே வாங்கிவந்த நுண்கலை மன்றம் (ஃபைன் ஆர்ட்ஸ் அஸோசியேசன்) இந்த முறை தமிழ் மன்றத்தையும் அழைத்தது.

இந்த மாதிரிக் கலை விழாக்களில் தமிழுக்குன்னு இருக்கிற போட்டிகள் குறைச்சல்தான். இருந்தாலும் ஒவ்வொரு புள்ளியும் முக்கியம்கறதை மக்கள் புரிஞ்சுகிட்டாங்க. அதே சமயம் எங்களால மற்ற கலைகளுக்கும் பங்களிக்க முடியும் என்று நிரூபிக்கிற விதத்திலும் அது அமைந்தது..

லி-ஃபோனிக்ஸ்ல நான் கலந்துகிட்ட போட்டிகள், கிரியேட்டிவ் ரைட்டிங் அப்புறம் பாட்டுக்கு பாட்டு..

கிரியேட்டிவ் ரைட்டிங்கில் வசனம் மட்டுமே இருந்த கதை எழுதினேன்.. முதல் பரிசு.. பாட்டுக்குப் பாட்டில் மூன்றாம் பரிசு.. ஆக 14 புள்ளிகள்.
அதே சமயம்

ஃபேஷன் ஷோ ல மூணு போட்டியை கலந்திருந்தாங்க. 1. உடையலங்காரம் 2. ஆணழகன், 3. அழகிப் போட்டி.. எங்க கல்லூரி மக்களுக்கு ஃபேஷன் கறது கொஞ்சம் கஷ்டம் தான். கடைசி ஒரு மணி நேரம் வரை என்ன செய்யறதுன்னு தெரியாம இருந்தாங்க. இன்னும் பெயர் கொடுக்கவும் இல்லை.. வெற்றிக்குப் பக்கத்தில இருக்கோம். கீழக்கரை கல்லூரிக்கும் எங்களுக்கும் தான் கெட்ட போட்டி. போட்டியில் கலந்துக்கற்றவங்க லிஸ்டைப் பார்க்க

பெண்களோட பெயரே இல்லை. நம்ம குறுக்கு புத்தி சும்மா இருக்குமா?, மூணு பொண்ணுங்களுக்கு சேலை தயார் செய்தோம்.. கடைசி நிமிஷத்தில பேர் கொடுத்தோம்..:icon_rollout:

24 புள்ளிகள் இந்த ஒரு போட்டியில் மட்டும்.. இதெல்லாம் மிஸ் லி-ஃபோனிக்ஸாம் (அகிலா, நளினி, லதா).. இருக்கட்டுமே!..

வெரைட்டியில் ஊமை நாடகம்.. ஒற்றுமையை வலியுறுத்தி, திரும்பிய கைகளால் அடுத்தவருக்கு உணவூட்டும் அற்புத கான்ஸப்ட்.

அதே மாதிரி ஓவியப்போட்டிகலிலும் உதவினோம்.. கான்சப்டுக்கு ஒரு தலைப்பு கொடுக்கிறது.. ஒரு வரி பஞ்ச். கொஞ்சம் வித்தியாசம் தான்.. புள்ளிகள் குவிந்து கைக்கு சுழல் கோப்பை..

போட்டிப் பொறாமைகள் ஒழிந்து கல்லூரி மாணவர்கள் ஒன்றுபட்டதால் உண்டான வெற்றி இது. ஒரு வெற்றியின் குதூகலம் பல வேற்றுமைகளை கசப்புணர்ச்சிகளைக் களைந்து விடுகிறது. எங்க வெற்றி ஊர்வலங்கள் தொடர்கதையாக ஆரம்பித்தன..

தொடரும்

சிவா.ஜி
11-12-2007, 06:24 AM
ஒரு வெற்றியாளரின் கடந்து வந்த பாதையில் கொட்டிக் கிடக்கும் அத்தனை முத்துக்களையும் சேகரித்துக் கொண்டு வரும் ஆர்வத்துடன் உங்கள் பதிவுகளை வாசித்து வருகிறேன்.எத்தனையெத்தனை பாடங்கள்....பிரமிக்க வைக்கிறது.
வேற்றுமை களைந்த ஒற்றுமை வெற்றியைத் தருமென்ற சத்தியத்தை சொன்னது அருமை தாமரை.அசந்து நிற்கிறேன்.

அமரன்
11-12-2007, 08:30 AM
வசனத்திலே கதை... ஓவியம்... இரண்டுக்கும் ஒற்றுமைகள் அதிகம் இருக்குமோ?

தாமரை
11-12-2007, 11:47 AM
வசனத்திலே கதை... ஓவியம்... இரண்டுக்கும் ஒற்றுமைகள் அதிகம் இருக்குமோ?

அதில் ஒரு சின்ன டிரிக் இருக்கு அமரரே! போட்டி என வரும் பொழுது ஒன்றை நினைவில் வச்சுக்கணும்..

நடுவரா இருக்கறவர் திறமையானவர்தான் ஆனால் அதே சமயம் அவருக்கு நாம் பார்க்கும் கோணம் புரியும் என்பது பல சமயம் தவறாகி விடுகிறது. ஏனென்றால் அவர் வேறு கோணத்தில் பார்க்கலாம்.

ஒரு சின்ன பஞ்ச் இந்தக் குறையை தீர்க்கிறது. நடுவரின் பார்வையை நம் பார்வைக் கோணத்திற்குத் திருப்புகிறது. நாம் என்ன சொல்கிறோம் என்பது நடுவருக்குப் புரிந்து விட்டால் அவருடைய குறைகாணும் நெற்றிக்கண் மூடிக்கொள்கிறது. அம்புட்டுதான்.

மதி
11-12-2007, 11:56 AM
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. அப்பாடா...
முடியல.. ஏன் ஆண்டவன் ஒருத்தருக்கே எல்லாத் திறமையும் குடுக்கறான்..? அதனால தான் என்னை மாதிரி ஆளுங்கள படைச்சு சரி படுத்திக்கிட்டானோ..?

தாமரை
11-12-2007, 12:10 PM
அடுத்த வெற்றி- சண்முகா இஞ்ஜினியரிங் காலேஜ். இதில் தமிழின் பங்களிப்பு அதிகம் இல்லையென்றாலும், மன்றத்தின் பங்களிப்பு இருந்தது. இங்கும் சுழல் கோப்பை எங்கள் கையில்..

இது முடிந்ததும் அக்கல்ஃபெஸ்ட். காரைக்குடி அழகப்பச் செட்டியார் கல்லூரி.. இங்கும் கடும் போட்டி. காட்டாற்ற்று வெள்ளமாய் இல்லாமல் கரை கட்டிய காவிரியாய் எங்கள் கலைக் குழு பயணித்தது.. இங்கு இரு போட்டிகளில் நான் கலந்து கொண்டேன். 1. அபவ்ட் டர்ன்.. அதாவது ஒரு தலைப்பு கொடுத்து விடுவார்கள். அதைச் சார்ந்து 5 நிமிடம் பேச வேண்டும். அதன் பிறகு மணி ஒலித்தவுடன் அதே கருத்துகளை எதிர்த்துப் பேச (ஏச) வேண்டும்.

எனக்குக் கிடைத்த தலைப்போ ""வகுப்பறையில் தூங்கக் கூடாது". செண்டிமெண்டலாக பேச ஆரம்பித்த நான் மணியடித்த பின் நான் கூறிய அத்தனைக் கருத்துக்களையும் உடைத்த போது, அதுவும் சுயநிதிக் கல்லூரிகளின் விரிவுரையாளர்களின் தரத்தை உரசிப் பார்த்தபொழுது எழுந்த கரகோஷமே என் வெற்றியை உறுதி செய்து விட்டது (ஆமாம் ஆதவா, அப்பவே அண்ணன் அப்படித்தான், மாற்றுபொருள் எடுப்பதில் மன்னன். ஒரே வசனம். இருவேறு அர்த்தங்கள்.. அசத்திபுட்டமில்ல)..

இரண்டாவது போட்டி தெதே தெத் அதாவது நேர்முகப் போட்டி.. இவர்கள் சந்தித்தால் போன்ற ஒரு போட்டி.. நானும் சரவணனும் கலந்து கொண்டோம். எங்களைச் சோதிக்கவே வந்த மாதிரி கிடைத்த தலைப்பு, வ.உ.சி. யும், ம.பொ.சி யும்.. மற்றவர்களுக்கோ ரவிசாஸ்திரியும் பிள்ளையார் கொவில் சாஸ்திரியும், டி.ஆரும், டி ஆர் மகாலிங்கமும் இப்படி சத்துள்ளதாக நகைச்சுவை வாய்ப்புள்ளதாக இருக்க, விடுதலைப் போராட்ட வீரர்களைக் கொண்ண்டு நகைச்சுவையாய் பேச எங்களுக்கு மனமின்றிப் போனது.

ம.பொ.சி நிரந்தர மேலவை உறுப்பினர், சிலப்பதிகாரம் கரைத்துக் குடித்தவர் என்பதுவும், ஊழல்களை எதிர்க்காமல் ஆளும் கட்சிக்கு ஆதரவு அளித்தவர் என்பதையுமே கொண்டு வ.உ.சி ம.பொ.சி க்கு அறிவுரைச் சொல்வதைப் போல அமைந்த அந்த உரையாடல் கைதட்டல் பெற்றாலும் மூன்றாம் பரிசையே பெற்றது. இருந்தாலும் அதுவே எங்களுக்கு மதுரை வக்ஃப் போர்டு காலேஜ் தான் இந்த முறைப் போட்டி..

