PDA

View Full Version : இலக்கியமா?இலக்கணமா?



jpl
10-09-2007, 07:18 AM
இலக்கியத்தில் சமுதாயச் சாடல் கூடாதா?
ஏன் கூடாது?

வெறும் அழகியல் மட்டுமா கவிதை?இல்லை இலக்கணம் கவிதையா?

இதன் சூட்சமம் என்ன?

ஒரு சிறு முயற்சி...

துறக்கின்றோம்
ஆடையினை
வாங்குவதற்காக>>>>>>>>>நன்னடை

கழட்டுகிறோம்
ஆடையினை
வாங்க>>>>>>>>>>>>>>>>சாதாரணம்

ஆடையினை
வாங்குவதற்காக
அம்மனமாகின்றோம்.>>>>>இதில் கொஞ்சம் வக்கிரம் எட்டி பார்த்து விடுகிறது.

இவற்றையே இன்னும் எழுதலாம்..........

இதையே இலக்கிய நடையில் பார்ப்போம்.

மலர்களின் (அல்லது பூக்கள்)இதழ்கள்
உதிர்வதன்ன(உதிர்வது போல்)
உதிர்க்கின்றோம்
ஆடைகளை
புதிதாக
வாங்குவதற்கு...

இதில் வாடிய மலரின் நிலை ஒத்தது எனற அர்த்தமும் வரும் அப் பெண்களின் வாடிய நிலை..
வாடிய மலர்கள் மதிப்பிழ்ந்தவை ஆகிவிடுகின்றன.
அது போல் இப்பெண்களின் நிலையும் சமூகத்தில்.


இதனையே சீர்,தளை, எதுகை,மோனை என்பதையும் சேர்த்து எழுதினால் இலக்கண நடையாகி விடுகிறது.

பாருங்கள் இலக்கிய நடையில் அர்த்தம் சுருங்கச் சொல்லி,விரிவாக கிடைத்து விடுகிறது.

ஆனால் வெறும் இலக்கணம் மட்டுமே இருந்தால் கவிதையா?இல்லை என்பதே
பதில்..

அமரன்
10-09-2007, 07:21 AM
அருமையான திரி. கவிதையை கவிதையாக நாம் அறிவதற்காக ஆரம்பித்த இன்னொரு அரிய முயற்சி. தொடருங்கள் லதாக்கா. இணையுங்கள் சான்றோர்களே..!

பூமகள்
10-09-2007, 07:32 AM
அழகான விளக்கம் அக்கா.. தெளிவாக புரிகிறது.
இனியும் பல விடயங்கள் உங்களிடம் இருந்து கற்க ஆவலாய் உள்ளேன்.
தொடர்ந்து படையுங்கள் சகோதரி!!:sport-smiley-018:
பாராட்டுக்கள்..!! :nature-smiley-008:

பிச்சி
10-09-2007, 08:44 AM
இது கொஞ்சம் வித்தியாசமா இருக்கு புஷ்பா அம்மா (நீங்கதானே?) மேலும் தெரிந்து கொள்ள ஆவல்.

சிவா.ஜி
10-09-2007, 08:53 AM
ஆஹா இன்னொரு ஆசான்...மிக அற்புதமான உதாரனங்களுடன் ஆரம்பித்திருக்கும் உங்கள் பணி எங்களைப் போன்றோருக்கு மிகப் பெரிய வரப்பிரசாதம். மிக்க நன்றி ஜெயபுஷ்பலதா அவர்களே.

lolluvathiyar
10-09-2007, 08:57 AM
என்னவோ பெரிய பெரிய வார்த்தை எல்லாம் சொல்லரீங்க.
உங்கள் வகுப்பு அருமையா ஆரம்பிக்குது. தொடர்ந்து நடத்துங்க*

aren
10-09-2007, 09:45 AM
நன்றாக ஆரம்பித்திருக்கிறீர்கள். தெரியாத பல விஷயங்களை கற்றுக்கொள்ள ஏதுவாக உங்கள் திரி. உங்களுக்கு எங்கள் நன்றிகள்.

நன்றி வணக்கம்
ஆரென்

மனோஜ்
10-09-2007, 09:49 AM
நல்ல ஒரு கவிதை கட்டுரையாக இது உருவாக என் வாழத்துக்கள்
நல்ல விளக்கம் தொடர்ந்து தாருங்கள் ஜெயபுஷ்பலதா அவர்களே

தாமரை
10-09-2007, 01:05 PM
இலக்கை இயம்புவது இலக்கியம்..

கவிதைகளில் மூன்று வகை உண்டு..

1. கருத்துக்கள் கொண்ட ஒன்று = க(ருத்து))+விதை = கவிதை
2. அழகான அழகுகளை சிறப்பிக்கின்ற ஒன்று = கவி + தை அழகுகளைத் தை

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறிஎயிற்று அரிவை கூந்தலின்
ன்ற்றியவும் உளவோ நீயறியும் பூவே!

இதில் அழகுணர்ச்சி உள்ள அள்ள்விற்கு கருத்து இல்லையல்லவா?? ஆனால் இதுவும் நல்ல

மற்றது?? கவி (குரங்கு)+தை (ஆட்டம்) சந்தத்துடன் சத்தம் சேர்த்து குத்துப் பாட்டாய் முடிவது.

வெறும் இலக்கணம் மட்டும் இருந்தால் கவிதையா? யவரும் இல்லை என்றே சொல்லுவர்.

அக்னி
10-09-2007, 01:14 PM
jpl அவர்களின் தொடக்கம், அருமை...
தாமரை அண்ணாவின் தொடர்ச்சி, சிறப்பு...
பயனாளர்கள் நாம், தெளிவு...

jpl
11-09-2007, 12:14 AM
அமரன்.பூமகள்,பிச்சி,சிவா.ஜி,லொள்ளு வாத்தியார்,ஆரென்,மனோஜ்,தாமரை,
அக்னி ஆகிய அனைவருக்கும் என் நன்றிகள்.

jpl
11-09-2007, 12:17 AM
நாமனைவரும் அறிந்த ஒரு சுகமான சுவையான பாசுரம் ஒன்று...

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்;
நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்,
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாரா யணனே, நமக்கே பறைதருவான்,
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்.

இலக்கிய நயத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு...

வெறும் மார்கழியா...இல்லை இல்லை.... மதி நிறைந்த நன் நாள்............

வெறும் சிறுமிகளா....இல்லை இல்லை
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!

கண்ணன் யார்....அவன் அப்பா அம்மாஅறிமுகம் சாதாரணமாக
இருக்கலாமா?
அது எப்படி முடியும்?

கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்,

இவ்வளவும் சொல்லியாயிற்று...கண்ணனைச் சொல்லாமலா?

கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்

"முகத்தை திங்களுக்கு உவமை கூறுவது மரபு. ஆனால் ஆண்டாள் இங்கு கண்ணனது திருமுகத்திற்குக் கதிர், மதியம் ஆகிய இரண்டையும் இணைத்து அதற்கு உவமை கூறுகிறாள். புறநிலையோடு, உள்ளுறை பொருளும் தந்து சிறக்கின்றன என்பதற்கு இந்தப் பாடல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. கதிர்மதியம் போல்முகத்தான் என்று கூறும்போது, கண்ணனின் முகத்தில் தோன்றும் ஒளிக்குக் கதிரவனையும் குளிர்ச்சிக்குத் திங்களையும் உவமையாகக் கூறுகிறாளா, அல்லது கண்ணனின் கண்களை கதிருக்கும், முகத்தை மதிக்கும் உவமையாகக் கூறுகிறாளா அல்லது கண்ணனின் முகம் அடியார்களுக்கு மதியை போன்று குளிர்ச்சி பொருந்தியதாகவும், பகைவர்களுக்கு அவன் கதிரவனைப் போன்று வெப்பமுடையவனாகவும் இருக்கிறான் என்று கூறுகிறாள்.


ஆண்டாளின் சொல் திறன்,கவிநயம் எவ்வாறு வெளிபடுகிறது பாருங்கள்.

