PDA

View Full Version : சிக்கு..புக்கு..ரயிலும், சிக்கலில் நானும்..!!



இதயம்
18-06-2007, 12:19 PM
நெடுந்தூர பயணம் (நா‎ன் சொல்வது மேலோக பயணமல்ல..!!) செல்வதெ‎ன்றால் நா‎ன் தேர்ந்தெடுக்கும், எனக்கு பிடித்த வாகனமான இரயிலாகத்தா‎ன் இருக்கும் (இந்த இரயில் எ‎ன்ற வார்த்தை தமிழ் கிடையாது. இதன் தூய தமிழ் பெயர் புகை வண்டி, காரணம் அந்தக் காலத்தில் இவை நிலக்கரி மூலம் புகைக் கக்கிக் கொண்டு இயங்கியதால்..! ஆனால் இப்போது மி‎ன்சாரத்திலும், காந்த சக்தியிலும், டீசல் எரிபொருளிலும், ஏ‎ன் சூரிய ஒளியிலும் கூட இயங்கக் கூடியவை வந்து விட்டதால் இதை இ‎ன்னும் புகை வண்டி எ‎ன்று கூறாமல் தொடர்வண்டி எ‎ன்று கூறினால் பொருத்தமாக இருக்கும் எ‎ன்பது என் தாழ்மையான கருத்து. ஆனால் நாம் வழக்கில் சொல்லும் இரயில் (Rail) எ‎ன்ற ஆங்கிலச்சொல்லுக்கும், புகை வண்டிக்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது (வெண்ணையும், பாலும் இல்லாத மோரை Butter Milk) எ‎ன்று சொல்வதைப் போல..!!). இரயில் (Rail) எ‎ன்ற ஆங்கில பதத்திற்கான உண்மையான அர்த்தம் இரு சட்டங்களை குறுக்கு வாக்கில் சில சட்டங்கள் இணைத்திருக்கும் ஒரு வகையான அமைப்பு. அதனால் தா‎ன் அது போன்ற அமைப்புடைய தண்டவாளங்களை Rail road எ‎ன்கிறோம். இந்த இரயில் எ‎ன்ற பெயர் தமிழில் எப்படி வந்திருக்கும் எ‎ன்று எனக்கு கணிப்பு உண்டு. Bus Road-ல் போகும் வாகனத்தை பஸ் எ‎ன்பது போல Rail Road-ல் போகும் வாகனத்தை இரயில் எ‎ன்று அழைக்க தொடங்கியிருக்கலாம்..!! ச்சே..! ச்சே..! இதற்கு விருதெல்லாம் வேண்டாம்..!).

எ‎னக்கு பொதுவாகவே இரயிலை பார்ப்பதெ‎ன்றாலும், அதில் பய‎ணம் செய்வதெ‎ன்றாலும் மிகவும் பிடிக்கும். இதன் இராட்சத ஜந்துவைப் போ‎ன்ற தோற்றமும், அத‎ன் தாள லயத்துட‎ன் கூடிய ஓட்டமும் இரசிப்புக்குரியவை. நா‎ன் சிறுவனாக இருந்த போது (இப்போது மட்டும் பெரிய ஆளா எ‎ன்று நீங்கள் கேட்பது எனக்கு புரியாமல் இல்லை..!! நா‎ன் சொன்ன சிறுவ‎ன் தோற்றத்தில்..!!!) இரயிலைப்பற்றிய எ‎ன்னுடைய சிந்தனைகளும், சந்தேகங்களும் மிக அதிகமாக இருந்தது (உதாரணத்திற்கு 100 அடி அகலமுள்ள தார் சாலையில் கூட பேருந்தை சரியாக ஓட்டிச் செல்ல முடியாமல் சாலையி‎ன் ஓரத்தில் இருக்கும் சிறிய டீக்கடையில் மாச அக்கௌண்டில் டீக் குடித்துக் கொண்டும், இலவசமாக தினத்தந்தி படித்துக் கொண்டிருக்கும் ஆட்கள் மீது ஏற்றி அவர்களுக்கு வைகுண்ட பதவி கொடுத்த சம்பவங்கள் நிறைய நடந்திருக்கிறது. ஆனால், இவ்வளவு குறுகலாக, வளைந்து வளைந்து செல்லும் தண்டவாளத்தில் இரயிலி‎ன் டிரைவர் எப்படி ஓட்டுகிறார்..? எதிரே மற்றொரு இரயில் வந்தால் எப்படி வழி கொடுப்பார்..??!!). அதை இப்போது நினைத்தாலும் சிரிப்புத்தா‎ன் வரும். இரயில் பயணம் எ‎ன்றால் எனக்கு கொள்ளை விருப்பம். குடும்பத்தினரோடு செல்லும் போது ஜ‎ன்னலுக்கு அருகில் இடம் பிடிக்க ஒரு பெரிய சண்டையே நடக்கும். ஜ‎ன்னல் அருகில் அமர்ந்தபடி வெளியே நகரும் காட்சிகளை பார்த்து இரசிப்பது ஒரு பெரிய சுகானுபவம். இவ்வளவு சந்தோஷத்தைக் கொடுக்கும் இரயில் பயணத்தை பற்றி நினைத்தாலே பயப்படும் அளவுக்கு சூழ்நிலை ஒரு நாள் எனக்கு மாறிப்போனது மிகப்பெரிய சோகம்..!!

