PDA

View Full Version : பசுமை நாடிய பயணங்கள்..! (14)



அக்னி
13-06-2007, 09:18 PM
பயணங்கள்...
உலகம் தோன்றிய நாள்முதல், மனிதன் வாழுமிடம் தேடி அலையத் தொடங்கிவிட்டான். ஆனாலும், வடிவங்கள் மாறினவே தவிர, பயணங்கள் முடியவில்லை...

அப்படியான ஒரு பயணத்தின் நிகழ்வுகளை, காலம் என்னிடமிருந்து மறக்கடிக்கமுன் பதிவாக்க வேண்டும் என்பதற்காகவே இந்தக் கருவூலத்தில் சேமிக்க விளைகின்றேன்...

அந்தரத்தில் சுழன்று அழகாய் பவனிவரும் உலகில், எனக்கும் உலா வர வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதில் ஏது தவறு..?
எனது ஐரோப்பிய நாடு நோக்கிய நகர்வு, நான் விரும்பியிருந்தபோதிலும், தாயகத்தின் இயல்பில்லாநிலை, என்னை நானே, விரும்பியோ விரும்பாமலோ நாடு கடத்த வைத்தது.

பெற்றோர், உறவுகள், நண்பர்கள் என்று அனைவரையும் விட்டுவிட்டு நானும் ஒரு நாள் அலுமினியப் பறவையின் வயிற்றுக்குள் தற்காலிகமான உணவாக உள்நுழைந்தேன்...

அதற்குமுன்னான நிகழ்வுகள், பயண முகவர்களோடான கால இழுத்தடிப்புக்கள், மற்றும் தலைநகரத்தின் காவலரின் இறுக்கமான கெடுபிடிகள் என்பவற்றை வெற்றிகரமாக வெற்றிகொண்டு, வானில் மிதக்க ஆரம்பித்த அந்த கணம், எனது வாழ்வில் பல்வேறு அனுபவங்களையும், சூழ்நிலைகளையும் தருவதற்கான ஆரம்பக் கணம் என்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை...

ஒரு அதிகாலையில், தலைநகரத்தின் தலைக்குமேலே, மானசீகமாக விடைபெற்றுக்கொண்டு, ஆரம்பித்த பயணம், முதல் விமானப் பயணம் என்பதால் பயத்தோடு சேர்ந்த குதூகலம்.

இடையில் விமானம் தரித்த இடங்கள், ஓரளவு நினைவில் இருந்தாலும் அந்த இடங்களைக் குறிப்பிடாமலே போகின்றேன். ஒரு நாள் பயணத்தில், மத்திய கிழக்கிலுள்ள 4 விமான நிலையங்கள் ஊடாகப் பயணித்து, ஐந்தாவதாக ஒரு விமான நிலையத்தை அடைந்தோம். என்னுடன் என்னைப் போலவே சிலரும் பயணித்திருந்தார்கள்.

மத்தியகிழக்கில் ஒரு முக்கியமான விமானநிலையத்தில், இறங்கி அதன் காத்திருக்குமிடத்திற்கு அனுப்பப்பட்டோம். பணம் விளையாடும் தொழில் என்பதால், எமக்குக் கெடுபிடிகள் இருக்கவில்லை. அங்கே காத்திருக்கும் இடத்தில் எமக்கு முன்னர் வந்த சிலரும் காத்திருந்தார்கள் பல நாட்களாக. நாமும் அவர்களோடு இணைந்து காத்திருந்தோம் 14 நாட்கள்.

நேரத்திற்கு உண்ண அழைப்பார்கள். போய் உண்போம். வசதியான விசாலமான இருக்கைகளில் தொலைக்காட்சி பார்த்தபடியும், வருவோர் போவோரைப் பார்த்தபடியும் காலம் கழிந்தது. 11 நாட்கள் முடிவில் காத்திருந்தவர்களில் எமக்கு முன் வந்தவர்களை விமானமேற்றி, அனுப்பிவைத்தார்கள். மூன்று நாட்களில் (மூன்று நாட்களுக்கு ஒரு முறைதான் நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு விமானம் உண்டு) எம்மையும் அனுப்பிவைப்பதாகச் சொன்னார்கள்.

எமது எதிர்பார்ப்பை அதிகமாக்கி வைத்த அந்த இடம்...

தொடர்ச்சி... (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=223427&postcount=3)

அறிஞர்
13-06-2007, 09:40 PM
பசுமை தாயகத்தை விட்டு பிரிதல் வருத்தம் தரக்கூடியது.....
வாழ நல்ல தேடி அலையும் கூட்டத்தின் நடுவில் நாம்....
பறவைகளை போல பறக்கிறோம்.....

தங்களின் பசுமையான எண்ணங்கள்.... இன்னும் தொடரட்டும்.

அக்னி
14-06-2007, 09:15 PM
எமது எதிர்பார்ப்பை அதிகமாக்கி வைத்த அந்த இடம்...
பிஸ்கெக், கிர்கிஸ்தானின் தலைநகரம் (Bishkek, Kyrgyztan). எங்களது தலைவிதியை குறிப்பிட்ட காலத்திற்குத் தன்னகத்தே தக்கவைத்துக் கொண்ட நகரம். பிளவுபட்ட ரஷ்யக் குடியரசின் ஒரு நாடு...
(இங்கு போஸ் திரைப்படத்தின் ஒரு பாடல் காட்சி எடுக்கப்பட்டது)

அங்கு செல்ல நாம் தயாராகி, விமான நிலையத்தின் பரிசோதிக்கும் பகுதிக்குச் செல்ல தயாராகிக் காத்திருந்த வேளையில், மூன்று நாட்களுக்கு முன்னர் பயணித்தவர்களில் ஒருவர் பரிசோதிக்கும் அறையிலிருந்து வந்து கொண்டிருந்தார். உடனே அவரைச் சூழ்ந்து கொண்டோம். அவர் சொன்னார், தான் முன்னரே ரஷ்யா சென்று பிடிபட்டு மீளவும் தாயகத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டதால், மீண்டும் உள்நுழைய அனுமதி மறுக்கப்பட்டு மூன்று நாட்கள் சிறையில் வைத்திருந்து அடுத்த விமானத்தில் திருப்பி அனுப்பிவிட்டார்கள் என்று. முதன்முதலாக ரஷ்ய சிறையின் கொடுமை எமக்குச் சமிக்ஞை தந்தது. ஒருவேளை உணவு மட்டுமே தந்ததாகக் கூறினார். அவரிடம் இருந்த பணம் முழுவதையும் பறித்துவிட்டு வெறுமனே திருப்பி அனுப்பியிருந்தனர். நான் என்னிடமிருந்த பணத்தில் மிகச் சொற்ப தொகையை அவரிடம் கொடுத்து அவரது நிலையை நொந்தபடியே எனது பயணத்திற்காகத் தயாரானேன். விதி என்னைப் பார்த்து நொந்துகொண்டது. (பின்னாளில், ஏறத்தாழ நான்கு வருடங்களின் பின், அவர் லண்டனில் இருந்து என்னைத் தொடர்பு கொண்டு எனக்கு நன்றி சொல்லிச்சொல்லி என்னை நெகிழ வைத்தார்)

பரிசோதனைகளை முடித்து, ஐரோப்பாவை அடைந்துவிட்ட பெருமிதத்துடன் விமானம் ஏறினோம். விமானம் என்று சொல்ல முடியாத விமானம். விமானம் வானேறி, பறந்து செல்ல கனவுகளும் அதனுடன் சேர்ந்து பறந்து கொண்டிருந்தது எம்மால் உணரப்படவில்லை. பயணிகள் விமானம் என்ற பெயரில், பயணிக்க தகுதியற்ற ஒரு விமானத்தில் நாம் பயணித்தோம். வேறு வெள்ளையினத்தவரும் பயணித்தார்கள்.