இறுதிப்போட்டி வரை யார் வெல்லப்போகிறார்கள் எனத் தெரியாமல் இருந்தது. வக்ஃப் போர்டு கல்லுரியில் நடிகர்களிம் டூப்பாக, மிமிக்ரி கலைஞர்கள் இருந்தது அவர்களுக்கு வசதியாக இருக்க கடைசிப் போட்டியாக பேஷன் ஷோ!

தெதே தெத்தினால் நாங்கள் 2 புள்ளிகள் முண்ணனியில் இருக்க, பேஷன் ஷோவில் இரண்டாம் இடத்தில் வந்தாலே அவர்கள்ள வென்று விடுவார்கள் என்ற நிலை இருந்தது. எங்கள் டீமோ இதில்தான் வீக்.

எங்கள் மூளைகளை கசக்கி பேஷன் ஷோவிற்கு ஐடியாக்கள் பிடித்தோம். போட்டி ஆரம்பமானது. எங்களுக்குத் தெரியும் கீழக்கரை முகம்மது சதக் கல்லூரிதான் முதலிடம் பெறுமென்று..

இம்முறையும் தங்கைகள் தான் எங்கள் பிரம்மாஸ்திரம். மடிசார், குஜராத்தி ஸ்டைல், என புடவை அணியும் ஸ்டைல்களே எங்களில் அஸ்திரம். வக்ஃப் போர்ட் காலேஜோ, கூலாக அரைக்கை சட்டையுடன் டை கட்டிய எம்.ஜி.ஆரையும், பைப் புகைக்கும் ரஜினியையும் இப்படி பாப்புலர் கலைஞர்களைக் களத்தில் இறக்க, அவர்களுக்குக் கிடைத்த வரவேற்பு எங்கள் வயிற்றில் புளியைக் கரைத்தது. எங்களாலேயே கைதட்டாமல் இருக்க முடியவில்லை..

நடுவர் - பாலகுமாரன்..

பேச எழுந்தார்..

தொடரும்

யவனிகா
11-12-2007, 12:15 PM
எப்பிடிங்க இது...உங்களுக்கு மூளை ஓவர் டைமில் வேலை செய்யுதோ?
சுவையாகப் போகிறது...தொடருங்கள்...

யவனிகா
11-12-2007, 12:17 PM
நடுவர் - பாலகுமாரன்..
தொடரும்

ஐ...பாலாவா...என்ன பேசினார்?

தாமரை
11-12-2007, 12:22 PM
முதல் பரிசு முன்னால் எதிர்பார்த்து தற்போது எதிர்பார்க்காத முகம்மது சதக், இரண்டாம் பரிசு மூகாம்பிகை, மூன்றாவது பரிசு வக்ஃப் போர்டு கல்லூரி..

மிகப் பெரிய கூஊச்சல் குழப்பம். என்னதான் நாங்க ஜெயிச்சுட்டாலும், கொண்டாட முடியுமா?? பெரிய கலவரமே மூளுகிற நிலமை. பாலகுமரன் சொன்னார்.

கூட்டத்தின் அபிமானம் வக்ஃப் போர்டு கல்லூரிப் பக்கம்தான். அவர்கள் செய்தவை அனைவரையும் கவர்ந்தன. ஆனால் இந்த நாற்காலியில் அமர்ந்திருக்கும் நான் உணர்ச்சி பூர்வமான தீர்ப்பை அளிக்க விரும்பவில்லை..

இது பேஷன் ஷோ.. அப்படி இருக்க உடையில் புதுமை இருக்க வேண்டும். ஆனால் அது மட்டும் அந்தக் கல்லூரிப் போட்டியாளர்களிடம் மிஸ்ஸிங். இது ஒரு மாறுவேடப் போட்டியாக இருந்திருந்தால் முதல் பரிசு அவர்களுக்குத்தான். ஒரு ஓவியப் போட்டியில் சிறந்த கவிதைக்கு பரிசளிக்க முடியாது. அதனாலேயே அவர்களுக்கு மூன்றாமிடம் என விளக்கி அமைதிப்படுத்தினார்.

நான்கு சுழல் கேடயங்கள். அடுத்தது என்ன??

எங்கள் சொந்தக் கலை விழாதானே!!.. வேலைகளை ஆரம்பித்தோம்

மெசன்னஸ்...

தொடரும்

அமரன்
11-12-2007, 02:44 PM
அதில் ஒரு சின்ன டிரிக் இருக்கு அமரரே! போட்டி என வரும் பொழுது ஒன்றை நினைவில் வச்சுக்கணும்..

நடுவரா இருக்கறவர் திறமையானவர்தான் ஆனால் அதே சமயம் அவருக்கு நாம் பார்க்கும் கோணம் புரியும் என்பது பல சமயம் தவறாகி விடுகிறது. ஏனென்றால் அவர் வேறு கோணத்தில் பார்க்கலாம்.

ஒரு சின்ன பஞ்ச் இந்தக் குறையை தீர்க்கிறது. நடுவரின் பார்வையை நம் பார்வைக் கோணத்திற்குத் திருப்புகிறது. நாம் என்ன சொல்கிறோம் என்பது நடுவருக்குப் புரிந்து விட்டால் அவருடைய குறைகாணும் நெற்றிக்கண் மூடிக்கொள்கிறது. அம்புட்டுதான்.
நிதர்சனம்.... காலம் தாழ்த்திப் புரிந்தேன்.
பல அனுபவங்களுக்கான தேடலின் பெறுதி பெற்றேன்.
இன்னும் பெறுவேன்...

தாமரை
12-12-2007, 01:03 AM
மெசன்னஸ் 88

இவ்வளவு நாள் போட்டிகளில் கலந்துகிட்ட கொண்ட நாங்க, போட்டிகளை நடத்த ஆசைப்பட்டோம். மேனேஜ்மெண்ட் ஓ.கே சொல்லி ஒரு லட்ச ரூபாய் தர்ரதாச் சொல்ல விறுவிறுன்னு வேலை நடக்க ஆரம்பிச்சது..

சரவணன் தலைமையில் கூடி, கமிட்டிகள் அமைக்கப்பட்டது, எடிட்டோரியல், மற்றும் தமிழ் ஈவண்ட் ஆர்கனைசிங் நம்ம கையில. மக்கள் பம்பரமா சுழன்று திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டைன்னு எல்லா இடத்திலும் ஸ்பான்ஸர்ஸ், டொனேஷன்னு கலெக்ட் பண்ணினாங்க.. வசூல் மட்டுமே மூணு லட்சத்தைத் தாண்ட பிரம்மாண்டமாய் பந்தல்கள் மேடைகள் போட்டோம். மூன்று நாட்கள் விழா.. முதல் நாள் மாலை ஆரம்பம்.. வெல்கம் ஈவண்ட்ஸ், எங்கள் கல்லூரி மாணவர்களோட கலை நிகழ்ச்சிகள், இரவு உணவு.. அடுத்த நாள் கலையில் இருந்து மூணாம் நாள் மதியம் வரைப் போட்டிகள்.. மூணாம் நாள் மாலை பரிசளிப்பு மற்றும் நிறைவு விழா..

பம்பரமா சுத்தி வாங்கி வந்த விளம்பரங்களையும், கல்லூரி மக்களோட படைப்புகளையும் வச்சு மெஸன்னஸ் 88 இதழ் லே-அவுட் போடப்பட்டது. அப்ப புதுக்கோட்டையில கம்ப்யூட்டர் எடிட்டிங் பிரிண்டிங் இருந்ததால ஒவ்வொரு பக்கத்தையும் பார்த்து பார்த்து செதுக்கினோம்.. மேகசின்ல பேர் வரணும்னு ஆசைப்பட்டவங்களுக்கு ஒரு துணுக்கோ, ஹைக்கூவோ சின்னதா நாங்களே எழுதி பேர் போட்டோம்..

நிகழ்ச்சி அட்டவணைத் தயாரித்தோம். கவிதை, ஒரு நிமிடம் தமிழில், பிளேடு (ஹாஹாஹா நாந்தானே நடுவர்) பாட்டுக்குப் பாட்டு, அபவ்ட் டர்ன் இப்படி நச்சுன்னு நாலே நாலு நிகழ்ச்சி மட்டும் என்னுடைய அரேஞ்மெண்ட்..

கவிதைப் போட்டி வெறும் எழுத்துங்கறதால அமைதியாப் போயிடுச்சி.. முதல் பரிசு பச்சையப்பாஸ்ல எம்.ஏ தமிழ் லிட்டரேச்சர் படிக்கிற மாணவர்..

ஒரு நிமிடம் தமிழிலும் அவரே கலக்கினார்.. 4 ரவுண்ட் கழிச்சு பார்த்தப்ப அவர் மட்டுமே இருக்க அதிலும் முதல் பரிசு,,

பாட்டுக்குப் பாட்டு போட்டி.. படுசூடாப் போயிட்டு இருக்க அவருக்கு கிடைத்த எழுத்து ஞா...

என்ன செய்யறது ஞானப் பழத்தை பிழிந்து ரசம்... என ஆரம்பிச்சிட்டு தடுமாற தகுதி நீக்கம் ஆனார். அன்னிக்குத்தான் நான் மேடையில் முதன் முதலா பாடினேன், கூட்டத்தின் சவாலை ஏற்று (40 நாள் தொடர்ந்து திருவிளையாடல் செகண்ட் ஷோ பார்த்தவனாச்சே). சுவேதாவின் பாட்டுக்கு பாட்டுக்கு பாட்டில் கூட இதைப் பாடி இருக்கேன்,.

எபவ்ட் டர்ன் ஒரு காமெடியாப் போச்சு.. நிறையபேர் சொதப்பிட்டாங்க.. உருப்படிய பண்ணின மூணு பேர்தான். அழகப்பா கல்லூரி முதலிடம், அண்ணாமலை இரண்டு பச்சையப்பாஸ் மூணாவது இடம்.