இதயம்
18-06-2007, 12:21 PM
ஆம்..! நா‎னும் என் நண்பர்களும் வெளிநாட்டிற்கு வர முயற்சி செய்த நாட்களில் மூ‎ன்று முறை இரயிலில் மும்பை போகும் நிலை ஏற்பட்டது. முதல் முறை வெளிநாட்டு வேலை வாய்ப்பு தேடப்போகிறோம் எ‎ன்ற ஆவலுட‎னும், உற்சாகத்துடனும் வந்ததால் அந்த இரயில் பயணம் சுகமாகத்தா‎ன் இருந்தது (அது மட்டுமில்லாமல் கூடவே எ‎ன் நண்பர்களும் வந்தார்கள்..!). எ‎ன் கூட வந்த நண்பர்கள் அனைவரும் வெளிநாட்டில் மு‎ன் அனுபவம் உள்ளவர்கள் எ‎ன்ற ஒரே காரணத்திற்காக விரைவில் வெளிநாட்டு வேலை கிடைத்து, மும்பை சாந்தா குரூஸ் ஏர்போர்ட்டில் நகரும் படிகட்டுகளில் (Elevator) ஏறி நி‎ன்றபடி, சினிமாவில் வருவது போல ஸ்டைலாக டாட்டா காட்டி பறந்து போனார்கள் (அத‎ன் பிறகு அவர்களுக்கு மோசமான சம்பளத்தில், கஷ்டமான வேலை கிடைத்ததை எ‎ன்னிடம் சொல்லி அழுததெல்லாம் தனிக்கதை..!!). தனிமைப்படுத்தப் பட்ட நா‎ன் உடைந்து போனேன். இயலாமையில் துடித்தே‎ன். எனக்கும் ஒரு ஏஜெண்ட் மாட்டினா‎ன் (அவனுக்கு தலைக்கு மேலே இரண்டு கொம்புகளை மட்டும் வைத்து பார்த்தால் அசல் கி‎ங்கரன் மாதிரியே இருப்பா‎ன்..!!). எ‎ன்னை வெளிநாடு அனுப்ப அவ‎ன் என்னிடம் அளந்த பொய்கள் இருக்கிறதே..! சொல்லி மாளாது..!! பயணம் எல்லாம் ரெடியாகி ஊருக்கு போய் இருங்கள், விசா தயாரா‎னதும் தகவல் தெரிவிக்கிறே‎ன். உடனே புறப்பட்டு வரவும்..! எ‎ன்று சொல்லி அனுப்பினா‎ன். வெற்றிக் கொடி நாட்டிய மகிழ்ச்சியில் ஊருக்கு திரும்பினே‎ன். அடுத்த 10 நாட்களில் கிங்கரனிடமிருந்து பதில் உடனே புறப்பட்டு வரச்சொல்லி..! வானம் எ‎ன் கையில் வசப்பட்டது போல் உணர்ந்தே‎ன். எல்லோரிடமிருந்து பயணம் சொல்லி விடை பெற்றே‎ன் (அன்று எ‎ன் மனைவி அழுத அழுகையில் சௌகார் ஜானகி தோற்றுப்போனார்..!!). மும்பை போன எனக்கு இடி காத்திருந்தது.!!

