PDA

View Full Version : வேறொரு தளத்தில் எனது கவிதைகள்



பிச்சி
25-08-2007, 05:52 AM
தமிழ்மன்ற அண்ணாக்களுக்கும் அக்காக்களுக்கும். எனது கவிதைகள் வேறொரு தளத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். அவை இங்கே உள்ள கவிதைகள் தான். படித்துவிட்டு கருத்து சொல்லுங்கள்.
நன்றி
பிச்சி

கவிதை 1 (http://muthukamalam.com/muthukamalam_kavithai19.htm) (நட்பு − ஆன்மீக நந்தவனம்)

கவிதை 2 என் தாய் (http://www.geotamil.com/pathivukal/poems_march2007_pichi.htm)

அந்த கவிதைகள் எழுத்தாக இங்கே :

நட்பு

தீண்டும் தென்றலின்
இன்ப ராகங்கள்
அதைக் குடைந்து குடைந்தே
உருவாக்கிய கவிஞனின் சிற்பம்

ஆண்டவன் அதிமயங்கி
தென்னைக் கீற்றுச் சந்துகளில்
வந்திறங்கி சுவாசம் தேடும்
ஆரோக்கிய ஸ்பரிசம்

ஆர்ப்பாட்ட கடலடியில்
ஆழ்ந்துறங்கும்
தென்றலை
அடிமனதில் வைத்து
அழுத்தி
காலம் இசைக்கும்
சோகத் தாலாட்டு

கற்பாறை மனதுகளை
தூக்கி யெறிந்த
கட்டிலா அலைகளின்
முக்கிய தருணங்கள்.

இருட்டுகிற பொழுதுகளில்
இனிய ஓசை எழும்
இலை உதிர்வுகளைக்
கேட்டு கேட்டே
உதயமாகும்
இன்பச் சூரியன்.

நித்தமும் ஓலைக் கீற்றின்
உள்வழி ஒளியாக
பிம்பங்களின் ரூபம் மாற்றும்
நிழல்களின் சிரிப்பு.

அஃறிணை பொருள்களின்
சத்துழைக்காத அனுபவங்களை
ஒத்துழைக்கச் செய்யும்
சண்டமாருதம்.

வெப்பத்தின் சச்சரவுகளை
சொக்கியே பார்க்கும்
H2O உள்ளத்தின் தவனம்
நீரின்றி உலகேதென
நமட்டுச் சிரிப்புடன் வாழும்
ஆன்மீக நந்தவனம்

உயிர்க் காற்றின்
ஓர்பொழுதுகளில்
திசையறியா பயணமிக்கும்
பறவைகளின் சரணாலயம்.

________________________________________________________________________ என் தாய்


என் கருவிழியின்
நரம்புகளுக்குள்
திவலை கட்டிய நீரினைக்
கண்டு கண்டே
உயிர் பதறும்
மயிர் நிறைந்த இமைகள் நீ!

கண்களின் பாஷைகளை
கண்சிமிட்டியே
கற்றுக் கொடுத்து
நிலவோடும் மலரோடும்
இணைய வைத்த
திருப்புதல்வி நீ!

என் அறை முழுவதும்
சப்தமின்றி பரவிக் கிடக்கும்
இறைவனோடு கலந்த
ஒளிச் சிதறல் நீ!

மேகக் கூடலில்
வண்ணமில்லா, வன்மையில்லா
தூய்மையான மழைத்துளியின்
ஓர் துளி அணு நீ!

தன்மையும், மென்மையும்,
பெண்மையும், உண்மையும்
கலந்த இக் காலத்ததின்
பொருத்தமான காவியம் நீ!

ஆயிரம் கவிதைகள்
உள்ளடங்கிய
ஆற்றல் வைரத்தினைவிட
ஒப்பில்லா
திருக்குறள் நீ!

நிறமும், சுவையும்,
உயிரும், விலையும்,
இல்லா ஜடப் பொருள்களுக்கு
கண்ணசைவில் உயிர்கொடுக்கும்
பார்வதியும் நீ!

இந்த யுகங்களின்
தூய்மையான ராகமாகிய
தாலாட்டின் தாய்மை நீ!

மலர்ந்து, குலுங்கும்
பூக்களின் மகிழ்ச்சியில்
குதூகலிக்கும் புன்னகை நீ!

மேகக் கூட்டங்களில்
ஆழ்ந்துறங்கும்
வெண்மதியின் மடியமர்ந்து
என்னை உறங்கவைத்த
தியாக சொரூபி நீ!

பூ மொட்டுக்களை
பார்வைக் கணைகளால்
ஏற்றி, கனியாக்கம் செய்யும்
தென்றலின் தலைவி நீ!

