PDA

View Full Version : பல்சுவை துணுக்குகள்



alaguraj
26-11-2007, 08:02 AM
_________________
ப(ல)ழமொழிகள்
+ சமுதாயத்தின் எதிர்காலம் தாய்மார்கள் கையில்தான் உள்ளது.
+ சாமியே சைக்கிள்ள போக பூசாரி புல்லட் கேட்டானாம்
+ இடிவிழுந்தபின் பஞ்சாங்கம் பார்த்துப் பயனென்ன ?
+ தைமாத மழை தவிட்டிற்குக் கூட காணாது
+ கோணல் சட்டியானாலும் கொழுக்கட்டை வெந்தால் சரி
+ கூறு கெட்ட மாடு ஏழு கட்டுப் புல் திங்குதாம்
+ அஷ்டமத்துச் சனி அழுதாலும் விடாது
+ அவசரம் என்றால் அண்டாவிலும் கைநுழையாது
+ அறுப்புக்காலத்தில் எலிக்கு ஏழு கூத்தியாள்
+ ஆடிக்காற்றில் அம்மியும் குழவியும் ஆலாய்ப் பறக்கும் போது இலவப்பஞ்சு ஏன் என்று சேதி கேட்டதாம்
+ ஆண் தாட்சண்யப்பட்டால் கடன் , பெண் தாட்சண்யப்பட்டால் விபச்சாரம்
+ அதிர்ந்து வராத புருஷனும் , மிதந்து வராத அரிசியும் பிரயோசனமில்லாதவை
+ அதிகாரி குசுவிட்டால் அமிர்த வஸ்து, தலையாரி குசுவிட்டால் தலையை வெட்டு
+ அக்காள் ஆனாலும் சக்களத்தி சக்களத்தி தான்
+ அகழியில் விழுந்த முதலைக்கு அதுவே வைகுந்தம்
+ படப்போட திங்குற மாட்டுக்குப் புடுங்கிப் போட்டா காணுமா ?
+ அடித்து வளர்க்காத பிள்ளையும் முறுக்கி வளர்க்காத மீசையும் வாய்க்கு முன் ஏய்க்கும்
+ ஆக்கங்கெட்ட அக்கா மஞ்சள் அரைத்தாலும் கரிகரியாக வரும்
+ ஆகாததும் வேகாததும் ஆண்டவனுக்கு அதிலும் கெட்டது குருக்களுக்கு
+ அஞ்சும் சரியாக இருந்தால் அறியாப் பெண்ணும் கறி சமைப்பாள்
+ அவிசாரி ஆனாலும் முகராசி வேணும் , அங்காடி போனாலும் கைராசி வேணும்
+ புத்திமதி விளக்கெண்ணெய் போன்றது அதைக் கொடுப்பது சுலபம்
+ அதைக் குடிப்பது மிகவும் கஷ்டம்
+ பெண்களுக்கு இரண்டுமுறை பைத்தியம் பிடிக்கும் அவள் காதல் கொண்ட சமயம், தலை நரைக்கத் தொடங்கும் சமயம்
+ ஆண்கள் இதயங்களால் சிரிப்பார்கள் பெண்கள் உதடுகளால் சிரிப்பார்கள்
+ நாக்கு தான் பெண்ணிற்கு வாள்,அது ஒருபோதும் துருப்பிடிப்பதில்லை
+ ஆண்கள் யாருமே இல்லையென்றால் விலைமாதரும் கற்புக்கரசிகள் தான்
+ மணவாழ்க்கையைப் புகழ்ந்து பேசு,ஆனால் நீ எப்போதும் தனித்திரு
+ உன் இதயம் ரோஜாமலராயிருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்
+ முதல் தவறு இரண்டாவது தவறுக்கு இருக்கையைத் தயார் செய்கிறது
+ சோம்பேறித்தனம் தான் அடிக்கடி பொறுமை என்ற பெயரில் தவறாகக் கணிக்கப்படுகிறது
+ சல்லடையில் கூட தண்ணீரை எடுத்துச் செல்வான் புத்திசாலி
+ எழுத்துச் சிரங்கு ஒருவனுக்குப்பிடித்துவிட்டால் அவனை ஒன்றுமே செய்யமுடியாது
+ அவன் பேனாவால் சொறிந்து கொண்டேயிருப்பான்
+ உரலில் தலையைவிட்டபிறகு உலக்கைக்கு அஞ்சக் கூடாது
+ சொந்த ஊரில் ஒருவன் பெயருக்கு மதிப்பு அயலூரில் அவன் சட்டைக்குத் தான் மதிப்பு