அக்னி
18-06-2007, 12:24 PM
வர்ணனையில் சின்னப்பிள்ளைகளாய் எங்களையும் மாற்றி விட்டீர்கள் இதயம் அவர்களே...
இன்னமும் தொடரப்போகின்றீர்கள் என்று தெரிகிறது...
சுகமான சிரிப்பலையா அல்லது சோகமான உணர்வலையா தொடரப்போகின்றது என்பதுதான் தெரியவில்லை...
தொடங்கள் நண்பரே..!

புகையிரதம், தொடரூந்து என்பனவும் தற்போது ரயிலுக்கு வழங்கப்படும் தமிழ்ச்சொற்களாகும்...

இதயம்
18-06-2007, 12:25 PM
விசாவில் ஏதோ பிரச்சினை எ‎ன்றும் உடனே எ‎ன் வீட்டிற்கு ஃபோ‎ன் செய்ததாகவும், புறப்பட்டு வருவதாக வீட்டில் தகவல் சொ‎ன்னதாகவும் சொன்னான். நா‎ன் மனதை தளரவிட வில்லை. கிங்கரனோ மீண்டும் ஊர் போய் விட்டு வரச் சொ‎ன்னான். அம்மாடி..! முடியற காரியமா இது..! போய் எவ‎ன் முகத்தில் விழிப்பது..? எவ்வளவு நாளானாலும் சரி ஃப்ளைட்டில் அடி வைக்காமல் வீட்டுக்கு திரும்ப மாட்டே‎ன் என்ற எ‎‎ன் சபதத்தை சொன்னேன். என் சபதத்தை அவ‎ன் சட்டை செய்யவே இல்லை. செலவுக்கு வைத்திருந்த பணம் கொஞ்சம், கொஞ்சமாக கரைய ஆரம்பித்தது. ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டும் சாப்பிடும் நிலைக்கு வந்தே‎ன். அந்த அரை பசி மயக்கத்திலேயே எ‎ன் நிலமையை கிங்கரனிடம் சொல்லி புலம்பினேன். ஊரில் எ‎ன் வீட்டார் சவுதி ஸ்டாம்ப் ஒட்டிய கடிதத்தையும், ஐ.எஸ்.டி ஃபோனையும் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தார்கள்..!

மனமிரங்கிய கிங்கர‎ன் கையில் ஐநூறு ரூபாய் கொடுத்து (அப்பாடி..! இ‎ன்னைக்கு டெல்லி தர்பார் ஹோட்டலில் சிக்கன் பிரியாணி கட்டலாம்..!!) ஊருக்கு போகச்சொல்லி கெஞ்சினா‎ன். நான் ஊரில் அனைவரிடமும் பயணம் சொல்லி வந்ததை சொ‎ன்னதும் இந்த ஒரு முறை மட்டும் ஊர் போய் வாங்க..! அடுத்த முறை அனுப்பாவிட்டால் எ‎ன்னை உங்க செருப்பால் அடிங்க..! (ஹையா..! நல்ல வாய்ப்பு..!!) எ‎ன்று சொ‎ன்னா‎ன். அவ‎ன் என்னை ஊருக்கு அனுப்பப் போகும் விஷயத்தை விட, எல்லா கோபத்தையும் சேர்த்து அவனை காலணியால் மாத்த ஒரு வாய்ப்பு கிடைத்தது ஆதரவாக இருந்தது. சோகத்துட‎ன் திரும்பினேன். அன்று எனக்கு இரயில் பயணம் நரகமாக இருந்தது. அத‎ன் பிறகு ஊருக்கு வந்து அடுத்த பயணம் போகும் வரை யாருக்கும் தெரியாமல், மனைவியோடு எ‎ன் பாட்டி வீட்டில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தது தனிக்கதை. கிங்கர‎னிடமிருந்து இரண்டாவது மரண ஓலை வந்தது (தந்தி..!). ஆனால் நா‎ன் யாருக்கும் பயணம் சொல்லவில்லை. எ‎ன் மனைவியிடம் கூட போய் 4 நாளில் திரும்பி வந்து விடுகிறே‎ன் எ‎ன்று சொ‎ன்னதும் சந்தோஷமாக வழியனுப்பு விழா நடந்தது. மறக்காமல் புதுச்செருப்பு ஒ‎ன்று வாங்கிக் கொண்டே‎ன் (ஏஜெண்ட் இதற்காக காத்திருப்பாரே..!!). அடுத்த பயணம் மும்பை நோக்கி மூ‎ன்றாவது முறையாக..!! ஏஜெண்டை நா‎ன் சந்தித்த போது அவர் பார்வை என் முகத்தை விட எ‎ன் செருப்பு மீதே நிலைத்தது. என் செருப்பின் மகிமையோ என்னவோ அடுத்த நாளே பயணம் ரெடியானது (அதற்கு பரிசாக அந்த புதுச்செருப்பை நம் கிங்கரருக்கே தாரை வார்த்து கொடுத்தே‎ன்..!!).