விமானம், இறங்கும் நேரத்தில், விமானப் பணியாளர்கள் பின்பக்கமாக ஓடி வந்தார்கள் (நான் பின்வரிசையில்தான் அமர்ந்திருந்தேன்). எங்கே போகின்றார்கள் என்று பார்த்தால், அவர்கள் ஓடிச் சென்று பின்வரிசையில் அடுக்கப்பட்டிருந்த பயணப்பொதிகளை (அப்போதுதான் எனக்குத் தெரியும் பயணப் பொதிகள் வைக்கத் தனிப்பகுதி இல்லை என்று) கைகோர்த்து, விமானம் இறங்கும்போது முன்விழாமல் தடுத்துப் பிடித்தபடி இருந்தார்கள். (இப்பொழுது புரிந்திருக்குமே ஏன் விமானம் என்று சொல்லமுடியாது என்று நான் கூறியதன் அர்த்தம்)

ஒரு வழியாக விமானம் தரையிறங்கிக் கொண்டது. செப்டம்பர் மாதத்தின் இறுதி நாட்களாகையால், வெளிச்சென்றதுமே கடும் குளிரை உணர்ந்தோம். விமான நிலைய பேருந்தில் ஏறி, குளிரில் நடுங்கியபடி, விமான நிலையத்தை அடைந்தோம். விமான நிலையம் என்ற பெயரில் ஒரு கட்டிடம். எமக்கு ஏற்கனவே சொல்லியிருந்தபடி அந்த நாட்டவர் ஒருவர் எம்மை அழைத்துச் செல்வதற்காக வந்திருந்தார். (எங்கும் பணம் விளையாடியது அவர் விமான நிலையத்தின் இருக்கைகளின் மீதாக ஏறி வந்ததிலிருந்து தெளிவாகியது). அதிகாரிகள் எமது கடவுப்புத்தகங்களை வாங்கி, பரிசோதித்த பின்னர் எம்மை வெளியே செல்ல அனுமதித்தனர்.

வெளியே வந்ததும், எமக்கெனக் காத்திருந்த வாகனங்களில், ஒரு யுத்தகால நடைமுறை வேகத்தில், எம்மையும் திணித்து, எமது பயணப் பொதிகளையும் திணித்து புறப்பட்டார்கள் வாகன ஓட்டிகள். எனக்கு சாரதிக்குப் பக்கத்து இருக்கை கிடைத்தது. தாயகத்தில் வாகனங்கள் செல்லும் பக்கத்திற்கு மற்றப்பக்கமாக நாம் பயணித்த வாகனங்கள் சென்றமையால், மனதுக்குள் சிறிய பயம் இருந்தாலும் காட்டிக்கொள்ளாமல், சாளரத்தின் வெளியே கண்களை ஓட்டினேன். வாகனத்தின் உள்ளே வெப்பமாக்கி வேலை செய்ததால், உடலில் ஏறிய குளிர் விலக, ஐரோப்பா வந்துவிட்டதோ என்ற எதிர்பார்ப்பில் கண்களை விரித்துப் பார்த்தபடி இருந்தேன். சாரதி ஏதேதோ தன்பாட்டில் சொல்லியபடி வந்தான் (பின்னாளில்தான் அவையெல்லாம் கெட்டவார்த்தைகள் என்று தெரிந்தது). அவர்களின் பேச்சு மொழி ருஷ்கி. எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் உரையாட முற்பட்டேன். அது அவனுக்கு விளங்கவில்லை. எங்களுக்கோ ருஷ்கி புதிது. எனவே, என்னுடன், நான் பயணித்த காரில் இருந்த நான்கு தாயக உறவுகளும் மௌனமொழியால் பேசியபடி, கண்களில் எதிர்பார்ப்பைத் தாங்கியபடி பயணித்தோம்.

இரவு நேரத்தின் இருளைக் கிழித்தபடி தலைநகரத்தினுள் நுழைந்து, அதன் தெருக்களில் வழுக்கியபடி பயணித்த வாகனம், புறநகர்ப்பகுதியை அடைந்து, அங்கே ஒரு தொடர் மாடி வீட்டின் முன் நின்றபோது, அதிகாலை (ரஷ்ய நேரம்) மூன்று மணி இருக்கும்.

அங்கே எம்மை வரவேற்றது...

தொடர்ச்சி... (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=223863&postcount=13)

இளசு
14-06-2007, 11:58 PM
அக்னி

அரிய அனுபவச்செறிவு கொண்ட தொடர்..பாராட்டுகள்..

பொதிகளுக்கு கையணை கட்டிய பணியாளர், வலதுபக்க வாகனம் தந்த நடுக்கம்ம், ருஷ்கியில் வைத சாரதி என நகைச்சுவைப்பொடியை அழகாய் தூவி எழுதியதையும் மீறி...


பசுமையான தாயகத்தை அரசியல் புழுதி மூடியதால்
மாற்றுப் பசுமை தேடி நிர்ப்பந்தம் தந்த பயணத்தின்
அடிநாத சோகம் என்னையும் தாக்கி மனதைப் பிசைகிறது..

பலருக்கும் பாடமாய் விளங்கக்கூடிய இந்த
அனுபவ ஆவணப்பதிவுக்கு என் நெகிழ்வான பாராட்டுகள்!

அக்னி
15-06-2007, 09:46 AM
தங்களின் பசுமையான எண்ணங்கள்.... இன்னும் தொடரட்டும்.
தங்களின் ஆசிகளோடு தொடர்வேன்...
நன்றி...

அக்னி
15-06-2007, 09:47 AM
பலருக்கும் பாடமாய் விளங்கக்கூடிய இந்த
அனுபவ ஆவணப்பதிவுக்கு என் நெகிழ்வான பாராட்டுகள்!
நிச்சயமாக ஒரு அனுபவப் பாடமாக இருக்கவேண்டும் என்றே பதிவிடுகின்றேன்...
நன்றி!

அறிஞர்
15-06-2007, 01:36 PM
நான் என்னிடமிருந்த பணத்தில் மிகச் சொற்ப தொகையை அவரிடம் கொடுத்து அவரது நிலையை நொந்தபடியே எனது பயணத்திற்காகத் தயாரானேன். விதி என்னைப் பார்த்து நொந்துகொண்டது. (பின்னாளில், ஏறத்தாழ நான்கு வருடங்களின் பின், அவர் லண்டனில் இருந்து என்னைத் தொடர்பு கொண்டு எனக்கு நன்றி சொல்லிச்சொல்லி என்னை நெகிழ வைத்தார்)
வாகனத்தின் உள்ளே வெப்பமாக்கி வேலை செய்ததால், உடலில் ஏறிய குளிர் விலக, ஐரோப்பா வந்துவிட்டதோ என்ற எதிர்பார்ப்பில் கண்களை விரித்துப் பார்த்தபடி இருந்தேன். சாரதி ஏதேதோ தன்பாட்டில் சொல்லியபடி வந்தான் (பின்னாளில்தான் அவையெல்லாம் கெட்டவார்த்தைகள் என்று தெரிந்தது). அவர்களின் பேச்சு மொழி ருஷ்கி. எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் உரையாட முற்பட்டேன். அது அவனுக்கு விளங்கவில்லை. எங்களுக்கோ ருஷ்கி புதிது. எனவே, என்னுடன், நான் பயணித்த காரில் இருந்த நான்கு தாயக உறவுகளும் மௌனமொழியால் பேசியபடி, கண்களில் எதிர்பார்ப்பைத் தாங்கியபடி பயணித்தோம்.

