PDA

View Full Version : திரிகோணம்---01



அமரன்
06-10-2007, 08:41 AM
திரிகோணம்...02 (http://tamilmantram.com/vb/showthread.php?t=12683)


அமாவாசை இரவு. குளத்தில் குதூகலிக்கும் தவளைகளில் கொடூர சங்கீதம் காதை கிழிக்கவில்லை. பக்கத்தில் இருந்த பூவனத்து வண்டுகளின் ரீங்கார கானம் காதில் கேட்கவில்லை. ஏன்... ஓட்டமும் நடையுமாக அசையும் கைக்கடிகார முட்கள்கூட டிக் டிக் நிசப்தத்தை கடைப்பிடித்தன. சடைத்து வளர்ந்திருந்த வேப்பமரத்தில் பறவைகளின் அசுமாத்தம் ஏதும் செவிகளில் விழவில்லை. ஆனாலும் தனிமையை உணராத உணர்வுடன் குளத்துக்கரையில் என்னை மறந்து அமர்ந்திருந்தேன். அப்போது சின்னப்பறவை ஒன்று மூக்கு நுனியை உரசிப்பறந்து சென்று திடுக்கிடவைத்தது. திடுக்கிட்ட அதே கணத்தில் தோளில் ஒரு கை அழுத்தமாக பிடித்தது.

திரும்பினேன்... இருட்டை துடைத்துக்கொண்டிருந்த மின்னொளியில் அம்மா நிற்பது துலக்கமாக தெரிந்தது. என்ன என்பது போலப் பார்த்தேன். அவள் வாயசைந்தது. ஒலிக்குறிப்பு கேட்கவில்லை. சலங்கை ஒலி திரைப்படத்தின் 'மௌனமான நேரம்' எனும் பாடலை உயர் செறிவாக என் காதுக்குள் நழைத்துக்கொண்டிருந்த 'வோக்மன்'னை அணைத்தேன்.

"சாமி வீதி உலா வர தொடங்கிட்டிது. வந்து பூ போட்டு, நல்ல புத்தியைக் கொடுன்னு வேண்டிக்கோ" அம்மா சொன்னாள்.

ஆம்.. இன்று எமது ஊர்கோவில் திருவிழா. அதற்கு வந்தவந்தான் கோயிலின் உள்ளே போக பிடிக்காமல் பண்பலையில் கலந்து வரும் பாட்டுகளின் துணையுடன் குளக்கரையில் ஒதுங்கி இருந்தேன். வீட்டிலிருந்து புறப்படும்போதே இதற்கு இணங்கிய அம்மாவும் தடுக்கவில்லை. அம்மாவின் விருப்பத்திற்கு இசைந்து வெளியே வந்த சாமியை தரிசிக்க போனேன். கையில் அம்மா தந்த மலர்கள் சில இரவிலும் மகிழ்வுடன்.

எட்டுப்பேர் கட்டைகளை தாங்கி இருங்க, என் தலை இருந்த உயரத்தில் அம்மனின் பாதம். சனசமுத்திரத்தில் நீந்தி, அம்மனுக்கு கிட்டப்போவது மெத்தக்கடினமாக இருந்தது. கொஞ்சம் எட்ட இருந்தே கீழே இருந்து வானுக்கு பூ சாரல் தூவினேன். அப்போது பார்த்து கொஞ்சம் பலமாக அடித்த காற்று தூவிய பூக்களை திசைமாற்றியது. அம்மனுக்கு பக்கத்திலிருந்த அவள் மீது பூக்களை சொரிந்தது. அவளும் அம்மனின் பிரதியாக ஆனால் இயற்கையில் ஜொலித்தாள். ஒருவேளை அம்மந்தான் தனக்கு செய்யும் கிரியைகளை காண மனித உருவில் வந்துள்ளாளோ என ஒருகணம் எண்ணத்தோன்றியது. மறுகணம் எனது மடைத்தனதை நினைத்து சிரித்துக்கொண்டேன். சிரித்தபோது சின்னதாகிய கண்ணில் பூ போட்ட புண்ணியவானை அவள் தேடாமலே இனக்கண்டுகொண்டது புலப்பட்டது.