நாரா யணனே, நமக்கே பறைதருவான்,
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்.

யார் புகழ ....பாரோர் என்று முடிக்கின்றாள்....

ஆண்டாள்.....

இளசு
11-09-2007, 06:00 AM
இலக்கணம் ஒரு வட்டில் போல..
தட்டு, இலை, ஏன் கையில் கூடப் பரிமாறலாம்..

இலக்கியம்தான் விருந்து..
அதை லதா பரிமாறும்போது,
சுவைத்து அனுபவிக்கும் சுகம் அலாதி..

மிக லாவகமான அழகுடன் விவரிக்கும் உங்கள் பாணி சிறப்பு லதா..

தொடருங்கள்..

ஏனோ பசி அதிகரிக்கிறது...

ஆதவா
11-09-2007, 02:23 PM
இலக்கியமா? இலக்கணமா?

அல்லது இரண்டுமா?

புஷ்பா அவர்களின் இந்த திரி கவிதையை மேலும் தரம் பிரிக்கவும், ஆய்வு மேற்கொள்ளவும் ஏதுவாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. கவிதை எப்படிப்பட்டவைகளை அடக்கியவை? எப்படி எழுதலாம்? இப்படியெல்லாம் எழுதினால் அவை கவிதைகள் ஆகுமா? என்பன போன்ற பல கேள்விகளுக்கு இங்கே விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

இலக்கணங்கள் இறந்து வரும் இக்காலத்தில் புதுக்கவிதையில் புதுமையும் இறந்து வருகிறது என்பது துன்பகரமான செய்தி. புதுக் கவிதை என்று பிறந்ததும் இலக்கணங்களை வென்றதாகத்தான் சொல்லப்பட்டதே தவிர கொன்றதாகச் சொல்லப்படவில்லை. ஆனால் நாம் அதைத்தான் செய்துகொண்டிருக்கிறோம். பா வகைகள் எழுதவேண்டாம்... உவமைகளை திறம்பட கையாளலாமே!

இது புஷ்பா அவர்களே சொன்னது... எனக்கும் அதில் உடன்பாடுண்டு. மன்றத்து கவிஞர்கள் அடிக்கடி சொல்வதுண்டு. சுருங்கச் சொல்லி விளங்க வைத்தலே கவிதை என்று.... அதைத்தான் ஆதிகாலம் முதல் செய்துவந்தார்கள். இன்று சற்று இடம் மாறுவதாகத் தோன்றுகிறது.. ஒரு ரசிகனாக இதைச் சொல்ல எனக்கு உரிமையுண்டு. கவிஞனாக அல்ல.

என்னைப் பொருத்தவரையிலும் கவிதைக்கு சில தகுதிகள் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறேன். சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் அதில் முதல் தகுதி.. பொய்யழகுக் கவிதைகளில் புதுமையும் மெய்யழகுக் கவிதைகளில் வீச்சும் அதிகம் இருக்க வேண்டும். முன்பொருமுறை சொன்னது போல புதுமைக் காரனை புதுமையாகவே உலகம் நோக்கும்.

கண்களால் கண்டதைக் கவிதையாக்கு, கதையாக்காதே! இதை மனதில் அடிக்கடி சொல்லிக் கொள்ளூம் வார்த்தை. அதைச் செய்து வருவதாக நினைத்துக் கொண்டிருக்கிறேன்.... இங்கே இருக்கும் கவிஞர்களில் ஒருசிலரைத் தவிர ஏனைய அனைவரும் கவிதைகளில் பின்னியெடுக்கிறார்கள் என்றாலும் அந்த ஒருசிலருக்கு காலம், சூழல் அமைவது பற்றி எனக்குத் தெரியாது. மனச் சாந்தியில் ஒரு சிலருக்கு கவிதை பிறக்கும் என்பார்கள். ஒரு சிலருக்கு குழப்பத்தில் பிறக்கும்.... அந்த அனுபவம் சிலருக்குண்டு.

எதுகைகள் மோனைகள் இருந்தாலே அது கவிதையா?

எனக்கு ஆர்குட் வாயிலாக பல கவிதைகள் வரும். அத்தனையிலும் மோனைகளை அடுக்கி வைத்து எழுதியிருப்பார்கள்.. கொஞ்சம் கூட சுவை இருக்காது.. அனைவரிடமும் நீங்கள் கேட்கலாம் உங்கள் கவிதையில் மோனை இருக்கிறதா என்று.... பலருக்குத் தெரியாது தம் கவிதையில் மோனை என்ற சுவையைக் கெடுத்து எழுதியிருக்கிறோமே என்று..

எதுகைகளை அதைவிடக் கேவலமாக கையாண்டிருப்பார்கள்.. அதையெல்லாம் ஒரு கவிதையா என்று அவர்களைத் திட்டுவதும் தவறு. அதோடு கவிதையாக ஏற்றுக் கொள்ளுதலும் தவறு.. பிழையை சுட்டுவதில் பொறுமை இருக்கவேண்டும். ஒரு கவிஞனுக்கு பொறுமை மிக அவசியம்.

என்னுடைய பழைய கவிதைகளின் எதுகைகள் இல்லாத கவிதைகள் மிகக் குறைவு. இன்றைக்கு அது இடைஞ்சலாகத் தெரிந்தால் எடுத்து விடுகிறேன். வாசகருக்குத் தேவை ஆழமான கரு. அதை அழுத்தமாக கொடுக்கவேண்டும்.. அதோடு அந்த கருவுக்குள் அவர்கள் உருமாறித் திளைக்கவேண்டும்.. (நன்றி ஜெ.பி.எல்.) அது எப்படிப்பட்ட வரிகளாக இருப்பினும் அது கவிதையே!!

jpl
11-09-2007, 06:27 PM
வைணவம் மட்டுமா?

சைவம் மட்டும் இளைத்ததா என்ன?

சீர்மிகு சீர்காழி ஆளுடையப்பிள்ளையின் கூற்றினைப் பார்ப்போம்.

ஞானசம்பந்தன் கூறியதைப் பார்போம் என்பது சாதாரண வசன நடை....

யார் வந்தார்கள்?யார் பால் கொடுத்தார்கள்?எப்படி இருந்தார்கள்?
எங்கு வசிப்பவர்?வெறுதே சிவபெருமான் என்றால் அழகோ??

தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்த அருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.


யார் அவன் காதில் கம்மல் போட்டவன்....காளை மீதேறி வநதவன்
சந்திரனைச் சூடியவன்
எப்படிப்பட்ட சந்திரன் ----தூவெண்....

என்னுடைய உள்ளம் கவர்ந்தவன் எப்படி கவர்ந்தான் சுடுகாட்டுச் சாமபலைப் பூசி...

ஏடுடையமல ரால் பணிந் தேத்த அருள்செய்தவன் எங்கிருப்பவன்

பிரமபுரம் மேவியவன் எப்படிபட்ட பிரமபுரம் பீடுடைய..........

அருளியவர் ஞான சம்பந்தர்...

பெரியபுராணம் 12ம் திருமுறையாகும்.
அப்பூதியடிகள் பற்றி அறிந்தே.

அதிலொரு காட்சி..
ஆறந்தணியுங் சடைமுடியார் அடியார்க்க்கு நீர்வைத்த
ஈறில் பெருந் தண்ணீர்ப் பந்தரில் நும்பேர் எழுதாதே
வேறொருபேர் முன்னெழுத வேண்டிய காரணம் என்கொல்
கூறும் என் எதிர்மொழிந்தார் கோதில் மொழிக் கொற்றவனார்.


