PDA

View Full Version : காதல் குளிர் - 6



gragavan
31-10-2007, 08:23 PM
தாமதத்திற்கு மன்னிக்கவும் நண்பர்களே. எதிர்பாராத அலுவலால் தாமதமாயிற்று.

------------------------------------------------------------

ஓ ஆமோர்
பூ வண்ணம்
சஜோனி கோ
போல மின்னும்

சித்ரா பெங்காலியில் பாடினாள். சப்யா தமிழில் பாடினாள். ரெண்டும் ஒரே மெட்டுதான். தாஜ்மகால் இருவரையும் காதல் காலத்திற்கே அழைத்துச் சென்றது. அதான் டூயட் தொடங்கி விட்டார்கள்.

"ஸ்டாப் ஸ்டாப்... என்ன நடக்குது இங்க? ஃபெராவை எங்க கிட்ட குடுத்துட்டு....ரெண்டு பேரும் டூயட் பாடுறீங்களா? நீ என்ன பி.சுசீலாவா...சப்யா என்ன ஜெயச்சந்திரனா?" வேறு யார்? ரம்யாதான்.

"ஏண்டி....நாங்க டூயட் பாடுனா ஒனக்கென்னடி? ஆக்ரா கோட்டைலயும் நீங்க ரெண்டு பேரும் ஒட்டிக்கிட்டே வந்தீங்க. தாஜ்மகால்லயாவது எங்களைப் போலக் காதலர்களைத் தனியா விடுவீங்கன்னு பாத்தா....இங்கயும் பின்னாடியே வந்து நின்னா எப்படி?" சித்ரா விடுவாளா.

"என்னது காதலர்களா? இது யாரு? ஒங்க பையன். இவனை எங்க கைல குடுத்துட்டு... காதலர் வேஷமா? அதுல என்னடான்னா நீ பெங்காலில பாடுற. சப்யா தமிழ்ல பாடுறான்....என்ன நடக்குது?"

மனைவியானாலும் காதலிதானே. உதவிக்கு வந்தான் சப்யா. "ஹே ரம்யா...நான் கோலங்கள் அரசி எல்லாம் பாக்குறேன். எனக்குத் தமிழ் படிக்கவும் தெரியும். அ ஆ எல்லாம் படிப்பேன். மொதல் மொதலா...நான் சித்ரா கிட்ட தமிழ்லதான் காதலைச் சொன்னேன். தெரியுமா? அதுக்குச் சித்ரா அமீ துமாக்கே பாலோ பாஷின்னு பெங்காலில காதலைச் சொன்னா......"

"பாத்தியா பிரகாஷா... சப்யா மொதமொதல்ல காதலைச் சொல்றப்போ தமிழ்ல சொல்லீருக்கான். அதான் சித்ரா ஒத்துகிட்டா."

பிரகாஷாவுக்குச் சின்ன குழப்பம். ரம்யா என்ன தன்னையும் காதலைத் தமிழில் சொல்லச் சொல்கிறாளா என்று. அதையும் சொல்லி விட்டான். "ஓ ஆமாவா. ரம்யா நான் உன்னே காதலிக்கிறே"

நெஞ்சில் கை வைத்துக் கொண்டு...இன்னொரு கையைப் பின்னால் கட்டிக் கொண்டு...குனிந்து ப்ரகாஷா சொன்னது உண்மையிலேயே அழகாக இருந்தது. ரம்யாவிற்கும் அது பிடித்திருந்தது. ஒரு நொடி யோசித்தாள். "காதலிக்கிறே" என்பதில் ன் விட்டு விட்டதைக் கிண்டலடித்து பேச்சைத் திசை திருப்பலாமா எனவும் யோசித்தாள். அடுத்த நொடியே வேறு முடிவெடுத்தாள். சித்ராவும் சப்யாவும் ஆவலாக அவளையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். அதுவுமில்லாமல் ப்ரகாஷாவையும் பார்க்க அவளுக்குப் பாவமாக இருந்தது.

"சரி. ப்ரகாஷா... உக்காரு." சப்யாவையும் சித்ராவையும் உட்காரச் சொல்லி விட்டு தானும் உட்கார்ந்தாள். எல்லாரும் இருக்கையிலேயே பிரச்சனையைத் தீர்த்து விடவும் முடிவு செய்தாள். சப்யாவும் சித்ராவும் ப்ரகாஷாவும் அவள் வாழ்க்கையில் பாகம்தானே.

"ப்ரகாஷா... காதலிக்கிறேன்னு சொன்ன. நானும் காதலிக்கனும்னு எதிர்பார்க்குற. காதலிக்கிறதுன்னா நான் என்ன செய்யனும்?"