என்னுடைய தலைமையில் நடந்த கடைசி போட்டி பிளேடுப் போட்டு.. கன்னா பின்னான்னு கடி.. வந்தவனுங்க எல்லாம் அறுக்கறதுன்னு முடிவு பண்ணி வந்தவனுங்க. உரலில தலையை விட்டுட்டு உலக்கைக்கு பயந்தா முடியுமா?

அந்த பச்சையப்பாஸ் மாணவர் பேச எழுந்தார்..

நான் நானா இருந்து நீ நீயா இருந்து அது அதுவா இருந்து இருந்தா இது இதுவா இருந்தா நாம நாமளா இருக்கலாம். அதுவே நான் நானா இல்லாம நீ நீயா இருந்து அது அதுவா இருந்து இது இதுவா இருந்தா நாம நாமளா இருக்க முடியாது. அதே சமயம் நான் நானா இருந்து நீ நீயா இல்லாம அது அதுவா இருந்து இது இதுவா இருந்தா நாம நாமளா இருக்கமுடியாது.. அதே மாதிரி நான் நானா இருந்து நீ நீயா இருந்து அது அதுவா இல்லாம இது இதுவா இல்லாட்டி நாம நாமளா இருக்க முடியாது.. அப்படித்தாங்க நான் நானாக...

அவர் அறுத்துத் தள்ள மக்கள் கூட்டம் தாங்க முடியாமல் அலறியது..

எனக்குள் ஒரு சாத்தான் டக்கென்று விழித்தான்..

தொடரும்

மதி
12-12-2007, 02:10 AM
சாத்தான் எப்போதும் தூங்கிட்டு இருக்கற மாதிரி பேசறீங்க.. அவன் எப்போதும் முழிச்சுக்கிட்டு தானே இருக்கான்..ஹூ..ம்.

தாமரை
12-12-2007, 03:11 AM
சாத்தான் எப்போதும் தூங்கிட்டு இருக்கற மாதிரி பேசறீங்க.. அவன் எப்போதும் முழிச்சுக்கிட்டு தானே இருக்கான்..ஹூ..ம்.

சர்தான்

மதி
12-12-2007, 05:47 AM
சர்தான்

இது இது இதே தான்...

தாமரை
12-12-2007, 10:19 AM
நாட்டாமைத் தீர்ப்பு

நான் தீர்ப்பு சொல்ல எழுந்தேன்.. முதல்ல முடிவுகளைச் சொல்லிட்டேன்.. அப்புறம்தான் சொன்னேன்.. நண்பர் ஒரு கருத்து சொன்னார்.. நான் நானாக இருந்தால் நீ நீயாக இருந்தால் அது அதுவாக இருந்தால் இது இதுவாக இருந்தால் நாம் நாமாக இருக்கலாம் என்று..

இது தவறான கருத்து..

நான் நானாக இருந்து நீ நீயாக இருந்து இதோ இந்த நாற்காலி மரமாய் இருந்தாலென்ன மரம் நாற்காலியாய் இருந்தால் என்ன நாம் நாம்தானே!

ஆனால் அப்படி மட்டுமே சொல்லிவிட முடியுமா நானும் நீயும் மட்டுமே நானாகவும் நீயாகவும் இருந்தால் நாம் ஆகிய மூகாம்பிகைக் கல்லூரி மாணவர்களும், நீங்கள் ஆகிய பல கல்லூரி நண்பர்களும் நாங்களாகவும் நீங்களாகவும் இருந்தால் தானே நாம் நாமாக இருக்க முடியும்..

அவ்வளவுதானா இல்லையே! நாங்களில் நானடக்கம், நீங்களில் நீ அடக்கம். அப்படியானால் நாங்களும் நீங்களும் போதுமே நாம் நாமாக இருக்க...

இப்போது அவர்கள் அதாவது இவ்விழாவில் பங்கு கொள்ளாதவர்கள், இவர்கள் இவ்விழாவினைக் காண வந்திருக்கும் ஊர்மக்கள், அனைவரையும் எடுத்துக் கொள்வோம். அவர்கள், இவர்கள் என எவர்களையும் பற்றிக் கவலைப்படாமல் நாங்களும் நீங்களும் இருப்பதில் தானே நாம் நாமாக இருக்கிறோம்..

ஆக நாம் நாமாக இருக்க நாங்கள் நாங்களாயிருந்து நீங்கள் நீங்களாயிருந்தால் போதும் இப்போது இன்னொரு சாத்தியக் கூறும் உள்ளது.. நாங்கள் நீங்களாயிருந்து நீங்கள் நாங்களாயிருந்தால் நாம் நாமாக இருக்க முடியுமா? இது சற்று கடினமான கேள்விதான்.. ஏனென்றால்

வைரத்தை வைரத்தால் தான் அறுக்க முடியும்.. பிளேடை பிளேடால் தான் அறுக்க முடியும்.. ஆனாலும் ஒரு சந்தேகம். அறுக்கிற பிளேடு அறுபடுமா? அறுபடும் பிளேடு அறுக்குமா? எனவே அறுப்பது என் கடன் அறுபடுவது வினைப்பயன்..

இங்கே நடந்தது அறுவைப் போட்டி.. மக்களின் சிந்தனையே மழுங்கும் அளவிற்கு அறுத்த பச்சையப்பாஸ் மாணவரையே சிறந்த பிளேடு என்று அறிவிக்கிறேன் எனத் தீர்ப்பு சொல்ல..

பந்தலே அதிர்ந்தது..

போட்டிகள் முடிய நிறைவு விழாவும் இனிதே முடிந்தது. இப்பொழுது அதே ஜெய்சங்கர் முன்னிலையில் மேடையேறி கவிதை படைத்து அந்தக் கடைசிக் கலிங்கப் போரையும் (Final Frontire) வென்றேன்..

ஆனால் கல்லூரி சாகஸங்கள் இதோடு முடியவில்லை..

தொடரும்.

சாம்பவி
12-12-2007, 11:55 AM
என்னா ஒரு விசுத்தனம்..... !!!!!!!!

யவனிகா
12-12-2007, 12:14 PM
அருமையாப் போகுது....எல்லாவற்றையும் நினைவில் வைத்து, அருமையாகத் தொகுத்து,படிப்பவரையும் சலிப்படைய வைக்காமல் தரும் சக்தி உங்களின் எழுத்துக்கு இருக்கிறது....தொடருங்கள்....

பாரதி
12-12-2007, 01:05 PM
அசத்தல் தாமரை!

தாமரை
12-12-2007, 01:20 PM
ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி!


இதென்றும் தமிழ் சேவை செய்ய முளைத்தது இல்லை. 1988 ஜனவரி மாசம் 14 ஆம் நாள் பொங்கலுக்கு ஆரம்பிக்கப்பட்டது இந்த ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி.. எம்.ஜி.ஆர் நடிச்ச நாடகக் கம்பெனி பெயரான ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி என்ற பேரில ஒரு கேங்க் சேர்ந்தோம். இதுதான் நான் ரொம்ப நாள் இருந்த குரூப்.

சஃபீ, ஜெயக்குமார், என்.எஸ்.கே, சிவகுமார், சுந்தரராஜன், நான், ராஜபிரபு, செல்வராஜ்.. இந்த எட்டுபேர்தான் இந்த கம்பெனி மெம்பர்கள். ஆரம்பமே அதிரடி..

காலேஜ் ஆஃபிஸ்ல எல்லா ஸ்டூடண்ட்ஸ் அட்ரஸூம் வாங்கினோம்.. நான் ஒரு பொங்கல் வாழ்த்துக் கவிதை எழுத போஸ்ட் கார்ட் வாங்கி பிரிண்ட் செய்து .. இவண் ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனின்னு மெம்பர்ஸ் பேர் போட்டு எல்லார் அட்ரஸும் இராப்பகலா எழுதி போஸ்ட் செஞ்சோம்.

ஒரே நாளில் ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி டாப் கியரில் எகிற ஆரம்பிச்சாச்சு..

எங்க கொள்கைகளா?

1. வெட்டி பந்தா பண்றவங்களை ஓய்க்கிறது
2. காதலர்களுக்கு உதவுவது
3. டைரக்டரிலிருந்து பியூன் வரை பாசம் காட்டறது
4. எல்லோரும் 8 வது செமஸ்டர்ல ஆல்பாஸ் பண்ணறது
5. கவலை இல்லாம வாழ்க்கையை எஞ்ஜாய் பண்ணறது

இப்படி இருக்கறதுக்கும் தமிழுக்கும் என்ன சம்பந்தம்??

இருந்திச்சே

தொடரும்

அமரன்
12-12-2007, 03:43 PM
ஐயோ தாங்க முடியலை... மதியை வழிமொழிகின்றேன்..

தாமரை
13-12-2007, 05:27 AM
மெசன்னஸுக்குப் பின் என் தமிழின் தடம் மாறியது.. அப்ப இருந்த ஜூனியர்ஸுக்கு எழுதக் கத்துக் கொடுப்பதுதான் முதல் பணி. முருகானந்தம், ஜெயக்குமார், பாசு என்கிற பாலசுப்ரமணியம் இப்படி இளைஞர்கள்ள் என்னைச் சுத்தி சுத்தி வர அவங்களுக்கு எழுதக் கருப்பொருள் கொடுத்து சிந்திக்க வச்சு இப்படியும் எழுதலாமேங்கற சிந்தனைகளை வளர்க்க ஆரம்பிச்சேன்.

என்.எஸ்.கே முன்னாள் மத்திய அமைச்சர் அருணாசலம் அவர்களோட தம்பி மகன். அவனுக்கு ஒரு ஆசை. சினிமா எடுக்கணும்.. (ஆஹா இப்ப வந்ததா கனெக்ஷன்..)

