View Full Version : ளகர ழகர வேறுபாடுகள்
பாரதி
26-09-2007, 04:26 PM
ளகர ழகர வேறுபாடுகள்
நண்பர்களே, ளகர ழகர வேறுபாடுகள் என்ன என்பதையறிந்து இயன்ற வரையில் பிழையின்றி எழுத முயற்சி செய்வோம்.
நன்றி : ஞா. தேவநேயப்பாவாணர்
அளம் = உப்பு
அழம் = பிணம்
அளகு = பெண்பறவை, கோழி
அழகு = அலங்காரம்
அளி = தா, அருள், கா, குழை, அருள், வண்டு, சேறு
அழி = கெடு
அளை = கல, துழாவு, குழை, வளை, தயிர், வயிற்றிளைச்சல்-சீதபேதி
அழை = கூப்பிடு, பெயரிட்டு வழங்கு
ஆளம் = ஒரு விகுதி
ஆழம் = ஆழம் (depth)
ஆளி = அரசன், அரசி, சிங்கம், யாளி, ஒரு விகுதி
ஆழி = கடல், மோதிரம், சக்கரம்
ஆள் = புழங்கு, பயன்படுத்து, அரசு செய், அதிகாரம் செலுத்து, (a person)
ஆழ் = அமிழ், மூழ்கு, ஆழமாகு
இள = மெலி, மென்மையாகு, மெல்லிய (young)
இழ = இழ(த்தல்) (to lose)
இளி = தாழ், பல்லைக்காட்டு, தாழ்வு, ஒரு சுரம்
இழி = தாழ், இறங்கு, பழி
இளை = மெலி, களை, மூச்சு, வாங்கு, காவற்காடு
இழை = தேய், செய், நூலிடு, நகை, நூல்
உளவு = வேவு
உழவு = உழுதல், பயிர்த்தொழில், வருத்தம், முயற்சி
உளி = ஓர் ஆயுதம், இடம், 7-ம் வேற்றுமை உருபு
உழி = இடம், 7-ம் வேற்றுமை உருபு
உளு = புழுவால் அரிக்கப்படு, புழு
உழு = உழு(தல்) (to plough)
உளை = நோகு, சேறு
உழை = வருந்தி வேலை செய், இடம், மான், 7-ம் வேற்றுமை உருபு
ஒளி = மறை, வெளிச்சம், புகழ், அறிவு
ஒழி = அழி, நீக்கு
களி = மகிழ், கட்குடி, மகிழ்ச்சி, குடியன், செருக்கு, மதம், கிண்டியவுணவு
கழி = நீக்கு, நீராய் வெளிக்குப் போ, கோல், கடற்கால்வாய், மிகுந்த
களை = இளை, வலியிழ, நீக்கு, முகவழகு, வேற்றுப்பயிர், அலகு (சங்கீதம்)
கழை = கோல், கரும்பு, மூங்கில்
காளி = ஒரு பெண் தெய்வம், பேய்த்தலைவி
காழி = சீகாழி
சீகாளி = திருக்காளி
சீகாழி = ஓர் ஊர்
காள் = நாயொலி
காழ் = முற்று, வைரம், விதை, முத்து, முத்துகாலை, பகை
கிளவி = சொல்
கிழவி = முதியவள்
கிளி = ஒரு பறவை
கிழி = கிழி(த்தல்), துணி, பணமுடிச்சு, படம்
கீள் = கிழி, தோண்டு
கீழ் = கீழ் (down, under), தாழ்ந்த, இழிவான, கீழேயுள்ள, கிழக்கத்திய
குளவி = காட்டுமல்லிகை, தேனீ
குழவி = குழந்தை, அரைக்கும் கல்லுருளை
குளம்பு = (குதிரை, மாடு முதலிய) விலங்கின் பாதம்
குழம்பு = கல, மயங்கு, திண்ணிய சாறு, சேறு
குளி = முழுகு
குழி = பள்ளம் விழு, பள்ளாமாக்கு, பள்ளம், கிடங்கு, துவாரம்
குளுகுளு = குளிர்ச்சிக்குறிப்பு, குழைவுக் குறிப்பு
கூழம் = எள்
கூளி = பேய்
கூழி = குள்ளப்பசு
- தொடரும் -
ஓவியன்
26-09-2007, 04:35 PM
றகர,ரகரவைத் தொடர்ந்து ளகர ழகர வேறுபாடுகள்......