யாருடைய அடியார்கள் --ஆறந்தணியுங் சடைமுடியார் அடியார்க்க்கு

என்ன வைத்தார்--நீர்வைத்த
ஈறில் பெருந் தண்ணீர்ப் பந்தர்

போர்டில் என்ன எழுதியிருந்தது---வேறொருபேர் முன்னெழுத
அதில் என்ன பிரச்னை---நும்பேர் எழுதாதே
வேறொருபேர் முன்னெழுத வேண்டிய காரணம் என்கொல்
எப்படி கேட்டார்-----கூறும் என் எதிர்மொழிந்தார் கோதில் மொழிக் கொற்றவனார்.
எப்படிப்பட்ட மொழியுடையவர்----கோதில் மொழி(குற்றமற்ற மொழி)

வாசிக்க வாசிக்க களிப்பேருவகை அடையும் மனம்....

அப்ப இந்த மாதிரி பாக்களில் மட்டுமா இலக்கியம் உண்டு......
(இவற்றில் இலக்கணமும் உண்டு..இலக்கியம்,இலக்கணம் 2 ம் சேர்ந்த நடை)

ஓவியன்
11-09-2007, 06:52 PM
அருமையான ஒரு பாடவிதானத்திலே தொடர்ந்து பயிற்றுவிக்கும் ஆசானாக சகோதரி லதா அவர்கள், அவர்களோடு இணைந்து அசத்தல் கவி வேந்தர்கள் இளசு அண்ணா, செல்வன் அண்ணா, அன்பு ஆதவன்...

கவிதைப் பசியால் நாடி வருவோருக்கு அள்ள அள்ள குறையாமல் அமுதம் வழங்கும் இந்த திரி, நன்றிகளும் பாராட்டுக்களும் அனைவருக்கும் தொடர்ந்து அசத்துங்க.......

இளசு
11-09-2007, 09:53 PM
இரு பலாச்சுளைகளை பக்குவமாய் பிரித்தெடுத்து
தேன் தடவிச் சுவைத்த இன்பம்..

லதா அவர்கள் தந்த இரு கவிகள் வாசிக்கும்போது..

துரித உணவு தேவைதான் - அவசர வாழ்க்கை அழைக்கும் காலங்களில்..

ஆர அமர ருசிக்கும் பாரம்பர்ய விருந்தும் தேவைதான் - அதற்கான அவகாசப் பொழுதுகள் அமையும்போது..

இலக்கணமும் இருந்து அதில் இலக்கியமும் பொருந்திவந்தால்
ஏற்று அருந்தி மகிழ காலமும் கூடிவந்தால் -
இரட்டிப்பு மகிழ்ச்சியே நுகர்வோனுக்கு..

பரிமாறல்கள் தொடரட்டும்..
பந்திக்கு முந்திய - இளசு

அக்னி
12-09-2007, 12:11 AM
மன்றத்தின் சான்றோர் நடாத்தும் கவிப்பட்டறையில்,
நாம் புடம்போடப்படுகின்றோம் சிறிது சிறிதாக...
மிக்க நன்றி...

பி.கு:
பின்னூட்டம் இட்டு விட்டேன் ஆனால், மீண்டும் மீண்டும் வாசித்தால்தான் மனதில் படியும் என்றுணர்கின்றேன்.

jpl
12-09-2007, 01:09 AM
ஆதவாவின் கூற்று கவனத்தில் கொள்ளற்பாலது.

சாலையைக் கடக்கும் போது
தென்றல் ஒன்று கடந்து சென்றது.
ஓ அவள் துப்பாட்டா என்மீது உரசிச்
சென்றதோ.....
சாலையைக் கடக்கும் போது தென்றல் ஒன்று கடந்து சென்றது. அவள் துப்பாட்டா என்மீது உரசிச் சென்றது.....
இவ்வாறு பள்ளியில் படித்த உரைநடை வீச்சில் வார்த்தைகளை மடித்து ஒடித்து எழுதுவதே இப்பொழுது கவிதை எனப்படுகின்றது.
எல்லாவற்றிற்கும் ஒரு வரையறை இருக்க வேண்டுமல்லவா..
புதுக் கவிதையைப் பற்றியும் அறிந்து கொள்ளுவோம்...வரும் நாட்களில்..

jpl
12-09-2007, 01:10 AM
ஓவியன்,அக்னி,இளசு ஆகியோருக்கு நன்றி...

jpl
12-09-2007, 01:16 AM
ஏனில்லை திரைப்பட பாடல்களிலும் உண்டு...

சஹானா சாரல் தூவுதோ
சஹாரா பூக்கள் பூத்ததோ

என் விண்வெளி தலைக்குமேல் திறந்ததோ அடடா
அந்த வெண்ணிலா வீட்டுக்குள் நுழைந்ததோ
அது என்னுடன் தேநீர் கொண்டதோ
கனவோ நிஜமோ காதல் மந்திரமோ

ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது
நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது
(சஹாரா)

தலைமுதல் கால்வரை தவிக்கின்ற தூரத்தை
இதழ்களில் கடந்துவிடு
உன் மீசையின் முடியென்ற மெல்லிய சாவியில்
புலன்களைத் திறந்துவிடு
பூமிக்கும் வானுக்கும் விரிகின்ற தூரத்தை
பூக்களில் நிரப்பட்டுமா
பூக்களின் சாலையில் பூவுன்னை ஏந்தியே
வானுக்கு நடக்கட்டுமா

வெறும் சாரலில்லை--சஹானா என்ற புல்வெளிச் சாரல் தூவுதோ

சஹாரா பூக்கள் பூத்ததோ காதல் பூ பூக்கும் முன் பாலைவனமா?

இரு துருவத்தையும் காதலில் மட்டும் தான் பார்க்க முடியும் போலும்.


தலைமுதல் கால்வரை தவிக்கின்ற தூரத்தை
இதழ்களில் கடந்துவிடு
உன் மீசையின் முடியென்ற மெல்லிய சாவியில்
புலன்களைத் திறந்துவிடு

தலைவியின் மெல்லியதான தாபம் அழகான வார்த்தைகளில் வெளிபடுகிறது.

மீசையை விதவிதமாக கையாளப்பட்டு பார்த்திருக்கின்றோம்.
சாவியாக உருவகப்படுத்திருக்கின்றார்....கவிஞர்...

அதற்கு பதிலாக

தலைவனின் மனம் இவ்வாறு விரிகின்றது....எவ்வளவு தூரம்...

பூமிக்கும் வானுக்கும் விரிகின்ற தூரத்தை
பூக்களில் நிரப்பட்டுமா
பூக்களின் சாலையில் பூவுன்னை ஏந்தியே
வானுக்கு நடக்கட்டுமா...

இதையே தலைவியின் தாபத்திற்கு தலைவனின் பதிலாகவும் எடுத்து கொள்ளலாம்..

பூக்களின் சாலையில் பூவுன்னை ஏந்தியே---தலைவியும் பூவே...பூக்களுடன் பூ தலைவி.....

சங்க இலக்கிய அகப்பாடல்கள் இத்தகையதே.....

சரி.நான் எழுதியவற்றிலிருந்து ஒன்றை புரிந்து கொண்டிருப்பீர்கள்.....என நம்புகிறேன்.

சொற்களின் அணிவகுப்பு கவிதையாகா.அதற்கு மேலும் சொல்லுக்கு,கவிக்கு அணி(அழகு) சேர்க்க வேறு ஏதோ ஒன்று தேவை.

ஷீ-நிசி
12-09-2007, 04:18 AM
மிக அவசியமான கட்டுரை... கவிதையில் சொற்சுவை மட்டும் போதுமா... பொருட்சுவை மட்டும் போதுமா.... கரு மட்டும் போதுமா.. வார்த்தை கோர்வைகளும் வேண்டுமா? கவிதைகள் பொதுவாய் உரை நடை பாதிப்பில் அமைந்துவிடுகிறது. அவ்வாறு அமையாமல் கவிதைப்பாணியில் கவிதைகள் அமைய இந்த கவிதைப் பட்டறையில் பிறந்த இந்த இலக்கணமா, இலக்கியமா என்ற குழந்தையிடம் கவியெழுத விரும்பும் அனைவருமே கற்றுக்கொள்ளவேண்டும்...