இரவு நேரத்தின் இருளைக் கிழித்தபடி தலைநகரத்தினுள் நுழைந்து, அதன் தெருக்களில் வழுக்கியபடி பயணித்த வாகனம், புறநகர்ப்பகுதியை அடைந்து, அங்கே ஒரு தொடர் மாடி வீட்டின் முன் நின்றபோது, அதிகாலை (ரஷ்ய நேரம்) மூன்று மணி இருக்கும்.

அங்கே எம்மை வரவேற்றது...
கஷ்டத்தின் நடுவே மற்றவருக்கு உதவி....
குளிரின் கொடுமை, புது நாடு, புது மொழி.... என அசர வைக்கிறீர்கள்...

பாரதி
15-06-2007, 02:50 PM
மிக நல்ல தொடர் அக்னி. பலருக்கும் ஏற்படாத
அனுபவப்பாடங்களைத் தரப்போகிறீர்கள் எனத்தோன்றுகிறது.
சிறப்பு வாழ்த்துக்கள். தொடருங்கள்.

மனோஜ்
15-06-2007, 03:04 PM
அருமை நண்பரே
தங்களின் பயணம் தொடர் பயணமாய் உள்ளதெ
தொடர்ந்து தாருங்கள் நண்பா

அக்னி
15-06-2007, 04:27 PM
கஷ்டத்தின் நடுவே மற்றவருக்கு உதவி....
குளிரின் கொடுமை, புது நாடு, புது மொழி.... என அசர வைக்கிறீர்கள்...
நன்றி அறிஞர் அவர்களே


மிக நல்ல தொடர் அக்னி. பலருக்கும் ஏற்படாத
அனுபவப்பாடங்களைத் தரப்போகிறீர்கள் எனத்தோன்றுகிறது.
சிறப்பு வாழ்த்துக்கள். தொடருங்கள்.
புலம் பெயர்ந்து வாழும் பலர், பயணங்களில் பட்ட அனுபவங்களை இலகுவில் மறந்துவிடமாட்டார்கள்...
நன்றி பாரதி அவர்களே...


அருமை நண்பரே
தங்களின் பயணம் தொடர் பயணமாய் உள்ளதெ
தொடர்ந்து தாருங்கள் நண்பா
நினைவில் இன்னமும் அந்த நாட்கள் மறக்கப்படவில்லை.
இயலுமான வரையில் முழுவதுமாய் பதிவிடவே முனைகின்றேன்...
நன்றி மனோஜ் அவர்களே...

அமரன்
15-06-2007, 05:14 PM
அக்னி இது கதை அல்ல நிஜம். புலம்பெயர் ஈழத்தமிழரில் 75 சதவீதமானோர் கடந்து வந்த நெடிய பாதை. முட்கள் நிறைந்த இப்பயணங்களில் எத்தனை ரோஜாக்களும் கலந்துகொண்டனர். தொடருங்கள்.

அக்னி
15-06-2007, 06:05 PM
அக்னி இது கதை அல்ல நிஜம். புலம்பெயர் ஈழத்தமிழரில் 75 சதவீதமானோர் கடந்து வந்த நெடிய பாதை. முட்கள் நிறைந்த இப்பயணங்களில் எத்தனை ரோஜாக்களும் கலந்துகொண்டனர். தொடருங்கள்.
நன்றி அமரன்...
நிச்சயமாகத் தொடர்வேன்...

அக்னி
15-06-2007, 08:24 PM
அங்கே எம்மை வரவேற்றது...
ஒரு குரல். தமிழ்க்குரல். எப்படித் தெரிந்தது என்று நினைக்கின்றீர்கள்..?
மோசமான ஒரு கெட்ட வார்த்தை சொல்லி வாங்கோ என்று வரவேற்றது அந்தக்குரல். போகப் போகத்தான் புரிந்தது, கெட்டவார்த்தைப் பிரயோகங்கள், வயது வித்தியாசமின்றி, அனைவரிடமிருந்தும், அனைவருக்கும் செல்லும் என்று...

கண்ணில் மின்னும் கனவுகளில், தூக்கம் தொலைந்து போயிருக்க, இருள் கவ்விய மாடிப்படிகளில் சத்தம் போடாது இருவர் மூவராக அழைத்துச் சென்று, ஒரு வீட்டுக்குள் அழைத்து வந்தார் அந்தத் தமிழர். அவர் அந்த நாட்டில், பணியாற்றும், எம்போன்றபயணிகளின், பயண முகவர்களில் ஒருவர். வீட்டினுள் மேலும் ஒரு சிலர், கட்டில்களிலும், வரவேற்பறை இருக்கையிலும் நித்திரையில் இருந்தார்கள். அதிகாலை நேரமாகையாலும், குளிரில் நனைந்த புதியவர்கள் நாம் ஆகையாலும் சுடச்சுடத் தேனீர் தந்து, புகைபிடிப்போருக்கு சிகரெட்டும் தந்து உபசரித்தார்கள். எல்லோரும் எமது நாட்டவரே... தமிழரே...

ஆகா! இதுவல்லோ வெளிநாட்டு வாழ்க்கை என்ற எண்ணம் மனதில் கூத்தாடியது. நித்திரை வராததால், நிலத்தில் அமர்ந்தபடி அடுத்து எங்கே அனுப்புவார்கள், எப்போது அனுப்புவார்கள் என்று, வந்தவர்கள் நாம் எமக்குள்ளேயே கதைத்தபடி, விடியலுக்காகக் காத்திருந்தோம். ஆனால், ஆறு மணி தாண்டியும் இலகுவில் விடிய மறுத்தது, நாம் அனுபவிக்கவிருந்த கருமை நாட்களைச் சுட்டிக்காட்டியது என்பதை, இப்போதுதான் உணரமுடிகிறது.

எம்மை அழைத்து வந்தவரும், நித்திரை செய்து எழுந்துவிட்டார். மற்றும், அனைவரும் எழுந்துவிட்டனர். ஒவ்வொருவராகச் சென்று காலைக்கடன்களை முடித்து வந்ததும், அங்கிருந்தவர்கள் எங்களது தாயக முகவர்களைப்பற்றி விசாரித்துக் குறித்துக் கொண்டார்கள். அவர்கள் அனைவருமே உப முகவர்களும், முகவர்களும் என்பதை பின்நாட்களில் அறிந்து கொண்டோம்.