மலையாளக் கலைப்படம் பார்ப்பது போல இருந்தது சப்யாவிற்கும் சித்ராவிற்கும். ஆனாலும் இந்தக் கூத்தையும் பார்த்துவிடுவோம் என்று இருந்தார்கள். ப்ரகாஷா பேசினான். அவனுக்காக. தன் பசிக்குத் தன் கைதான் ஊட்டும் என்பதைத் தெரிந்துதான் வைத்திருந்தான்.

"ரம்யா... காதல்னா...என் மேலே ப்ரீத்தியா இருக்கனும்."

"ம்ம்ம்...ப்ரீத்தி. அதாவது அன்பு. இப்ப ஒன் மேல எனக்கு அன்பில்லைன்னு நெனைக்கிறயாடா?" அவன் கண்களைப் பார்த்துக் கேட்டாள்.

அதே கண்களுக்கே பதில் சொன்னான். "இருக்கு. அன்பு இருக்கு. ப்ரீத்தி இருக்கு. ஆனா அது மட்டும் போதாது. அம்ருதம் வேணும். அம்ருத பாத்ரமும் வேணும். ப்ரகாஷா வேற...ரம்யா வேற இல்ல. ரெண்டும் ஒன்னுதான்னு வேணும். மதுவேனோ திருமணமோ கல்யாணமோ....பேரு என்னவும் இருக்கட்டும். ஆனா வேணும்."

இதை அவன் சொல்லட்டும் என்றுதானே காத்திருந்தாள் ரம்யா. "ம்ம்ம்...கல்யாணம். உனக்கும் எனக்கும். ம்ம்ம்..."

சித்ராவால் பொறுக்க முடியவில்லை. "என்னடி யோசிக்கிற. பாரு அவனும் மனசுல இருந்ததச் சொல்லீட்டான். அவனுக்குத் தமிழ் கத்துக் குடுத்திரலாம்டி....இது ஒரு பிரச்சனையா?"

"அவனுக்குத் தமிழ் சரியா வராதது ஒரு பிரச்சனையே இல்லை ரம்யா. அவனுக்குத் தமிழே வரலைன்னாலும் எங்களுக்கு இங்கிலீஷ் தெரியும். அதுல பேசிக்கிறோம். ஆனா எல்லாருமே ஒன்னு யோசிக்கலை. ப்ரகாஷா யாரு? எப்படிப்பட்ட குடும்பம். எவ்ளோ வசதி. அதையெல்லாம் யோசிச்சீங்களா? நாங்க ஏழைங்க கெடையாதுதான். ஆனா நடுத்தரவர்க்கம். என்னையும் தம்பியையும் வளக்கவும் படிக்க வைக்கவும் எங்கப்பாம்மா எவ்ளோ கஷ்டப்பட்டாங்கன்னு எனக்குத்தான் தெரியும். இப்ப நானும் வேலை பாக்குறேன். தம்பியும் வேலைக்குப் போகத் தொடங்கீட்டான். அதுனால எங்க நெலமை முன்னேறியிருக்கு. ஆனாலும் எனக்குள்ள எங்கப்பாம்மாவோட பொண்ணுதான் இருக்கா. அப்படியிருக்கிறப்போ...வசதியா வளர்ந்த அவனை எப்படிடீ?"

சித்ராவிற்கு பொந்தில் இருக்கும் எலியில் வால் தெரிந்தது. அமைதியானாள்.

"சரி. ப்ரகாஷா....நீ வேலைக்கு வரும் போது..ஒங்கப்பா என்ன சொல்லி அனுப்பினாரு? மகனே...நாலஞ்சு வருசம் வேலையப் பாரு...அப்புறமா நாங்க ஒனக்குப் பொண்ணு பாக்குறோம். அந்தப் பொண்ணக் கட்டிக்கிட்டு சொத்தப் பாருன்னுதான சொன்னாரு. அதுனால்தான நீ வேலைக்கு வந்தப்பவே ஒரு வீடு எடுத்து.. கார் வாங்கிக் குடுத்து... அட... அந்தக் கார்லதானப்பா நாம ஊர் சுத்துனோம். அப்படியிருக்குறப்போ ஒங்கப்பா கல்யாணத்துக்கு ஒத்துக்குவாரா? எங்கப்பாம்மா என் பக்கம். ஒங்கப்பா? அவர் ஒத்துக்குவாரா?"

ப்ரகாஷா ஒன்றுமே பேசவில்லை. என்ன பேசுவதென்று தெரிந்தால்தானே....காதலை அளவிற்கு மீறி வளர்க்கத் தெரிந்த அவனுக்கு...அந்தக் காதலினால் வரப்போகும் பிரச்சனைகளே இப்பொழுதுதான் புரியத் தொடங்கின.