வாழ்த்துக்கள் சகோதரி! பயனுள்ள பதிவு இது எங்களின் அனைவருக்கும்!

jpl
13-09-2007, 12:56 AM
சரி.நான் இப்பொழுது சாம்பார் வைக்கப் போகிறேன்...நீங்களும் வாருங்களேன்.சாமபார் வைக்க இல்லை.வேடிக்கை பார்க்க.

சாம்பார் வைக்க முதல் தேவை பருப்பு.பிற புளி,காய்கறிகள்,காரத்திற்கு தேவையான பொடிவகைகள்,உப்பு...இன்னும் தேவையானவை.அவரவர் ருசிக்கேற்ப.

இதில் சாம்பார் என்ற பெயரினை பெற்று கொடுப்பது
சாம்பாரில் சேர்க்கும் சாம்பார் பொடி என்னும் மசாலா பொடி..
இதுவும் அவரவர் ரசனை,ருசிக்கேற்ப பொருள்கள் கூடும் குறையும்.
ஆனால் முக்கியமாக சேர்ப்பது தனியா என்ப்படும் கொத்துமல்லி விதையும் சீரகமும்.இவை 2ம் இல்லை என்றால் அது சாமபார் பொடி இல்லை.(சிலர் இப்பொடியினைக் கூட புளிக்குழம்புக்கும் பயன் படுத்துவர்.)

இதில் பல்வேறு வகையான சாம்பாரினை சமைக்கின்றோம்.
பலாக் கொட்டைசாம்பார்,அரைத்து விட்ட சாம்பார்,முள்ளங்கி சாம்பார்,
என்பன போன்ற பலவகை.குப்பை சாம்பார் கூட உண்டு.(எல்லா அதிகபட்சக் காய்கறிகளையும் குறந்தபட்சமாக போட்டு,பச்சை மிளகாய்,கருவேப்பிலை,கொத்துமல்லி போட்டு சாமபார் வைத்தால்
அது பெயர் குப்பை சாம்பார்)அசைவ பிரியர்கள் எலும்பு சாம்பார் வைத்து சுவைப்பர்.

இதே பருப்புடன்,காய்கறி போட்டு,பெருஞ்சீரகம்,கசகசா,கிராம்பு,லவஙகம்,பட்டை,ஏலக்காய்,
ஜாதிக்காய், தனியா, சீரகம் என மசால் பொடி தயார் செய்தால் அது சாம்பார் ஆகுமா?அதற்கு வேறு பெயர் தான் சூட்ட வேண்டும்.

அவ்வாறே கவிதையும் ஆகுக.கவிதை என்னும் வரையறுத்தலுக்குள் வரவில்லை எனில் அதன் பெயர் வேறு....

சரி அணியுடன் தான் எழுத வேண்டுமா?இல்லை என்றால் அது கவிதை ஆகாதா?ஏன் ஆகாது .........ஆகும்..அதையும் பார்ப்போம்...

இளசு
13-09-2007, 05:44 AM
மிக அழகாக விளக்கிவிருக்கிறீர்கள்..

(அதுவும் எனக்குப் பிடித்த சாம்பாரை எடுத்துக்காட்டாய்க் கொண்டதால்
எனக்கு சட்டென விளங்கியது..லதா)

ஒரு ராகத்தை அடிநாத விதியாய் வரையறுத்து
தனிப்பட்ட கமகங்கள் திறமைக்கேற்பச் சேர்த்து
ஒவ்வொரு பாடகரும் பரிமாற எழும் சுவைகள் தனித்தனி..

விதிகளைத் தளர்த்த, ஒடியும் அளவுக்கு விளிம்புக்கு நகர்த்த..
ஒரு ராகத்தில் இன்னொன்றை இணைக்க
பல ராகங்களை (ராகமாலிகா) என கோர்க்க
(குப்பை சாம்பார், நவரத்ன குருமா, அவியல் போல?)
ஏன் மேற்கத்திய ராகத்தை கிழக்குடன் பதியன் போட ( ஃப்யூஷன்)
என இசை எவ்வளவு இடம் கொடுக்கிறதோ
அவ்வளவு கவிதையும் கொடுக்கிறது..

அத்தனை சௌகர்யங்கள் இருந்தும்...
படிப்பவர்க்கு அசௌகர்யம் தரும்வண்ணம்
ஏதோ ஒன்றை எழுதி - கவிதை என ''லேபிள்'' ஒட்டி
வெகுஜன சந்தைக்கும் விற்க அனுப்புவர்களுக்காக
உங்கள் தொடர் என நினைக்கிறேன்..

வாரமலரிலும், வாராந்தரி ராணியிலும்
''வாசகர் கவிதை'' என அச்சாகும்
சாம்பாரில்லா வெறும் குப்பைகளைப் பார்த்து
என்னைப்போல் மனம் வலிபட்டவரா நீங்களும்?

jpl
13-09-2007, 11:10 AM
சங்க இலக்கியத்தில் இலக்கண வரம்பு என்று ஐந்திணைகளையும்
பார்த்திருப்போம்..

குறிஞ்சித்திணை (http://virudhaimalar.blogspot.com/2007/09/blog-post_09.html)

மருதத் திணை (http://virudhaimalar.blogspot.com/2007/09/blog-post_9497.html)

முல்லைத் திணை (http://virudhaimalar.blogspot.com/2007/09/blog-post_1608.html)

நெய்தற்திணை (http://virudhaimalar.blogspot.com/2007/09/blog-post_1311.html)

பாலைத் திணை (http://virudhaimalar.blogspot.com/2007/09/blog-post_3203.html)



இந்த திணைகளில் அகமும் புறமும் எவ்வாறு பாடப்பட வேண்டுமென்ற
நெறிமுறை இருக்கும்.
முதற் பொருள்(நிலமும்,பொழுதும்)கருப்பொருள்,உரிப்பொருள் ஆகியவனவே திணையை வகைப்படுத்த உதவியது.
அதாவது வரையறுக்கப்பட்டது.

இவ்வரையரையில் உள்ள எல்லாவற்றையும் கொண்டுதான் பாட வேண்டுமா?

இல்லை இல்லை என்கிறது குறந்தொகை.......

நாமனைவரும் அறிந்த குறுந்தொகை பாடலொன்று....

யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.

குறுந்தொகை 3 அடி சிறுமையும் 8 அடி பெருமையும் கொண்டது.

பல பாடல்களுக்கு பாடப்பட்டோர் பெயர் தெரியவில்லையாதால்
அவர்கள் பாடிய பாடல்களில் வரும் நயமான தொடர்கள்,உவமைகளைக்
கொண்டு பெயரிட்டனர்.
மீனெறி தூண்டிலார்,
அணிலொடு முன்றிலார்,
விட்ட குதிரையார்,
செம்புலப் பெயல் நீரார்,
குப்பைக் கோழியார்................

நாமிருவரும் யார் என்று தெரியாமலே செம்மண்ணில் பிரிக்க இயலா
வண்ணம் கலந்த நீர் போல் கலந்து விட்டோம் என்கிறான் த்லைவன்.
குறுகிய அடியினைக் கொண்டு இருப்பதால் இதில் முதற் பொருளும்,கருப் பொருளும் வராமல் உணர்ச்சி மிக்கு ஒலிக்கின்றது.

செம் புலப் பெயல் நீர் போல் என்ற நயமான கற்பனை....
மிக உயர்ந்த இலக்கியத் தரத்தினைப் பெற்று கொடுத்து விடுகிறது.
அதன் உரிப்பொருளுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றது.....

எட்டுத்தொகையில் ஐங்குறுநூற்றின் தன்மையும் இத்தகையதே,,
3 அடிச் சிறுமையும்,6 அடிப் பெருமையும் கொண்டுது.
பாடல் சிறுத்தாலும் சொற்சுவை,பொருட் சுவையும் நிரம்பியவை.

குறிஞ்சிக்கு என போற்றப்பட்டவர் கபிலர்.

அவர் பாடல் திறன்.....