அருமையான முயற்சி அண்ணா!
சிறப்பாகத் தொடர என் வாழ்த்துக்கள்......!
மீனாகுமார்
26-09-2007, 04:47 PM
நிறைய புது வார்த்தைகளையும் கற்றுக் கொண்டேன்... கண்டிப்பாக தொடருங்கள்...
இனியவள்
26-09-2007, 04:50 PM
நன்றி பாரதி அண்ணா
எனக்கு மிகவும் பயனுள்ளதாய் இருக்கும்
தொடரும் என்ற குறிப்பு ஆவலாய்
எதிர் நோக்க தூண்டுகிறது
பல இல்லை நிறைய வார்த்தைகள் புதியவை எனக்கு
நன்றி அண்ணா
நல்ல விஷயங்களை எங்களுடன் பகிர்ந்துகொண்டு நாங்களும் கற்றுக்கொள்ள வழிவகுத்த பாரதி அவர்களுக்கு என் நன்றி.
தொடருங்கள். படிக்க ஆவலுடன் இருக்கிறேன்.
புரியாத பல விஷயங்கள் தெரிகின்றன. மனதில் வைத்துக்கொள்ளவேண்டும்.
நன்றி வணக்கம்
ஆரென்
பாரதி
27-09-2007, 06:08 AM
மிக்க நன்றி ஓவியன், மீனாகுமார், இனியவள், ஆரென்.
-----------------------------------------------------------------
கூளம் = விலங்கின் உணவு, கீரையிலுள்ள தூசி
கூழம் = எள்
கேள் = செவி கொடு, விசாரி, வினவும் கேட்டறி, இனம்
கேழ் = பொருந்து, நிறம்
கொளு = பொருந்து(clue)
கொழு = கொழுப்புவை, செழி
கொளுந்து = ஏரி
கொழுந்து = இள இலை
கோளி = கொள்பவன், பூவாது காய்க்கும் மரம்
கோழி = ஒரு பறவை
சளக்கு = ஓர் ஒலிக்குறிப்பு
சழக்கு = குற்றம்
சளி = குளிர், தடுமம்
சழி = சப்பையாக்கு
சுளி = முகங்கோணு, கோபி
சுழி = வளை, வட்டமிடு, வட்டம், வட்டமயிரொழுங்கு, ஓர் எழுத்து (பிள்ளையார் சுழி)
சூள் = ஆணை (சபதம்)
சூழ் = ஆராய், நாற்புறமும் வளை, முற்றுகையிடு
சோளம் = ஒரு தானியம்
சோழம் = ஒரு நாடு
தளை = கட்டு, விலங்கு, ஒரு செய்யுளிலக்கணம்
தழை = செழித்தோங்கு, இலை, குழை
தாளம் = இசைக்காலவறுதி
தாழம் = தாழ்வு
தாளி = குழம்பைத்தாளி, ஒரு வகைப்பனை, கள்ளி (தாளியடித்தல் = பரம்படித்தல்)
தாழி = பெரும் பானை
தாள் = நெற்பயிர் முதலியவற்றின் இலை, பாதம், முயற்சி
தாழ் = கீழாகு, இறங்கு, கதவடைகோல்
தெளி = தெளிவாகு, சிதறு, ஐயம் நீங்கு
தெழி = அதட்டு
தோளன் = தோளையுடையவன்
தோழன் = நண்பன்
நாளி = நாய்
நாழி = படி, நாழிகை
நுளை = செம்படவர் குலம்
நுழை = புகு, நாழிகை
ஓவியன்
27-09-2007, 06:18 AM
சூழ் = ஆராய்
இந்த சொல்லிலே இருந்து தான் சூழ்ச்சி என்பதும் வந்துள்ளது போலுள்ளது...