அன்றைய தினம், அவர்களே சமைத்துத் தந்தார்கள். உண்டோம். ஏதோ ஒரு வித்தியாசம் சுவையில் ஒன்றிக்க விடவில்லை. தாயகத்தில், தேங்காய்ப்பால் விட்டு சமைப்பது வழக்கம். இங்கு தேங்காய் இல்லை என்பதால், பசுப்பால் அதுவும் பெட்டியில் அடைக்கப்பட்ட பால் பாவிப்பார்களாம். அதுதான் அந்த வித்தியாசம். ஆனால், எங்கள் ஐரோப்பியக் கனவு அனைத்தையும் சகிக்க வைத்தது. கூடவே அம்மாவின் சமையல் ருசி தேடி நாக்கும் அடங்கிப்போனது.

அடுத்து மிக முக்கியமாக மீண்டும் நடை பழகினோம். அதாவது கீழ் வீட்டில் இருப்பவர்களுக்குச் சத்தம் கேட்கக் கூடாது என்று பூனை போல் நடக்கக் கற்றுத் தந்தார்கள். பேச்சின் சத்தம் குறைக்கச் சொன்னார்கள். எல்லாம், தாராளமான கெட்ட வார்த்தைகளில் சகஜமாக கதைக்கப்பட்டது. முதலில் அருவருப்பாக இருந்தது, பின்னர் பழக்கமாகிப்போனது.

எம்மை எல்லாம் ஒரு வீட்டில் தங்க வைக்கப் போவதாகவும், அனுப்பிவைக்கும் ஏற்பாடுகள் சரிவந்ததும் அனுப்பி வைப்பார்கள் என்றும் சொல்லிவிட்டு, ஏறத்தாழ நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பல வீடுகளிலும் மூன்று மாதங்களுக்கு மேலாகக் கூட பயணிக்கத் தருணம் பார்த்துக் காத்திருக்கின்றார்கள் என்று சொன்னதும், விரைவான ஐரோப்பியக் கனவு சிதைந்துபோனது. இத்தனைக்கும் அடுத்த பயணத்திற்குத் தயாராக நாங்கள் உடை மாற்றாது காத்திருந்தோம்.

ஆழம் அப்போதுதான் உணர்வில் கொஞ்சம் பட்டது. என்ன செய்வது? ஆழம் பார்க்காமல் காலை வைத்தபின், அதுவும் திக்குத்தெரியாத, மொழிபுரியாத இடத்தில் வைத்தபின் எப்படி எடுப்பது? ஆட்டுவார் கைப்பொம்மையாக ஆடத் தொடங்கினோம். எமது கடவுப்புத்தகங்களை எல்லாம் வாங்கி வைத்துக் கொண்டபின், இரவாகும் வரை காத்திருந்தார்கள். இரவானதும், இரு கார்களில் எம்மை ஏற்றி ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்றார்கள். மொத்தமாக நாம் 12 பேர். ஒரே தடவையில் இரு கார்களிலும் ஏற்றி, நடுநிசியில் கார்கள் விரைந்தன. இரு கார்களிலும் முகவர்களும் ஒவ்வொருவராக வந்தார்கள். நகரத்தினுள்ளேயே ஆளரவமற்ற இடம் ஒன்றை அடைந்து கார்கள் நின்றன. முகவர்கள் இறங்கி, (அவர்கள் ருஷ்கி உரையாடக்கூடியவர்களாய் இருந்தார்கள்) சுற்றுமுற்றும் பார்த்தபின், எம்மை நோக்கி வந்தார்கள். எம்மை சத்தம் போடாமல் இறங்கி வரப் பணித்து அழைத்துச் சென்றார்கள்.

நாம் சென்றது ஒரு தனிவீட்டை நோக்கி...

தொடர்ச்சி... (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=225607&postcount=21)

ஓவியன்
17-06-2007, 07:18 AM
முன்னரே இவ்வாறான கொடுமைகளை எங்கள் புலம் பெயரும் சகோதர சகோதரிகள் அனுபவிக்கின்றனர் என்று பல்வேறு கதைகளூடு கேள்விப்பட்டுள்ளேன், ஆனால் அவற்றை உங்கள் வரிகளில் காணும் போது என்னவோ ஒரு இனம் புரியாத வலி நெஞ்சத்திலே....
எங்கள் ஐரோப்பியக் கனவு அனைத்தையும் சகிக்க வைத்தது
இந்த ஒரு சகிப்புத்தன்மையாலேயே இந்த கரடு முரடான பாதைகளிலெல்லாம் நம்மவர்கள் பயணித்தார்கள் என்பது உண்மையே!!.

அக்னி!!

நிகழ்வுகள் மகிழ்சி தரக் கூடியன அல்லவென்றாலும் மனதைவிட்டகலாதவை, அவற்றைச் செதுக்கும் உங்கள்ள் வார்த்தைப் பிரயோகங்கள் அழகு!.

பராட்டுகிறேன் மனமகிழ்ந்து!

அக்னி
17-06-2007, 01:47 PM
பராட்டுகிறேன் மனமகிழ்ந்து!
நன்றி ஓவியன்...
தொடர்ந்தும் வாசித்துக் கருத்துக்களைத் தாருங்கள்...
அடுத்த பதிவை நாளை இடுவேன்...

இதயம்
18-06-2007, 05:56 AM
உலகின் எந்த மூலைக்கு போனாலும் தாயகம் கொடுக்கும் சந்தோஷம், சுதந்திரம் வேறு எங்கும் கிடைக்காது. உலகின் எத்தனையோ உயர்தர ஐந்து நட்சத்திர விடுதிகள் இருந்தாலும் அம்மா செய்து கொடுக்கும் எளிய உணவின் சுவைக்கு ஈடாகாது. பயண அனுபவங்களை சுவைபட எழுதுவது என்பது ஒருவகையான கலை. அதுவும் உங்கள் பயண அனுபவம் அழகான நடையுடன், இனி என்ன நடக்குமோ ஆர்வத்துடன் செல்கிறது.

கடந்த காலத்தில் நடந்து முடிந்துவிட்ட சம்பவங்கள் தான் என்றாலும் அப்போது நீங்கள் பட்ட வேதனைகளுக்கும், வருத்தங்களுக்கும் இப்போது வடிகாலாக எங்களுடைய ஆறுதல் பதிவுகள் இருக்கும்.வாழ்வாதாரத்திற்காக ஒவ்வொரு மனிதனும் தன் தாயகத்தை விட்டு இடம்பெயரும் போது இது போன்ற கசப்பான நிகழ்வுகளை தவிர்க்கமுடிவதில்லை. அந்த அனுபவங்களும் வாழ்க்கையில் நமக்கு படிப்பினையை தருகின்றன என்பதால் அவற்றை ஏற்றுக்கொள்ளவேண்டியதும் அவசியம். எதிர்நீச்சல் இல்லாத வாழ்க்கையில் சுவை ஏது..?

உங்களுடைய அனுபவங்களை தொடர்ந்து எழுதுங்கள். படிக்க மிக ஆர்வமாயிருக்கிறேன்.

சிதம்பரம்
18-06-2007, 06:05 AM
அருமை. தொடருங்கள

vithiy
18-06-2007, 06:33 AM
அன்பின் நண்பா தொடருங்கள் உங்கள் அனுபவத்தை.அடடா மிகவும் கடினமான பாதை.........