"அடப்பாவி ஏன்டா சிரிச்சே.. இப்ப பாரு நீதான் செய்தே என்று இலகுவாக அறிந்துகொண்டாளே" என்று என்னை நானே திட்டிக்கொண்டேன். அப்போது அவள் கண்களில் தெரிந்த உணர்ச்சியை என்னால் உய்த்தறிய முடியவில்லை.. அதற்குள் சாமி நகரத்தொடங்க என்னை விட்டு நீங்கிய சனவானதிரளில் அவளும் சேர்ந்துகொண்டாள்..

ஒற்றையில் நின்ற எனக்குள் கற்றையாக போராட்ட அலைகள். யாரவள்? இதற்கு முன் அவளை பார்த்ததில்லையே? சிந்தித்தபோது 'ஆமா எப்பதான் நீ பொண்ணுகளை பார்த்திருக்கே. பொண்ணுகள் உன்னை பார்த்திருக்கு. மீறி பார்த்த பொண்ணுகளை சும்மா விட்டிருக்கியா.' என் மனச்சாட்சி எகத்தாளமாக உரைத்தது.. அப்போதுதான் என்னையே நான் எடைபோட்டேன்.

சின்ன வயசிலிருந்தே சுட்டித்தனத்தின் அதிபதி நான். வளர்ந்து பள்ளிப்படிப்பு முடித்து கல்லூரிக்கு போகும்போது சுட்டித்தனம் வெட்டிச்செல்ல ரவுடியிசம் என்னை ஒட்டு மொத்தமாக குத்தகைக்கு எடுத்துக்கொண்டது. ரவுடியிசம் என்றால் வெட்டு குத்து இல்லை. பொண்ணுங்களுக்கு மட்டும் நான் கெட்டவன். பொண்ணுகளைக் கண்டால் எனக்கு பிடிக்காது. ஏன்னு இது வரை தெரியாது. பொண்ணுங்க கூட யாராச்சும் சிரிச்சுப் பேசினால் அவங்களையும் பிடிக்காது. அதனால எனது நட்பு வட்டம் ரொம்பச் சின்னதாக இருந்தது. பொண்ணுங்களுக்கு நான் கொடுக்கும் உளவியல் சேட்டைகள் ஊர் பிரசித்தம். என்னை பற்றி வீட்டுக்கு வரும் புகார்கள் அதிகம் என்றாலும் என்னை ஏதும் கேட்பதில்லை. காரணம் என்மேல உள்ள பாசமில்லை..கேட்டால் புகார் செய்த பொண்ணுக்கு டாச்சர் இன்னும் அதிகரிக்கும் என்பதுதான் காரணம். ரொம்ப நல்லவங்கல்ல எனது குடும்பத்தார்.பொண்ணுகளும் என்னைவிட்டு ஒதுங்கியே இருந்தாங்க. அதனால ஊரில் உள்ள பல பெண்களை எனக்குத் தெரியாது. அவங்களுக்கு என்னை நல்லாக தெரியும் என்பதை சொல்ல வேண்டுமா என்ன? நல்லவனை விட கெட்டவனைத்தானே அதிகம் தெரிஞ்சு வைச்சுங்கிறாங்க.. தப்பா நினைக்காதீங்க அவங்க பாதுகாப்புக்கு அது அவசியமாகிறது.

அப்படி எனக்குத் தெரியாத ஒரு பெண்ணாக இவள் இருக்கலாம் என்று முடிவு செய்தேன். ஆனாலும் அவள் முடிக்க விடுவதாக இல்லை. பெண்களைக் காணும்போது வழக்கமாக ஏற்படும் உணர்வு இப்போ தூரமாகிய உணர்வு. அதன்பின் கோயிலில் அவளை பார்க்கவில்லை.

வீட்டுக்கு வந்து தூக்கத்தை துணைக்கழைத்தால் என்னைப் பற்றி தப்பாக நினைத்திருப்பாளோ என்ற நினைப்பு தூக்கத்திற்கும் எனக்கும் இடையில் தடுப்பு சுவராது. தப்பாக நினைத்தால் நினைத்து விட்டுப் போகட்டுமே என்பது ஒரு முனையிலும் தப்பாக நினைத்து விட்டாளே என்பது எதிர்முனையிலுமாக நின்று குருசேத்திரம் விஞ்சிய போரை நிகழ்த்திக்கொண்டிருந்தன.. வழக்கம்போலவே எப்படி, எப்போ தூங்கினேன் என்பது தெரியாமலே தூங்கிப்போனேன்..

