PDA

View Full Version : பதட்ட காலங்கள்



ஆதவா
17-11-2007, 01:57 PM
" வசந்தி, என்னம்மா பண்ணுது? ரொம்ப வலிக்குதா? " தங்கம் அக்கறையாக விசாரித்தாள்.

" கொஞ்சமா வலிக்குதும்மா, இடுப்பெல்லாம் வலிக்குது. ஆஸ்பத்திரிக்குப் போகலாமா? "

" இந்த நேரம் னு பார்த்து யாருமே இங்க இல்லையே! உங்கப்பா குடிச்சுட்டு எங்க படுத்துட்டு கிடக்காரோ தெரியலை! சரி இரு! வரேன். பக்கத்துல உங்க சித்தி இருக்கா. கூட்டிட்டு வாரேன், " சொல்லியவள் விறுவிறுவென நடந்து பக்கத்து வீதியை அடைந்தாள்.

தங்கத்திற்கு ஒரே கலக்கம். என்னதான் தானும் மூன்று பெண்களைப் பெற்றிருந்தாலும், இக்காலம் போல அந்தக் காலத்தில் மருத்துவமனை வாசலை அண்டியதில்லை. வசந்திக்கு கர்ப்பத்தைச் சுற்றியும் நீர் இல்லாமல் இருப்பது தங்கத்திற்கு புது அனுபவமாகத் தெரிந்தது. அதற்குத் தக்க என்ன செய்யவேண்டுமென்பதை அவள் அறிந்திருக்கவில்லை.

பக்கத்துவீதியில் தங்கத்தின் தங்கை செல்வி வீட்டுக்குச் சென்று அவளை எழுப்பினாள் " செல்வி, வசந்திக்கு வயிறு லேசா வலிக்குதாம், நீ கொஞ்சம் வரியா?"

" டாக்டர் இன்னும் பத்து நாள் இருக்குனு சொல்லியிருக்கார் ல? அப்படின்னா பிரசவ வலியா இருக்காது. வாயுப் பிடித்தமா இருக்கும். சுக்குத் தண்ணி போட்டு கொடுக்கா!! சரியாயிடும். " தூக்கக் கலக்கத்தில் பதிலளித்தாள் செல்வி.

" ரொம்ப வலிக்குதுங்கறா. நீ எதுக்கும் ஒருமுறை வந்து பார்த்துட்டு போ. எனக்குக் கொஞ்சம் பயமா இருக்கு. "

" சரி நீ போய் அடுப்புல தண்ணியை வை. நான் வரேன் "

சொல்லிவிட்டு முகம் கழுவ குளியலறைக்குச் சென்றாள்.

தங்கத்திற்கு உடம்பெல்லாம் நடுங்கிற்று.. பிள்ளை பெற்றபோதும்கூட அவள் இவ்வளவுதூரம் நடுங்கியிருப்பாளா என்பது சந்தேகம். தனது பிள்ளைக்கு பிரசவ வலி எனும் போது பெற்ற வயிற்றுக்குள் உருண்டை உருட்டியது.. தங்கத்தின் மகள் வசந்திக்கு வயது இருபத்தி ஐந்து இருக்கும். ஆனால் பார்த்தால் பதினெட்டு வயதானவளைப் போலத்தான் இருப்பாள். கர்ப்பத்திற்கு முன் வசந்தியைப் பார்க்க சகிக்காது. ஆனால் அவளின் வயிறு வளர,வளர அவளின் வனப்பு கூடிக் கொண்டே இருந்தது.. ஒருவேளை நல்ல திடகாத்திரமாக வசந்தி இருந்திருந்தால் நிச்சயம் ஒரு அழகியாக இருந்திருக்க முடியும். வசந்தி எட்டாம் மாதத்திலிருந்து தினமுமோ அல்லது வாரம் இருமுறையோ க்ளூகோஸ் ஏற்றிக் கொண்டாள். அவளில் கருப்பப் பையைச் சுற்றிலும் நீர் குறைந்து இருப்பதால் டாக்டர் க்ளுகோஸ் ஏற்றச் சொல்லியிருக்கிறார். தங்கம் தான் தினமும் ஆட்டோவில் அழைத்துச் சென்று திரும்பவும் ஆட்டோவிலேயே வீட்டுக்கு வருவாள். தங்கத்தின் ஒரு வார வருமானம் ஒருநாளிலேயே கரைந்தது...

பிரசவ செலவுகளுக்கென்று எடுத்து வைத்திருந்த பணம் க்ளுகோஸ் நீர் ஏற்றுவதில் பாதி கரைந்து போகவே, பாதி மனம் உடைந்து இருந்தாள். ஸ்கேன் செலவு, அது, இது என்று தண்ணீரில் போட்ட சோப்பாக கரைந்து போனது...