அவனுடைய சித்தப்பா பெரியப்பா மக்கள் ஆறு பேர் சேர்ந்து ஒரு கம்பெனி ஆரம்பிச்சாங்க. சிக்ஸ் ஃபோர்ஸஸ் (ஆறுபடை) என்று பெயர். அதில் வாழற வயசுன்னு ஒரு படத்துக்குப் பூஜையும் போட்டாங்க..

எல்லோரும் ஒரு நாள் காலேஜூக்கு வர என்.எஸ்.கே என்னை எல்லோருக்கும் அறிமுகம் செய்தான்..

எதெதோ கதை டிஸ்கஷன், அப்புறம் பாட்டு எழுதனும்.. நானும் கதை டிஸ்கஷனில் பங்கு கொள்ள, இப்ப வந்திருக்கற கல்லூரி மாதிரி இளமையான ஒரு கதை ரெடிபண்ணி முடிச்சோம். பாட்டு சிச்சுவேஷன் எல்லாம் புடிச்சு அஞ்சு பாட்டு எழுதிக் கொடுத்தேன். அடிப்படைக் கதையை வாங்கிகிட்டு, பாடல்களையும் வாங்கிகிட்டுப் போனவங்க ஆறுமாசம் கழிச்சு திரும்பி வந்தாங்க..

கதைக்கு ஃபைனான்ஸ் புடிச்சாச்சி, புது டைரக்டர், இசை வேதா அப்படின்னு ஒரு கேரள இசையமைப்பாளர். என் ஐந்து பாடல்களையும் ரெகார்ட் பண்ணின கேஸட் கொடுத்தாங்க... நம்ம பாட்டை நாம கேஸட்ல கேட்கறப்ப இருக்கற இன்பம் அலாதிதானே.

எட்டாவது செமஸ்டர் வந்திட அனைத்து கொட்டங்களும் அடங்கி ஒழுங்கா படிக்க ஆரம்பிச்சிட்டோம். அதுக்குப் பின்னால நான் எழுதிய ஒரே கவிதை நாங்க பிரிஞ்சு போவதைப் பத்திதான்..

தமிழ் என் நாக்கிலிருந்தும், கைகளில் இருந்தும் ஓய்வெடுக்கற காலம் வந்தது. 1989 லிருந்து 1997 வரை, எனக்கும் தமிழுக்கும் இருந்த தொடர்பு குமுதம், குங்குமம், மாலைமதி, பாக்கெட் நாவல்கள், ஆனந்த விகடன், ஜூனியர் விகடன் இப்படி வார மாத இதழ்கள் தான்.

1997 லில அமெரிக்கா வந்தேன். எல்.எஸ்.ஐ லாஜிக்ஸ்ல காண்ட்ராக்டர்.. அப்பதான் நியூஸ்குரூப் மெம்பரானேன்..

தொடரும்

தாமரை
13-12-2007, 01:40 PM
அதிரடி மறுபிரவேசம்!!

நியூஸ் குரூப்னா அப்ப தமிழ் ஃபாண்டெல்லாம் இல்லை. அதனால இங்கிலீஸ் லெட்டர்ஸ், தமிழ் வார்த்தைகள்ள். அங்க விவாதங்கள் எல்லாம் படு பயங்கர ஆவேசமா இருந்தது.

திருவள்ளுவர் ஒரு சமணர் அப்படின்னு ஒரு விவாதம். திருமந்திரத்தையும் திருக்குறளையும் ஒப்பிட்டு சைவம் உண்டு என வாதாடினேன்.

சமணமும் இந்தியாவில் பிறந்துதானே.. பண்பாட்டு ஒப்புமை இருக்கத்தானே செய்யும். திருவள்ளுவர் அது பொதுநூலாய் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் தான் வெளிப்படையாக எந்த மதத்தையும் காட்டாமல் எழுதினார்.

மழித்தல் சமணம், நீட்டல் சைவம் எனவே மழித்தலும் நீட்டலும் வேண்டாம் என்று சொல்வதின் மூலம் அவர் ஒரு பொது மனிதனாகத்தான் தன்னை அடையாளம் காட்டுகிறார்.

இப்படி எத்தனையோ வாதங்கள். ஒவ்வொரு வாதத்திற்கும் இது சமணத்தில் உண்டு என்று சொல்பவர்கள் இது சைவத்தில் இல்லை என நிரூபிக்க வேண்டும் என வாதாடினேன். மெல்ல மெல்ல பதில்கள் குறைந்தன

அடுத்த சூடான விவாதம் வேதத்தில் எல்லாம் உண்டு என்பது. வேதத்தில் அது உண்டு இது உண்டு என ஒருவர் ஒரு பதிவு போட்டிருக்க அவரைக் கேட்ட கேள்வி..

அய்யா பல்லாயிரம் வருடங்களாக வேதம் கற்று வருகிறோம். நீங்கள் சொல்லும் அத்தனை நுட்பங்களும் தற்போது வெளிநாட்டுக்காரர்களின் பெயரைத் தாங்கி நிற்கின்றன.

இப்பொழுது இதைச் சொன்னால் மக்கள் ஒத்துக் கொண்டாலூம் சரி மறுத்தாலும் சரி, பயனொன்றுமில்லை. போனது போகட்டும்.

நீங்கள் சொல்வதைப் பார்த்தால் இன்னும் வேதத்தில் பல நுணுக்கமான தொழில் நுட்பங்கள் இருக்கக் கூடும். அதில் ஒன்றையாவது கண்டுபிடித்து வெளியிடுங்கள். அது நம் வேதத்தின் பெருமையை நிலை நாட்டும் என ஒரு போடு பொட அவர் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என ஓடினார்.

அடுத்து பாமியான் புத்தர் சிலை இடிப்பு.. ஒருவர் உருவ வழிபாடு எங்கள் மதத்திற்கு ஒவ்வாததது. வழிபாட்டு உருவங்கள் எங்கிருந்தாலும் உடைப்போம் என்ற்று கொக்கரித்தார்..

ஐயா சற்று தலை உயர்த்திப் பாருங்கள் அதோ வானில் தெரிகிறதே சூரியன் அதை நாங்கள் வனங்குகிறோம்.. முடிந்தால் அழித்து விடுங்கள்.

சற்றுக் குனிந்து பாருங்கள், உங்கள் காலடியில் தெரிகிறதே பூமி, அதையும் நாங்கள் வணங்குகிறோம் உடைத்து விடுங்கள்.

சரி கண்ணை மூடிக் கொண்டு ஆழ்ந்து சுவாசியுங்கள். அடடா அந்தக் காற்றைக் கூட நாங்கள் வணங்குகிறோம்.. மூச்சு விடாதீர்கள். மூக்கிலும் வாயிலும் வெடி வைத்துக் கொள்ளுங்கள் என ஏக கிண்டலாக ஒரு பதிவிட்டேன்..

அடுத்த விவாதம் இராமன் மற்றும் கிருஷ்ணரின் காலங்களை கிரக நிலைகளைக் கொண்டு கணித்து வெளியிட்ட ஒரு பதிவு..

அதில் இருந்த பளீரிடும் முரண்பாடுகளை, ஜோதிட நுணுக்கங்களைக் கொண்டு வாதிட்டேன்.. ஆமாம் ஜோதிடம் எப்போது படித்தேனா?

அது கல்லுரியில் இரண்டாம் ஆண்டு படித்த காலம். அப்பா ஜோதிட ஆசான் என்று 4 தொகுதிகள் கொண்ட மிகப்பெரிய புத்தகம் வாங்கி படித்துக் கொண்டிருந்தார். லீவு நாட்களில் படித்தேன்.

இதெல்லாம் எல்.எஸ்.ஐ யில் இருந்த ஆறு மாதக்காலம்தான், அப்போது ஜியோசிடிஸ் தளத்தில் முரசு அஞ்சல் மூலம் ஒரு தளம் தொடங்கினேன். இன்னும் அது இருக்கிறது. http://www.geocities.com/stselvan/ முரசு அஞ்சல் ஃபாண்ட் இருந்தால் படிக்கலாம். எனது பழைய கவிதைகளையும் இன்னும் சில எண்ணங்களையும் இதில் பதித்தேன்.

அடுத்து நான் வைத்த அடி - நெட் ஃபிரண்ட்ஸ். இணைய நண்பர்கள்,

தொடரும்

தாமரை
14-12-2007, 10:31 AM
சிஸ் இண்டியா, வலை நண்பர்கள்ள் பகுதியில் இரு பெயரில் நுழைந்தேன்
1. என்னுடைய சுயமுகம் 2. பெண்முகம்

என்னுடைய சுயமுகத்துக்கு மவுசு இருக்கத்தான் செஞ்சது. செல்வி, பிரேமா, சுஜாதா, குணசுந்தரி போன்ற மலேசியத் தோழிகளும், ஆனந்தி, அருணா தேவி போன்ற அமெரிக்கத் தோழிகளும் கிடைத்தார்கள்.

பெண் முகத்துக்கு ராசியே இல்லை. ஒரே ஒரு பையன் சிவா, தினம் அவன் ஒரு கவிதை எழுதி அனுப்ப நான் அதுக்கு பதிலா கவிதை எழுத கொஞ்ச நாள் ஓடிச்சு, ஆனா பாருங்க நம்ம அருணாதேவிக்கும் சிவா ஃபிரண்டு. அருணாதேவியோட வீடு எங்க வீட்ல இருந்து அஞ்சு நிமிஷம் தான். பார்த்து பேசி பழகி இருக்கோம். அவன் அருணா கிட்ட உங்க ஊர்ல இன்னொரு பொண்ணு இருக்கான்னு சொல்ல, என் கவிதையை அருணா எனக்கே காட்டினாங்க.

சிரிசிரின்னு சிரிச்சோம். அப்புறம் சிவாவுக்கு உண்மையைச் சொல்ல பையன் சொல்லாம கொள்ளாம எஸ்கேப் ஆயிட்டான்.