சிவா.ஜி
18-06-2007, 09:06 AM
புலம்பெயருதல் என்பது எத்தனை வலிதரும் என்று உங்கள் கட்டுரையில் காண முடிகிறது. சுகவாசியாய் வாழ்ந்துவிட்டு,அம்மா சமையல்,அண்ணன் தங்கை பாசம்,சொந்த ஊரின் சுவையான வாழ்க்கை எல்லாவற்றையும் பின் தள்ளிவிட்டு, வேருடன் பிடுங்கிய செடியாய் வேறிடம் போய் வாழ்வதென்பது எத்தனை வேதனை. சோகத்தையும் சுவையாய் சொல்லும் உங்கள் எழுத்துக்கள் அருமை அக்னி.

அக்னி
19-06-2007, 09:40 PM
நன்றி நண்பர்களே..!

அக்னி
19-06-2007, 09:41 PM
நாம் சென்றது ஒரு தனிவீட்டை நோக்கி...

ஆளரவம் அற்ற நேரம். ஆனால், வீடுகள் செறிந்த இடம். தனித்தனியான வீடுகள். எங்கும் இருள் கவிந்து இருந்தது. எம்முடன் வந்த தமிழ் முகவர்கள், எங்களை அழைத்துச் சென்று, ஒரு வீட்டின் கதவைத் திறந்தார்கள். வீடு தெருவிலிருந்து 20 அடிகள் தள்ளி இருந்தது. கதவைத் திறந்ததுதும் உள்ளே உடனேயே இன்னுமொரு கதவும் இருந்தது. குளிர் அதிகமான நாடு என்பதால், தனி வீடுகள் இவ்வாறுதான் இருக்குமாம் என்று சொன்னார்கள் எமது பாதுகாவலர்கள்.

ஒரு வழியாக உள்ளே போனதும், கதவுகளை மூடியபின் மின்விளக்குகளை ஏற்றினார்கள். உள்ளே சில தளவாடங்களுடன் வெறுமை மிக அதிகமாக இருந்தது. எம்மிடம் நாளை வருவதாகவும், வெளியே தாங்களே பூட்டி விட்டுப் போவதாகவும் சத்தமின்றி இருக்கும்படியும் கூறிவிட்டு, எமது பாதுகாவலர்கள், எம்மை வீட்டுச்சிறையில் வைத்துவிட்டு வெளியேறினார்கள்.

ஒரு பூட்டப்பட்ட வீட்டினுள்ளே திறக்கப்பட்டது எமது வெளிநாட்டுப் பயணத்தின் தாமதம். இது தெரியாமல், வீட்டைச் சுற்றிப் பார்த்தோம். ஒரு அடுப்பு இருந்தது. (எரிவாயு அடுப்பு, 4 அடுப்புகள் கொண்டது) தேநீர் போடுவதற்குரிய பொருட்களை அப்போதுதான் கூடவே கொண்டு வந்து தந்திருந்தார்கள். (கூடவே பாணும். பாண் என்றால் Bread). சில கோப்பைகளும், மேலும் பாத்திரங்கள் சிலவும் இருந்தன. தாயகத்தை விட்டு நீண்ட நாட்கள் புறப்படுவதற்கேற்ற உடைகளுடனேயே இருந்ததால், ஆசுவாசப்படுத்திக் கொள்வோம் என்று, உடை மாற்றி விட்டு, முகம் கழுவ சென்று தண்ணீரைத் திறந்தால், ஜில் என்று சிலிர்த்தது முழு உடம்பும். எமது நாட்டில், குளிர்சாதனப் பெட்டியில் இருக்கும் நீர் குழாயினூடாக வந்து கொண்டிருந்தது. பக்கத்திலேயே இன்னுமொரு குழாய்க்கான (சுடுநீர்) திருகி இருந்தது. திருகிப் பார்த்தும் தண்ணீர் தண்மையான நீராகவே இருந்தது. (தண்ணீரின் அர்த்தம் அன்றுதான் புரிந்தது). எனவே, முகத்தை நனைத்துவிட்டு, வர, எங்கள் பன்னிருவரில் ஒருவர் தேநீர் ஊற்றி தர குடித்துவிட்டு, எமது மாளிகையை சுற்றிப் பார்த்தோம். மிதமான குளிரின் ஆரம்ப நாட்களான போதும், எம்மால் தாங்கமுடியாத குளிர். ஆனால், வீட்டில் வெப்பமாக்கிகள் வேலை செய்தபடியால், கதகதப்பாக இருந்தது.

தொலைபேசி இருந்தது. காதில் வைத்துப் பார்த்தால் சத்தம் கேட்டது. ஆனால் பழைய காலத்துத் தொலைபேசி ஆகையால், இலக்கத்தை அழுத்தும் வசதி இருக்கவில்லை. சுழற்றும் வசதி தான் இருந்தது. ஆனால், சுழற்றும் அந்த வட்டம் கழட்டப்பட்டிருந்தது. ஏனென்றால், மேலும் பல வீடுகளில் அடைபட்டிருக்கும் எம்போன்றவர்கள் அடிக்கடி இடம் மாற்றப்படும்போது, தொடர்பு கொண்டு அரட்டை அடிப்பதுண்டாம். வெளியில் வீணாக தொடர்பு கொள்ளக்கூடாது என்பதால், எமது பாதுகாவலர்கள் கழற்றிவிடுவதுண்டாம். பின்நாட்களில் அறிந்துகொண்டோம்.

ஜன்னல்கள் அனைத்தும் காகித மட்டை கொண்டு மூடப்பட்டிருந்தது. இரவில் வெளிச்சம் செல்வதைத் தடுப்பதற்காகவே இந்த ஏற்பாடாம். இப்படியாக பாதுகாக்கப்பட்ட (?) வீடு. ஒரு வழியாக பின்னிரவு தாண்டும் வேளையில், கண்ணுறங்கத் தயாரானோம். படுப்பதற்கு எந்தவிதமான படுக்கைகளோ அல்லது விரிப்புக்களோ இல்லாத நிலையில், எம்முடன் நாம் கொண்டு வந்திருந்த சாறத்தை (லுங்கி என நினைக்கின்றேன்) விரித்துவிட்டு, படுத்து உறங்கினோம்.

எழும்பிப் பார்த்தால், இருட்டாகவே இருந்தது. ஜன்னல்கள் மூடப்பட்டிருந்ததால், வெளிச்சத்தின் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. எழும்பி ஒரு வழியாக குளிர் நீரில், காலைக்கடன்களை (மதியம் தாண்டிவிட்டது) விறைப்புடன் முடித்து, முதல்நாள் கூடவே கொண்டு வந்திருந்த பிரெட்டை, வெறும் தேநீருடன் உண்டு முடித்து விட்டு, ஊர்க்கதை பேசி, அமர்ந்திருந்தோம்...

இடையே சிறிதாக மறைவை விலக்கி வெளியே நோட்டம் விட்டோம். வீட்டின் சுவர் முழுவதும், முந்திரிகை படர்ந்து, கனிகள் குலைகுலையாக தொங்கின. நாவூற, அதை கட்டுப்படுத்த முடியாமல், ஜன்னலைத் திறந்து, பறிப்போம் என்றால், ஜன்னல் முழுவதுமாக சுவருடன் பொருந்தியிருந்தது. மேலே ஒரு சிறு சதுரம் மட்டுமே திறக்க முடிந்தது. அடுத்தடுத்து இரு தடித்த கண்ணாடி ஜன்னல்கள் பொருத்தப்பட்டிருந்தன. (குளிர் வருவதைத் தடுக்க). அந்த சிறிய ஜன்னல் திறப்பினூடாக, ஓரிரண்டு முந்திரிக் குலைகளை வெற்றிகரமாகப் பறித்து, பகிர்ந்து உண்டோம்.

