PDA

View Full Version : பஹ்ரைனில் ஒரு ப்ரேக்ஃபாஸ்ட்



leomohan
06-11-2007, 04:48 AM
உதய சூரியனுக்கும் எனக்கும் ஆகாதென்று பலருக்கு தெரிந்திருக்கும். இரவு வெகுநேரம் கணினியில் நோண்டிவிட்டும், புத்தகங்களில் புகுந்துவிட்டும், டிவியில் இனி நிகழ்ச்சிகளே இல்லை என்று அறிவிப்பாளர்களே திட்டிய பிறகும் தான் படுக்க செல்வது வழக்கம்.

I'm Not a Morning Person, To Get-up At 5.00 There is No Reason என்று கவிதையே புனைந்ததும் உண்டு.

அலுவலகத்திலேயே தண்ணீர் தெளித்துவிட்டாயிற்று. நீ வேலையை செஞ்சா போதும் எனும் அளவிற்கு. Access Control Proximity Card என்றாவது நான் 8 மணிக்கு வந்ததாக வருகை பதிவாகியிருக்கிறதா என்று கேட்டால் கண்ணீர் மல்கும்.


இவ்வாறான பின்னனியில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வரும் நான் நேற்று பிற்பகுதி கிரிகெட் மேட்ச் பார்க்காமல் வாழ்வில் ஒரு பெரிய பாவத்தை செய்ய இருந்தேன். அதனால் இரவு ஹைலெட்ஸ் பார்த்து கங்கா ஸ்நானம் செய்துக் கொள்ளலாம் என்று நினைத்து நியோஸ்பார்ஸ்ட தொலைகாட்சியை தட்டினால் அவர்களோ பந்து பந்தாக முழு ஆட்டத்தையும் காட்டிக் கொண்டிருந்தார்கள்.

சரி சில விக்கெட்டுகள் விழும் வரையில் பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டே சோபாவில் உறங்கிவிட்டேன். நான் எவ்வளவு தான் சோம்பேறியாக இருந்தாலும் சோபாவில் தூங்கும் வழக்கம் இல்லை. அது எப்போதாவது வெள்ளிக் கிழமை மதிய நிகழ்ச்சி பார்த்து தூங்கினால் தான் உண்டு.

நன்றாக தூங்கிவிட்டு சட்டென்று எழுந்தால் டிவி ஓடிக் கொண்டிருக்க முழு ஆட்டமும் முடிந்துவிட்டிருந்தது. மணி என்னடா வென்று பார்க்கலாம் என்றால் மொபைல் போனை இன்னொரு அறையில் சார்ஜிங்க செய்ய போட்டிருந்தேன். சரி NDTV வைத்து பார்த்தால் மணி 5.32 என்று காட்டியது. அட நம்மூரில் 5.32 அப்படின்னா இங்கு 3 மணி தான் என்று பொறுப்பாக படுக்கையறைக்கு சென்றேன். தூக்கம் வராமல் திருதிருவென்று முழிக்க மீண்டும் சென்று மொபைல் போனில் நேரம் பார்த்தால் 5.42 என்று இருந்தது. அட NDTV Middle East ஒளிபரப்பாயிற்றே என்று வருந்தியவாறு எழுந்து அமர்ந்தேன்.

கணினியை இயக்கி வழக்கமாக இணையத்தில் செல்லும் 7 புனிதலங்களுக்கும் ஒரு பக்தி யாத்திரை செய்து பிரசாதம் பெற்றுவிட்டு பார்த்தால் இன்னும் நேரம் இருந்தது. சூடுநீர் பொத்தானை அழுத்திவிட்டு வணக்கம் தமிழகம் பார்த்துவிட்டு தென்கச்சி சுவாமிநாதனின் அறிவுரைகளை கேட்டுவிட்டு NDTV வியில் முஷாரிப்பின் சோக கீதம் பார்த்துவிட்டு மடமடவென்று குளித்து முடித்து, சீவி சிங்காரித்து தயாராகி வண்டியை நேராக சங்கீதா சைவத்திடம் விட்டேன்.