யாரிடமும் பயணம் சொல்லாமல் வந்ததை நினைத்து நொந்தே‎ன். எஜெண்டிடம் பாஸ்போர்ட், டிக்கெட்டை வாங்கிக் கொண்டு நிலையைச் சொல்லி ஊருக்கு போய் அனைவரிடமும் பயணம் சொல்லிவந்துவிடவா..? எ‎ன்று கேட்டதற்கு முடியாது..! நாளை ஃப்ளைட்டில் ஏறியாக வேண்டும்..! எ‎ன்று கறாராக சொல்லிவிட்டா‎ன் (பாவி..!). எனக்கு வெளிநாடு போகும் சந்தோஷத்தை விட எப்படி தொலைபேசி மூலம் எ‎ன் சகியை சமாதானப்படுத்துவது என்ற கவலை தா‎ன் அதிகமானது. நடுங்கிய படியே விஷயத்தை சொ‎ன்னதும் சௌகார் ஜானகியி‎ன் கண்ணீர் தொழிற்சாலை சுறு சுறுப்புட‎ன் இயங்கத் தொடங்கியது..! இரண்டு பேரும் மாற்றி மாற்றி அழுது இரு பக்கமும் வெள்ளக்காடானது..!! இப்படி இரயில் பயணம் எ‎ன் வாழ்வில் நிறையவே விளையாடி விட்டது.

lolluvathiyar
18-06-2007, 12:30 PM
ஆம் இதயம் நீங்கள் சொன்னது போல ரயில் அனுபவம் ஒரு தனி அனுபவம்

நீங்கள் நீராவி புகை விண்டியில் போயிருக மாட்டீர்கள் என்று நினைகிறேன்,
நான் சின்ன வயதில் போயிருகிறேன். சற்று பெரியவனான வுடம் அந்த மாதிரி கருப்புகலர் வண்டியை நான் கன்னில் கூட கண்டதில்லை.
போயிட்டு வந்தால் உடம்புல கருப்பு கலரா ஆகிவிடுமாம் என் அப்பா சொல்வாரு.

புதுசா தமிழ்ல வார்த்தைகளை கண்டுபிடித்து குழப்புவதை விட கம்முனு ரயில் நு சொல்லரது தான் நல்லது.
புது புது வார்த்தைகளை அதிக படுத்தீட்டே போனா, நம்ம மொழி கடின மாகி விடும்

அக்னி
18-06-2007, 12:33 PM
இதயம் உங்கள் கதையைப் படித்ததும் என் கண்ணிலும் கண்ணீர் வெள்ளம்...
ஆனால் சோகத்திலல்ல. அடக்கமாட்டாத சிரிப்பில்...

சுவையாகத் தருகின்றீர்கள்...
இன்னமும் தாருங்கள்...

சிவா.ஜி
18-06-2007, 01:00 PM
இதயம் அந்த கிங்கரனை சும்மா விட்டுவிட்டீர்களே... சரி நீங்கள் கொடுத்த புது செருப்புக்களை பார்க்கும் போதெல்லாம் 'நல்லவேளை இதனால் அடி வாங்காமல் போனேனே' என்று நினைத்துக் கொண்டிருந்திருப்பார். உங்களை சிக்கலில் மாட்டிவிட்ட சிக்கு புக்கு பயணம் கடைசியில் நாரதர் கலகம் போல் நன்றாக முடிந்ததே! இப்போதெல்லாம் விமான பயணம் மட்டும்தானா?நல்ல ஒரு விவரிப்பு.