சுஜாதாவிற்கு கல்யாணம் ஆகும் வரை அவங்களோட நட்பு இருந்தது. குணசுந்தரியும் அப்படித்தான். ஆனால் செல்வி கல்யாணம் பண்ணிகிட்டு எங்க வீட்டுப் பக்கத்திலயே வந்தாங்க. ஒரு அண்ணனா இருந்து அவங்களுக்கு தாலிக்கொடி மாற்றும் விழாவெல்லாம் செய்யும் பாக்கியம் கிடைச்சது. ஒரு வருஷத்துக்குப் பின்னால அவங்க மறுபடி மலேசியா போயிட்டாங்க.

பிரேமா, ஆனந்தி நட்பு இன்னும் இருக்கு. என்னைப் பொருத்தவரை இணையத்தில் இணைந்த அத்தனை பேருமே ரொம்ப அன்பாய் இருந்தாங்க.

1999, ஜூன் 16, பொண்ணு பாக்கப் போனேன். அப்ப நடந்த உரையாடல்தான்

அப்பா : என்னடா, 7:00 மணிக்கு கிளம்பனும், இன்னுமா ரெடியாகலை?
செல்வன் : இருப்பா இப்பதான் குளிச்சிருக்கேன் இன்னும் கிளம்ப ஒருமணி நேரமாவது ஆகும்..
அப்பா : டேய் சீக்கிரம்டா
செல்வன் : எப்ப கிளம்பினாலும் ஏண்டா இப்படி லேட் பண்றீங்க, நாம என்ன பொண்ணு பார்க்கவா போறோம் அப்படீம்பிங்க.. இப்ப நிஜமாவே பொண்ணு பார்க்கப் போறோம் லேட் ஆகுமா ஆகாதா???

அப்பா: :confused::confused::confused:

பார்த்த முதல் பெண்ணே அண்ணிதான். அன்றே ஓ.கே சொல்லிவிட நவம்பர் 14 க்கு கல்யாணம் நிச்சயிக்கப்பட்டது.

உங்களை மாதிரிதான் தம்பிகளா, என் ஃபோனும் பிஸியாவே இருக்கும். ஆனா அதைவிட என்ன விஷேசம்னா அண்ணியும் நானும் கடிதங்கள் எழுதிக்குவோம்.. ஒரு 50 கடிதங்கள் இருக்கும். எல்லாம் சேர்த்து வைத்திருக்கோம். ஓவியன் மாதிரி போட்டோ ஷாப்ல வெட்டி ஒட்டி ஜிகினா வேலை பண்ணி என்னென்னமோ..கவிதைகள், பெரிய பெரிய கடிதங்கள் தான்.. பத்து A4 ஷீட் மினிமம். நமக்கே நமக்குன்னு கவிதைகள் எழூதும் பொழுது அதில் இருக்கும் சுகமே அலாதி. அதுவும் இந்தச் சந்தர்ப்பத்தில். இன்னிக்கும் அந்தக் கடிதங்கள் பத்திரமா இருக்கு. அதுதானே மிகப் பெரிய சொத்து..

என் கல்யாணத்திற்கு அழைப்பிதழ் நானே வடிவமைத்து பிரிண்ட் செய்தேன். அதை எடுத்துகிட்டு அழைக்கப் போனப்ப தான் அது நடந்தது.

என்னோட தமிழாசிரியர் பிள்ளார் செட்டி, ஓவிய ஆசிரியர் கூட நின்னுகிட்டு இருந்தார்.. கொஞ்ச நேரம் பேசிகிட்டு இருந்து விட்டு அழைப்பிதழைக் குடுத்தா,

சாம்பவி மாதிரி, என்னடா தாமரை செல்வன் னு போட்டிருக்க "ச்" எங்கடான்னு கேட்டாரு..

தேமலரின் உள்ளிருக்கும் தெள்ளமுதம் போல்பொழிவான்
தாமரைச் செல்வன் கவி

என்று எனக்கு வாழ்த்துக் கவி கொடுத்தவராச்சே! அவர் மானத்தைக் காப்பாத்த வேணாமா? சட்டுன்னு ஒரு பிட்டு எடுத்து விட்டேன்

ஐயா, தாமரை என்பது பெண்பால் பெயர். செல்வன் என்பது ஆண்பால் பெயர். ஒரு ஆணும் பெண்ணும் புணரும் பொழுது "இச்" என்ற சத்தம் எழுமானால் அது நாலு பேருக்கு கேக்கக் கூடாது.....

ஓவிய ஆசிரியர் வாயடைச்சு போயிட்டார்..

பிள்ளார் செட்டி கிச்சு கிச்சு மூட்டறியேன்னு சமாளிச்சார்.

கல்யாணம் நல்ல படியா முடிந்து அண்னியும் நானும் அமெரிக்கா வந்தாச்சு. இணைய தோழிகள் அண்ணிக்கு முதல்லயே நன்கு அறிமுகம் ஆகி இருந்ததால் ஜாலியா வாழ்க்கை போனது..

2000 வருடம் மார்ச் மாதம் ஒரு பழைய நண்பன் (தட்சிணா மூர்த்தி- கல்லூரி நண்பர்) கிட்ட இருந்து ஒரு ஃபோன் வந்தது. என் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் தந்தது.

தொடரும்

ஆதி
14-12-2007, 11:43 AM
பெரும்பாலும் உங்கள் திரியில் நான் பின்னூட்டமோ கருத்தோ இட்டதில்லை, உங்கள் பதிவில் பின்னூட்டமிடும் அளவுக்கு எனக்கு அறிவு இல்லை என்றுதான் சொல்லுவேன்..

சொற்சிலம்பத்தில் உங்களிடம் இருந்து நான் நிறையக் கற்று கொண்டிருக்கிறேன்..

உங்கள் பல திரிகள் எனக்கு பிடித்ததுண்டு செம்மையாய் என்னை வடித்து சென்றதும் உண்டு..

இந்த திரியில் படிக்கிற பொழுதில் உங்களுடன் ஒரு சக கதாப்பத்திரமாய் வாழ்ந்த நிறைவே உள்ளது.. உங்கள் பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி..

தமிழ் துறைப்பொருத்த மட்டில் மானசிகாமான நிறைய குருக்கள் எனக்கு உண்டு..

நிங்களும் இந்த மன்றத்திற்கும் எனக்கும் அப்படிதான்..

சுருக்கமாய் சொல்லப்போனால் நீங்களும் எனக்கு ஒரு துரோனர்தான்..

-ஆதி

தாமரை
19-12-2007, 09:19 AM
டீம் - என் வாழ்வின் உபயோகமான நாட்கள்

2000 ஆம் ஆண்டு தொடங்கினப்ப ஒரு நாள் என் காலேஜ் நண்பன் தட்சிணா மூர்த்தி ஃபோன் செஞ்சான். டேய் என்னுடைய மச்சான் கார்த்திகேயன் ஈஸ்வரமூர்த்தி, நானு இன்னும் சிலபேர் சேர்ந்து நம்ம நாட்டுக்கு எதாவது செய்யனும்னு நினைக்கிறோம். அதுபத்தி டிஸ்கஸ் பண்ணிகிட்டு இருக்கோம். நீ அவரை மீட் பண்ணு என அன்புக்கட்டளை போடவே, நானும் கார்த்திகேயன் ஈஸ்வரமூர்த்தியை கால்பண்ணினேன். மார்ச் மாசம் முதல்வாரம் மீட்டிங் போடலாம்னு இருக்கோம்,, வாங்க பேசலாம்னு சொன்னார்.

சொல்லப் போனா டீமை ஆரம்பிச்சது ஈரோடு, சேலம், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அமெரிக்க வாழ் இந்தியர்கள். ஒரே பிண்ணனி இவர்கள் எல்லாம் ஏழைக் குடும்பத்தில இருந்து படிப்பு என்ற ஒரே ஏணியின் மூலம் மேல வந்தவங்க. எதாவது நம்ம நாட்டுக்குச் செய்யணும்னா அதைப் ஆரம்பப் பள்ளியில இருந்துதான் ஆரம்பிக்கணும்னு ஒரு ஒத்த கருத்து எல்லார்கிட்டயும் இருந்தது.

ஆனா பணமா குடுத்தா நம்ம மக்கள் அதை அமுக்கத்தான் பார்ப்பாங்க. அதே தனி மனிதனுக்கு உதவினா அதனால சமூகம் எப்படி பயன்படும்?

சில பல விவாதங்கள். அந்த விவாத முடிவில உதிச்சதுதான் டீம்.


http://www.indiateam.org/teambase/magazine/july28_2001.pdf

இது டீமுக்காக நான் எழுதிய முதல் இதழ். இந்த இதழில் டீம் எப்படி உருவானது என விரிவா எழுதி இருக்கேன்,.

இன்னும் டீம் நல்ல முறையில் செயல்பட்டுகிட்டு இருக்கு. இதைப் பத்தி முழுசா தெரிஞ்சிக்க

http://www.indiateam.org/

இங்க போய் பாருங்க.


கார்த்திகேயன் ஈஸ்வரமூர்த்தி, ஒரு தனித்துவமான மனிதர். இவரைப் போன்ற மனிதரை இன்றும் நான் கண்டதில்லை. அனைவரிடமும் நயமாய் பழகும் பாங்கு, அர்ப்பணிப்பு உணர்வு. சிந்தனைத் தெளிவு, அரவணைத்துச் செல்லும் மனப்பாங்கு.

எனக்கு ஒரு ஆசை உண்டு.. அமெரிக்காவில் இருந்து வந்த பின்னர் டீமில் பங்கு பெற இயலவில்லையே என்ற வெறுமை உணர்வு. எனக்காக என் குடும்பத்திற்காக மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கிறேனே என்கிற உணர்வு.. எப்படி ஆரம்பிப்பது, எப்போது ஆரம்பிப்பது என்று புரியவில்லை, ஆனால் ஆரம்பித்துதான் ஆக வேண்டும்.. கூடிய விரைவில்.

