PDA

View Full Version : படித்தது பிடித்தது.



தளபதி
29-08-2007, 07:14 AM
ஒன்பதரை மணி காலேஜிக்கு
ஒவ்வொருத்தனா கெளம்பும் போது
ஒருத்தன் மட்டும் தூங்கிகிட்டிருப்பான்
ஒன்பது இருபது ஆகுற வரைக்கும்...

அடிச்சி புடிச்சி கெளம்புறப்போ
அரை குறையா குளிச்சதுண்டு
பத்து நிமிஷ பந்தயத்துல
பட படன்னு சாப்பிட்டதுண்டு

பதட்டதோட சாப்பிட்டாலும்
பந்தயத்துல தோத்ததில்ல,
லேட்டா வரும் நண்பனுக்கு
பார்சல் மட்டும் மறந்ததில்ல!

விறுவிறுன்னு நடந்து வந்து
காலேஜ் வாசல் நெருங்குறப்போ
'வெறுப்படிக்கிதுடா மச்சான்'னு
ஒருத்தன் பொலம்பி தொலச்சாக்கா,

வேற எதுவும் யோசிக்காம
வேகவேகமா திரும்பிடுவோம்
வெட்டியா ரூம்ல அரட்டை அடிக்க,
இல்ல 'தேவி' தியேட்டர்ல படம் பாக்க!

'கஷ்டப்பட்டு' காலேஜிக்கு போனா
கடங்கார புரபஸர் கழுத்தறுப்பான்...
அசைன்மென்ட் எழுதாத பாவத்துக்கு
நாள் முழுக்க நிக்கவச்சி தாக்கறுப்பான்!

கேலி கிண்டல் பஞ்சமில்ல,
கூத்து கும்மாள குறையுமில்ல,
எல்லாருக்கும் சேத்துதான் பனிஷ்மென்ட்ன்னா
H.O.Dய கூட விட்டதில்ல!

ஈ அடிச்சான் காபி இந்தபக்கம்னா
அத அடிப்பான் காபி அந்தபக்கம்...
ஒருத்தன் மட்டும் படிச்சிட்டு வந்து
ஒன்பதுபேர் பாஸ் ஆனதுண்டு!

பசியில யாரும் தவிச்சதில்ல
காரணம் - தவிக்க விட்டதில்ல...
டீக்கடையில கடன்வச்சி குடிச்சாலும்
சரக்கடிக்க பஞ்சமே வந்ததில்ல!

அம்மா ஆசையா போட்ட செயினும்
மாமா முறையா போட்ட மோதிரமும்
பீஸ் கட்ட முடியாத நண்பனுக்காக
அடகு கடை படியேற அழுததில்ல ...

சட்டைய மாத்தி போட்டுக்குவோம்
சாதி சமயம் பாத்ததில்ல,
மூஞ்சிமேல காலபோட்டு தூங்கினாலும்
முகவரி என்னன்னு கேட்டதில்ல!

படிச்சாலும் படிக்கலன்னாலும்
பிரிச்சி வச்சி பாத்ததில்ல...
அரியர்ஸ் வெச்சாலும் வெக்கலன்னாலும்
அந்தஸ்த்து பாத்த ஞாபகமில்ல!

வேலை தேடி அலையுறப்போ
வேதனைய பாத்துப்புட்டோம்
'வெட்டி ஆபிஸர்'னு நெஜமாவே
மாறி மாறி சிரிச்சிகிட்டோம்!

ஒருத்தன் மட்டும் சம்பாதிக்க ஆரம்பிச்சு
ஒன்பது பேரும் உக்காந்து சாப்பிட்டப்போ
மனசு கட்டபொம்மனா நண்பனுக்கு நன்றி சொல்ல
கண்ணு எட்டப்பனா கண்ணீர் சிந்தி காட்டி குடுக்கும்...