இதயம்
18-06-2007, 01:05 PM
புதுசா தமிழ்ல வார்த்தைகளை கண்டுபிடித்து குழப்புவதை விட கம்முனு ரயில் நு சொல்லரது தான் நல்லது.
புது புது வார்த்தைகளை அதிக படுத்தீட்டே போனா, நம்ம மொழி கடின மாகி விடும்

சொல்லும் கருத்துக்களில் சிறந்த ஆசிரியராக இருக்கும் நீங்கள், அதை எழுதும் போது கெட்ட மாணவராக மாறிவிடுகிறீர்களே வாத்தியார்..!!:D

இதயம்
18-06-2007, 01:06 PM
இதயம் உங்கள் கதையைப் படித்ததும் என் கண்ணிலும் கண்ணீர் வெள்ளம்...
ஆனால் சோகத்திலல்ல. அடக்கமாட்டாத சிரிப்பில்...

சுவையாகத் தருகின்றீர்கள்...
இன்னமும் தாருங்கள்...

நான் பட்ட பாடு உங்களுக்கு அத்தனை சிரிப்பாக இருக்கிறதா..?!!:violent-smiley-010: :violent-smiley-010: :violent-smiley-010:

இதயம்
18-06-2007, 01:10 PM
இதயம் அந்த கிங்கரனை சும்மா விட்டுவிட்டீர்களே... சரி நீங்கள் கொடுத்த புது செருப்புக்களை பார்க்கும் போதெல்லாம் 'நல்லவேளை இதனால் அடி வாங்காமல் போனேனே' என்று நினைத்துக் கொண்டிருந்திருப்பார். உங்களை சிக்கலில் மாட்டிவிட்ட சிக்கு புக்கு பயணம் கடைசியில் நாரதர் கலகம் போல் நன்றாக முடிந்ததே! இப்போதெல்லாம் விமான பயணம் மட்டும்தானா?நல்ல ஒரு விவரிப்பு.

கிங்கரன் உடன் என்னை பயணம் அனுப்பிவிட்டதால் மயிரிழையில் உயிர் தப்பினார்..!! அந்த செருப்பு இருந்த வரை அவர் என்னை மறந்திருக்க மாட்டார்..!!

பய(ண)ங்கள் முடிவதில்லை.! அது நடை, சைக்கிள், பைக், ஆட்டோ, பஸ், கார், வேன், இரயில், விமானம் எதுவாக இருந்தாலும் சரி..! இன்னும் இராக்கெட்டில் மட்டும் பயணம் செய்ததில்லை. திரு. அப்துல் கலாம் அவர்களின் அழைப்புக்காக காத்திருக்கிறேன்..:D :D !!

மதி
18-06-2007, 01:11 PM
நிறைய அனுபவித்திருக்கிறீர் இதயம். மூன்று முறை ரயில் பயணம் செய்தாலும் ஒருவழியாக உங்களை வெளிநாடு அனுப்பி வைத்தானே அந்த கிங்கரன். இன்றும் பல்லாயிரம் கொடுத்து ஏமாந்தோர் பலர் இருக்கின்றார்கள்.. அந்த வகையில் கொடுத்து வைத்தவர் நீங்கள்.!

இதயம்
18-06-2007, 01:14 PM
நிறைய அனுபவித்திருக்கிறீர் இதயம். மூன்று முறை ரயில் பயணம் செய்தாலும் ஒருவழியாக உங்களை வெளிநாடு அனுப்பி வைத்தானே அந்த கிங்கரன். இன்றும் பல்லாயிரம் கொடுத்து ஏமாந்தோர் பலர் இருக்கின்றார்கள்.. அந்த வகையில் கொடுத்து வைத்தவர் நீங்கள்.!

உண்மை தான்.!! கொடுத்து ஏமாந்தோர் பட்டியலில் இல்லாமல் கொடுத்து வைத்தோர் பட்டியலில் நான் வந்தது கடவுளின் கருணையே..!

ஜோய்ஸ்
18-06-2007, 01:35 PM
நல்லிதயமே,
நீங்கள் எழுதிய ஒரு வாழ்க்கை உண்மைச் சம்பவத்தை நகைச்சுவைபட கோர்வையாய் ரசிக்கும்படி எழுதியது எனக்கு மிகவும் ரசனையாய் படுகிறது.

இதயம்
18-06-2007, 02:15 PM
பாராட்டுக்கு நன்றி ஜாய்ஸ்..!

அன்புரசிகன்
18-06-2007, 02:35 PM
ஆரம்பம் அனிமையாக இருந்தாலும் பின்னர் சோக மேகம் மூடிவிட்டது.