இந்த ஒரு பதிவின் மூலம் டீமை மன்ற மக்களுக்கு அறிமுகப் படுத்துவதில் பெருமைப் படுகிறேன்..

தய்யவு செய்து ஒருமுறையேனும் அந்த இணைய தளத்திற்ற்குச் சென்று முழுமையாய் வாசியுங்கள். டீம் செய்த பணிகள், அது எந்த அள்விற்கு வளர்ந்திருக்கிறது என்ற விவரங்கள், நாங்கள் செய்த நற்பணிகள்..


தமிழ் காத்திருக்கும் ஓரிரு நாட்கள்...

தொடரும்

தாமரை
19-12-2007, 11:03 AM
டீமில் இணைந்த பின் எங்களைப் பிணைத்தது தமிழ்தான். அவர்கள் கவிதைகளின் ரசிகர்களாய் இல்லாவிட்டாலும், பேச்சின் ரசிகர்களாய் இருந்தார்கள். ஆரம்ப காலத்தில் அனைவரிடம் பேசி, உறுப்பினராய்ச் சேர்த்து, முதல் மூன்று காலம் கழித்து முதல் மீட்டிங் நடந்தது. குலுக்கல் முறையில் பயனாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தத்தித் தளர்நடை போட்ட டீமின் முதல் மூன்று ப்ராஜக்டுகள் ஆரம்பமாயின. மக்களின் மனதில் மகிழ்ச்சி பூத்தது. புராஜக்டுகளை எங்கள் குடும்பத்தினர் சிரமேற்கொந்து பெருமையுடன் செய்ய, கொடுப்பதால் உண்டாகும் மகிழ்ச்சி புரிய ஆரம்பித்தது. அமெரிக்காவின் வளைகுடாப் பக்தியில் வெளிவரும் தென்றல் இதழாசிரியரைச் சந்தித்துப் பேசினோம். டீமைப் பற்றிய செய்தியை அவர் வெளியிடுவதாய் ஒத்துக் கொள்ள, அதற்காக ஒரு கட்டுரை வடிவமைத்தேன்.

உழைத்துக் கொடுப்போம் என்ற தாரக மந்திரம் அதன் அடிநாதம். நிதிவசூலோ, இல்லை, கலைநிகழ்ச்சியோ செய்து பணம் திரட்டாமல் நாங்கள் உழைத்து வந்த பணத்தை நாட்டிற்கு அனுப்பினோம்.

பள்ளிகளின் வசதிகளை பெருக்கவும், கட்டமைப்பை உருவாக்கவும், நூலகங்கள் அமைக்கவும் பணத்தை பயன்படுத்துவோம் என்ற கொள்கையை விளக்கினேன்

ஒவ்வொருவருக்கும் ஒரு புராஜக்ட் செய்யும் வாய்ப்பும், நிர்வாகச் செலவுகளே இல்லாத ஒரு அமைப்புமாக சரித்திரம் படைக்க கிளம்பியது டீம்.

மூன்றாவது மீட்டிங்கின் போதுதான், வெறும் மீட்டிங் மட்டும் வேண்டாமே, எதாவது கலைநிகழ்ச்சிகள் ஆரம்பிப்போம் என குழந்தைகளையும், சில நல்ல குரல் வளம் படைத்தவர்களையும் பாடவைத்தோஓம். டீம் ஒரு குடும்பமாக வளரத் தொடங்கியது. கொங்கு நாட்டு மக்களின் அந்த பிணைப்பு எல்லை தாண்டிப் படரத் தொடங்கியது.
(பூமகளே, இப்ப தெரியுதா எப்படி கோயமுத்தூர் பெண்களைப் புரிந்து கொள்ளத் தொடங்கினேன் என்று).

நான்காவது மீட்டிங்கில் ஒரு வழக்காடு மன்றம் ஏற்பாடு செய்தோம்.

"வாழ்க்கையில் சந்தோஷமான காலம் எப்பொழுது - திருமணத்திற்கு முன், திருமணமான புதிதில், குடும்பஸ்தரான பின் மூன்று அணிகள். அணிக்கு இருவர் எனப் பேச அழைத்தோம்.

நான் செலக்ட் பண்ணிய தலைப்பு என்ன தெரியுமா?

தொடரும்.

ஓவியன்
19-12-2007, 11:08 AM
அதில் ஒரு சின்ன டிரிக் இருக்கு அமரரே! போட்டி என வரும் பொழுது ஒன்றை நினைவில் வச்சுக்கணும்..

நடுவரா இருக்கறவர் திறமையானவர்தான் ஆனால் அதே சமயம் அவருக்கு நாம் பார்க்கும் கோணம் புரியும் என்பது பல சமயம் தவறாகி விடுகிறது. ஏனென்றால் அவர் வேறு கோணத்தில் பார்க்கலாம்.

ஒரு சின்ன பஞ்ச் இந்தக் குறையை தீர்க்கிறது. நடுவரின் பார்வையை நம் பார்வைக் கோணத்திற்குத் திருப்புகிறது. நாம் என்ன சொல்கிறோம் என்பது நடுவருக்குப் புரிந்து விட்டால் அவருடைய குறைகாணும் நெற்றிக்கண் மூடிக்கொள்கிறது. அம்புட்டுதான்.

தாமரை அண்ணா, இதில் எனக்கேற்பட்ட ஒரு அனுபவத்தை கூறுவது மிகப் பொருத்தமாக இருக்குமென நினைக்கின்றேன். அப்போது நான் எனது பாடசாலையில் இரண்டாம் வருட உயர்தரப் பிரிவில்(பிளஸ் 2) படித்துக் கொண்டிருந்தேன். அப்போது தமிழ் மொழித்தினப் போட்டிகள் நடந்து கொண்டிருந்தன, அந்த தமிழ் மொழித் தினப் போட்டிகளில் முதல் முறையாக ஓவியத்தையும் சேர்த்துக் கொள்ள மிக உற்சாகமாக உயர்பிரிவிலே கலந்து கொண்டு பாடசாலைமட்டம், கோட்ட மட்டம், மாவட்ட மட்டம் என்று தொடர்சியாக முதலிடம் பெற்று இறுதியாக வன்னிப் பெருநிலப் பரப்பு மாவட்டங்களிடையான போட்டியில் கிளிநொச்சி மாவட்டம் சார்பாக நான் பங்கு பற்றும் நிலைக்கு வந்து விட்டேன், இத்தனை நாள் உழைப்பு, ஆர்வம் எல்லாம் மேலோங்க போட்டியில் உற்சாகமாகக் கலந்து கொண்டேன்.

நமக்கு கிடைத்த தலைப்பு "அகதி வாழ்க்கை" உடனே நான் தெரிந்த வர்ணங்கள் இருண்ட வர்ணங்கள், ஓவியம் முழுவதும் கறுப்பு கலந்த இருண்ட வர்ணங்களால் தீட்டி ஓவியத்தை முடித்து விட்டு நிமிர்ந்து பக்கத்திலுள்ள போட்டியாளரின் முடிக்கப் பட்ட ஓவியத்தைப் பார்த்து அதிர்ந்தேன். அவர் முல்லைத்தீவு மாவட்டத்திற்காக வந்தவர் அவரது ஓவியத்தில் அகதிக் குழந்தைகள் ஒரு மரத்தடியில் ஓடி விளையாடிக் கொண்டிருக்கும் "பளிச்" ஓவியம். என்னுடைய ஓவியத்தை விட எத்தனையோ மடங்கு ஓவியக் கலை சிறப்பாக பரிணமித்த ஓவியம். நான் முடிவெடுத்தாயிற்று இம்முறை எனக்கு வாய்ப்பே கிடையாதென்று, பேசாமல் எழுந்து சென்று அந்த போட்டியாளரை வாழ்த்திவிட்டு முடிவு அறிவிக்கும் வரை பொறுத்திருக்க முடியாதென கனத்த மனதோடு வீடு திரும்பிவிட்டேன். பின்னே என்ன அந்த போட்டியில் வெற்றி பெறும் என் கனவுகள் சுக்கு நூறாகி விட்டனவே...

ஆனால் அடுத்த நாள் பாடசாலை சென்ற எனக்கு இன்ப அதிர்ச்சி, பாடசாலை முதல்வர் அந்த போட்டியில் நான் வெற்றி பெற்றதாக காலைக் கூட்டத்தில் அறிவித்து முதல் நாள் எனக்களித்த சான்றிதழை நானில்லாத காரணத்தால் தான் பெற்றுக் கொண்டதாக அறிவித்து எனக்கு அந்த சான்றிதழைத் தந்து மகிழ்ந்தார்.

என்னால் முதலில் நம்ப முடியவில்லை, ஆனால் விசாரித்ததில் பின்னர் அறிந்தேன், என்னுடைய இருண்ட வர்ணப் பிரயோகமே எனக்கு வெற்றியை ஈட்டித் தந்ததென. அகதிகளில் சோகத்தை மற்றவரின் அழகான ஓவியத்தை விட இருண்ட வர்ணங்களாலான மெலிந்த உருவங்களைக் கொண்ட எனது ஓவியம் தத்ரூபமாகக் வெளிக்கொணர்ந்துள்ளது என நடுவர்கள் தீர்மானித்ததன் விளைவே அன்று எனக்குக் கிடைத்த வெற்றி.

அன்று நான் இருண்ட வர்ணங்களால் வைத்த "பஞ்" நடுவர்களின் பார்வையை என் மேல் திருப்பி இருக்கிறதென்பது இப்போது தெளிவாகப் புரிகிறது.