ளகர,ழகர வேறுபாடுகளுடன் அறியாத தமிழ்ச் சொற்களை அறியவும் உங்களது திரி துணைபுரிகிறது. :)
மிக்க நன்றி பாரதி அண்ணா!!
பாரதி
27-09-2007, 10:29 AM
நன்றி ஓவியன்.
-----------------------------------------------------------------
பளிச்சு = ஒளிவீச்சுக்குறிப்பு
பழிச்சு = புகழ், வாழ்த்து, துதி
பளு = கனம்
பழு = முதிர், கனி, மஞ்சள் நிறமாகு, ஒளிநிறம்
பாளி = ஒரு பாழை (பாசை)
பாழி = சிறுகுளம், நகர்
பாளை = மடல்
பாழை = பாசை
பாள் = கம்பி
பாழ் = வீண், அழிவு, வெறுமை
பிளா = ஆட்டொலி
பிழா = இறைகூடை, ஓலைத்தட்டு
பீளை = கண்மலம்
பிழை = துன்பம்
புளுகு = பொய்
புழுகு = புனுகு
பூளை = ஒரு செடி
பூழை = துவாரம், சிறு வாசல்
பொளி = கொத்து, வரப்பு
பொழி = ஊற்று, விரைந்து பேசு, நிரம்பக்கொடு, திரட்டு
முளவு = முள்ளம்பன்றி
முழவு = மத்தளம்
முளை = தோன்று, விதை முளை, கட்டுத்தறி, மூலம்
முழை = குகை
மூள் = மிகு
மூழ் = மூடு
வளமை = செழிப்பு
வழமை = வழக்கம்
வளி = காற்று
வழி = நிரம்பி விழு, பாதை
வளை = கோணலாகு, வட்டமாகு, சூழ், முற்றுகையிடு, துவாரம், முகட்டு விட்டம்
வழை = சுரபுன்னை மரம்
வாளா = சும்மா, பேசாமல்
வாழா = வாழ்ந்து, வாழாமல், வாழமாட்டா
வாளி = அம்பு, வளையம், கடகால்
வாழி = வாழ்க
வாளை = ஒரு மீன்
வாழை = ஒரு மரம்
வாள் = ஒளி, ஓர் ஆயுதம்
வாழ் = உயிரோடிரு, மேன்மையாயிரு
விளவு = விளாமரம்
விழவு = திருவிழா, கொண்டாட்டம்
விளி = கூப்பிடு, முடி, இற, கூப்பிடுதல்
விழி = கண் திற, பார், கண்
விளை = வளர், முதிர், வயல்
விழை = விரும்பு
வேளம் = பகையரச மகளிர் சிறைக்களம்
வேழம் = கரும்பு, மூங்கில், யானை
பாரதி
28-09-2007, 12:04 AM
சில சொற்கள் ளகர, ழகர பேதமின்றி எழுதப்படும். அவையாவன:
இளிவு, இழிவு = நிந்தை
உளறு, உழறு = பிதற்று, நாத்தடுமாறு
குளறு, குழறு = நாத்தடுமாறு
சுளி, சுழி = முகங்கோணு, கோபி
துளாய், துழாய் = துளசி
பவளம், பவழம்
மங்கலம் என்னும் சொல் மங்களம் என்றும் வழங்கும்.
- முற்றும் -
நன்றி: ஞா.தேவநேயப்பாவாணர்
இனியவள்
28-09-2007, 10:13 AM
நன்றி பாரதி அண்ணா
பயனுள்ள வார்த்தைகள்
அறிந்து கொண்டேன்.