+ மகிழ்ச்சியை விலைகொடுத்து வாங்க முடியுமானால் அந்த விலையைப் பற்றியும் நாம் கண்ணீர்விட்டுக் கொண்டிருப்போம்
+ எந்தப் பழக்கத்தையும் ஜன்னல் வழியாகத் தூக்கி எறிந்துவிடமுடியாது, கையைப் பிடித்து படிப்படியாக இறங்கி அழைத்துப் போய்தான் வெளியேற்றவேண்டும்
+ இரத்தத்தில் கையை நனைப்பவன் , கண்ணீரால் தான் அதைக் கழுவவேண்டும்
+ உனது ஒவ்வொரு தவறும் உன் எதிரியை உத்தமனாக்கிவிடும்
+ எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம், ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்
+ நம்பிக்கையுள்ளவர்களுக்கு கதவுகள் மூடிக்கொண்டாலும் ஜன்னல்கள் வழிகாட்டும்
+ ஒரு எலும்புக்காக நேர்மையான மனிதன் தன்னை நாயாக்கிக் கொள்ளமாட்டான்
+ அகம்பாவம் ஒரு பொல்லாத குதிரை , ஒருமுறையாவது தன் மேல் சவாரி செய்யும் எஜமானனை கீழே தள்ளாமல் விடாது
+ அவசரமாக கல்யாணம் செய்து கொண்டால் மெதுவாக உட்கார்ந்து கொண்டுதான் அழுவாய்
+ காகம் உனக்கு வழிகாட்டினால் அது செத்த நாய்களிடம் உன்னைக் கொண்டு சேர்க்கும்
+ ஓநாய்கள் வாழும் இடத்தில் பறவைகள் பட்டினி கிடப்பதில்லை
+ செவிடன் இருமுறை சிரிப்பான்
+ ஒருவன் தன் கோடாரியை விழுங்கப்போவதாகச் சொன்னால் நீ அதன் காம்பைப் பிடித்துக்கொண்டு அவனுக்கு உதவி செய்
+ பொண்டாட்டியை அடிப்பவன் அவளுக்கு மூன்று நாட்கள் ஓய்வுகொடுத்துத் தானும் மூன்று நாள் பட்டினியாயிருப்பான்
+ குழந்தை ஏன்? என்று கேட்பதுதான் தத்துவ ஞானத்தின் திறவுகோல்
+ அழகுக்காகத் திருமணம் செய்து கொள்பவன் இரவு நேரங்களில் இன்பமாகவும் பகல்நேரங்களில் துக்கமாகவும் இருப்பான்
+ குட்டையான பெண்ணை மணந்து கொண்டால் துணி அதிகம் தேவையிராது.
+ அவசரக்காதல் சீக்கிரம் சூடாகி சீக்கிரம் குளிர்ந்து விடும்
+ ஒருத்திமீது காதல் வந்துவிட்டால் அவள் அம்மைத் தழும்புகளும் அதிர்ஷ்டக் குறிகளாகத் தெரியும்
+ தூக்கம் வந்துவிட்டால் தலையணை தேவையில்லை, காதல் வந்துவிட்டால் அழகு தேவையில்லை
+ கடவுள் பாவங்களை மன்னிக்கிறார்,இல்லாவிடில் சுவர்க்கம் காலியாகவே இருக்கும்
+ மனிதன் ஆண்டவனிடம் செல்ல நொண்டுகிறான் , சாத்தானிடம் செல்லத் துள்ளி ஓடுகிறான்
+ வயிறு நிறைந்துள்ள போதும் உண்பவன் தன் பற்களாலேயே தனக்குச் சவக்குழி
தோண்டிக்கொள்கிறான்
+ இரவல் வாங்கிய உடை வாடை தாங்காது
+ உடுத்திவரும் பட்டுப்பூச்சி அரிப்பதில்லை
+ ஒன்பது வியாபாரம் செய்பவனுக்கு தரித்திரத்தைச் சேர்த்துப் பத்தாகும்
+ மஞ்சள் துண்டைக் கண்ட சுண்டெலி மளிகைக்கடை வைத்ததாம் ..
+ உறங்குகின்ற ஓநாயின் வாயில் ஆடுகள் சென்று விழுவதில்லை
+ நீ குடும்பத்தின் தலைவனாக இருக்கவேண்டுமானால் உன்னை மூடனாகவும் செவிடனாகவும் காட்டிக் கொள்ளவேண்டும்
+ பிச்சைக்காரனுக்குக் கோபம் வந்தால் அவன் வயிறு தான் காயும்
