PDA

View Full Version : கவியரசரின் கவிக்கு புகழாரம்..!



அமரன்
06-11-2007, 08:17 PM
மன்றத்தில் எத்தனையோ என் மனக்கவர் விமர்சன விற்பன்னர்கள் இருக்கின்றார்கள். அவர்களின் ஒவ்வொரு பதிவையும் தவறாது படித்து களிப்பத்தில் எனக்குப் பிரியம் அதிகம். அவர்களின் இத்திறமைக்கண்டு நானூம் வளருவோமே என் இதர சஞ்சிகைகளில் வெளிவரும் விமர்சனக்களையும் படித்து விமர்சன உத்திகளை கற்பது வழக்கம். அந்த வகையில் ச்பீபத்தில் என்னைக் கவர்ந்தது விக்டதீபாவளி மலர் 2007 இல் வெளிவந்த கவியரசரின் பாடலுக்கான விமர்சனம். வெட்டி ஒட்டாமல் அப்படியே தட்டச்சி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதால் தருகின்றேன்.

இந்த எழுத்துருவின் நிறத்தில் வரும் வரிகள் எனது கருத்து.

குலமகள்ராதை படத்தில் இடம்பெற்றபாடல் இது.

உலகம் இதிலே அடங்குது
உண்மையும் பொய்யும் விளங்குது
கலகம் வருது..தீருது...அச்சுக்
கலையால் நிலைமை மாறுது..

உலகம் இதிலே அடங்குது-எதில்?
உண்மையும் பொய்யும் விளங்குது-எப்படி?
கலகம் வருது..தீருது- எதனால்?

முதல்மூன்று வரிகளைப் படிக்கும்போதும் இப்படி கேள்விகள் பிறக்கின்றன. இத்தனை கேள்விகளுக்கும் சேர்த்து நான்காவது வரியில் பதில் வருகிறது. 'அச்சுக்கலையால்' என்று சொல்லி 'நிலைமை மாறுது' என்று நம்பிக்கையோடு முடிக்கிறார் கவிஞர்.

இதை இப்படியும் பொருத்திப்பார்க்கலாம்...
உலகம் அடங்குது-அச்சுக்கலையில்
உண்மையும் பொய்யும் விளங்குது-அச்சுக்கலையில்
கலகம் வருது-அச்சுகலையால்
கலகம் தீருது-அச்சுக்கலையால்
நிலைமை மாறுது-அச்சுக்கலையால்..

இங்கே வரிகளுக்கிடையிலான தொடர்பை விமர்சகர் எப்படிக் கண்டறிகின்றார் என்பதைப்ப்பாருங்கள். தனித்தனியாக வரிகளுக்கு அர்த்தம் காண்பதற்கு முன்னர் வரிகளுக்கு இடையிலான தொடர்பை கண்டறிதல் அவசியம் என்பதை உணர்த்திய விமர்சனப்பகுதி.
இனி வரிகளுக்கான விளக்கம்

உலகம் இதிலே அடங்குது.

உலகம் பரந்து விரிந்தது, அப்படி இப்படி என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தோம். ஆனால், அச்சுக்கலை எங்கோ போய் நிற்கும் இக்காலத்தில், உலகத் தகவல்கள் அனைத்தும் 'இன்டர்நெட்' மூலம் நம் உள்ளங்கைக்கு வந்து விடுகிறது. பரந்து விரிந்தது என்று சொன்னது போய், அச்சுக்கலையால் உலகம் நம் கையில் அடங்கிப்போய்விட்டது.

இங்கே விமர்சகர் இணையத்தை அச்சுக்கலைக்குள் அடக்குகின்றார். அச்சுக்கலை என்பது என்ன? எழுத்துகளைக் கோர்த்து ஒரு தளத்தில் பதிப்பதுதானே? அதைத்தானே இணையத்தில் செய்கின்றோம். அச்சுக்கூட நண்பர் ஒருவர் பயன்படுத்தும் பதம் 'அச்சுக்கோர்ப்பு' என்பது...இங்கே 'எழுத்து' அச்சாக மாறிவிட்டது...