அன்னாய் வாழி வேண்டன்னை நம் படப்பை

தேன் மயங்கு பாலினும் இனிய அவர் நாட்டு

உவலைக் கூவற் கீழ

மானுண்டெஞ்சிய கலிழி நீரே

தோழி வினவுகிறாள் தலைவிடம் தலைவரின் மலை நாட்டில் குடிப்பதற்கு தண்ணீர் கூட கிடையாதாமே..
தலவி"ஆம் அவர் நாட்டில் சிறு பள்ளத்தில் தான் கொஞ்சம் நீர் இருக்கும்.
அதுவும் மானுண்டு கலங்கியே இருக்கும்.அந்நீர் தாயின் வீட்டில் தேன் கலந்த பாலைக் குடிப்பதை விட இனிமையானது என்கிறாள்.

இதுவும் உரிப்பொருள் கொண்டு பாடப்பட்டதாகும்.

ஆக இலக்கணம் இருப்பினும் வரையறுத்தல்கள் இருப்பினும் 3 பொருட்களில் ஒன்றினை மட்டுமே கொண்டு பாடப்பட்ட பாடல்கள்
இலக்கண,இலக்கியத் தரமே என்று கொள்ளலாம்...

jpl
13-09-2007, 11:13 AM
நன்றி ஷீ-நிசி.
உண்மைதான் இளசு..இணையத்திலும் பார்க்கலாமே அவ்விதமான கவிதைகளை......

சிவா.ஜி
13-09-2007, 11:20 AM
தெள்ளிய நீரோடை போன்ற நடையில் இலக்கிய வகுப்பெடுக்கும் லதா மேடம் அவர்களின் சேவை பாராட்டுக்குரியது. என்றோ படித்ததும்,இன்றுவரை படிக்காமல் விட்டதுமான அற்புத கவிக்களஞ்சியங்களை வரிசைப்படுத்தி அதன் சுவையுணரச் செய்கிறீர்கள்.
வெகு எளிய முறையில் கவிப்பாடமெடுத்து எங்களையும் கூடிய விரைவில்,ஓரளவுக்கேனும்,பிழையில்லா மற்றும் சுவையுள்ள கவிதைகளைப் படைக்க தயார் செய்து விடுவீர்கள் என்பது சர்வ நிச்சயம். மனமார்ந்த நன்றிகள் ஜெயபுஷ்பலதா.

அக்னி
13-09-2007, 11:30 AM
மடைதிறந்த வெள்ளமாய் பிரவாகிக்கின்றது...
கவிதைப்பட்டறையின் மற்றுமோர் சிறந்த, திரி....
வாழ்த்துக்கள்... நன்றியுடன்...

சாம்பார் விளக்கம் அருமை...
எந்த சாம்பார் வைத்தாலும், சாம்பார் என்ற பொதுப்பெயரின் வரையறைக்குள் அமையவேண்டும் என்று,
கவிதையை வரையறுத்தது சுவை...

பாராட்டுக்கள்...

இளசு
13-09-2007, 08:28 PM
இல்பொருள் உவமையாய்..
இதுவரை இல்லாத காதல் வந்ததை
புல்வெளிப்பூக்கள், பாலை மழை எனச்சொன்ன
வைரமுத்துவுக்கும் ...

உயர்வு நவிற்சியாய்
புகுந்தவீட்டை விட்டுக்கொடுக்காத
இல்லாள் கண்ட கபிலருக்கும்

இணையத்தால் இணைப்பு தரும் லதா அவர்களின்
பரந்த வீச்சும் ஆழ்ந்த ரசனையும்
மன்றத்துக் கிடைத்த சிறப்பு மலர்வனங்கள்..

செழிக்கட்டும்.. பூக்கட்டும்.. இன்னும் இன்னும்..!

jpl
14-09-2007, 01:41 AM
சிவா.ஜி,அக்னி,இளசு ஆகியோருக்கு நன்றி.

jpl
14-09-2007, 02:26 AM
மரபுக்கவிதை எழுதுவது எப்படி?வெண்பா புனைவது எப்படி?கவிதை படைப்பது எப்படி என்று பலரும் பலவிதமாய் யோசித்து அலசி ஆராய்ந்து
விட்டோம்.
கவிதை என்றால் வார்த்தைகள் ஜாலமாய் மின்ன வேண்டும்.
அந்த வார்த்தை ஜாலங்களின் வேலை அழகியலுடன்,சுருங்கக் கூறி,விரியச் செய.(பைந்தமிழ்,தீந்தமிழ்,தெள்ளு தமிழ் போன்ற சொற்கள்)
(பாசுரமும்,தேவாரமும் உதாரணமாக இத்திரியில் உள்ளது.)
வேறு வார்த்தை ஜாலங்கள் கவியாகா..பொருள் பொருந்த உரைத்தல் அவசியம்.
கவிதைக்கு அணி(அழகு) சேர்ப்பது அணிகள்
அணியுடன் எழுதப்படும் கவிதை படிப்பவர்களை வேறொரு இலக்கிய உலகத்திற்கு அழைத்துச் செல்வது உறுதி.
அணி கவிதையின் மற்றொரு பரிமாணத்தைக் காட்டும்.
அணியைப் பற்றி பின்னர் விரிவாக காண்போம்.
மேலும் நாம் புதுக்கவிதையைப் பற்றி காண்போம்.
அதன் பின் கவிதையைப் பற்றி ஒரு முடிவுக்கு வர முயற்சிப்போம்.

jpl
14-09-2007, 02:38 AM
இப்பொழுது புதுக் கவிதை அதன் ஆரம்பம்...பிறவற்றை பார்ப்போம்...

ஆங்கிலக்கவிஞர்கள் என்றால் இங்கிலாந்து கவிஞர்கள் தான்.
பழங்கவிஞர்கள்,பழம் இலக்கியம் என்றால் நினைவிற்கு வருவது இங்கிலாந்து எழுத்தாளர்கள் தான்...

அமெரிக்க கவிஞர் Walt Whitman கவியுலகில் பெரும் புரட்சியினை படைத்தார்.1855 ல் Leaves of Grass என்ற கவிதைத் தொகுப்பினை வெளியிட்டு புதுக் கவிதைக்கு வித்திட்டார்.
இதோ அவரின் கவிதா வரிகள்:
உதாரணத்திற்கு...
WHOEVER you are, I fear you are walking the walks of dreams,
I fear these supposed realities are to melt from under your feet and hands;
Even now, your features, joys, speech, house, trade, manners, troubles, follies, costume,
crimes, dissipate away from you,
Your true Soul and Body appear before me,
They stand forth out of affairsout of commerce, shops, law, science, work, forms,
clothes, the house, medicine, print, buying, selling, eating, drinking, suffering, dying.

Whoever you are, now I place my hand upon you, that you be my poem;
I whisper with my lips close to your ear,
I have loved many women and men, but I love none better than you.

O I have been dilatory and dumb;
I should have made my way straight to you long ago;
I should have blabbd nothing but you, I should have chanted nothing but you.

I will leave all, and come and make the hymns of you;
None have understood you, but I understand you;
None have done justice to youyou have not done justice to yourself;
None but have found you imperfectI only find no imperfection in you;
None but would subordinate youI only am he who will never consent to subordinate
you;
I only am he who places over you no master, owner, better, God, beyond what waits
intrinsically
in yourself.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<< >
சுவை புதிது பொருள் புதிது வளம் புதிது
சொற் புதிது சோதிமிக்க
நவ கவிதை>>>>>>>>>>>பாரதியார்

யாப்பிலக்கணத்துக்குக் கட்டுப்படாமல் உணர்வுக்கு முழு உரிமை வழங்கி
எண்ணத்தின் வேகமாய்ய் வெளிவந்த இந்த வடிவம் "கட்டிலடங்காக் கவிதை"இலகு கவிதை"உரை வீச்சு" மார்டன் பொயட்ரி"ந்யூ பொயடரி"
என்று அழைக்கப்பட்டாலும் புதுக் கவிதை என்ற பெயரே நிலைத்தது.