செல்வி சிறிது நேரத்தில் வந்து சேர்ந்தாள்.

" வயிறு மட்டும் வலிக்குதா இல்லை இடுப்பும் சேர்ந்து வலிக்குதா ?" வசந்தியின் வயிறைத் தொட்டவாறே செல்வி கேட்டறிந்தாள்.

" வயிறைச் சுத்தியும் வலிக்குது சித்தி. கொஞ்சம் நடுக்கமா இருக்கு. "

" காலையில கறி சாப்பிட்டேல்ல? அதுதான்னு நினைக்கிறேன். சுக்குத் தண்ணி சாப்பிட்டா சரியாயிடும். கொஞ்ச நேரம் அப்படி இப்படி நட.. "

" செல்வி, நான் எதுக்கும் ஆட்டோவுக்குச் சொல்லிடவா? " தங்கம் முன்னெச்சரிக்கையாக கேட்டாள்.

" அதெல்லாம் வேண்டாம் அக்கா. டாக்டர் இன்னும் பத்து நாள் சொல்லியிருக்கார்.. நாளைக்கு ஸ்கேன் எடுக்க வரச்சொன்னார்னு சொன்னியே.. அப்பறம் எப்படி இன்னிக்கே பிரசவவலி வரும்? "

" எதுக்கும் ஆட்டோவுக்குச் சொல்லிடறேன் செல்வி, அவ ரொம்ப வலிக்குதுங்கறா.. "

" சரி உன் இஷ்டம்.. வீணா செலவு செய்யப் போறேன்கிற.. நான் சொன்னா கேட்கவா போற? "

" அதுக்கில்ல, திடீர்னு ரொம்ப வலிக்குதுன்னு துள்ளுனாள்னா என்ன பண்றது? இங்கிருந்து ஆஸ்பத்திரிக்கு பத்து கி.மி பக்கம் போகணூம்.. "

" சரி சரி செய்.." முனகி கொண்டே வசந்திக்கு சுக்குத் தண்ணி கொடுத்தாள் செல்வி.

செல்வி கிட்டத்தட்ட பிரசவ வலி எது, சாதாரண வலி எது என்று பிரித்து அறியக் கூடியவள் எனினும், தங்கம் தாம் என்ன செய்கிறோம் ஏன் செய்கிறோம் என்பதை அறியாமல் மகளின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு செய்யக் கூடியவள். ஆட்டோ ஸ்டேண்ட் தங்கத்தின் வீட்டிலிருந்து நிமிட நேர தூரத்தில்தான் இருக்கிறது. உடனடியாக கூட்டி வந்தாள்.

வசந்திக்கு வலியில் முன்னேற்றம் இல்லை. அவளால் அது எப்படிப் பட்ட வலி என்றும் சொல்ல இயலவில்லை. முதல்முறை என்பதால் அவளுக்குச் சொல்லுவதற்கே சங்கடமாகப் பட்டது. வீட்டின் வாசலில் அங்குமிங்கும் நடந்துகொண்டு இருந்தாள். ஆட்டோ வந்ததும் தங்கம் உடனடியாக உடைகளை எடுத்து வைக்கச் சென்றாள்.

" அக்கா, நான் தான் சொல்றேன்ல.. அவ வயிறு சரியில்லைன்னு நினைக்கிறேன். நீ வேஷ்டா எதுக்குப் போற? கொஞ்ச நேரத்தில ரெடி ஆயிடுவா.. " செல்வி மீண்டும் மருத்துவம் சொல்ல,

" வேண்டாம் வேண்டாம்... போய்ப் பார்த்திடலாம். எனக்கு ரொம்ப பயமா இருக்கு. "

துணி மணிகளை எடுத்து வைத்துக் கொண்டே இருக்கையில், வாசலில் ஒரு சப்தம்.. வசந்தி பெருந்த ஒலியுடன் வாந்தி எடுக்க ஆரம்பித்தாள்... தங்கம் பதறிக் கொண்டே ஓடினாள்.. சிறிது நேரத்தில் வாசலை சுத்தம் செய்துவிட்டு, வசந்தியிடம் கேட்டாள்.

" வலி ரொம்ப இருக்கா? " வாஞ்சையுடன் கேட்டாள் தங்கம்.

" இடுப்பு வலிக்கலை. வயிறு மட்டும் லேசா வலிக்குது. ஆஸ்பத்திரிக்கு போகவேணாம்னு நினைக்கிறேன். " வசந்தி.