உண்மையும் பொய்யும் விளங்குது

சத்தியமே பேசிய, உண்மையே பேசிய அரிச்சந்திரன் கதையும், அதை நாடகமாகப் பார்த்து அப்படியே வாழ்த்து மேம்பட்ட நிலையை அடைந்த மகாத்மாகாந்தியின் வாழ்வியல் உண்மைகளும் ('சத்தியசோதனை' என்னும் நூலாக) வெளிப்பட்டு விளங்குவதும் அச்சுக்கலையால்தான். அதே சமயம் பொய் சொல்வதில், புளுகுவதில் உலகப் புகழ்பெற்ற 'கோயபல்ஸ்' பற்றிய தகவல்கள் நமக்கு விளங்கியதும் அச்சுக்கலையால்தான்...

உலக நிகழ்வுகளையும், நூல்களையும் உதாரணமாக்கி, வரிகளுடன் பொருத்தி, வரிகள் தாங்கி நிற்கும் கருத்தைக் கண்டறிந்து, கருத்துக்கு வலுச்சேர்ப்பது எப்படி என்று பாடம் பயிற்றுவிக்கிறது இப்பகுதி.

கலகம் வருது, தீருது-அச்சுக்
கலையால் நிலைமை மாறுது..

உலகம் முழுவதும் கலகமயம்தான். அது 'பளிச்'சென்று பற்றிக்கொண்டு விடுகிறது. பற்றிக்கொண்டதோடு மட்டுமல்லாமல் பரவி எரிகின்றது. அயல்நாட்டில், உள்நாட்டில் ஏதோ ஒரு மூலையில் மதக்கலவரமோ அல்லது ஜாதிக்கலவரமோ நடந்தால், சற்று நேரத்தில் அந்தத் தகவல் ஃப்ளாஷ் நியூசாகத் தொலைக்காட்சியில் எழுத்துகளாகவே ஓடுகிறது. "அது கலகக்காரர்களால் பரப்பட்ட வதந்தி. யாரும் நம்பவேண்டாம். அப்படி எதுவும் நடக்கவில்லை. பொதுமக்கள் அமைதிகாக்கும்படி கேட்டுக் கொள்கின்றோம்" என செய்தி வருகிறது. உடனே கலவரம் அடங்கிப்போய், அமைதி திரும்புகிறது.


இங்கே விமர்சகர் அடக்கி வாசிப்பதகவே படுகிறது. சில கலகங்கள் ஏற்பட அச்சுத்துறை காரணமாகி உள்ளது. வெளியே உதாரணம் தேடுவதை இட நமது மன்றத்தில் ஆரோக்கியமாக இருந்த சில விவாதங்கள் கலகல் அளவுக்கு போனதுக்குக் காரணம் சில பதிவுகளே..அது கூட ஒருவித அச்சுக்கலைதானே.. பற்றிய கலகம் நிர்வாகத்தினரின் பதிவுகளால் அடக்கப்பட்ட தருணங்களும் மன்றத்தில் உள்ளன. அச்சுக்கலையால் கலகம் தீருகின்றதல்லவோ.. பொய் வதந்திகளை இல்லை என்று ஊதி அணைப்பதில் அதிக பங்கு அச்சுக்கலைக்கு உண்டுதானே..

பொய் சொன்னாலும் மெய்சொன்னாலும்
வாயால் சொல்லிப் பலனில்லே-அதை
மையில் நனைச்சுப் பேப்பரில் அடிச்சா
மறுத்துப் பேச ஆளில்லே

அமைதி திரும்பிவிட்டது! ஆனால் இந்த மனிதமனம் இருக்கிறதே, அது அமைதியை விரும்பினாலும் அதற்கு எதிர்மறையான செயல்களையே செய்துகொண்டிருக்கிறது. தான் சொல்வது பொய் என்று தெரியாமல், தவறான தகவல்களின் அடிப்படையில் வாதாடும். பொய்யென்று தெரிந்தே வாதாடுவதும் உண்டு. அதற்கு ஆதாரமாக சில நூல்களைக் காட்டும்.

அதே நேரத்தில், உண்மை பேசுபவர்கள் அழுத்தமாகப்பேசி, "நீங்கள் சொல்வது பொய், ஆதாரமற்றவை என்று சொல்லி, ஆராய்ச்சியாளர்கள் அதை நூலாகவே வெளியிட்டிருக்கின்றார்கள். இதோ அந்நூல்" என்று சொல்லி தங்கள் பக்க நியாயத்தை நிரூபிப்பார்கள்..