பக்குவமா இத கண்டும் காணாம
நண்பன் தட்டி கொடுக்க நெனைக்கிறப்போ
'சாப்பாட்ல காரம்டா மச்சான்'னு
சமாளிச்சி எழுந்து போவோம்...

நாட்கள் நகர,
வருஷங்கள் ஓடுது,
எப்போதாவது மட்டுந்தான் இ-மெயிலும் வருகுது
"ஹேய்டா மச்சான்.. எப்படியிருக்கேன்னு...

தங்கச்சி கல்யாணம்,
தம்பி காலேஜி,
அக்காவோட சீமந்தம்,
அம்மாவோட ஆஸ்த்துமா,
பர்சனல் லோன், வட்டி,
ஹோம் லோன் தவணை,
ஷேர்ல சருக்கல்,
அப்பரசைல்ல டென்ஷன்,

இந்த கொடுமையெல்லாம் பத்தாம
'இன்னிக்காவது பேச மாட்டாளா?' ன்னு
இஞ்சிமறப்பா போல ஒரு காதல்,
.

எப்படியோ வாழ்க்க ஓடுது ஏடாகூடமா,
நேரம் பாக்க நேரமில்ல போதாகாலமா!

இ-மெயில் இருந்தாலும்
இண்டர்னெட் இருந்தாலும்
கம்பெனியில ஓசி போன் இருந்தாலும்
கையில காலிங் கார்டு இருந்தாலும்
நேரம் மட்டும் கெடைக்கிறதில்ல

நண்பனோட குரல கேக்க
நெனச்சாலும் முடியறதில்ல
பழையபடி வாழ்ந்து பாக்க!

அலைபேசி இருந்தும் அழைக்க முடியாம போனாலும்
availableன்னு தெரிஞ்சும் chat பன்ன முடியாம போனாலும்
'ஏண்டா பேசல?' ன்னு கோச்சிக்க தெரியல..
இத பெரிய பிரச்சனையா யோசிக்கவும் முடியல!

கல்யாணத்துக்கு கூப்பிட்டு
வரமுடியாமா போனாலும்,
அம்மா தவறின சேதி கேட்டதும்
கூட்டமா வந்தெறங்கி,
தோள் குடுத்து தூக்கி நிறுத்தி
பால் எடுத்தவரை கூட இருந்து
சொல்லாம போக வேண்டிய இடத்துல
செதுக்கிவச்சிட்டு போன என் தோழர்கள்
தேசம் கடந்து போனாலும்
பாசம் மறந்து போகாது!
பேசக் கூட மறந்தாலும்
வாசம் மாறி போகாது!
வருஷம் பல கழிஞ்சாலும்
வரவேற்பு குறையாது!
வசதி வாய்ப்பு வந்தாலும்
'மாமா' 'மச்சான்' மாறாது!

படித்தது பிடித்தது.

ஆதவா
29-08-2007, 07:30 AM
நண்பரே இந்த கவிதை நீங்கள் எழுதியதா?

தளபதி
29-08-2007, 07:36 AM
இல்லை, இது எனக்கு மெயிலில் வந்தது. யார் எழுதியது என்பது தெரியாது. இது எனக்கு பிடித்துப்போனதால் இங்கே "படித்தது பிடித்தது" என்று கொடுத்துள்ளேன்.

இதில் எதுவும் தவறு இருந்தால் தெரியப்படுத்துங்கள். திருத்திக்கொள்கிறேன். நன்றி.

ஆதவா
29-08-2007, 07:40 AM
தங்களுடையது இல்லை என்றால் எந்த ஒரு பதிவையும் " இலக்கியங்கள் புத்தகங்கள்" பகுதியில் பதிக்கவேண்டும் அன்பரே!

தளபதி
29-08-2007, 07:44 AM
நன்றி!! தகவலுக்கு நன்றி. இனி அவ்வாறு செய்கிறேன்.

தயவுசெய்து இந்தப் பதிவை "இலக்கியங்கள் புத்தகங்கள்" பகுதிக்கு மாற்றிவிடுங்கள். நன்றி.