" அதான் சொன்னேன்ல அக்கா.. அவளுக்கு சாப்பிட்டது சேரல. நீ கறியில உருளைக் கிழங்கு போட்டியா? "

" ஆமா. ஒரே ஒரு கிழங்குதான் போட்டேன். "

" உனக்கு எத்தனை தடவ சொல்லியிருக்கேன். உருளைக் கிழங்கெல்லாம் வாயு அக்கா.. இந்தமாதிரி நேரத்தில இவளுக்கு கொடுக்காதேன்னு சொல்லியிருக்கேன்ல... பின்ன எதுக்குக் கொடுத்த? அதான் சேரலை... "

" ஒண்ணே ஒண்ணூதான் கொடுத்தேன். "

" ஒண்ணா இருந்தாலும் ஒன்பதா இருந்தாலும் ஒண்ணுதான்.. சரி இப்ப ஆட்டோக் காரனுக்கு என்ன பதில் சொல்லப் போற? "

" இன்னும் வலிக்குதா வசந்தி ? "

" வலிக்கிறமாதிரிதான் இருக்குதும்மா "

" சரியா சொல்லு புள்ள. இல்லைன்னா உங்கம்மா ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டு போகணும்னு ஆட்டோவைக் கூட்டிட்டு வந்திருக்கு. "

" செல்வி, நாங்க எதுக்கும் ஆஸ்பத்திரிக்குப் போய்ட்டே வந்திடறோம். நீயும் துணைக்கு வா. "

" சரி வரேன். "

ஒருவழியாக ஆட்டோவில் ஏறி மருத்துவமனையை அடைந்தார்கள்... அப்போது நேரம் இரவு 1.00 மணி.

மருத்துவ மனையில் நர்ஸுகள் மட்டுமே இருந்தார்கள்.. சின்ன செக்கப்பிற்கு பிறகு பிரசவலிக்குண்டான அறிகுறியே ஏதுமில்லை என்று சொல்லிவிட்டார்கள். கொஞ்சம் ஏமாற்றம் கலந்த பெருமூச்சு விட்டாள் தங்கம்...

செல்வி, தங்கத்தையும் வசந்தியையும் திட்டிக் கொண்டே மூவரும் வீடு வந்து சேர்ந்தார்கள்... வசந்திக்குப் போடப்பட்ட இன்ஜெக்ஷனால் நல்ல உறக்கம் நேரிட, மறுநாள் ஸ்கேன் எடுக்கச் செல்ல நேரிடுகையில், தங்கம் செல்வியின் வீட்டுக்குச் சென்றாள்.

" உங்கக்காவுக்கு கொஞ்சம் கூட அறிவில்ல. பிரசவமா என்னனு கூடத் தெரியாமையா மூணூ பெத்து வெச்சுருக்கு? " செல்வியின் கணவன்.

" இன்னும் எதுவுமே அவளுக்குத் தெரியறதில்லைங்க,. அந்தப் பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணறதுக்கு முன்னாடியே நல்லா சாப்பாடு போட்டு உடம்பை தேத்தவிட்டுட்டு, இப்ப வயித்தில தண்ணி இல்லைனு தினமும் ஐநூறு ரூவா செலவு பண்ணிட்டு இருக்கா, இத நாம சொன்ன, எங்க வீட்டு கஷ்டம் உனக்கெப்படித் தெரியும்னு சொல்லுவா... "

" நேத்திக்கு டாக்டர் என்ன சொன்னாங்க?"

" நர்ஸுதான் இருந்தா. பிரசவ வலியே துளியுமில்லைனு சொல்லிட்டா.. நான் முன்னாடியே சொன்னேன். வசந்தி வாந்தி எடுத்ததும் அவளுக்கு வலியெல்லாம் இல்லைனு சொல்லச்சே ஆட்டோக் காரனை வீட்டுக்கு அனுப்பியிருக்கனும். நேத்திக்கு மட்டும் மூந்நூத்தைம்பது தெண்ட செலவு. "

" உங்கக்கா நல்ல செலவு பண்றாளோ இல்லையோ தெண்ட செலவு அதிகம் பண்றா.. "

உரையாடல் தொடர்ந்துகொண்டிருக்க, தங்கம், வீட்டு வாசலில் நின்று அதைக் கேட்டுவிட்டு தன் வீட்டுக்குத் திரும்பினாள்..

தான், செய்வது தண்ட செலவா? நேற்று மகளின் வயிற்று வலியை அருகிருந்து கேட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காவிடில் வசந்தியோ அல்லது அவள் கணவரோ தப்பாக எடுத்துக் கொள்ள மாட்டார்களா? ஒருவேளை நேற்று பிரசவ வலியாகவே இருந்திருந்தால்??

வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் அவள் செய்வதை யாருமே புரிந்துகொள்ளவில்லை. அவளின் வருமானம், பயத்திற்கு ஈடாகவே இருந்து வந்துள்ளது.

மெல்ல வீடு திரும்புகையில் வசந்தி, வாசலில் நடந்துகொண்டிருந்தாள்..

" சித்தி வரலையா? ஸ்கேன் எடுக்கப் போகணுமே? நேரம் ஆச்சும்மா "

" இல்லை வசந்தி, நாம மட்டும்தான் போகப் போறோம்.. "

வசந்தி குழப்பத்தோடு தன் மருந்து சீட்டுக் களை பத்திரப்படுத்தினாள்....

lolluvathiyar
17-11-2007, 02:43 PM
அருமையான கதை, இது நிரைய வீடுகளில் அடிகடி தோறும் நடக்கும் கூத்து. பெற்ற தாய் பயபடுகிறாள். பழைய காலத்து ஆட்கள் சிலர் சொல்லும் ஆருதல் காதில் ஏறாது. பதற்றம். இதை பயன்படுத்தி தான் ஆஸ்பத்திகள் கோடிகனக்கில் சம்பாரிகின்றன.
இன்னும் சில காலங்களில் மக்கள் விக்கல் வந்தா கூட ஆஸ்பத்திருக்கி போவாங்க. அதுக்கும் ஒரு ஊசி போடுவாங்க*

ஆதவா
17-11-2007, 02:49 PM
அருமையான கதை, இது நிரைய வீடுகளில் அடிகடி தோறும் நடக்கும் கூத்து. பெற்ற தாய் பயபடுகிறாள். பழைய காலத்து ஆட்கள் சிலர் சொல்லும் ஆருதல் காதில் ஏறாது. பதற்றம். இதை பயன்படுத்தி தான் ஆஸ்பத்திகள் கோடிகனக்கில் சம்பாரிகின்றன.
இன்னும் சில காலங்களில் மக்கள் விக்கல் வந்தா கூட ஆஸ்பத்திருக்கி போவாங்க. அதுக்கும் ஒரு ஊசி போடுவாங்க*

மிக்க நன்றி வாத்தியாரே! உங்களின் இந்த பின்னூட்டமே எனக்கு மன நிறைவை அள்ளித் தருகிறது..

யவனிகா
17-11-2007, 06:21 PM
சிறியதொரு நிகழ்வை வைத்து கதை பின்னி இருக்கிறீர்கள். கதை விறு விறுப்பாகத்தான் போகிறது. (அக்கம் பக்க வீட்டில் நடந்தது தானே?)

நிஜத்தில் பல வீடுகளில் இது போல நிகழ்வது சாத்தியம். என் நாத்தனாரே ஒருமுறை பொய்வலிக்கு மருத்துவமனைக்கு போய் ஒரு நாள் முழுவதும் தங்கி விட்டு வந்திருக்கிறார். (அப்போது என் மாமியார் சொன்ன வார்த்தைகளை நீங்கள் அப்படியே அளித்துள்ளீர்கள்.)அப்புறம் அவர் ஸ்கேன் செய்வதற்காக எதேச்சையாக சென்ற நேரம் வலியெடுத்துப் பிரசவித்தார்.
பொய் வலிக்கு சுக்குத்தண்ணியா தருவார்கள் திருப்பூரில்...கோயமுத்தூரில் சீரகத்தண்ணி தானே தருவார்கள்? சுக்கு இன்னும் சூட்டைக் கிளப்புமே? எதற்கும் அம்மாவிடம் இன்னுமொருமுறை கேட்டுப்பாருங்கள்( ஓவரா லாஜிக் பார்க்கிறேனோ?)

நல்ல கதை...பிரசவ நேரம் மட்டும் அல்ல...அதை எதிர் நோக்கிக் காத்திருக்கும் ஒவ்வொரு நிமிடங்களும் பதட்ட காலங்கள் தான்...வீட்டுக்கு வீடு நடக்கும் கதையை விறுவிறுப்பாகச் சொன்னதுக்கு பாராட்டுகள்.அப்புறம் வசந்திக்கு என்ன குழந்தை பிறந்தது?

மலர்
17-11-2007, 11:16 PM
பயம் பதட்டம்.. இதெல்லாம் இந்த நேரத்தில் சகஜம்.... ஏன்னா பிரசவகாலம்ங்கிறது பெண்களுக்கு மறுபிறவி மாதிரி மாதிரி...