வடிவெலு நகைச்சுவை நினைவுக்கு வந்தது. என் பொண்டாட்டி கூடத்தான் சைவம். அதனால ஊரெல்லாமா போர்டு போட்டு வைக்கறது.

கற்பூர நாயகியே கனகவல்லி எனும் பாடல் ஒலிக்க, சூடாக நெய் மணக்க பொங்கலும் வடையும் சிவப்பு சட்டினி, வெள்ளை தேங்காய் சட்டினியை உள்ளே தள்ளிவிட்டு, இன்னிக்கு மத்தியானம் அங்க போகலாம் என்று அங்கிருந்து மக்கள் பேசிய தேன் மதுர தமிழோசை காதில் கேட்டுக் கொண்டு, என்ன ஸ்ரீராம் தாடி வைச்சாச்சா, என்ன ரொம்ப பிஸியா என்று மேலாளரிடம் கதைத்துவிட்டு, 550 ஃபில்ஸ், சுமார் 55 ரூபாய் பில்லுக்கு காசு கொடுத்துவிட்டு வண்டியில் ஏறும் போது தோன்றியது - அடே நாலணா செலவில்லாமல் நுங்கம்பாக்கம் சங்கீதா போய் வந்துட்டோமே என்று.

வியாபாரமாக நினைத்து அவர்கள் செய்தாலும், பல்லாயிரம் மைல் தொலைவில் தமிழக சிற்றுண்டியை எங்களை போன்றவர்களுக்கு வழங்கி வரும் சங்கீதா போன்ற பல தமிழ் உணவகங்கள் செய்து வருவது சமூக சேவை என்று சொன்னால் அது மிகையாகாது.

இது தான் பஹ்ரைனில் ஒரு தமிழ் ப்ரேக்ஃபாஸ்டின் Moral of the Story.

அன்புரசிகன்
06-11-2007, 05:28 AM
Moral of the Story நன்றாக இருக்கிறது... இங்கும் பாரத் - ஆரியா - ஏஸியானா ஹோம்லண்ட் போன்ற தென்னிந்திய உணவகங்கள் தான் நம் சுவைக்கான ஏக்கங்களை தீர்க்கின்றன....

சரவணபவனும் வரவிருப்பதாக ஒரு தகவல்... அனைத்து அனுமதியும் கிடைத்துவிட்டதாம்....

ஆனால் இங்கு நான் கூறிய கடைகள் அனைத்தும் காலை 10 மணிக்குப்பின்னர் தான் திறப்பார்கள்... சரவணபவனாவது கைகொடுப்பாரா??? கொடுத்தாலும் வாகன நெரிசல் விட்டுக்கொடுக்குமா.... இந்த லட்சணத்தில் வீதிக்கு வீதி வாகனவேகம் சிக்னல் போன்றவற்றிக்கு கமராக்கள் வேறு... பாய்ந்தால் 6000 கத்தார் ரியால்... சரவணபவான் கனவானாகத்தான் இருக்கும்.... :D

ஆதவா
06-11-2007, 05:37 AM
நல்ல அனுபவம் தான்....

வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு தமிழ் மீதுள்ள அதீத பற்றும், ஆர்வமும், வியக்கவைக்கிறது, இங்குள்ளவர்களோடு ஒப்பிடுகையில்....

கலக்குங்க மோகன்......

யவனிகா
06-11-2007, 07:36 AM
நல்ல பதிப்பு லியோ மோகன் அவர்களே! தேர்ந்த நடையுடன் விவரித்துள்ளீர்கள். சுஜாதாவை ஞாபகப்படுத்துகிறது. ஆதவன் கூறியபடி, வெளிநாடு வந்தவுடன் தான் நமக்கு நம் நாட்டின் மீதும் மொழியின் மீதும் எவ்வளவு பற்றுள்ளது என்பது தெரிய வருகிறது. நிழலின் அருமை வெயிலில் தானே தெரியும். உங்கள் புண்ணியத்தில் இன்னைக்கு காலைஉணவு ஆச்சு மோகன். நன்றி.