க.கமலக்கண்ணன்
28-09-2007, 10:37 AM
உங்களின் வார்த்தைகளின் அர்த்தங்கள்
உண்மையிலே அருமை கவிதை எழுத தயங்குபவர்களே
உள்ளே வாருங்கள் இந்த திரியை படித்து
உங்கள்
உள்ளங்களில் இருக்கு கவிதை திறனை பறைசற்றிடுங்கள்... நன்றி தமிழ்கவி(பாரதி)
சுகந்தப்ரீதன்
21-01-2008, 10:49 AM
அருமையான அரிய தொகுப்பு அண்ணா..!நிறைய புதிய சொற்களை கற்றுக்கொண்டேன்..!
தொகுத்து தந்துள்ளமைக்கு மிக்க நன்றி..! ஞா. தேவநேயப்பாவாணரரோடு சேர்த்து பாரதி அண்ணாவுக்கும்..!
செல்வா
21-01-2008, 12:39 PM
மிகவும் நல்ல இன்றைக்குத் தேவையான தொகுப்பு பாரதி அண்ணா. எழுதுவதோடு மட்டுமில்லாமல் பேசும் போதும் இத்தகைய வித்தியாசங்கள் தெளிவாக தெரியும் வகையில் நாம் உச்சரித்துப் பழகுதல் நல்லது. அதற்கு நல்ல பழைய தமிழ் பாடல்கள் படங்களிலிருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ளலாம்...
இதுபோன்று சந்திப் பிழை தவிர்க்க ஒரு திரி அமைத்தால் நன்றாக இருக்கும் அண்ணா...
tamilambu
16-02-2008, 02:36 AM
எம்மில் பலபேர் ளகர, ழகர வேறுபாடு தேரியாமலே இருக்கிறார்கள். அவர்கள் அதனை ஒரு விரச்சினையாகவே கருதுவல்லை. ஆனால் இந்த மாதிரி வேறுவிதமாக அர்த்தப்படு என்று தெரிந்தால் இனிமேல் நிச்சயமாக கவனம் செலுத்துவார்கள்.
தகவலுக்கு நன்றி.
விகடன்
12-04-2009, 06:45 AM
ழகர, ளகரத்தை வைத்து இத்தனை விடயங்களா???
அறிவிற்கு மிகவும் உகந்த பதிவுகள்.
மற்றவர்களிற்கு எப்படியோ, நான் பல விடயங்களை பயிலவும், நினைவுபடுத்திக்கொள்ளவும் உதவியாக இருந்தது.
அந்தவகையில் பங்களிப்புச்செய்த அனைவரிற்கும் நன்றி.
தமிழநம்பி
24-08-2009, 11:05 AM
பாராட்டுகள்!
பயனுள்ள பதிவு!
கீழ்க்காணும் தட்டச்சுப் பிழைகளைத் திருத்த அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
சீகாழி = ஓர் ஓர் (ஊர்)
தோளம் = தோளையுடையவன் (தோளன்)
நன்றி பாரதி!
கா.ரமேஷ்
24-08-2009, 11:37 AM
நல்ல பகிர்வு தோழர்களே... வாழ்த்துக்களும்.. நன்றிகளும்...
பாரதி
24-08-2009, 02:00 PM
ஊக்கமளித்த அனைவருக்கும் நன்றி.
பாராட்டுகள்!
பயனுள்ள பதிவு!
கீழ்க்காணும் தட்டச்சுப் பிழைகளைத் திருத்த அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
சீகாழி = ஓர் ஓர் (ஊர்)
தோளம் = தோளையுடையவன் (தோளன்)
பிழைகளை திருத்தி விட்டேன் நண்பரே. சுட்டிக்காட்டியதற்கு மிக்க நன்றி.
பேச்சு வழக்கில் சாதாரணமாக பாராட்டுகள், வாழ்த்துகள் என்று கூறுகிறோம். எனக்குத் தமிழ் சொல்லிக்கொடுத்த தமிழ்மன்ற உறவினர் - ஒருவருக்கு மட்டும் எனில் பாராட்டு, வாழ்த்து என்று கூற வேண்டுமென்றும், இருவருக்கு அல்லது அதிகமானோர் என்றால் மட்டுமே பாராட்டுகள், வாழ்த்துகள் என்றும் கூற வேண்டும் என்றும் அவரது தமிழாசிரியர் கூறியதாக என்னிடம் கூறினார்.