இரவும் மீண்டும் வந்தது. ஆனால், வருவதாகச் சொல்லிச் சென்றோரைக் காணவில்லை. முதற்பயணம் ஆகையால், எனக்கு மனதில் பயம் பிடித்துக் கொண்ட்து. ஆனால், வந்த உறவுகளில் சிலர், முன் அனுபவம் கொண்டவர்கள். அவர்கள் வேறு நாடுகளூடாகப் பயணம் செய்ய முயன்று, பிடிபட்டு, நாடு திருப்பப்பட்டு, இவ்வழியாக முயற்சிப்பவர்கள். அவர்கள் தைரியம் தர, சிறிது பயம் களைந்து காத்திருந்தோம். பசிக்கத் தொடங்கிவிட்டது. தேநீர் தவிர வேறு எதுவும் இருக்கவில்லை.

வெளியே மீண்டும் இருள் சூழ்ந்த அந்த சமயத்தில்..,

தொடர்ச்சி... (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=227227&postcount=27)

ஓவியன்
21-06-2007, 10:07 PM
அக்னி உங்கள் பசுமை நாடிய பயணம் இப்போது ஒரு திகில் கதையைப் படிப்பது போன்று ஒரு அனுபத்தைத் தரத் தொடங்கியிருக்கிறது, ஊர் பேர் தெரியா தேசத்திலே கிட்டத்தட்ட வீட்டுச் சிறையில் உண்ண, அருந்த உருப்படியாக ஒன்றுமேயின்றி நினைக்கவே பயங்கரமாக இருக்கிறது.

எப்படித் தான் சமாளித்தீரோ?

ஆனால் அக்னி, புலம் பெயரும் நம்மவர்கள் இப்படி இன்ன பிற அல்லலுற்று சிறுகச் சிறுக சேமித்து அனுப்பும் அவர் தம் உழைப்பின் வெகுமதி கூடப் பிறந்தவளின் திருமணத்திற்கும், பெற்றவர்களின் மருத்துவச் செலவிற்கும் தம்பிமார் தம்மைப் போல் அல்லல் படாது படிக்கவும் உதவுகிறதே என்று எண்ணும் போது கிடைக்கும் திருப்தியை அளவிட வார்த்தைகளே இல்லையே. அத்துடன் அப்படி தன் உறவுகளைப் பேணும் அந்த ஒருவனோ ஒருத்தியோ கோயில் கட்டிக் கும்பிடப் பட வேண்டியவரன்றோ!.

உமது அனுபவத்தை உம் அழகு வரிகளில் செதுக்கி எம்முன்னே படைத்துக் கொண்டிருப்பதற்கு மீண்டுமொரு முறை நன்றிகளும் பாராட்டுகளும் உரித்தாகட்டும் நண்பரே.

பென்ஸ்
21-06-2007, 11:44 PM
சுடுகிறது அக்னி எழுத்துகள்...
அனுபவங்களை கேட்க்கும் போது வேறு எவருக்கும் வரகூடாதே என்று ஒரு முறை நினைத்து கொண்டேன். எடுத்துகள் சொல்லும் விதம் இன்ன்னும் மனதை பதைக்கவைக்கிறது....

எத்துனை துன்பங்கள் தாண்டி...
பாதையில் எத்தனை முட்க்கள்
எல்லாம் தாங்கி எங்களுடன் சிரித்த முகத்துடனும், கண்ணியத்துடனும்...

நீர் வாழ்க்கையில் நன்றாக வருவீர்....

பாரதி
22-06-2007, 07:44 AM
எத்தனை வேதனைகள் நிரம்பிய, எதிர்பார்ப்புகள் கூடிய பயணம்! வாழ்க்கையின் இன்னொரு முகத்தை வெட்ட வெளிச்சமாக்கும் உங்கள் எழுத்துக்கள் எதிர்கால சந்ததிக்கு படமாக, பாடமாக அமையட்டும். தொடருங்கள் நண்பரே.

gayathri.jagannathan
22-06-2007, 09:35 AM
உலகின் எல்லா இடங்களிலும் இன்பம் துன்பம் இரண்டுமே உண்டு...
நமது தாய் நாட்டில் இருக்கும் போது நமக்கு கிடைக்கும் சுதந்திரம், பாதுகாப்பு உணர்ச்சி, வேறு எங்கு போனாலும் கிடைப்பதில்லை...

இக்கரைக்கு அக்கரை பச்சை என்ற ஒரு சொல் வழக்கு இருப்பது எல்லோருக்குமே தெரியும்...

அந்த அக்கரைப் பச்சையை நோக்கிய பயணத்தில் இடர்பாடுகள், மனதைப் பிசைகின்றன....

இனியெப்போதும் தங்களுக்கு நலமே சிறக்க வாழ்த்துக்கள் அக்னி....

அக்னி
22-06-2007, 03:37 PM
நீர் வாழ்க்கையில் நன்றாக வருவீர்....
உங்கள் வாழ்த்து என்னை நிறைக்கிறது.... நன்றி பென்ஸ் அவர்களே...


எத்தனை வேதனைகள் நிரம்பிய, எதிர்பார்ப்புகள் கூடிய பயணம்! வாழ்க்கையின் இன்னொரு முகத்தை வெட்ட வெளிச்சமாக்கும் உங்கள் எழுத்துக்கள் எதிர்கால சந்ததிக்கு படமாக, பாடமாக அமையட்டும். தொடருங்கள் நண்பரே.
நிச்சயமாகத் தொடருவேன். நன்றி பாரதி அவர்களே....


அந்த அக்கரைப் பச்சையை நோக்கிய பயணத்தில் இடர்பாடுகள், மனதைப் பிசைகின்றன....

இனியெப்போதும் தங்களுக்கு நலமே சிறக்க வாழ்த்துக்கள் அக்னி....
அக்கரைப் பச்சை திரை போட்டுவிடுகின்றது மனங்களை...
தொடரும் பதிவுகளில் இணைந்திடுங்கள்...
அந்த துன்பங்களும் பயணங்களும்,
எனக்கு பொறுமையை, துணிவை, அனுபவங்களை தந்து,
என்னை மனிதனாகப் புடம் போட்டது...
நன்றி காயத்திரி அவர்களே...

அக்னி
22-06-2007, 08:20 PM
வெளியே மீண்டும் இருள் சூழ்ந்த அந்த சமயத்தில்..,

வெளியே ஒரு சத்தம், வரவர நெருங்கியது. இனம்புரியாத பயத்துடன், மூச்சின் சத்தமும் வெளியே கேட்டுவிடுமோ என்ற அச்சத்தில் கதவைப் பார்த்தபடி அனைவரும் நின்றிருந்தோம். எமது வீட்டுக் கதவு திறந்தது. எமது முகவர்கள் உள்ளே வந்தார்கள். எம்மில் இருவரை வெளியே வருமாறு சொல்ல, இருவர் சென்றார்கள். மீண்டும் உள்ளே ஒரு மூட்டையுடன் நுழைந்து வைத்துவிட்டு மீண்டும் மீண்டும் சென்று சில மூட்டைகளை சுமந்து வந்தார்கள்.