+ மூன்று முறை முகத்தில் அடித்தால் புத்தருக்கும் கோபம் வரும்
+ மனிதரில் நாவிதனும் , பறவைகளில் காகமும் வாயாடிகள்
+ தற்புகழ்ச்சியின் வாடையை யாராலும் தாங்கமுடியாது
+ பழமொழியில் உமி கிடையாது
+ கெட்டிக்காரன் தன் நற்பண்புகளை உள்ளே மறைத்து வைத்துக் கொள்கிறான், மூடன் அவைகளைத் தன் நாவிலே தொங்கவிட்டுக் கொள்கிறான்
+ சேற்றிலுள்ள புள்ளும் , வேட்டைநாயின் பல்லும் , மூடனுடைய சொல்லும், அதிகமாய்க் குத்தும்
+ உலோபியிடம் யாசித்தல் கடலில் அகழிவெட்டுவது போன்றதாகும்
+ ஜாருக்கு ஜலதோஷம் வந்தால் ரஷ்யா முழுவதும் தும்மும்
+ ஒரு பையிலுள்ள அரிவாள் , பூட்சுக்குள் இருக்கும் துரும்பு, சாளரத்தின் அடியிலுள்ள பெண் - இவைகள் தாம் இருப்பதை அடிக்கடி அறிவுறுத்திக் கொண்டே இருக்கும்
+ மரத்திலே பானை செய்தால் ஒரு முறைதான் சமைக்க முடியும்
+ தாய்வார்த்தை கேளாப்பிள்ளை நாய்வாய்ச் சீலை
+ குழந்தையின் வயிற்றுக்குக் கண் இல்லை
+ ஆந்தையும் தன் மகனை ராஜாளி என்றே கொஞ்சும்
+ ஐந்து பெண்குழந்தைகள் உள்ள குடும்பத்திற்குத் திருடன் வேறு தேவையில்லை
+ மனைவியும் பாயும் வந்தபுதிதில் சிறப்பாக இருக்கும்
+ ஊமை மனைவி கணவனிடம் அடிபடுவதே இல்லை
+ திருமணம் என்ற கோணியில் தொண்ணூற்றொன்பது பாம்புகளும் ஒரு விலாங்கும் இருக்கும்
+ கடவுள் ஒருவனைத் தண்டிக்க விரும்பினால் அவனுக்குத் திருமணம் பற்றிய நினைப்பை உண்டாக்குவார்
+ பெண்பிள்ளை விவாகத்திற்கு முன்னாள் அழுவாள்
+ ஆண்பிள்ளை விவாகத்திற்கு பின்னால் அழுவான்
+ காபியும் காதலும் சூடாக இருக்கும் வரை தான் ருசியாக இருக்கும்
+ பெண்ணின் யோசனையால் பலனில்லை என்றாலும் அதை ஏற்றுக் கொள்ளாதவன் பாடு அவலம்தான்
+ கூரை ஏறிக் கோழி பிடிக்கமுடியாத குருக்கள் வானத்தைக் கீறி வைகுண்டத்தைக் காட்டுவாரா
+ சோத்துல கெடக்குற கல்லை எடுக்காதவன் சேத்திலே கெடக்குற எருமையத் தூக்குவானா ?
+ உள்ளூரிலே ஓணான் பிடிக்காதவன் உடையார் பாளாயத்துல போயி உடும்பு பிடிப்பானா ?
+ உனக்கு நிறையத் தெரிந்திருந்தாலும் உன் தொப்பியிடமும் யோசனை கேள்
+ சுருக்கம் விழுந்த கழுத்தில் முத்துமாலை அழுது கொண்டே தொங்கும்
+ பழைய இஞ்சியில் காரம் அதிகம்
+ உலகத்திற்கே தெரியவேண்டிய விஷயத்தை உன் மனைவியிடம் மட்டும் சொல் ,அது போதும்
+ பொண்டாட்டி என்றால் புடவை துணிமணிகள் என்று அர்த்தம்
+ மனைவிக்குச் சீலைகள் வாங்கிக் கொடுத்தால் , கணவனுக்கு அமைதி கிடைக்கும்
+ சமையல் மோசமானால் ஒரு நாள் நஷ்டம் அறுவடை மோசமானால் ஒரு வருடம் நஷ்டம்
விவாகம் மோசமானால் ஆயுள் முழுவது நஷ்டம்
+ தூக்கில் தொங்குவதும் மனைவி வாய்ப்பதும் விதியின் பயன்
+ போதகர்களுக்குள் சண்டை வந்துவிட்டால் சைத்தானுக்குக் கொண்டாட்டம்
+ தாடி பேன்களை உண்டாக்குமேயொழிய அறிவை உண்டாக்காது