இது குறித்து உங்கள் கருத்தென்ன நண்பரே?
கற்றலுக்கு எல்லை இல்லை..
உன் ஆர்வப் பணிக்கும்...
நன்றியும் பாராட்டும் பாரதி!
கீதம்
25-08-2009, 03:10 AM
திரு சொ. ஞானசம்பந்தன் அவர்கள் எழுதிய 'தமிழைத் திருத்தமாக எழுதுவது எப்படி?' என்ற நூலில் வாழ்த்து பற்றி பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
wishes பன்மையில் இருப்பதால் அவ்வாறே சொல்லவேண்டுமா? கடவுள் வாழ்த்து, தமிழ் வாழ்த்து, பிறந்த நாள் வாழ்த்து என ஒருமையில் சொல்வதே மரபு. வாழ்த்து என்பதே நல்லதுதான்; அதனுடன் ' நல்' ஏன் சேர்க்க வேண்டும்? தீய வாழ்த்தும் உண்டோ?
கீதம்
அருமையான மேற்கோள் தந்தீர்கள். நன்றி.
(இங்கே கள் - உயர்வுப்பன்மை...).
ஆங்கிலத்தில் குட் விஷஸ் - என்பதே தமிழில் நல்வாழ்த்துகள் ஆகியிருக்கிறது..
எல்லாவற்றையும் அப்படியே மொழிபெயர்த்தல் சரிவருமா?
இங்கிலாந்து குளிர்நாடு.
பழங்காலத்தில் புதுமனைக்கு ஊரார் வந்தால் வீட்டின் குளிர் மாறி, வெப்பம் கூடும்
என்பதனால் அந்த விழா பெயர் - House Warming.
குளிரில் நடுங்கியபடி வரும் விருந்தினருக்கு அளிக்கும் இதமான வரவேற்பு - Warm Welcome.
இதை அப்படியே பெயர்த்தால் ?
தமிழநம்பி
25-08-2009, 05:32 PM
***எனக்குத் தமிழ் சொல்லிக்கொடுத்த தமிழ்மன்ற உறவினர் - ஒருவருக்கு மட்டும் எனில் பாராட்டு, வாழ்த்து என்று கூற வேண்டுமென்றும், இருவருக்கு அல்லது அதிகமானோர் என்றால் மட்டுமே பாராட்டுகள், வாழ்த்துகள் என்றும் கூற வேண்டும் என்றும் அவரது தமிழாசிரியர் கூறியதாக என்னிடம் கூறினார். ***
அந்தத் தமிழாசிரியர் கூறியது சரியே!
வாழ்த்துகள் , பாராட்டுகள் என்பதைப் பெரும்பாலார் பயன்படுத்தத் தொடங்கி, இப்போது ஒருவரைப் பாராட்டும் போதும் 'பாராட்டுகள்' என்றே சொல்லும் நிலையாகிவிட்டது.
ஒருவரைப் பாராட்டுகையில், ஒருமையில் பாராட்டு என்று குறிப்பிடலே சரி.
சுட்டிக் காட்டியதற்கு நன்றி பாரதி.
பாரதி
27-08-2009, 11:49 AM
பகிர்தலுக்கு நன்றி கீதம்.
உங்கள் எண்ணங்களும் சிந்திக்க வைக்கின்றன அண்ணா.
தெரிந்தோ தெரியாமலோ, நாம் அனைவரும் வழக்கமாகி விட்டது என்று நாமும் பயன் படுத்தாமல், சரியானது எது என்பதைத் தெரிந்த பின்னராவது அந்த முறையைப் பின்பற்றலாம்.
உங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றி நம்பி.