முகவர்கள் சொன்னார்கள்... உணவுப் பொருட்கள் என்று. சமைத்துச் சாப்பிடுமாறு சொன்னார்கள். மேலும் தொலைபேசி மூன்று தடவைகள் அடித்து நின்று மீண்டும் ஒலித்தால், அழைப்புக்குப் பதிலளிக்குமாறு கூறிவிட்டு, மீண்டும் அடுத்த நாள் வருவதாகச் சொல்லிச் சென்றார்கள்.

அவர்கள் சென்றதும் மூட்டைகளைப் பிரித்துப் பார்த்தோம். மா, அரிசி, கத்தரிக்காய், கோவா, கரட், வெங்காயம் என்று ஒவ்வொன்றும் மூடையாக இருந்தது. அத்தோடு எண்ணை, சிறிய மிளகாய்த்தூள் போத்தல், உள்ளி போன்ற இதர பொருட்கள் வேறொரு பையிலும் இருந்தது. அவற்றோடு, சிகரெட், சீட்டுக்கட்டு என்பவற்றையும் கொண்டு வந்து தந்திருந்தார்கள்.

இவற்றின் தொகை பசியையும் மீறி நாம் நிற்க வேண்டிய கால அளவை அச்சப்படுத்தியது. நாளை எமது பயணம் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற முடிவுடன். எல்லோருமாகச் சேர்ந்து சமைக்கத் தொடங்கினோம். பலருக்குச் சமையல் பழக்கமற்ற போதிலும், தெரிந்த சிலரும் எம்முடன் இருந்ததால், அவர்கள் சமைக்க, நாம் உதவி செய்தோம். ஒரு வழியாக, சோறு சமைத்து உண்டுவிட்டு, சீட்டுக்கட்டை எடுத்து விளையாடினோம். விளையாடத் தெரியாதவரும், விருப்பமில்லாதவரும் அருகே இருந்து கதைத்துக் கொண்டிருந்தனர்.

ஒரு வழியாக அன்றைய தினமும், முடிந்து அடுத்த நாளும் வீட்டினுள்ளேயே அடைந்து கிடந்து (வேறு என்ன செய்வது?) காலத்தை ஓட்டினோம். இரவானதும், தொலைபேசி ஒலித்து நின்று மீண்டும் ஒலித்தது. எம்மில் ஒரு நண்பர் எடுத்துக் கதைத்தார். மேலும் சிலர் வருவார்கள் என்றும், அவர்களுக்கும் சேர்த்து உணவு தயாரிக்குமாறும் சொன்னார்கள். அன்று இரவும் சோற்றையே சமைத்தோம். வேறு என்ன செய்வது என்று தெரியவில்லை.

இதற்கிடையே ஒரு ஜன்னல் இடைவெளியூடாக வெளிப்படலையைப் பார்க்ககூடியதாக சிறிய இடைவெளியை ஏற்படுத்தி இருந்தோம்.

நடுநிசி அளவில், வாகனச் சத்தம் கேட்டது. எமது படலையின் முன்னால் நின்றதும், நாம் முன் வாசலைச் நோக்கிச் சென்று எதிர்பார்த்துக் காத்திருந்தோம். கதவு திறந்தது, புதிதாக நான்கைந்து நபர்கள் வந்தார்கள். ஆனால், அவர்கள் பயணிகள் மாதிரித் தெரியவில்லை. எல்லோரும் உள்ளே வந்ததும் கதவைமூடி விட்டு அனைவரையும் வரவேற்பறைக்கு செல்லுமாறு கூறினார்கள். நாமும் போய் அமர்ந்தோம். அதிலொருவர் கதைக்கத் தொடங்கினார். அவர்தான் அந்த நாட்டில் பயணிகளுக்கான பயண ஏற்பாடுகளைச் செய்யும் முக்கிய முகவர். எல்லோருடைய பெயர்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டு, அதன்பின் சொன்னார், தற்போது பயண வழிகள் பிரச்சினைக்குரியதாக இருப்பதால், சிறிது காலம் காத்திருக்க வேண்டும் என்றார். எவ்வளவு காலம் என்று கேட்டதற்கு அவர் சொன்னார், மூன்று மாதங்களுக்கு மேலாக 90 பேருக்கு மேல், பயணிக்க முடியாமல் இந்த நாட்டில் தங்கியுள்ளார்கள். நீங்கள் இப்போதுதானே வந்தீர்கள், பொறுத்திருங்கள் என்று கூறுவது போலக் கட்டளையிட்டார். ஒரு நண்பர், அப்படிக் காலம் எடுக்குமானால், தன்னை தாயகத்திற்குத் திருப்பி அனுப்புமாறு கூற, முகவர் சொன்னார், இங்கு வந்தால், திரும்பச் செல்ல முடியாது, குழப்பம் செய்தால் உணவும் வராது, ஆதலால் அமைதியாக அனுப்பும்வரை இருங்கள் என்றார்.

அப்போதுதான் முகவர்களின் சுயரூபம் வெளியே தெரியத் தொடங்கியது. அவர் தனது செல்லிடப்பேசியில், எங்கோ தொடர்பெடுத்து, ஒரு சிலர் பெயரைக் குறிப்பிட்டு, இந்த வீட்டிற்கு அழைத்து வரச் சொன்னார்.

சிறிது நேரத்தில் நால்வரை ஒரு துணைமுகவர் அழைத்து வந்தார். அவர்களையும் எம்முடன் தங்குமாறு கூறிவிட்டு, எல்லா முகவர்களும் புறப்படத் தயாரானார்கள். அப்போது நான் சொன்னேன் வீட்டிற்கு (தாயகத்திற்கு) உரையாட வேண்டுமென்று. நாளை அதற்குரிய ஒழுங்குகளைச் செய்வதாகக் கூறிவிட்டு, வந்தவர்களில் ஒருவரை எல்லோருக்கும் பொறுப்பாக இருக்கும்படியும், தொலைபேசிக்கு அவரை மட்டுமே பதிலளிக்கும்படியும் கூறிவிட்டுச் சென்றுவிட, எம்மத்தியில் கனத்த அமைதி சிறிது நேரத்திற்கு நிலவியது.

அப்போது, புதிதாய் வந்தவர்கள் எம்மை நெருங்கி வந்தார்கள்....

தொடர்ச்சி... (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=228713&postcount=30)

ஓவியன்
22-06-2007, 08:32 PM
என்ன இது அக்னி?

நான் முன்னே கூறியபடி உமது பசுமை நாடிய பயணங்கள் இப்போது திகில் கதையாகவே மாறிப் பயமுறுத்துகிறதே?.

இப்போது பலத்காரம் வேறு ஆரம்பிக்கிறது போலுள்ளது. பயமுறுத்தும் உங்களது அனுபவங்கள் புலம் பெயரும் எங்கள் உறவுகளுக்கு ஒரு ந*ல்ல படிப்பினையாக இருந்தால் அதுவே உங்களுக்குக் கிடைக்கும் வெற்றி!.

வெற்றி கிடைக்க வாழ்த்துக்கள் அக்னி!.

அக்னி
22-06-2007, 08:36 PM
என்ன இது அக்னி?

நான் முன்னே கூறியபடி உமது பசுமை நாடிய பயணங்கள் இப்போது திகில் கதையாகவே மாறிப் பயமுறுத்துகிறதே?. இப்போது பலத்காரம் வேறு ஆரம்பிக்கிறது போலுள்ளது. பயமுறுத்தும் உங்களது அனுபவங்கள் புலம் பெயரும் எங்கள் உறவுகளுக்கு ஒரு வல்ல படிப்பினையாக இருந்தால் அதுவே உங்களுக்குக் கிடைக்கும் வெற்றி!.