இங்கே வரிகளைத்தனித் தனியாக ஆராயாது, நான்கு அடிகளை சேர்த்து அதன் மொத்தக் கருவையும் அலசி உள்ளார் விமர்சகர். இந்நான்கில் முதலிரு அடிகளைத் தனியாகவும், அடித்த இரு அடிகளை தனியாகவும் அலசி இருக்கலாம். சில இடங்களின் ஒவ்வொரு அடிக்கும் அர்த்தம் கண்டுபிடித்து, ஆய்வு செய்வது பொருந்தாது.. முதலில் வரிகளைப் படித்து ஒவ்வொரு அடியாகவா, ஈரடியாகவா, ஒட்டு மொத்தக் கவியாகவா பொருள் பிரித்து பேய நிலமாக இருக்கும் என்பதை முதலில் விமர்சகர்கள் கண்டறியவேண்டும் என்பதை இப்பகுதியில் உணர்ந்தேன்..
விமர்சகரின் இப்பகுதிக்கு எடுத்துக்காட்டாக மன்றத்தின் விவாதாரங்குகளைப் பாருங்கள்.

இவ்வாறு பாடலின் முதல் பகுதியில் அச்சுக்கலையை சொல்லி, இரண்டாவது பகுதியில்,மையில் நனைச்சுப் பேப்பரில் அடிப்பதைச் சொன்ன கவிஞர், பாடலின் மூன்றாவது பகுதியில் பத்திரிகைத் துறையைச் சொல்கின்றார்.

அதை அடுத்த பதிவில் பார்ப்போம்...

ஆதவா
07-11-2007, 04:38 AM
அருமையான கட்டுரை... இடையிடையே அமர்ந்த உமது கருத்துக்களும் நன்றே...

பொதுவில் நமக்கு வார்த்தை வார்த்தையாக அலச நேரமிருக்காது.. (முந்தி பத்தி பத்தியாக விமர்சனமிட்ட பழக்கமெனக்கு.) அதோடு, கவியரசரின் ஒவ்வொரு எழுத்திலிம் அர்த்தம் இருக்கும்... நாம் எழுதுவதில்??? அதற்காக மற்ற கவிஞர்களை மட்டம் தட்டுவதாக எண்ணவேண்டாம்... கவியரசர் பிரபஞ்சம், நாமெல்லாம் மீன்கள்..

விமர்சனங்களில் பல வகைகள் உண்டு. ஒவ்வொருவருக்கும் பல விதங்கள் இருக்கும். ஒரு கவிதையோ கதையோ விமர்சனம் செய்யுமளவுக்கு நமக்குண்டான தகுதி எல்லை வரையறை எதுவுமில்லை என்பதால் நாம் நினைத்தபடி சொல்ல இங்கே முடிகிறது.

என்னைக் கேட்டால், இந்த பாடலுக்கு இந்தளவுக்கு விமர்சனம் தேவையில்லை என்றே சொல்லுவேன்... ஏனெனில் பாமரனும் புரிந்துகொள்ளுமளவுக்கு எழுதப்பட்டிருக்கிறது. மேலும் விமர்சகர் எழுதிய அத்தனை கருத்துகளும் முதலில் படிக்கும்போதே எனக்குள் ஏற்பட்டது...

நாம் நம் கவிதைகளுக்கான விமர்சனங்களில் நம் கருத்தை அதிகம் கொடுப்பதில் தவறில்லை. ஏனெனில் அது பகிரப்படுகிறது... நமக்குள்ளேயே....

ஆதவா
07-11-2007, 04:38 AM
Members who have read this thread : 6 அமரன் (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=293842&posted=1#), ஆதவா (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=293842&posted=1#), இளசு (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=293842&posted=1#), நேசம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=293842&posted=1#), gans5001 (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=293842&posted=1#), lenram80 (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=293842&posted=1#)

கண்ஸ் அவர்களை வரவேற்கிறேன்

அமரன்
07-11-2007, 06:22 AM
ஆதவா..படித்ததும் புரியும் பாடல் இது.. ஏற்றுக்கொள்கின்றேன். இந்த விமர்சனத்தை இங்கே பதிவிட்டதன் நோக்கம் எப்படி விமர்சிப்பது என்று எனக்கு பாடம் புகட்டியதே...! அவர் சொன்ன ஒவ்வொரு பத்தியையும் ஒரு வரிக்குள் அடக்கிவிட முடியும். அப்படிப்பலர் நமது மன்றத்தில் உள்ளனர்..(எடுத்துக்காட்டு=இளசு அண்ணா, பென்ஸ் அண்ணா). அந்த இலக்கை அடைய இது ஏணிப்படியாக இருக்குமே...!