காலையில் வழக்கம்போலவே நேர காலத்திற்கு தயாராகி தெருமுனை டீக்கடையில் டீயும் சிகரட்டுமாக கல்லூரி நண்பர்கள் சிலருடன் அரட்டையின் இருந்தேன்.

"என்னதான் வீட்டில டீ குடித்தாலும் இந்த இன்பம் கிடைக்காதுடா" நண்பன் ஒருவன் சொன்னான். "ஆமாடா ஓசில டீயும், சைடிஸாக சிகரட்டும் தந்த இதுவும் சொல்லுவே இதுக்கு மேலயும் சொல்லுவே" இன்னொருவன் வார சிரிப்பலை மிதந்தது. "என்னம்மா என்ன வேணும்" என்ற கடை முதலாளியின் குரலில் நிமிர்ந்த என் பார்வையில் அவள் பட்டாள்.

இரவு கோயிலில் பூத்த அதே பூ. சிகரட் பிடித்திருந்த எனது கை தன்னிச்சையாக மறைந்தது. நட்பு வட்டாரம் வியப்பில் விழி விரிப்பது ஓரவிழியில் தெரிந்தது. தேவையான பேஸ்டை வாங்கி விட்டு வீட்டை நோக்கி சில அடிகள் வைத்தவள் மீண்டு வந்தாள். என்னருகில் நின்றாள். பூப்பூக்கும் ஓசை மனிதனுக்கு கேட்பதில்லை என்பது பொய்த்தது.

"உங்க கூட அம்மா பேச வேண்டுமாம். கொஞ்சம் வீட்டுக்கு வர்ரீங்களா" என்றாள்.

பெண்கள் கிட்ட வந்தாலே கொந்தளிக்கும் கடலாகும் நான் அமைதியாக இருந்ததால் சினேக அலைகளும் அமைதி காத்தன.

"மாலையில் வருகிறேன்". சொன்னதும் சென்றுவிட்டாள்.

நட்புகள் வியூகமிட்டன.

"மச்சான்..என்னடா இது..நீயா பேசினே..வைரஸ் புகுந்த சிஸ்டம் மாதிரி இருக்கோம்டா" எல்லோரும் ஒரே மாதிரி தாக்கினார்கள்.

"அப்புறம் பேசிக்கொள்வோம்டா...காலேஜுக்கு நேரமாச்சு வாங்க போவோம்" அப்போதைக்கு அவர்கள் போதைக்கு எலுமிச்சை தேய்த்தேன்..கடைக்காரரை நெருங்கினேன். யார் என்று சொல்லுங்க என்று நெருக்கினேன்.

"ஊருக்கு புதுசா வந்திருக்காங்க. ஐயர் குடும்பம். அப்பா இல்லை. அம்மாவும் இவளும் மட்டும்தான். கோயிலுக்கு கிழக்காலே வீடு." நிறுத்தினார்..பார்த்த பார்வையின் அர்த்தம் அறிந்து "பேரு கலா" என்றார்.. நான் வாங்கடா போகலாம் என்றேன்...
நரேன் உன்னைப் பற்றி தெரியாம சொல்லி இருப்பா மனசுல வைச்சுக்காதேப்பா டீக்கடை சொன்னது..சிரித்து விட்டுசென்றோம் கல்லூரிக்கு...

தொடரும்...

சிவா.ஜி
06-10-2007, 09:02 AM
ஓஹோ இதுதான் அந்தக்'கலா'வா....சொந்த கதையா..இல்லை கதையா..?சொல்லும்விதம் சூப்பர்.அமரன் உரையாடல்களில் நல்ல தேர்ச்சி இருக்கிறது.பாத்திரப்படைப்பும் அருமை.முடிச்சொன்றைப்போட்டு தொடருமிட்ட பாங்கு அருமை....ஆவலைத் தூண்டும் அழகான தூண்டில்...தொடருங்கள் அமரன்...வாழ்த்துக்கள்.

lolluvathiyar
06-10-2007, 12:17 PM
அமரன் கதையின் தொடக்கத்தில் இருப்பதால் கருவை பற்றி கருத்து சொல்ல முடியாது. ஆனால் கதையின் எழுத்து நடை, பயன்படுத்தி இருக்கும் சில வாசகங்கள் மெய் சிலிர்க்க வைத்தன.