பலர் விழுவதும் சிலர் எழுவதும் ஓரே இடத்தில்தான். அது உழைப்பு. எச்சில் தட்டை கழுவியபோது காட்டிய ஒழுங்குதான் எடிட்டிங் டேபிளிலும் கை கொடுக்கிறது - டைரக்டர் சேரன்.

துணுக்கு மூட்டை

+ பாம்புக்கான விஷப்பல் நீலி என அழைக்கப்படுகிறது.

+ கோலா எனப்படும் கரடி இனம் ஆஸ்திரேலியாவில் உள்ளது அது தண்ணீரே குடிப்பதில்லை. வெறும் யூகலிப்டஸ் மரத்தின் பட்டையைத் தின்றே உயிர் வாழ்கிறது.

+ கிரிக்கெட்டில் 100 ரன்களை எட்டிப் பிடித்தால் சதம் (செஞ்சுரி) அடித்தார் என்று கூறுவதைப் போல, 'கேரம்' விளையாட்டிலும் `செஞ்சுரி' என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. அதாவது கேரத்தில் சிவப்பு நிறக் காயைத் தொடர்ந்து, 9 கருப்பு அல்லது 9 வெள்ளை நிறக் காய்களை வீழ்த்துவது `சதம்' என்று அழைக்கப்படுகிறது.

+ உலகிலேயே மிகப் பெரிய நூலகம் அமெரிக்காவில் உள்ள கேப்பிட்டல் ஹில்.

+ உலகிலேயே மிகப் பெரிய மசூதி சிரியா நாட்டில் உள்ள உமய்யாத் மசூதி.

___________________________
நகைச்சுவை துணுக்குகள்:
_________________________________
உங்க மனைவிக்கு சமையலைப் பத்தி ஒண்ணுமே தெரியாதா..?

என்ன அப்படிச் சொல்லிட்டீங்க...
என்னை சமையல் பண்ண வெச்சு வறுத்தெடுப்பா..
செய்யறதுக்கு தயங்கினா பொரிஞ்சுடுவா..
எதிர்த்துப் பேசினா தாளிச்சுடுவா..
அவ அப்பா அம்மாவைப் பத்தி தப்பாப் பேசினா
அப்படியே பொங்கிடுவா..
அவளுக்கு எதிரா யாராவது சதி பண்ணினா உலை வைச்சிடுவா...
அவ நினைக்கிறது நடக்கலைன்னா ரொம்ப சலிச்சுக்குவா..!
____________________________________
ஏன் மணப்பொண்ணு முதலிரவு அறைக்கு
வெளியேவே நின்னுட்டிருக்கா?

மாப்பிள்ளை வாத்தியார் ஆச்சே!
லேட்டா வந்ததால உள்ளே விடமாட்டேங்கறார்!
____________________________

வெளியே எங்கேயாச்சும் நடந்து போயிட்டிருக்கும்போது,
உங்க மனைவி கிட்டேயிருந்து செல்போன் அழைப்பு வந்தா
டக்குனு அங்கேயே நின்னுடறீங்களே, ஏன்?

பொண்டாட்டி பேச்சைக் கேட்டு நடக்கிறேன்னு
யாரும் சொல்லிடக் கூடாது பாருங்க, அதான்!
___________________________________

வேலைக்காரி குளிக்கும் போது அடிக்கடி
பாத்ரூமை எட்டிப்பாக்கறீங்களாமே?

தப்பா எடுத்துக்காதே கமலா..
உன்னோட சோப்பு, ஷாம்பு எடுத்து
யூஸ் பண்றாளானுதான் வாட்ச் பண்ணினேன்!
__________________________________
சார், ஹெட்கிளார்க் மூச்சுப்பேச்சு இல்லாம கிடக்கறாரு!

அவருகிட்டே டியூட்டி முடிஞ்சு போச்சுனு சொல்லு...
எழுந்துடுவாரு!
_____________________________

எட்டாம் வகுப்பு வரை இனி பரீட்சை கிடையாதுனு
நாடு முழுவதும் தமுக்கடிக்க ஏற்பாடு செய்திருக்கீங்களே...
ஏன் அரசே?