ஓவியன்
19-12-2007, 11:21 AM
நான் நானா இருந்து நீ நீயா இருந்து அது அதுவா இருந்து இருந்தா இது இதுவா இருந்தா நாம நாமளா இருக்கலாம். அதுவே நான் நானா இல்லாம நீ நீயா இருந்து அது அதுவா இருந்து இது இதுவா இருந்தா நாம நாமளா இருக்க முடியாது. அதே சமயம் நான் நானா இருந்து நீ நீயா இல்லாம அது அதுவா இருந்து இது இதுவா இருந்தா நாம நாமளா இருக்கமுடியாது.. அதே மாதிரி நான் நானா இருந்து நீ நீயா இருந்து அது அதுவா இல்லாம இது இதுவா இல்லாட்டி நாம நாமளா இருக்க முடியாது.. அப்படித்தாங்க நான் நானாக...

அவர் அறுத்துத் தள்ள மக்கள் கூட்டம் தாங்க முடியாமல் அலறியது..

எனக்குள் ஒரு சாத்தான் டக்கென்று விழித்தான்..
நீங்கள் நீங்களாக இருக்க முடிவெடுத்தாயிற்று போல.......? :)

meera
20-12-2007, 03:34 AM
ஆஆ உங்களுக்குள் தூங்கிய சிங்கத்தை தட்டி எழுப்பிய நண்பர்களுக்கு நிச்சயம் நன்றி சொல்லனும் அண்ணா.

இந்த தொடரை இத்தனை நாள் படிக்காமல் போனதற்று வருந்துகிறேன்

பென்ஸ்
20-12-2007, 04:34 AM
பல சம்பவங்கள் நான் அறிந்ததாக இருந்தாலும், படிக்கும் போது சுவரிசியமாக இருக்கிறது...

சில அடக்கி வாசிக்கவும்....

"ச்" கதையை நீர் முதல் முதலாக எழுதி, பண்பட்டவர் பகுதிக்கு விரட்டபட்டதற்க்காகாக இன்று இங்கு எழுதி பழிவாங்கிவிட்டீரே...

மதி
20-12-2007, 04:54 AM
ஹ்ம்ம்..
பென்ஸ் போலவே நானும்..பலவற்றைக் கேட்டிருப்பினும் படிப்பதில் இன்னும் சுவாரஸ்யம்..

தாமரை
14-01-2008, 06:58 AM
நான் செலக்ட் செய்தது

"மனைவி குழந்தைகளுடன் வாழும் குடும்ப வாழ்க்கை"

வெறும் துணுக்குகளாலே தோரணம் கட்டி குடும்ப வாழ்க்கையின் சிக்கல்களை கந்தலாக்கி வைத்திருந்தனர் மக்கள்..

முதலில் எடுத்துக் கொண்டது பண்டிகைகள்..

திருவிழாக்களும் பண்டிகைகளும் குழந்தைகளுக்காகவே கொண்டாடப் படுகின்றன. அவர்களுக்கு நமது பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் சொல்லித் தரவே பண்டிகைகள்.. குழந்தைகள் இல்லா வீட்டில் தீபாவளியோ பொங்கலோ இனிப்பதும் இல்லை.. வெடிப்பதும் இல்லை.. எல்லோரும் சற்று பின்னோக்கி பயணம் செய்து பார்த்தால் பண்டிகைகளை எப்போது சந்தோஷமாகக் கொண்டாடினார்கள் என்று தெரிய வரும்..

ஒரு தாயாகவோ தந்தையாகவோ வாழும் பொழுது தமக்காக வாழ்தல் குறைய மற்றவர் சந்தோஷத்தில் நம் சந்தோஷத்தைக் காண ஆரம்பித்து விடுகிறோமே.

மணமான புதிதில் இருக்கும் கிளர்ச்சியும் மகிழ்ச்சியும் சரி, மணமாகா பொழுதில் இருக்கும் சுதந்திரமும் சரி.. தம் குழந்தைக்காக எதையாவது செய்யும் பொழுது வரும் சந்தோஷத்திற்கு ஈடாவதில்லை..

நான் அதை அனுபவித்தேன் நான் இதை அனுபவித்தேன் எனச் சொல்லுபவர்க்ளே.. சொல்லுங்கள் எந்த ஒரு இன்பத்தையாவது நீங்கள் தனிமையில் அனுபவித்தது உண்டா? எதெடுத்தாலும் அந்தத் தோழனுடன், இந்தத் தோழியுடன் என்று சொல்லுவீர்கள்..

மணமான ஒருத்தருக்கு சிறந்த தோழமை அவரின் மறுபாதியான கணவனோ மனைவியோதானே.. 5 அல்லது 6 மணி நேரம் உடனிருக்கும் தோழருடன் சந்தோஷம் பகிரும் உங்களால் இருபத்தி நாலு மணி நேரமும் சந்தோஷமாய் இருக்க முடியுமே.. உங்கள் இல்லறத் துணை உங்களுடைய தோழராகும் பொழுது..

கணவனுடைய பெஸ்ட் ஃபிரண்ட் மனைவி, மனைவியின் பெஸ்ட் ஃபிரண்ட் மனைவி.. இதுதான் சந்தோஷத்தின் ரகசியமே!!.. என் மனைவியை விட இந்தத் தோழன் தான் எனக்கு உயர்ந்தவன் என்று சொல்பவர்கள், மணம் செய்து கொண்டால் வருந்தத் தான் செய்வார்கள்..

குழந்தைப் பருவத்தை இந்த வழக்காடு மன்றத்தில் வைக்கவில்லை.. ஏனென்றால் எல்லோருமே குழந்தைப் பருவத்தையே சிறந்த பருவமாக சொல்வார்கள் என்றார் நடுவர்..

அதையே வேறுகோணத்தில் பாருங்கள்.. குழந்தை பருவத்தில் நீங்கள் மட்டுமா சந்தொஷமாக இருந்தீர்கள்.. உங்கள் தாய் தந்தையரும் அல்லவா? அப்படி இருக்க குடும்ப வாழ்க்கை சந்தோஷமில்லாதது என்று எப்படிக் கூறுவீர்கள்?

இப்படி சிலக் கருத்துகளை எடுத்து வைக்க எங்கள் தரப்பு வென்றது.. பல வீடுகளில் எனக்கு சாப்பாடு உறுதியானது..

அடுத்த மீட்டிங்கிற்கு சிறப்பு விருந்தினர் சுதா சிவசுப்ரமணியம்.. இவர் ஸ்டான் ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்ண்டிருந்தார். செவ்வாய் தோறும் ஆறு மணி முதல் 9:00 மணி வரை, தமிழ் நிகழ்ச்சிகளை "மோஸ்ட்லி தமிழ்"" என்ற பெயரில் ஒலிபரப்பிக் கொண்டார்..

அவரது நட்பும் கிட்டியது.. தமிழ் நேயர்களில் ஒருவாரானேன்.. கார்த்திகேயனுக்கு டிக் டிக் டிக் என்னும் 5 நிமிட சிலாட் கிடைக்க வாரா வாரம் தென்கச்சி சுவாமிநாதன் போல அவர் ஏதாவது தகவல், கதைகள் சொல்வார்..

நான் வாராவாரம், ரேடியோவில் நேயராக அழைத்து என் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளத் துவங்கினேன்..

தொடரும்.

மனோஜ்
14-01-2008, 08:56 AM
தாமரை அண்ணாவின் அனுபலத்தில் பல நல்ல வாழ்கை நேரிகள் மனதில் பதிந்தது பதிந்தும் வருகிறது தாங்கள் திருச்சியில் படித்தவர் என்பதில் மிக்க மகிழ்ச்சி தொடர்ந்து பகிந்துகொள்ளுங்கள் அண்ணா நன்றி

தாமரை
20-01-2008, 04:15 AM
வானொலியில் என்னொலி



வானொலியில் வாராவாரம் தொலைபேசி நேயராகக் கலந்து கொள்ள தொடங்கினேன்

சின்னச் சின்ன கருத்துப் பகிர்வுகள், போட்டிகள், ஜோக்குகள், வாழ்த்துப் பரிமாறல்கள்

என் குரலை கேட்டவர்களுக்குத் தெரியும்.. என் குரல் சற்று கரகரப்பாய் அதிவுகள் வித்தியாசமாய்.. என்னால் மக்களை குரல் மாற்றிப் பேசி மற்றவரை ஏமாற்ற முடியாது..

சில முக்கிய நிகழ்வுகள், ஒரு நிமிட வினாடி வினா.. 1 நிமிடத்தில் எத்தனைக் கேள்விகளுக்குச் சரியான விடை அளிக்க முடியுமோ அவ்வளவு சொல்வது.. (மூன்று கேள்விகளுக்கு தவறாய் பதில் சொன்னால் தோல்விதான்).. அதில் 18 கேள்விகளுக்கு 1 நிமிடத்தில் பதிலளித்தேன்

அடுத்த முக்கியமான ஒன்று கரூர் ஆலயக் கும்பாபிஷேகம்.. சங்கராச்சாரியார் தமிழில் குட முழுக்கு செய்ததைக் கண்டித்ததை கண்டித்தது..

பாடலகள், கவிதைகள்.. இன்று தாமரை இன்னும் அழைக்கவில்லையே என்று சில சமயங்களில் நேயர்கள் கேட்டதுண்டு.,.

ஏங்க நீங்க தாமரை தானே! ஷாப்பிங் மாலில் என் குரல் கேட்டு சிலர் பரிச்சயக்கத் தொடங்கினார்கள்..

இன்னொரு பக்கம் டீம் பணிகள் செவ்வனே நடந்து வந்தன. இரண்டாம் இதழ் தயாரிக்கத் தொடங்கினோம் அடுத்த வருடம்..