நல்லவனை விட கெட்டவனைத்தானே அதிகம் தெரிஞ்சு வைச்சுங்கிறாங்க.. தப்பா நினைக்காதீங்க அவங்க பாதுகாப்புக்கு அது அவசியமாகிறது.


சரியான வரி, சமுதாயத்துக்கு பெண்களுக்கு மிக மிக தேவையான வரி. இந்த வரிக்கு பிடியுங்கள் 500 பொற்காசுகளை

பூமகள்
06-10-2007, 01:50 PM
அதிக நேரம் இந்த திரிகோணத்தைச் சுற்றி படித்தவள் நானாகத்தான் இருக்கவேண்டும். ஆவ்லைன் போனாலும் இந்த பக்கத்தை அப்படியே வைத்து படித்து ரசித்தேன்.
சூப்பர் அமர் அண்ணா...
ஓ..........இவங்க தான் அந்த 'கலா' நிதி கலாவா???
நிஜகதை போலவே பின்னப்பட்டு இருக்கு.... உண்மையை எனக்கு மட்டும் ரகசியமா சொல்லுங்க அண்ணாவ்...
அசத்தலான வர்ணிப்புகளுடம் கதை ஆரம்பித்த விதம் அருமையோ அருமை.
அந்த குளத்தில் கதை நாயகரோடு நானும் இருந்த உணர்வு..
அப்புறம்.,.... காற்று முத்தமிட்ட மலர்கள் தேவதையின் மேல் படும் காட்சி... கண்முன்னே காட்சியை படமாக்கியிருந்தது உங்களின் எழுத்துக்கள்..!!
அசத்திட்டீங்க... ரொம்பவும் ரசித்தேன்..!!
ஒரே ஒரு நெருடல்.. நரேனும் அவர் நண்பர்களும் சிகரெட் குடிப்பது.. எதார்த்தமாக இருந்தாலும் என்னால் ஏனோ ஏற்றுக் கொள்ளமுடியலை. அதை நாயகியின் வரவு கண்டு மறைப்பது..... இதற்கு அவர் அப்பழக்கம் இல்லாமலே இருந்திருந்தால் சிறப்பாக இருக்கும்..

அசத்தல் கதை... பாராட்டுகள் அமர் அண்ணா....!
எழுதினா இப்படி தான் எழுதனும்னு சொல்லாம சொல்றீங்க...சூப்பர்..!!
அடுத்த பகுதியைக் காண ஆவலாய் உள்ளேன்.
கலா வீட்டிற்கு நாங்களும் வரனுமே....!!:D:D:D:D

ஜெயாஸ்தா
06-10-2007, 03:47 PM
அமரன் உங்கள் கதையை இரண்டு மூன்று முறை படித்தால்தான் நம்ம மரமண்டைக்கு ஏறுமே என்று நினைத்து உள்ளே வந்தால் எளிமையாய் தந்திருக்கிறீர்கள். படிக்கும்போது காட்சிகள் அப்படியே மனக்கண்ணில் நிழலாடுகிறது. சீக்கிரம் தொடருங்கள்.

அமரன்
06-10-2007, 05:36 PM
ஓஹோ இதுதான் அந்தக்'கலா'வா....சொந்த கதையா..இல்லை கதையா..?சொல்லும்விதம் சூப்பர்.அமரன் உரையாடல்களில் நல்ல தேர்ச்சி இருக்கிறது.பாத்திரப்படைப்பும் அருமை.முடிச்சொன்றைப்போட்டு தொடருமிட்ட பாங்கு அருமை....ஆவலைத் தூண்டும் அழகான தூண்டில்...தொடருங்கள் அமரன்...வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி சிவா. இதுவரை வந்த கதைகளில் உரையாடல் "சுத்தமாக" இருந்ததில்லை.. ஏன்னு தெரியவில்லை. உரையாடல் எனக்கு வராதா என்று என்னையே நான் கேட்டுக்கொண்ட நாட்கள் அதிகம். சரி முயல்வோம் என எண்ணினேன். துணிந்தேன். கருமமே கண்ணா இருந்தேன்..உங்கள் பாராட்டு புது தெம்பைத் தருகிறது. தொடர்கின்றேன்..