ரம்யா தொடர்ந்தாள். "ஒத்துக்கிட்டார்னு வெச்சிக்கோ...நோ ப்ராபளம்....நான் தயார். எங்க வீட்டுல தயார். எங்க வெச்சி கழுத்தை நீட்டனும்னு மட்டும் நீ சொன்னாப் போதும். ஆனா... ஒத்துக்கலைன்னா...என்ன செய்வ?"

"ரம்யா....சரியாதான் கேக்குற. அப்பா ஒப்பு கொண்டரே கல்யாணம். ஒப்பு கொண்டில்லானாலும் கல்யாணம். நான் கண்டிப்பா ஒன்னையக் கல்யாணம் பண்ணுவேன் ரம்யா. என்ன நம்பு." கெஞ்சினான். முதலில் ஆங்கிலத்தில் ஆசையோடு காதலைச் சொன்னான். பின்னர் கம்பீரத்தோடு தமிழில் சொன்னான். இப்பொழுது கெஞ்சலாகச் சொல்கிறான். எப்படியாவது அவனுக்கு ரம்யா வேண்டுமே.

"சரிப்பா...ஒங்கப்பா சத்தம் போடுவாரு. நீயும் எதுத்துப் பேசீட்டு வந்துருவ. ஒங்கம்மா? ஒங்கம்மா அழுதா? அப்ப என்னப்பா செய்யப் போற?"

தொடரும்...

அன்புரசிகன்
31-10-2007, 09:08 PM
கடைசியில் அம்மா சென்டிமன்ட் வந்துவிட்டது... வழமையாக காதலை பிரிக்க போடப்படும் வலை.....

ப்ரகாஷாவுக்கு சங்கடமான தருணம்.... தொடருங்கள்....

lolluvathiyar
01-11-2007, 09:06 AM
ஆகா ராகவா சம்ஜட்டுக்கு வந்தாச்சு ஆனா இன்னும் பைனல் டெசிசன் எடுக்காம இருக்கா ரம்யா. கேட்ட கேள்விகள் நியாமாக தான் தெரியுது. அது சரி இந்த பாகத்துல ஏனோ டிரைவரை மறந்திட்டீங்களே

அன்புரசிகன்
01-11-2007, 09:12 AM
வில்லன மறந்துட்டார் நம்ம அண்ணாச்சி....

அவரு பிக்கப்பண்ணப்போறாரோ??? :D

யவனிகா
01-11-2007, 11:07 AM
முக்கியமான இடத்தில தொடரும் போட்டுடீங்க?காதல் கல்யாணத்தில் முடியுமா?கண்ணீரிலா?காத்திருக்கிறோம்...தொடருங்கள்.

பூமகள்
01-11-2007, 06:16 PM
கதை இப்ப தான் சூடு பிடிச்சியிருக்கு..!!
ரம்யா கேள்விகளும் எதார்த்தம்..!!
தடைகளைத் தாண்டி வேள்விகளை வென்று வந்த வாழ்வு தானே இனிக்கும்..!!
விரைவில் நல்ல திருப்பம் விருப்பம் போல அமைய ரம்யாவுக்கும் பிரகாஷாவுக்கும் வாழ்த்துகள்..!!

மலர்
06-11-2007, 02:20 PM
ரம்யாவின் கேள்விகள் எல்லாமே பெண்களிடம் தோன்றும் யதார்த்தமான கேள்விகள்....
வழக்கமான அம்மா செண்டிமெண்ட்...
ப்ரகாஷா இனி என்ன பண்ணுவாரு...

தொடரும்...
படிச்சிட்டே இருக்கோம்

அக்னி
13-11-2007, 12:39 AM
எல்லாக் காதலர்களும், காதலிக்கத் தொடங்குமுன்னர் இப்படி பிரச்சினைகளை அலசி ஆராய்ந்தால், காதல் தோல்வி என்பது ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கும்.

கதை சுவாரசியம் குன்றவில்லை. பாகம் 5 வாசித்து நீண்ட நாட்களின் பின்னர் பாகம் 6 வாசிக்கின்றேன். அப்படியிருந்தபோதிலும் கதை மறக்கவில்லை என்பதே இதற்குச் சாட்சி.

டிரைவர் விடயம் இன்னும் வரலியே...

பாராட்டுக்கள்...

மன்மதன்
20-11-2007, 05:24 PM
பிரச்சனைகளை இப்படி தெளிவா அலசி பேசிட்டா எல்லோரும் காதலிக்கிறாங்க.. ஆனா விவரமானவங்க எல்லாம் இப்படித்தான்..