அதவன் உண்மை கதையை கொஞ்சம் கற்பனை கலந்து எதார்த்தமாய் எழுதிவிட்டாய் என நினைக்கிறேன்... வாழ்த்துக்கள்...

lolluvathiyar
18-11-2007, 04:58 AM
பொய் வலிக்கு சுக்குத்தண்ணியா தருவார்கள் சீரகத்தண்ணி தானே தருவார்கள்?

சீரகதன்னிதான் சிறந்தது. ஆனால் கதையில் காலையில் உருழை கிழங்கு சாப்பிடிருப்பதாக சொல்லபட்டிருப்பதால் ஜீரன கோளார் ஏற்பட்டுவிடுகிறது. அதுக்கு சுக்குதன்னி தான் ரிலீபாக இருக்கும்

ஆதவா
18-11-2007, 09:15 AM
சிறியதொரு நிகழ்வை வைத்து கதை பின்னி இருக்கிறீர்கள். கதை விறு விறுப்பாகத்தான் போகிறது. (அக்கம் பக்க வீட்டில் நடந்தது தானே?)

நிஜத்தில் பல வீடுகளில் இது போல நிகழ்வது சாத்தியம். என் நாத்தனாரே ஒருமுறை பொய்வலிக்கு மருத்துவமனைக்கு போய் ஒரு நாள் முழுவதும் தங்கி விட்டு வந்திருக்கிறார். (அப்போது என் மாமியார் சொன்ன வார்த்தைகளை நீங்கள் அப்படியே அளித்துள்ளீர்கள்.)அப்புறம் அவர் ஸ்கேன் செய்வதற்காக எதேச்சையாக சென்ற நேரம் வலியெடுத்துப் பிரசவித்தார்.
பொய் வலிக்கு சுக்குத்தண்ணியா தருவார்கள் திருப்பூரில்...கோயமுத்தூரில் சீரகத்தண்ணி தானே தருவார்கள்? சுக்கு இன்னும் சூட்டைக் கிளப்புமே? எதற்கும் அம்மாவிடம் இன்னுமொருமுறை கேட்டுப்பாருங்கள்( ஓவரா லாஜிக் பார்க்கிறேனோ?)

நல்ல கதை...பிரசவ நேரம் மட்டும் அல்ல...அதை எதிர் நோக்கிக் காத்திருக்கும் ஒவ்வொரு நிமிடங்களும் பதட்ட காலங்கள் தான்...வீட்டுக்கு வீடு நடக்கும் கதையை விறுவிறுப்பாகச் சொன்னதுக்கு பாராட்டுகள்.அப்புறம் வசந்திக்கு என்ன குழந்தை பிறந்தது?

அட.... சீரகத் தண்ணிதான்.... மறந்துட்டேன். மன்னிக்கவும்.. (சுக்குத் த*ண்ணியும் கொடுப்பார்க*ள் என்று கேள்விப்ப*ட்டேன்)

உங்கள் வாழ்த்துக்கு மிகவும் நன்றி சகோதரி. உங்களைப் போல் இல்லாவிட்டாலும் ஓரளவு எழுதியதே என் பாக்கியம்....:)

வசந்திக்கு பெண் குழந்தை... அவளைப் போலவே மிக அழகாக....

செல்விக்கு ஒரு மகன் உண்டு. ஆதவன் என்ற பெயரில்....

ஆதவா
18-11-2007, 09:18 AM
பயம் பதட்டம்.. இதெல்லாம் இந்த நேரத்தில் சகஜம்.... ஏன்னா பிரசவகாலம்ங்கிறது பெண்களுக்கு மறுபிறவி மாதிரி மாதிரி...

அதவன் உண்மை கதையை கொஞ்சம் கற்பனை கலந்து எதார்த்தமாய் எழுதிவிட்டாய் என நினைக்கிறேன்... வாழ்த்துக்கள்...

இதில் கற்பனை ஏதுமில்லை.. உண்மையே! நன்றி மலர்/.

ஆதவா
18-11-2007, 09:20 AM
சீரகதன்னிதான் சிறந்தது. ஆனால் கதையில் காலையில் உருழை கிழங்கு சாப்பிடிருப்பதாக சொல்லபட்டிருப்பதால் ஜீரன கோளார் ஏற்பட்டுவிடுகிறது. அதுக்கு சுக்குதன்னி தான் ரிலீபாக இருக்கும்

மிகவும் நன்றிங்க வாத்தியாரே! உங்களைப் போன்ற அனுபவஸ்தனாக இருந்தால் சமாளித்திருப்பேன்...