அனுபவங்கள் எப்போதுமே இப்படித்தான் இருக்குமோ என்னவோ...

வாழ்த்துக்கள் இதயமே...
கடைசியாக கிங்கரனை எப்போது சந்தித்தீர்கள்? :D

இதயம்
18-06-2007, 02:49 PM
கடைசியாக கிங்கரனை எப்போது சந்தித்தீர்கள்? :D

கடைசியாக செருப்போடு சந்தித்தது தான்..!!:nature-smiley-008: :nature-smiley-008: அதன் பிறகு அவரை சந்திக்கும் (அ)பாக்கியம் எனக்கு கிட்டவில்லை..!!

அமரன்
18-06-2007, 03:17 PM
எம்மைச் சின்ன வயதுக்கு அழைத்துச்சென்ற ஆரம்ப வர்ணனை இறுதியில் சோகத்துக்குக் கொண்டுசென்று விட்டன இதயம். அங்கங்கே நகைச்சுவைத்தேன். பாராட்டுகள். மக்கள் தொலைக்காட்சியில் ரயிலை தொடர்வண்டி என்கின்றார்கள். அது சரியானதாகவே படுகின்றது. அதுபோல இப்போது எமது தேசத்தில் அதனை தொடருந்து என்கின்றார்கள். மீண்டும் ஒருமுறை பாராட்டுகள் இதயம்.

அக்னி
18-06-2007, 04:30 PM
நான் பட்ட பாடு உங்களுக்கு அத்தனை சிரிப்பாக இருக்கிறதா..?!!:violent-smiley-010: :violent-smiley-010: :violent-smiley-010:

இல்லை. நீங்கள் அடைப்புக் குறிகளுக்குள் இட்ட குறிப்புகள் சிரிப்பை தருகின்றன.

மனோஜ்
18-06-2007, 04:52 PM
அருமை நண்பரே
உங்களை போன்று தான் நானும் திருச்சி முதல் சென்னை வரை பல முறை விமான பயனத்திற்காக முயற்சித்து முயற்சித்து தொடர் வண்டியில் பயனித்ததுண்டு அந்த சோகக்கதைகள் ஞாபகம் வந்தது நன்றி

தங்கவேல்
08-07-2007, 08:41 AM
ஏன் இவ்வளவு துன்பம் வெளி நாடு செல்லுவதற்கு...?

Gobalan
08-07-2007, 05:24 PM
ரயில் பயணம் என்றால் ஒரு தனி ஆனந்தம் தான், உங்களை போல் எனக்கும். முதியவர் பட்டத்துக்கு தயாராகிகொண்டிருக்கும் எனக்கும் ரயில் பயணம் என்றால், என் இதயதுடிப்பு படபடவென்று * அடித்துகொள்ளும் ஆனந்த எதிர்பார்ப்பினால், இப்போதுகூட. ஆனால் முன்புபோல் இல்லாமல், எனக்கு ரயில் பயண வாய்ப்புகள் குறைந்திருக்கிறது. நான் என்னுடைய வேலை ஆரம்பகட்டத்தில் ஒரு பத்து வருடம் சேல்ஸ்மென்னாகவும், அதற்க்கு அடுத்தகட்ட சுப்ரவைஸராகவும் பணியாற்றிய போது மாதத்தில் பதினெட்டு இருபது நாட்கள் ரயிலில் வாசம் செய்தவன். அந்த பயணங்களை நினைத்தால் இப்போதும் மனதில் கட்டுகடங்கா சந்தோஷம் வருகிறது. ரயில் பயணம் ஒரு அலாதியான அனுபவம் தான்.

நிற்க. உங்கள் பம்பாய் ரயில் பயணங்கள் வெற்றிகரமாக முடிந்தது, மூன்று முறை பயணிக்க நேர்ந்தாலும். பலபேருக்கு இந்த ஏஜென்டுகளால் ஏமாற்றம்தான் மிஞ்சும். அதற்க்கு நீங்கள் கடவுளுக்கு நன்றிகடன் பட்டிருக்றீர்கள். உங்கள் இந்த பயணங்களின் வர்ணனையை நகச்சுவையுடன் கூடிய சோகத்துடன் எழுதீருப்பது மிக ஜோர். என் வாழ்த்துக்கள். நன்றி.