அப்படியாவது ஓடிப் போன இளவரசன்
அரண்மனைக்குத் திரும்ப மாட்டானானுதான்!
__________________________________

புறாவுக்குப் பெரும் பசி போல...

எப்படிக் கண்டுபிடிச்சே?

கொண்டு வந்த ஓலையை அதுவே தின்னுடுச்சு!
_____________________________________

சிஸ்டர், ஆபரேஷனுக்கு எல்லாம் ரெடியா?

எல்லாம் ரெடி டாக்டர்!
யாராவது ஒரு பேஷண்ட் கிடைச்சா
உடனே ஆரம்பிச்சுடலாம்!
________________________

நீங்க கண்டுபிடிச்ச புதுவகை கேசரிக்கு
வீரகேசரினு பேர் வெச்சிருக்கீங்களே?

கேசரியை வாணலியிலிருந்து எடுக்கணும்னா
ஈட்டி, அம்பு, கத்தி எல்லாம் எடுத்து சுரண்டணும்...
அதான் அப்படி வெச்சேன்!
______________________________

என்ன சார், நேத்துதானே நாய் கடிச்சுட்டுதுன்னு வந்து
ஊசி போட்டுப் போனீங்க?இன்னிக்கு மறுபடியும்
நாய் கடிச்சுட்டுதுன்னு வந்து நிக்கறீங்களே!

நீங்கதானே அந்த நாய் உயிரோட இருக்கான்னு
போய்ப் பாக்கச் சொன்னீங்க!
________________________________

யப்பா... இது ஊர்பட்ட கடிகளுங்கோ!

ஹீரோக்களை மதிக்காத ஊர் | விஜய்|வாடா
ராசியில்லாத ஊர் | லக்|னோ
வெற்றி கிட்டும் ஊர் | ஜெய்ப்பூர்
பயங்கர கும்பலான நாடு | க்யூ|பா
செம ஃபிகருங்க இருக்கிற ஊர் | சிட்டூர்
அவசரப்படுத்தும் ஊர் | மணியாச்சி
மசாலா படங்களுக்கு ஏற்ற ஊர் | பூரி
வருத்தமான ஊர் | ஒர்ரிஸா
முகமூடிகள் நிறைந்த ஊர் | மாஸ்க்கோ
பூச்சிக்கொல்லியை நினைவூட்டும் ஊர் | கோலாலம்பூர்
__________________________________________

எனக்கும் என் எதிரிக்கும் கசப்பு உணர்ச்சி அதிகமாயிட்டே வருது...
அவனைக் கண்டந்துண்டமா வெட்டிக் கொல்லணும் போலிருக்கு!

அப்ப, இது கசாப்பு உணர்ச்சி!
_______________________________


மருத்துவ துணுக்கு

குறட்டை
_________
குறட்டையை அசட்டை செய்யக்கூடாது. ஏனெனில் அது காது, மூக்கு, தொண்டை தொடர்பான பிரச்சனைகளை உருவாக்கவல்லது. பருமனான உடலும் காரணமாக இருக்கலாம். பக்கவாட்டில் படுத்தால் குறட்டை குறையும். மது , தூக்கம் வரவழைக்கும் மாத்திரைகளைப் பயன்படுத்தக்கூடாது. தலைப்பகுதி உயரமாக இருக்குமாறு படுத்துக் கொள்ள வேண்டும். உடல் பருமனைக் குறைத்தல் அவசியம்.

(துணுக்குகள் பல்வேறு மாத மலர்கள் மற்றும் இதழ்களிலிருந்து தொகுக்கப்பட்டது)

lolluvathiyar
26-11-2007, 11:32 AM
அழகு போட்டு கொட்டோ கொட்டுனு கொட்டீங்களே, படிச்சு முடிக்க முடியல பிரின்ட் எடுத்து கொண்டு போய் வீட்டில் காட்ட போறேன். (ஏதுவும் விவகாரம் இல்லையே)

மலர்
26-11-2007, 08:58 PM
அழகுராஜ்
பெருமழை பெய்து ஓய்ந்தது மாதிரி இருக்கு..
உங்க பதிவை பார்க்கும் போது..
ஏன்... மொத்தமாய் குடுத்துட்டீங்க...

நகைச்சுவை துணுக்குகள் எல்லாமே சூப்பர்.. அதிலேயும் அந்த முதல் ஜோக் நச்...

பாராட்டுக்கள்... !!
(கொஞ்சம் கொஞ்சமா தினமும் குடுங்க)