பாரதி இட்ட விதை புதுக் கவிதை முளைத்தது.....
ந.பிச்ச மூர்த்தி,கு.ப.ரா(ராஜகோபால்)இருவரின் கவிதைகள்
படிக்கின்றவர்களை இழுக்கும் இயல்பினவாக இருந்தது...

இளசு
14-09-2007, 09:47 PM
தெள்ளுதமிழ், பைந்தமிழ், தீந்தமிழ்..

உங்கள் பதிவால் உள்ளர்த்தங்கள் புரிகின்றன.. லதா ... நன்றி!



வால்ட் விட்மன்..

பாரதிக்கே ஆதர்சம் அவன்!

இங்கே அவன் வரிகள் சில :
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5733

jpl
15-09-2007, 01:25 AM
நன்றி இளசு..

jpl
15-09-2007, 01:29 AM
1934 ல் பிச்ச மூர்த்தி மணிக்கொடி இதழில் இவ்வாறு எழுதியிருக்கின்றார்.

"இருளில் மடல்கள் குவிந்தன
வானத்து ஜவ்வந்திகள் மின்னின
காவிரி நாணல்கள் காற்றில் மயங்கின
மேற்கே சுடலையின் ஓயாத மூச்சு
காலன் செய் ஹோமத்தில் உடல் நெய்யாகும்
காட்சி
கிழக்கே பெண்களின் மட்டற்ற பேச்சு
கட்டற்ற சிரிப்பு
காவிரி மணலில் குழந்தைகள் கொம்மாளம்..."

இதை என் உணர்ச்சிப் பெருக்கில் எழுதினேன் என்று இவர் கூறியது நினைவுக்குரியது..வாழ்வின் தத்துவ வரிகள் இவை...
மரணத்தை பற்றிய மயக்க நிலைக்கு அழகியலாக பெண்களின் பேச்சும்,சிரிப்பும்,குழந்தைகளின் கும்மாளமும்...உணர்ந்து படிக்க படிக்கச்
சுவையூறும் ஊற்று..இது..

புதுக் கவிதையை கேலிசெய்தும் ஆதரித்தும் விவாதம் சூடுபறக்க தொடங்கியது.
க.நா.சுபரமணியன் சூறாவளி என்ற வார இதழினை தொடங்கி அதில் மயன் என்ற பெயரில் புதுக் க்விதை ஒன்றை வெளியிட்டார்.அதை கேலி செய்து சுந்தா எழுத,அ,சீனிவாசன் பதில் எழுத விவாதம் தொடர்ந்தது..

கலா மோகினியில் புதுக் கவிதையை ஆதரித்து வி.தை.இராசகோபலன்

"உணர்ச்சியும் சொல்லும் கூடில்
உண்மையில் கவிதையாமிப்
புணர்ச்சியில் லாததெல்லாம்
புலவர் வாய்ச் சொல்லென்றாலும்
மணமிலா மலர் தானென் போம்
மானிடர் மாண்டு போனால்
பிணமெனவே நாம் சொல்வோம்
பிறர்சொலும் வசவுக்ஞ்சோம்'

என்கிறார்..இப்பத்திரிகையின் ஆசிரியர் சாலிவாகனன் இவரே.

"சாக்கடைச் சோற்றை
யாம் உண்கிறோம்
அங்கு சர்க்கரைப் பொங்கலை
ஜமாய்கிறார்"

என்ற புரட்சி கவிதைகளும் அரங்கேறியன.

ஓவியன்
15-09-2007, 06:27 AM
தினம் தினம் புது விளக்கங்கள்......
தொடர்ந்து அசத்துங்க சகோதரி........

உங்கள் தேடலிலே நானும் நனைகிறேன் ஒரு சிறு பிராணியாக........!

jpl
16-09-2007, 01:00 AM
தோன்றிய காலகங்களில் தன் வாழ்விற்காகப் போராடிய புதுக் கவிதை
அறுபதுகளில் வளர்ச்சி கண்டது.எழுபதுகளில் தனி இடம் தனக்கென்று பிடித்துக் கொண்டது.
1970 அக்டோபரில் மலர்ந்த "கசடதபற" இதழ் புதுக் கவிதைக்கு பேரதரவு கொடுத்தது.
அதில் குறிப்பிடத்தக்கவர் ஞானக்கூத்தன்.

மு.மேத்தாவின் வரிகள் இதோ:
இலக்கணம் செங்கோல்
யாப்பு சிம்மாசனம்
எதுகை பல்லாக்கு
மோனைத் தேர்கள்
தனிமொழிச் சேனை
பண்டித பவனி
இஅவையெதும் இல்லாத
கருத்துகள் தம்மைத் தாமே
ஆளக் கற்றுக் கொண்ட
புதிய மக்களாட்சி முறையே
புதுக் கவிதை"

என்கிறார்..

இனி புது கவிதையின் வரையரையை எளிதாக விளக்கி இருக்கின்றார்.
திரு.கோ.கணேசன். பார்ப்போம்...

புதுக்கவிதை எழுதுவதிலுள்ள சிரமம் கவிஞன் கற்பனைக் கற்பூரத்தைப் பற்ற வைக்க வேண்டும், ஆனால் அதற்கு தீக்குச்சியைத் துணைக்கு அழைக்கக்கூடாது. சொற்சிக்கனம் என்பது புதுக்கவிதையில் நீக்க முடியாத அங்கம். கற்பனை என்பது புதுக்கவிதையின் ஆதாரம்.
அவசரகதியில் இயங்கும் மனிதன் புதுக்கவிதையில்
சமுதாயச் சூழலை சாடலாம்.குழந்தையைத் தாலாட்டலாம்.
காதலிக்கலாம்.கல்யாணமும் பண்ணிக் கொள்ளலாம்.
மரணத்தையும் ரசிக்கலாம்.


மரக்கொலையை பற்றி மேத்தா இவ்வாறு எழுதுகிறார்
"இலைச் சிறகுகள் இருந்து மரமாகிய
உங்களால் பறக்க முடியவில்லையே - ஏன்
வேர்களே உங்களுக்கு விலங்காகி விட்டனவா?"

புன்னைகையைப் பற்றியும் கண்ணீரைப் பற்றியும் அப்துல் ரகுமான் பின்வருமாறு கூறுகிறார்
"புன்னகை இதழ்களின் கண்ணீர்
கண்ணீர் கண்களின் புன்னகை"

வைரமுத்து
"எந்தன் பாடல் கேட்டு இடி இன்று கைதட்டும்
தடையொன்றுமில்லை மழை வந்து கேட்கட்டும்"
என்கிறார்.

இவர்களுக்கு புதுக்கவிதையின் நோக்கம் தெளிவாக புரிந்திருக்கிறது. புதுக்கவிதை கண்டிப்பாக படைப்பாளிகளை வெளிக்கொணர்கிறது. உணர்வுகளும் படைப்புகளாகின்றன.
புதுக்கவிதைக்கு இலக்கணம் எதுமில்லை என்பதினை மட்டும் கவனத்தில் கொள்கிறார்கள்.தங்களின் படைப்பு கவிதையாக இருக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டுவதில்லை.

இளசு
16-09-2007, 07:25 AM
அங்க 'இலக்கணங்கள்' அமைந்திருப்பினும்
அங்கு கற்பனை மூச்சும் கருத்துயிர்வீச்சும்
இல்லை எனில் அதன் பெயர் 'சவம்' -


சிக்கனமாய் சிலதைக் கோர்த்தால் - புதுக்கவிதையா?
மணக்கும் மலர்கள் கோர்த்தால் - மாலை
வெறும் சருகுகள் சேர்த்தால் - குப்பை!

இரண்டு வகையிலும் தரமில்லாதற்றை
எதிர்காலம் மறந்து புறந்தள்ளும்..

ஒரு திரைப்பாடல் வரி - 'எனக்குள் ஒருவன்'
இங்கே இடம்பெற்றதன் காரணம் அதன் தரம்..