இது உண்மைக் கதையா, சொந்தக்கதையா என்பதற்கும் இதுதான் கலாவா என்பதற்கும் சிறு புன்னகையை பதிலாக்குகின்றேன் வேறு வழி இல்லாமல். கலாதியாக தொடர உழைக்கின்றேன் சிவா..

அமரன்
06-10-2007, 05:38 PM
வாத்தியாரிடமிருந்து பாராட்டும் பொற்கிளியுமா.. மெய் சிலிர்க்கிறது...என்னைக் கவர்ந்த வாக்கியத்தில் அதுவும் ஒன்று. இதற்கு எதிரான வாதங்கள் வரலாம் என நினைத்தேன்.. சாதகத்திற்கு முதலாவது வாதம் வலு சேர்க்கிறது. நன்றி

அமரன்
06-10-2007, 05:44 PM
நன்றி பூமகள். சிகரெட் தேவை இல்லை என்றுதான் நினைத்தேன். சினிமாவில் இவ்வாறான கேரக்டர் சதா சிகரெட்டுடன் திரிவதாகக் காட்டுவதை பார்த்து சலித்தவன் நான். ஆனால் நரேனை அறியாமல் கலாமீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு இருப்பதை காட்ட கதையில் நுழைத்த விரும்பா விருந்தாளி சிகரட். வேறு ஏதாவது யோசித்து இருந்தால் அகப்பட்டு இருக்கும்.. காலை மன்றம் வந்து தட்டச்சி அப்படியே பதிந்த கதை ஆகையால் யோசிக்கும் அவகாசம் குறுகிவிட்டது..
உங்களுக்கு அது நெருடலாக தோன்றியதின் காரணம் தெரிந்துகொள்ள அவா...அடுத்த படைப்புகளில் கவனத்தில் எடுத்து திருத்தலாம் அல்லவா?
இதுதான் அந்தக்கலாவா என்றால் நரேன் யாருங்க?

அமரன்
06-10-2007, 05:47 PM
அமரன் உங்கள் கதையை இரண்டு மூன்று முறை படித்தால்தான் நம்ம மரமண்டைக்கு ஏறுமே என்று நினைத்து உள்ளே வந்தால் எளிமையாய் தந்திருக்கிறீர்கள். படிக்கும்போது காட்சிகள் அப்படியே மனக்கண்ணில் நிழலாடுகிறது. சீக்கிரம் தொடருங்கள்.

வெற்றி வெற்றி என துள்ளிக்குதிக்கிறது உள்ளம். இதை இதைத்தான் எதிர்பார்த்தேன். இப்படி ஒரு படைப்பு கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அப்படியே உங்களுக்க்கு தோன்றியதால் நெகிழ்ந்தேன்.
நன்றி ஜேம்.

aren
06-10-2007, 05:56 PM
கலாவுடன் நடத்திய லீலைகளா. நல்லா வந்திருக்கு அமரன். தொடருங்கள். எல்லாத்தையும்தான் சொன்னேன்.

இனியவள்
06-10-2007, 05:57 PM
காட்சிகளின் வர்ணிப்புக்களும்
கதை நகரும் கோணமும் அருமை அமர்