எத்தனை தவமிருந்தும்
எத்தனை வரம் பெற்றும்
காணக் கிடைக்கா தெய்வமும்
கிடைக்கக் காணா வரமும் நீ!

(ஆயிரம் வருடங்கள்
தவம் செய்து, வரம் பெற்ற
ஞானியர் எவரும்
காணாத தெய்வம் நீ!)

ஒரு விழியில்
இரு விழியாக்கி
ஒரு உயிரினில்
இன்னுயிர் இட்டு
வலிபிடுங்க பிச்சியைப்
பெற்றெடுத்தவள் நீ!

ரம்மியமாக சப்தமிடும்
ரீங்கார வண்டுகளின்
சத்தத்தில்
பிச்சிப்பூ வரவேற்க
மெளனமே பாடலாய் பாடும்
இணையில்லா ராகத்தின்
முதல் வரி நீ!

பல வார்த்தைகள் அடங்கிய
ஈடில்லா கவிஞனின்
கவிதைக்குள்,
மறைமுகமாய்
மறைந்திருக்கும்
உட்கருத்து நீ!

சிறு சத்தத்தோடு ஒரு
முத்தம் நான் கொடுக்க,
உன் ரத்தத்தை பாலாக்கித்
தந்த ஸ்ரீதேவீ நீ!!

மல்லிகையும், ரோஜாவும்
இன்னும் உயிர் வாழ
கூந்தல் ஏற்றி சூட்டிக்கொள்ளும்
பூக்களின் கடவுள் நீ!!

தினமும் உன்னைத்
தொழவே எழுந்திடும்
சூரியனின்
தாயும் நீ!

ரதியென்ன, ரம்பையென்ன,
மூவுலகிலும் இணையில்லா
சொரூபவதியும் நீ!

கொத்தித் திரியும்
குயில்களின் விழிகள் ஒத்த
கண்களைக் கொண்ட
சீதையும் நீ!

விரிந்து ஆடும்
மயில்களின் தோகையும் விட
மென்மை கொண்ட
கரங்களை உடையவளும் நீ!


நீ யின்றி
இக்கவிதை இல்லை
நானில்லை
உலகில்லை,
மோட்சமில்லை,
ஆக, நீயின்றி கடவுளும் உளவோ?

சிவா.ஜி
25-08-2007, 06:05 AM
இரண்டு தளங்களிலும் பிச்சியின் சுகந்தம் நுகர்ந்தேன்.தாய்க்கான நீண்ட கவிதையும்,ஆன்மீக நந்தவனமும்..அடிமனதை வருடியது.அபாரமான சொற்களோடு சுவைநிறைந்த கவித்தேனை மிக ரசித்தேன்.வாழ்த்துக்கள் பிச்சி.

lolluvathiyar
25-08-2007, 06:13 AM
வேறு தளத்தில் உங்களை அறியாமல் வெளியிட்டார்களா

இலக்கியன்
25-08-2007, 07:54 AM
அழகான சொல் நயம் கொண்டகவிதைகள் இங்கும் இணைத்தமைக்கு நன்றி

பூமகள்
28-08-2007, 02:09 PM
அற்புதமான சொல்லாடல்... கவித்திறன் தங்கையே..
வாழ்த்துக்கள்.... பிச்சியின் கவி வாசனையில் கற்க பல விசயம் உள்ளது..
பாராட்டுக்கள் பிச்சி.
மன்றத்தில் அழகுக் கவி இணைத்தமைக்கு நன்றி.

மனோஜ்
28-08-2007, 02:23 PM
சிறப்பான கவிதை அதான் இரண்டு பகுதியிலும் வெளிட்டுள்ளார்கள் வாழ்த்துக்கள் பிச்சி

ரிஷிசேது
28-08-2007, 05:25 PM
மிகச்சிறப்பான கவிதை வெகு சிலருக்கே இத்தகைய சொல்லமைப்பு வருகிறதென்றுகூட சொல்லலாம். வாழ்த்துக்கள் பிச்சி

கலைவேந்தன்
07-09-2007, 05:31 PM
பாராட்டுக்கள் பிச்சி!
உங்கள் கவித்திறமை தமிழ் இணையம் அறிந்த ஒன்றே!
இன்னும் நிறைய வழங்குங்கள்!

பிச்சி
10-09-2007, 08:22 AM
என்னை பாராட்டிய அத்தனை உள்ளங்களுக்கும் எனது நன்றி.

வாத்தியார் அன்னா, என்னிடம் கேட்டுத்தான் வெளியிட்டார்கள்.

அன்புடன்
பிச்சி