மு.மேத்தாவின் :

தாங்கமுடியாத மகிழ்ச்சியில் மரங்கள்
தலையாட்டுகின்றனவே..
பூமிக்கடியில் வேர்கள்
புல்லாங்குழல் வாசிக்கின்றனவா?

நான் பெயர் அறியாத ஒரு கவி - கவிக்கோவின் மாணவர்:
இரவில் வாங்கினோம்
இன்னும் விடியவே இல்லை!

இவை சட்டென மேற்கோள் காட்ட வந்து நிற்பதன் காரணம் - தரம்!

படைப்பாளிகள் வாய்ச்சண்டையில் - இது பெரிதா அது பெரிதா
என தர்க்கத்தில் - சக்தி, உணர்ச்சி விரயம் செய்வதைவிட
அவரவர் பெரிது என நம்பும் பாணியில்
காலத்தை வெல்லும் படைப்புகள் தருவதே உண்மையான
கருத்துப்போர்!

என்னைப் பற்றிப் பேசவேண்டியது
என் செயல்கள்!
என் வாய் அல்ல!


லதா அவர்களின் நல்ல இத்தொடரால் இலகுவாக
கவிதையின் காலப்போக்கையும், நல்ல அடையாளங்களை இனம்காணும் விதங்களையும் அறியக்கற்கிறேன்.. நன்றி லதா...

ராஜா
16-09-2007, 07:52 AM
நம் லதா திரியாயிற்றே என்று வந்தேன்.. ஏதேதோ பெரிய விடயங்கள் பேசுகிறீர்கள்.. எனக்குதான் ஒன்றுமே புரியவில்லை..!

நீங்கள் அனைவரும் துய்க்கும் கவியின்பம் எனக்கு மட்டும் எட்டாக்கனியாகவே இருக்கிறது..

கொடுத்து வைத்தவர்களே.. அனுபவியுங்கள்..!

இளசு
16-09-2007, 09:25 AM
சுவை புதிது பொருள் புதிது வளம் புதிது
சொற் புதிது சோதிமிக்க
நவ கவிதை>>>>>>>>>>>பாரதியார்



இது பற்றி ஓர் இணையக்கட்டுரை ( அபி எழுதியது) காண -

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7369

jpl
16-09-2007, 02:24 PM
நன்றி ராஜா,இளசு ஆகிய இருவருக்கும்.


சிக்கனமாய் சிலதைக் கோர்த்தால் - புதுக்கவிதையா?
மணக்கும் மலர்கள் கோர்த்தால் - மாலை
வெறும் சருகுகள் சேர்த்தால் - குப்பை!

100 ல் ஒரு வார்த்தை இளசு.
வரட்சியான வார்த்தைக்களைப் போட்டு கவிதை என்று
கூறுபவர்களே அதிகமாகி விட்டனர்.
ஆனால் வருங்காலத்தில் இதுவே கவிதை என ஏற்றுக் கொள்ள
பெறுமோ எனவும் தோன்றுகின்றது.

jpl
17-09-2007, 12:26 AM
இளசுவின் மேற்கோளிலிருந்தே புதுக்கவிதையின் அங்கலட்சணம் புரிந்து கொள்ள முடிகின்றது.

சிக்கனமாய் சிலதைக் கோர்த்தால் - புதுக்கவிதையா?
மணக்கும் மலர்கள் கோர்த்தால் - மாலை
வெறும் சருகுகள் சேர்த்தால் - குப்பை!
பொருள் மறைந்து அர்த்தம் தருவது ஒரழகுதானே..
இதோ மற்றொன்று,

நான் பெயர் அறியாத ஒரு கவி - கவிக்கோவின் மாணவர்:
இரவில் வாங்கினோம்
இன்னும் விடியவே இல்லை!.

jpl
17-09-2007, 12:28 AM
ஆடிக்கு பின்னே
ஆவணி

தாடிக்கு பின்னே
தாவணி

இது புதுக் கவிதையா இல்லையா
என்ற சர்ச்சை ஓய்ந்து விட்டதா இல்லையா என்று தெரியவில்லை.

ஏன் இருக்க கூடாது..
இந்த 4 வரிகள் 1 சோகக் கதையேவே கண் முன் காட்சியாக
விரிக்கின்றதே..

தாடி,ஒரு பாட்டில்,ஒரு நாய்,ஒரு போர்வையைப் போர்த்திய
தேவதாஸ்...தாடிக்கு பின்னால் உள்ள காதல் தோல்வி..

சொற்களின் சிக்கனத்திற்கு இதை விட உதாரணமுள்ளதா?

இது வரை நாம் இலக்கணம்,இலக்கியம் போன்றவற்றைப் பார்த்தோம்.
இலக்கியச்சுவையின்றி,யாப்பினால் கட்டப்பட்ட பாக்களும் சுவை பெறா.
இலக்கியச்சுவையை வேண்டுமென்று வர்ணனை சொற்களை இட்டு நிரப்பினாலும் சுவை பெறாது.
பின் என்னதான் வேண்டும்?
2 வரி ஆனாலும் சரி அதற்கு மேல் எத்தனை வரியாக இருந்தாலும் சரி,
கருவும், அதனை நோக்கிச் செலுத்தப் பட்ட வார்த்தைகளின் ஆழமும்,அழுத்தமும் வேண்டும்.
கவிதை என்பதால் இலக்கியச் சுவையால் அறியப்படுகின்றது.
இதை அறிந்து கொள்வதே நுண்மான் நுழை புலமாகும்

இளசு
17-09-2007, 06:56 PM
மெல்ல மெல்ல ஒரு நல்ல பயணத்தில் எங்களையும் அழைத்துப்போகும்
உங்கள் பாங்கு அருமை லதா..

நுண்ணிய ரசனை என்னும் ஊருக்குப் போகும் பாதை நெடுகுமே
கவரும் காட்சிகள் உள்ள ''காட்சியழகுப் பாதை'' ( சீனிக் ரூட்'')
என்பதால் பயணம் இனிமையாகவே..!

தொடருங்கள்!

ஆதவா
18-09-2007, 06:20 AM
அனைத்தும் படித்தேன்..... தேன்...

பாதை மாறிக் கொண்டிருக்கும் கவிதைப் பூமிக்கு சரியான வட்டம் போட்டு கொடுத்தது போல இருக்கின்றன பதிவுகள்.....

தரமான இந்த தொடரில் இன்னும் பலர் பங்கேற்கவேண்டும் என்பதே எனது வேண்டுகோள்....

jpl
18-09-2007, 12:32 PM
நன்றி இளசு,ஆதவா..

அமரன்
18-09-2007, 02:59 PM
அருமை...அருமை...
அனைத்து படிக் கவிஞர்களுக்கும் பிரயோசமான திரி. லதாக்காவின் விளக்கங்களும் அதற்கு தகுந்தாற்போல அண்ணாவின் பதில் பதிவுகளும் தாமரை அண்ணா,ஆதவாவின் அணில் பதிவுகளும் வரப்பிரசாதம்...மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுவது இச்சுடரின் சிறப்பு....காலையில் மன்றம் வந்து சுற்றிப்பார்த்துவிட்டு இங்கே வந்தேன். ஆதியை சுவைத்ததும் எல்லாப்பதிவுகளையும் பிரதி எடுத்து கணினியில் சேமித்துவிட்டு மன்றம் விட்டு விலகினேன்...ஏறத்தாழ இரண்டரை மணித்தியாலங்கள் ஆழ்ந்து படித்தேன்..(ஹி...ஹி...என் துய்க்கும் வேகம் அப்படி)....அப்படி இருந்தும் தாகம்தணியாத உணர்வு...உள்ளதையும் கேட்கிறது இன்னும் கேட்கிறது..நன்றி...நெஞ்சார்த்து சொல்கின்றேன்...நன்றி அனைவருக்கும்..

jpl
18-09-2007, 04:01 PM
நன்றி அமரன்.நான் இன்னும் கொஞ்சம் ஊக்கம் கொள்கிறேன்.
இது போன்ற பின்னூட்டத்தால்..

jpl
19-09-2007, 02:31 AM
இலக்கணமா?இலக்கியமா?என்பதின் நாம் கவனிக்க வேண்டிய
விஷயம் பிழைகள்.
எழுத்துப் பிழை மட்டுமின்றி பொருட்பிழையும் நாம் நம்மையறியாமல்
இட்டுச் செல்வதுண்டு.
சந்திப்பிழைப் பிழை,சாரியைப் பிழை இல்லாமல் எழுத முயற்சிக்க வேண்டும்.
மரபுசார் விஷயங்களில் கவனமாக சொற்களை பயன் படுத்த வேண்டும்.
தலைவியை,காதலியை,மனவியை வர்ணிக்கும் சொற்களைப் பிறர்க்கு பயன் படுத்த இயலாது.