வாழ்த்துக்கள்

தொடரும் இன்னும் ஆவலாய் விழித்திருக்கிறோம்

பூமகள்
07-10-2007, 05:29 AM
உங்களுக்கு அது நெருடலாக தோன்றியதின் காரணம் தெரிந்துகொள்ள அவா...அடுத்த படைப்புகளில் கவனத்தில் எடுத்து திருத்தலாம் அல்லவா? இதுதான் அந்தக்கலாவா என்றால் நரேன் யாருங்க?
நாம் படைக்கும் படைப்புகள் நல்ல சிந்தனையை எடுத்தியம்ப வேண்டும் என்று எப்போதும் விரும்புபவள் நான். சிறு வயது முதலே சிகரெட் நெடியோடு வெளியில் யாரைப் பார்த்தாலும் கோபத்தில் என் முகம் சிவக்கும். இதற்கு காரணம், அந்த நெடியால் சிகரெட் பிடிப்பவர் பாதிப்பதை விட அவர் பிடிக்கும் போது அருகில் இருப்போர் பாதிப்பது தான் அதிகம்(Passive Smoking). இந்த விசயம் தெரிந்த படித்தவர்கள் கூட பொது இடங்களில் அத்தகைய தவறை செய்துகொண்டே தான் இருக்கின்றனர். தனக்கு கொல்லி வைப்பதுடன் ஊருக்கே கொல்லி வைக்கின்றனர்.
ஆகையால், நரேன் என்ற உங்களின் கதை நாயகன் அதே தவறை டீ கடையில் அமர்ந்து செய்வதை கதை நாயகன் நல்லவனாகத் தான் இருக்க வேண்டும் என்று உள்மன அறிவுறுத்தலுடன் பார்த்ததாலோ என்னவோ... ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.
முடிந்த வரை, இயல்பாக இருக்க வேண்டுமே என்பதற்காக சிகரேட் போன்ற விசயங்களை கதையில் நுழைக்காமல் இருந்தால் இன்னும் நன்றாய் இருக்கும் என்பது என் தாழ்மையாக கருத்து.
நீங்கள் என் எண்ணத்தைக் கேட்டதால் மனத்தில் உள்ளதை அப்படியே கொட்டிவிட்டேன். என் எண்ணத்தை வெளியிட வாய்ப்பளித்த அமர் அண்ணாவிற்கு மிகுந்த நன்றிகள்.

தளபதி
07-10-2007, 11:23 AM
ஒற்றையில் நின்ற எனக்குள் கற்றையாக போராட்ட அலைகள்.
தொடரும்...

அமரரே!! உங்கள் எழுத்துக்களில் நீங்கள் கேட்காமலேயே கவிதைதாய் வந்து அமர்ந்து விடுகிறாள் போலும். அழகு.

தமிழ் சினிமா போல் கதாநாயகனுக்கு நல்ல பில்டப் கொடுத்துள்ளீர்கள். இதை எவ்வாறு எடுத்துச்செல்லப் போகிறீர்கள் என்று ஆவலாக உள்ளேன்.

மௌனமான நேரத்தில் மௌனமாக அம்மா வாயசைத்தது வாக்மேனாலா?? ஹா ஹா ஹா, வாழ்வில் அன்றாடம் நாம் சந்திக்கும் விசயங்களை கதையில் கொண்டுவரும்போது அது நம்மை அதனுள் ஈர்த்துக்கொள்ளும்.

மலர்
07-10-2007, 12:33 PM
வாரே வா...
இவங்க தான் அந்தக்'கலா'வா....சொந்த கதை தானே
இல்லை என்றெல்லாம் சொல்லக்கூடாது....
நரேன் பேர் வேற எங்கேயோ இடிக்குது...

அமரன் அண்ணா...உங்களின் அழகிய தீ... படித்து நிறைய குழம்பி விட்டேன்... ஏனென்றால் படிக்க கடினமாக இருந்தது...

ஆனால் இந்த கதை அப்படியில்லை....கதையின் எழுத்து நடை நல்லா இருக்கு.... அதேபோல் உண்மையிலேயே கதையோடு ஒன்றி போய் எழுதியிருக்கீங்க....


தொடரும்...

படிக்க ரொம்ப ஆவலா இருக்கு....
அழகான கதையை கொடுத்த அமரன் அண்ணாவுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்...

இபணம் அன்பளிப்பு = ஹீ..ஹீ...தங்கை வருமை கோட்டிற்கு கீழ் வாழ்வதால் கிடையாது..

அமரன்
07-10-2007, 06:09 PM
நன்றி ஆரென் அண்ணா.. நேரம் கூடி வந்தால் தொடர்வேன்... எல்லாவற்றையும் சொன்னேன்..
நன்றி இனியவள்..
பூமகள்,
புகைப்பிடித்தலுக்கு நான் எதிரி. புகைப்பிடிப்பிடிப்பவர்கள் எனக்கு எதிரி. தன்னை அழித்து பக்கத்தில் உள்லவர்களையும் அழிப்பவர்களை எனக்கு என்றுமே பிடிப்பதில்லை..இனிவருங்காலங்களில் தவிர்க்க முயல்கின்றேன்...
நன்றி.