இம்முறை நிறைய உதவிகள் கிடைத்தன, உதயபாஸ்கர் வடிவமைப்புக்கு உதவி செய்தார்.

ஒரு ஒற்றுமை தெரியுமா! அப்போது உதய பாஸ்கருக்கும் திருமணம் நிச்சயமாகி இருந்தது.. நம்ம ஓவியரைப் போலவே!.. அவரின் மணமகளின் பெயர் வடிவு.. ஆக வடிவமைப்பு அவர் கையில் இருப்பதுதானே நியாயம்...

சாம்பவியைப் போன்று சரவண சுதந்திரா.. சுதந்திர தினத்தில் பிறந்ததால் சுதந்திரா இவர் பெயரில் ஒட்டிக் கொண்டிருந்தது..

மைனர் ஸ்ரீதர், கிருஷ்ணமோகன், விஜய் என கண்ணுக்குத் தெரியாத நண்பர் கூட்டம் இணைய வண்ண இதழ் உருவானது.. வெளியிடப்பட்டது..

22 ஜோடிக் கைகள் இவ்விதழுக்குப் பங்களித்தன.. குழந்தைகளின் ஓவியங்கள் முதற்கொண்டு...

http://www.indiateam.org/teambase/magazine/may04_2002.pdf


அதற்கு அடுத்த சந்திப்பிற்கு பட்டி மன்றம் முடிவாயிற்று..

பட்டி மன்றத்தின் தலைப்பு

உங்க எல்லோருக்கும் ரொம்பப் பிடிச்ச தலைப்புதான்

"அதிகம் பொய் சொல்வது ஆண்களா? பெண்களா?"

தொடரும்.

சுகந்தப்ரீதன்
20-01-2008, 08:24 AM
தாமரை அண்ணா..! அப்பவே ஆரம்பிச்சிட்டீங்களா மின்னிதழ் வேலையை.. ரொம்ப நல்லாயிருக்கு அந்த மின்னிதழும்.. இன்னும் முழுசா படிக்கலை..! ஆனாலும் இதழாசிரியர் தாமரை அண்ணாங்கிறத பாத்தா பிரமிக்காம இருக்க முடியல..!

உங்க தமிழும் நானும் கட்டுரையை பிரதி எடுத்துக்கிட்டு போய் அறையில படிச்சேன்.. அலுவலகத்தில அந்த அளவுக்கு சுதந்திரம் இல்ல அதனால..! படிச்சு முடிச்சதுல இருந்து ஒன்னு மட்டும் தெளிவா எனக்கு தெரிஞ்சுது.. இன்னும் நானெல்லாம் நிறைய கத்துக்க வேண்டி இருக்குது வாழ்க்கையிலன்னு..!

தாமரை
28-04-2008, 09:49 AM
"அதிகம் பொய் சொல்வது ஆண்களா? பெண்களா?"


நல்ல தலைப்புதான்.. ஆண்களே அதிகம் பொய் சொல்வது என முன்று பெண்களும், பெண்களே அதிகம் பொய் சொல்வது என மூன்று ஆண்களும் வாதாடும் பட்டிமன்றம். நடுவராக மைனர் ஸ்ரீதர் என்ற நண்பர் அமர

விவாதம் ஆரம்பித்தது..

ஆண்கள் திருமணத்திற்கு முன், திருமணத்திற்குப் பின் எனச் சொல்லும் பொய்கள்

நீ அழகாக இருக்கே என்பதிலிருந்து, தரகர்கள் மாப்பிள்ளைகளைப் பற்றிச் சொல்லும் பொய்கள், என ஆரம்பித்து, பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே என்ற கவிஞரின் வரிகள், அந்த 7 நாட்கள் மாதிரி மனைவி இல்லாத பொழுது அடிக்கும் லூட்டிகள் அதை மறைக்கும் பொய்கள் என்று அழகாக வாதிட்டனர் பெண்கள்..

பெண்களே அதிகம் பொய் சொல்கின்றனர் என வாதிட்டவர்களும் சரிக்குச் சரி மல்லுகட்ட..

கடைசியாய் என் முறை வந்தது..

"கல்யாணம் ஆன பின்னாடி நாங்க பேசறதே இல்லை, இதில எங்க போய் பொய் பேசறது என்று ஆரம்பித்தேன்"

பொய்யிலே - பிறந்து - என்பதற்குப் புது அர்த்தம் கொடுத்தேன். பிறப்பது பெண்ணிலிருந்து.. பெண்ணென்றாலே பொய்தான் எனக் கவிஞன் நாசூக்காகக் சொல்லி இருக்கிறான் எனத் திருப்பி விட்டேன்..

அழகிப் போட்டியின் இறுதிச் சுற்றிலே, யார் மிக அழகாக பொய் சொல்கிறாரோ அவர்தான் உலக அழகி என மகுடம் சூட்டப் படுகிறார்.. எனவே அழகான பெண் என்பதற்கு மிக அழகாகப் பொய் சொல்லத் தெரிந்திருக்க வேண்டியதும் ஒரு மிக முக்கியத் தகுதி எனச் சொன்னேன்,,


ஒரு புடவை, கணவன் தன் தங்கைக்கு எடுத்து வருகிறான்.. இதற்கு மனைவியின் பல பிரதிபலிப்புகளைப் பாருங்கள் என எடுத்துக் காட்டினேன்..

கணவனின் தங்கையிடம் : அண்ணா சூப்பர் சேலை எடுத்துகிட்டு வந்திருக்கார். முக்கியமான ஃபங்க்ஷன்னா கட்டிகிட்டுப் போ.. உன் நிறத்துக்கு எடுப்பா இருக்கும்.


கணவனிடம்: உங்களுக்கு புடவை எடுக்கவே தெரியலியே இனிமே புடவை எடுக்கப் போகும் பொழுது என்னையும் கூட்டிட்டுப் போங்க.. எக்கச்சக்க விலை சொல்லி உங்க தலையில கட்டிடறாங்க

மாமியாரிடம் :ரொம்ப நல்ல புடவை.. அப்படியே பத்திரமா வச்சுக்கட்டும்.. சீர் செய்ய உதவும்

தன் அம்மாவிடம் : நான் பொண்டாட்டின்னு ஒருத்தி வீட்ல இருக்கேன்னு இவருக்கு எப்ப ஞாபகம் வந்திருக்கு.. தங்கச்சிக்கு மட்டும் புடவை வாங்கிட்டு வர்ரார்..

தோழியிடம் : இவருக்கெல்லாம் எதுக்குக் கல்யாணம் புள்ளை குட்டி.. எதுக்கெடுத்தாலும் அம்மா, தங்கச்சின்னு எப்பதான் கட்டியவள்தான் குடும்பம்னு மாறப்போறாரோ!!

இப்படி ஒரு சின்ன விஷயத்திற்கு ஆளுக்கு ஒரு விஷயமாய் திரித்து நூற்றுக்கணக்கான பொய்களைச் சொல்பவர்கள் பெண்கள் என்றேன்..

கடைசி ஆக ஆக பேச்சுப் போட்டி எனக்கும் ரசிகை-களுக்குமான விவாதமாக மாறிப்போனது..

கடைசியில் நடுவர் என்னிடமே கேட்டார்

நீங்கள் சொல்லுங்கள் அதிகம் பொய் சொல்வது ஆண்களா என்று?

அதிக பொய் என்று எண்ணிக்கை அளவில் சொல்லும் பொழுது பெண்கள் மிக மிக அதிகமாகப் பொய் சொல்கிறார்கள்.. ஆனால் ஆண்களின் ஒரு பொய் சில சமயங்களில் இப்படிப்பட்ட ஆயிரம் பொய்களுக்கு மேலாக தீமை தருவதாக இருக்கும் எனச் சொன்னேன்.

தீர்ப்பும் அதன் அடிப்படையிலேயே அமைந்தது.

இது முடிந்து மூன்று மாதங்களில் இந்தியா திரும்ப நேரிட்டது..

அதன் பின் வேலைப்பளுவிற்கு மத்தியில் எனக்கும் தமிழுக்கும் இருந்த உறவு அனிருத்திற்குப் பஞ்ச தந்திரக் கதைகளும், விக்கிரமாதித்தன் கதைகளும், இராமாயண மகாபாரதக் கதைகளும் சொல்வதில் மட்டுமே இருந்தது.. வலையில் தமிழ்ச் செய்தித்தாள்கள், குமுதம் விகடன் குங்குமம் எனக் குறுகிப் போனது.

அப்படிப்பட்ட ஒரு நாளில் தான் பரம்ஸின் சிறுவர் பூங்கா தளத்தை தினமலரில் காட்டி இருந்தார்கள். அனிருத்திற்குச் சொல்ல புதிதாக கதை தேடிய நான் அதில் இருந்த தமிழ் மன்றம் என்றச் சுட்டியைத் தட்டி மன்றத்திற்குள் காலடி எடுத்து வைத்தேன்..

அதன் பிந்தைய வரலாறுதான் உங்கள் எல்லோருக்கும் தெரியுமே!!!

தமிழ் இன்னும் என்னோடு - இல்லை நான் இன்னும் தமிழோடு

இரண்டுமே தவறு

நானும் தமிழும் - சரி..


முற்றும்.

பின் குறிப்பு!

முடிந்தால் அந்த "பட்டிமன்றத்தை" எங்காவது ஒரு நல்ல தளத்தின் மூலம் பகிர்கிறேன். கேட்டு-பார்த்து ரசியுங்கள்..

அந்தப் பட்டி மன்றச் குறுந்தட்டு பிரதீப், ராகவன், பென்ஸ், பரம்ஸ் ஆகிய நல்ல நண்பர்களிடமும் இருக்கிறது.. இதுவரை ஒரு விமர்சனம் எழுதச் சொன்னால் யாருமே செய்யவில்லை..