அமரன்
06-11-2007, 07:49 AM
மோகனின் கைப்பக்குவம் நல்ல ருசி. என்னதான் இருந்தாலும் நம்ம ஊரு உணவை நாக்கிலும், மொழியை காதிலும் ஒரே நேரத்தில் வாங்குவது அலாதியானது. எனக்கு அது அடிக்கடி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே கடைகளில் சாப்பிட்டு தங்ககத்தில் வாங்க்கிக்கட்டிக்கொள்வது வழக்கம்.

நுரையீரல்
06-11-2007, 07:57 AM
எங்க ஊரிலயும் தஞ்சை என்று உணவு விடுதி இருக்கிறது, அதை ஞாபகப் படுத்திவிட்டீர்கள் மோகன்.

அன்புரசிகன்
06-11-2007, 07:58 AM
மோகனின் கைப்பக்குவம் நல்ல ருசி. என்னதான் இருந்தாலும் நம்ம ஊரு உணவை நாக்கிலும், மொழியை காதிலும் ஒரே நேரத்தில் வாங்குவது அலாதியானது. எனக்கு அது அடிக்கடி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே கடைகளில் சாப்பிட்டு தங்ககத்தில் வாங்க்கிக்கட்டிக்கொள்வது வழக்கம்.

அப்போ உங்க கலா தமிழ் கதைக்க மாட்டாரா?

அமரன்
06-11-2007, 08:01 AM
அப்போ உங்க கலா தமிழ் கதைக்க மாட்டாரா?
கலக்கலா கதைப்பாங்க.. அவுங்க என்கிட்ட இருக்கனுமோ...தஸ்ஸு புஸ்ஸு பிரெஞ் தொலையும், தொல்லையும் அதிகமுங்கோ இங்கே... தனிமைதான் தமிழைத் தரும்.

leomohan
06-11-2007, 08:36 AM
படித்து ரசித்த அனைவருக்கும் நன்றி.

நுரையீரல்
06-11-2007, 08:36 AM
கலக்கலா கதைப்பாங்க.. அவுங்க என்கிட்ட இருக்கனுமோ...தஸ்ஸு புஸ்ஸு பிரெஞ் தொலையும், தொல்லையும் அதிகமுங்கோ இங்கே... தனிமைதான் தமிழைத் தரும்.
என்னமோ சொல்றீங்க, அது என்னானும் யூகிக்க முடியுது. ஆனால், தப்பான யூகமோனு சந்தேகமும் இருக்குது.

அன்புரசிகன்
06-11-2007, 08:53 AM
என்னமோ சொல்றீங்க, அது என்னானும் யூகிக்க முடியுது. ஆனால், தப்பான யூகமோனு சந்தேகமும் இருக்குது.

ஊகங்களை வைத்திருக்காதீங்க... வெளியே சொல்லிடுங்க.... :D

அமரன்
06-11-2007, 08:55 AM
ஊகங்களை வைத்திருக்காதீங்க... வெளியே சொல்லிடுங்க.... :D
ஆ..........வ் என்னா ஒரு வில்லத்தனமய்யா..

பாரதி
06-11-2007, 05:08 PM
உண்மைதான் மோகன். துபாயில் உள்ள சைவ சிற்றுண்டி விடுதிகளிலும் கூட* சரவண பவனை விடவும், வசந்த பவனை விடவும், தரத்திலும், ருசியிலும் மேம்பட்டது சங்கீதா உணவகமே..!

leomohan
06-11-2007, 05:18 PM
உண்மைதான் மோகன். துபாயில் உள்ள சைவ சிற்றுண்டி விடுதிகளிலும் கூட* சரவண பவனை விடவும், வசந்த பவனை விடவும், தரத்திலும், ருசியிலும் மேம்பட்டது சங்கீதா உணவகமே..!

பர் துபாயில் இருப்பது தானே. நல்ல சுவை தான் ஆனால் சேவை மோசம். கூட்டம் வேறு. மேலும் காபி நின்னுக்கிட்டே குடிங்கன்னு சொல்லி ஒரு முறை கடுப்பேத்திட்டாங்க. பஹ்ரைனில் கூட்டம் இல்லாததால் ஹாயாக இருக்கும்.