அமரன்
07-10-2007, 06:12 PM
படிக்க ரொம்ப ஆவலா இருக்கு....
அழகான கதையை கொடுத்த அமரன் அண்ணாவுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்...
இபணம் அன்பளிப்பு = ஹீ..ஹீ...தங்கை வருமை கோட்டிற்கு கீழ் வாழ்வதால் கிடையாது
ஏம்மா உனக்கு நான் என்ன பண்ணினேன். கலவரத்தை உண்டுபண்ணுகிறாயே...சொந்தக்கதை, சோகக்கதை, எங்கோ இடிக்குதுன்னு இடியைத் தூக்கி என் தலையில் போடுகிறாய்... பாராட்டே போதும். 5 தந்துவிட்டு 500 வாங்குவாய் என்பது எனக்கு தெரியும்..

மிக்க நன்றி...ரொம்ப எதிர்பார்க்காதே..கதை நகைச்சுவையாகக் கூட முடியலாம்

இணைய நண்பன்
07-10-2007, 06:19 PM
அமரன் - அசத்தலான தொடர்.அழகிய கதை அமைப்பு.தொடருங்கள்.வாழ்த்துக்கள்

அமரன்
07-10-2007, 06:56 PM
நன்றி இக்ராம். உங்களைப் போன்ற மன்ற சொந்தங்களின் ஊக்கமே எனது எழுத்துக்கு ஊக்கியாக உள்ளது.

அமரன்
07-10-2007, 06:59 PM
மௌனமான நேரத்தில் மௌனமாக அம்மா வாயசைத்தது வாக்மேனாலா?? ஹா ஹா ஹா, வாழ்வில் அன்றாடம் நாம் சந்திக்கும் விசயங்களை கதையில் கொண்டுவரும்போது அது நம்மை அதனுள் ஈர்த்துக்கொள்ளும்.
ஆம் தளப்தி. அன்றாடம் நாம் காண்பவற்றை சற்று வித்தியசமாகச் சொல்லும்போது அதன்பால் தன்னிச்சையாக ஈர்க்கப்படுவோம். எனது அனுபவத்தில் அறிந்தது இது. உங்கள் அனைவரினதும் எதிர்பார்ப்பைப் பூர்த்தியாக்க என்னால் முடிந்தவரை முயற்சி செய்கின்றேன். நன்றி தளபதி.

பூமகள்
07-10-2007, 07:14 PM
பூமகள்,
புகைப்பிடித்தலுக்கு நான் எதிரி. புகைப்பிடிப்பிடிப்பவர்கள் எனக்கு எதிரி. தன்னை அழித்து பக்கத்தில் உள்லவர்களையும் அழிப்பவர்களை எனக்கு என்றுமே பிடிப்பதில்லை..இனிவருங்காலங்களில் தவிர்க்க முயல்கின்றேன்...
நன்றி.
என் போலவே உங்களின் எண்ணமும் இருப்பது கண்டு மிகுந்த மகிழ்ச்சி அண்ணா.
என் அன்பு வேண்டுகோளை ஏற்றமைக்கு மிகுந்த நன்றிகள் அமர் அண்ணா.
சும்மா கலக்குங்க ஒரு கலக்கு...!!
அசத்தபோவது யாரு????
...
...
...
...
...
...
இன்னும் தெரியலையா??
அது....


அமர் அண்ணா.......!! தான்..

அழகிய தீக்கு அடுத்து நம்மை வர்ணனைகளால் அழகிய தமிழ்த்தீபமேற்றிய அமர் அண்ணா, திரிகோணத்தில் நம்மை விரிகோணமாக்கி விசாலமாக விழிக்க வைப்பார் என்பது மட்டும் உறுதி...!!

முன் வாழ்த்துகள் அமர் அண்ணா.

மலர்
08-10-2007, 08:03 PM
ஏம்மா உனக்கு நான் என்ன பண்ணினேன். கலவரத்தை உண்டுபண்ணுகிறாயே...சொந்தக்கதை, சோகக்கதை, எங்கோ இடிக்குதுன்னு இடியைத் தூக்கி என் தலையில் போடுகிறாய்... பாராட்டே போதும். 5 தந்துவிட்டு 500 வாங்குவாய் என்பது எனக்கு தெரியும்..

ஒண்ணுமே பண்ணலை தான் நீங்கள்

அதுக்காக அப்படியே விட்டுற முடியுமா என்ன..........??

ம்...அது என்னோட உரிமையாக்கும்...