தேன் மயங்கு மொழியினள்,தசரதனை வணங்கி வரவேற்றாள்.
தேன் மயங்கு மொழியினள்,லட்சுமணனை வாழ்த்தி வரவேற்றாள்.
தேன் மயங்கு மொழியினள்,முனிவரை தண்டனிட்டு வரவேற்றாள்,
அல்லது சிரந்தாழ்த்தி,கரம் குவித்து வணங்கி வரவேற்றாள்.
தேன் மயங்கு மொழியினள்,தோழியரை நகைப்புடன் வரவேற்றாள்.
தேன் மயங்கு மொழியினள்,ராமனைக் கொஞ்சி வரவேற்றாள்.
இதனை மாற்றி பயன் படுத்தினால் நகைப்புக்கு உரியதாகிவிடும்.
(நான் 40 வருடங்களாக சிலேட்,குச்சி,காகிதம்,பென்சில்,பேனா என்றே எழுதிப் பழகியதால் தட்டச்சில் எழுத்துப் பிழைகள் மலிந்து விடுகிறது.
வார்த்தைகளில் எழுத்துகளையும் விட்டு விடுகிறேன்.எனவே பிழையைப்
பற்றி கூறும் இவர்கள் பதிவில் பிழைகள் இருக்கின்றதே எனக்கருது வோருக்காக இந்த தன்னிலை விளக்கம்.)
மன்ற தமிழ் ஆர்வலர்கள் தங்கள் பதிவின் கீழ் சிறு சிறு குறிப்புகளை இடலாம்.
ஒற்று மிகா இடங்கள்:
நமக்கு பெரும் பிரச்னை எந்த இடத்தில் ஒற்று வரும் எந்த இடத்தில் வராது என்பது தான்.
அது,இது,அவை,இவை என்னும் சுட்டுகளுக்கு பின்னும்,
எது,ஏது,யாது,யாவை,யா என்னும் வினாக்களுக்கு பின்னும் வலி மிகாது.

ஷீ-நிசி
19-09-2007, 03:52 AM
புதுக்கவிதையின் சிறப்பை பற்றி சிறப்பாக சொல்லியிருக்கின்றீர்கள்...

ஆடிக்கு பின்னே ஆவணி
என் தாடிக்கு பின்னே தாவணி...

இதில் சொல்லபடாதது ஒன்றுமேயில்லை...

சொற்சிக்கனம் மிக அழகாக உள்ளது. கருத்து நிறைவாக உள்ளது.

புதுக்கவிதையில், நிறைய கற்பனை... அர்த்தம் பொதிந்த வார்த்தைகளில் அவசியம்... கவிதை எழுத விரும்பும் அனைவருமே இத்திரியினை அவசியம் படிக்கவேண்டும்..

எழுத்துக்களில் பிழை வருகிறது.. பிழையைப்பற்றி சொல்வதற்கு ஓர் தன்னிலை விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள்....

எனக்கு ஒரு கதை தோன்றியது..

ஒரு பெரியவர் ஒருவனிடம் அவன் குறைகளை சொல்லிக்கொண்டிருந்தாராம்.. நீ இதை இதையெல்லாம் திருத்திக்கொள்ளவேண்டுமென்று....

இன்னொரு நாள் அந்த முனிவர் எதோ தவறு செய்திட, எதேச்சையாக அந்த மனிதர் அதை பார்த்துவிட்டு அந்த பெரியவரை நோக்கி கேட்டானாம்...

முதலில் உங்களை திருத்திக்கொள்ளாமல் எனக்கு நீங்கள் எப்படி அறிவுரை கூறுகிறீர்களே என்று...

அதற்கு அந்த பெரியவர் கேட்டாராம்.. உன் வீட்டிலே துடைப்பம் இருக்கிறதா??...

இருக்கிறது என்றானாம்..

அது அழுக்காக இருக்குமா?, சுத்தமாக இருக்குமா? என்று கேட்டாராம்..

அழுக்காகத்தான் இருக்கும் என்றானாம்..

வீட்டை சுத்தம் செய்ய அந்த துடைப்பத்தைத்தானே பயன்படுத்துகிறாய்?...

ஆம் என்றானாம்....

துடைப்பம் அழுக்குதான்.. ஆனால் அதைக்கொண்டுதான் வீட்டை சுத்தம் செய்கிறோம்.. என்னிடமிருக்கும் குறைகளை நோக்காதே. என்னால் நீ சுத்தமாகிறாயா, தெளிவாகிறாயா என்று பார் அவ்வளவுதான் என்றாராம்...

அவ்வளவுதான்...

தொடருங்கள் லதா அவர்களே!

இளசு
19-09-2007, 06:32 AM
நன்றி லதா..

நன்றி ஷீ..

பிழைகள் - இதுபற்றி பாரதியின் முயற்சிப்போமே திரி உள்ளது.

நான் சந்திப்பிழைகள் மலிய எழுதுவது எனக்கே தெரிகிறது..

ஓலையில் எழுத ஆணி.. அடிக்கடி புது எழுத்து எழுத ஓலையில் புள்ளிகளாய் துளைகள் பெருகும் என - கூட்டெழுத்துகள்..
உளியால் செதுக்கவும், செப்பேடுகளில் பொறிக்கவும் அந்த வகை எழுத்துகள்..

பின் விரலால் மணலில்/நெல்லில் எழுத
பலப்பத்தால் சிலேட்டுப்பலகையில் எழுத ( எச்சில்/தண்ணீர்/ கோவைக்காயால் அழித்தழித்து எழுத)
பென்சில், பேனா - காகிதத்தில் எழுத..

பிறகு தட்டச்ச, அச்சுக்கோர்க்க வசதியாய் - பெரியார் முதல் பலர் எழுத்துவகையைச் சீர்திருத்த

இன்று இணையத்தில் நாமே தட்டச்ச -

(இணையத்தமிழில் வேகம் காரணமாய் சந்திப்பிழைகள் ''பொறுக்கப்படும்''
என மொழி ஆர்வலர்கள் எண்ணுகிறார்கள் - நம் வசதிக்காக தொடர்ந்து
தளர்த்த/மாற்றப்பட்டு வரும் தமிழ் மொழி விதிகள்..)

எத்தனை வடிவம் கண்டு -
இன்னும் நமக்கு இயைந்து
நம்மை வளர்க்கும்..
நம் தமிழ்!

மனதை இன்னும் குவித்து
பிழைகள் குறைப்பதே
நாம் நம் மொழிக்குச் செய்யும்
முதல் நன்றி..
முதல் மரியாதை!

ஷீ-நிசி
19-09-2007, 06:53 AM
மனதை இன்னும் குவித்து
பிழைகள் குறைப்பதே
நாம் நம் மொழிக்குச் செய்யும்
முதல் நன்றி..
முதல் மரியாதை!

உண்மைதான்.....

இளசு
19-09-2007, 06:58 AM
நன்றி ஷீ..

(பவர் சோப் விளம்பர பாணியில் சொன்னால்)

நமக்காக மாறிவரும் தமிழ்
தமிழை (ஏ)மாற்றாமல் நாம்..

jpl
22-09-2007, 12:28 AM
நன்றி இளசு,ஷீநிசி.