ஆதவா
06-11-2007, 05:27 PM
பர் துபாயில் இருப்பது தானே. நல்ல சுவை தான் ஆனால் சேவை மோசம். கூட்டம் வேறு. மேலும் காபி நின்னுக்கிட்டே குடிங்கன்னு சொல்லி ஒரு முறை கடுப்பேத்திட்டாங்க. பஹ்ரைனில் கூட்டம் இல்லாததால் ஹாயாக இருக்கும்.

அடப்பாவமே! நம்ம ஊரர விட மோசமப்பா...

அமரன்
06-11-2007, 05:29 PM
அடப்பாவமே! நம்ம ஊரர விட மோசமப்பா...
இங்கே செட்டி நாடு உணவகத்துக்குப் போனால் காஃபியே அரை மணித்தியாலம் கழித்துத்தான் கொடுக்காங்க..அப்போ டிபன், சாப்பாடு என்றால்...

அறிஞர்
06-11-2007, 06:32 PM
வெளி நாடுகளில் உள்ள சில உணவகங்களே... நல்ல தரமான, சுவையான உணவை தருகிறார்கள்..

அமெரிக்காவில் சரவணபவன் சென்றபொழுது.. வாங்கிய 7 பதார்த்தங்களில், இரண்டு அல்லது மூன்று பதார்த்தங்கள் தான் திருப்தியாக இருந்தது....

சுவையான தகவலுக்கு நன்றி.. மோகன்..
நம்ம ஆட்கள் ஆட்டம் பார்த்து நல்லா உறங்கியிருக்கிறீர்கள்..

நேசம்
06-11-2007, 06:45 PM
தமிழ் நாட்டில் உள்ள சைவ உணவு விடுதிகளின் கிளைகள் வெளிநாடுகளில் இருந்தாலும் சுவை அந்த அளவுக்கு இல்லை என்பது கருத்து.இருந்தாலும் இந்த அளவுக்குயாது கிடைப்பதால் அதை சேவையாக லியோ மோகன் சொல்வது சரியாக தான் இருக்கிறது.வாழ்த்துக்கள்

மனோஜ்
07-11-2007, 07:30 AM
இங்க ரியாத்துலையும் இருக்கு ஆனா தமிழ்நாடு இல்ல கோரளா உணவுவிடுதிதான்
மோகன் சார் நல்ல சாப்பாடு சாப்டு 14 மாசம் ஆகுது ஞாபகபடுத்தீட்டிங்களே
அருமையா எழுதியிருக்கீங்க

அக்னி
09-11-2007, 10:54 PM
தாயகத்து நினைவும் சுவையும்,
விட்டுப் பிரிந்ததும்தான் அருமை புரிய வைக்கும்.

எடுத்தோம், வயிற்றுக்குள் தள்ளினோம் என்று முடிக்காமல்,
முதல்நாள் இரவிலிருந்து தொகுத்த நிகழ்வுகளும்,
பொங்கல், வடை, சட்னி சுவையே...

பாராட்டுக்கள் லியோ மோகன்...

leomohan
17-11-2007, 01:14 PM
மனோஜ், நேசம், அறிஞர் மற்றும் அக்னி அவர்களுக்கு நன்றிகள்.

சூரியன்
17-11-2007, 01:30 PM
நல்ல சுவையான திரி.

உதயா
17-11-2007, 05:51 PM
வியாபாரமாக நினைத்து அவர்கள் செய்தாலும், பல்லாயிரம் மைல் தொலைவில் தமிழக சிற்றுண்டியை எங்களை போன்றவர்களுக்கு வழங்கி வரும் சங்கீதா போன்ற பல தமிழ் உணவகங்கள் செய்து வருவது சமூக சேவை என்று சொன்னால் அது மிகையாகாது.
என்ன சேவையோ! ஒரு தோசைக்கு துபாயில் இருக்கும் சங்கீதாவும், சரவணபவனும் காக்க வைக்கும் நேரம் இருக்கிறதே.... சொல்லில் அடங்காது.. அனியாயத்துக்கு நம் பொருமையை சோதிப்பாங்க.. கூட்டம் இல்லாத நேரத்தில் கூட இதே கதை தான்.