வெற்றி கிடைக்க வாழ்த்துக்கள் அக்னி!.

திகில் கதையல்ல நண்பா... திகில் நிகழ்வுகள் இனித்தான் அரங்கேறப் போகின்றன...
தொடர்ந்தும் இணைந்திருங்கள்...
நன்றி!

அக்னி
26-06-2007, 12:31 AM
அப்போது, புதிதாய் வந்தவர்கள் எம்மை நெருங்கி வந்தார்கள்....

வந்து எம்முடன் கதைக்கத் தொடங்கினார்கள். அவர்கள் வந்து மூன்று மாதங்களாகின்றதாம். இதுவரை எந்தவித பயண ஏற்பாடுகளும் நடைபெறவில்லையாம். காத்திருந்து காத்திருந்து, முகவர்களுடன் தர்க்கித்து களைத்து விட்டார்களாம். மற்றவர்களுடன் இருந்தால், சிலவேளைகளில் மற்றவர்களையும் தூண்டி விடலாம் என்பதாலேயே புதிதாய் வந்த எம்முடன் மாற்றிவிட்டுள்ளார்களாம் என்றார்கள். பின்னர், எல்லாருமாகச் சாப்பிட்டு விட்டு, படுப்போம் என்று தயாராக, அவர்கள் எங்கோ புறப்படத் தயாரானார்கள். இரவில் கடைகள் திறந்திருக்குமாம். தாம் இருவர் போய், சில பொருட்கள் வாங்கி வரப்போவதாக அவர்கள் கூற, நாம் வெளியே போக திறப்பு இல்லை என்றோம். அதற்கு அவர்கள் ஜன்னலூடாக இறங்கலாம் என்றார்கள்.

ஜன்னல், பெரியதானாலும் அதில் திறக்கக் கூடிய பாகம் மிகச்சிறியது. ஒரு மிகச் சாதாரணமான உடலுடையவர்களே அதனூடு நுழைய முடியும். தாம் வைத்திருந்த சிறிய கத்தியால், அதனைக் கழற்றிவிட்டு அதனூடு இருவர் நுழைந்து வெளியே போய்விட்டார்கள். எனது உடம்பும் போக கூடியது என்றாலும் பயத்தில் நான் மறுத்துவிட்டேன். அவர்கள் வெளியே சென்று சிறிது நேரத்தில் திரும்ப வரும்போது, வொட்கா எனப்படும் ரஷ்யாவின் புகழ்பெற்ற மதுவகை உட்பட, பலவித குடிபானங்கள், சிகரெட், முட்டை, தகரத்திலடைக்கப்பட்ட மீன், பிஸ்கெட் எனப் பலதையும் வாங்கி வந்திருந்தார்கள்.

அவற்றை ஜன்னலூடாக தந்துவிட்டு, வெளியே இருந்த திராட்சைப் பழங்கள் மற்றும் வேறுவித பழங்களை ஒரு பை முழுவதும் நிறைய பறித்தபின், வீட்டினுள்ளே வந்தார்கள். இவர்கள் வருவதற்கிடையே, மற்ற இருவரும், வீட்டினுள்ளே இருந்த தளத்தின் பலகை ஒன்றைக் கழற்றி இருந்தார்கள். கூடுதலான நில வீடுகளில் தளம் பலகையால் ஆனதாகவே இருக்கும் என்று கூறினார்கள். கழற்றிய இடைவெளியினூடு புகுந்து பார்த்தோம். உள்ளே விசாலமாக இருந்தது. சில வீடுகளில், பெரிய நிலவறையும் இருக்கும் என்றார்கள். குளிர் காலங்களில் உணவைச் சேமித்து வைக்க பயன்படுத்துவார்களாம் ரஷ்யர்கள். சரி ஏன் பலகையைக் கழற்றுகின்றார்கள் என்று கேட்க வாங்கி வந்த பொருட்களை முகவர்கள் பார்வையில் படாமல் ஒளிப்பதற்காக என்று கூறினார்கள்.

பின்னர் மதுவருந்த அழைத்தார்கள். எம்மில் மதுவருந்த விரும்பியவர்கள் மதுவருந்தியபடி, சீட்டு விளையாடியபடி, சிகரெட் புகைத்தபடி, அல்லது எதையாவது உண்டபடி இரவைப் போக்கினோம். பழங்கள் மிக இனிமையாக இருந்தன, பழச்சாறும்தான் (வொட்கா). விடியும் வேளையில் உறங்க விளைந்தோம். எல்லோரும் படுத்துறங்கிவிட்டார்கள்.

எனக்குள் ஆயிரம் நினைவுகள் மோதின. எல்லோரும் இஷ்டத்துக்குப் பணத்தைக் கொடுத்து பலதையும் வாங்குகின்றார்கள். அவர்கள் உறவுகள் வெளிநாடுகளில் இருப்பதால், தேவையான பணத்தை அவர்களி அனுப்பி வைப்பார்களாம். ஆனால், எனக்கோ வெளிநாட்டில் யாருமில்லை. தாயகத்தில் பணம் கொடுத்து, கையில் சிறிதளவு பணத்துடன் ஏறிவந்தவன். என்ன செய்வது என்று சிந்தனை தலையை அழுத்தியது. மற்றவர்கள் முன்னிலையில் எனது கவலைகளைக் காட்டி அனுதாபம் தேடிக்கொள்ள விரும்பாத மனது, தனிமையில் நினைவுகளின் பாரம் தாங்க முடியாமல் அழுந்தியது. அத்துடன், பயணம் செல்லும்போது சிறிதளவு பணத்தை ஒளித்து வைக்க வேண்டும் என்றும் அவர்கள் கதைத்திருந்தார்கள். ஏனென்றால், பயணத்தின்போது, காவல்துறை பிடித்தால், பணம் (அமெரிக்க டொலர்) தான் அவர்களின், முக்கிய தேடுபொருளாக இருக்குமாம். அப்போது என்னிடம் விமான நிலையத்தில் செலவு செய்தது போக, கிட்டத்தட்ட 100$ களே இருந்தது. அதில் 50$ ஐ ஒளித்து வைப்போம் என்று சிந்தித்தபடியே எப்போது உறங்கினேன் என்பது தெரியாமல் உறங்கிவிட்டேன்.

அடுத்த நாள், உணவாக பிட்டு அவிப்போம் என்று புதியதாய் வந்தவர்கள் சொன்னார்கள். அவிப்பதற்குரிய பாத்திரங்கள் இல்லாமல் எப்படி அவிப்பது என்று கேட்க, உள்ளே அணியும் பெனியன் புதிதாய் இருக்கிறதா என்று கேட்டார்கள். ஒருவர் தரவே, ஒரு வாய் அகன்றபெரிய பாத்திரத்தில் நீரூற்றி அதில் அந்த பெனியனைக் கட்டி, குழைத்த மாவை அதிலிட்டு அவித்தோம். தேங்காய்ப்பூ இல்லாத பிட்டானாலும், பசியும், சோற்றை மட்டுமே உண்ட நாக்கும் அந்தப் பிட்டில் சுவை கண்டது. புதிய முறைமைகள் புகுத்தப்பட்டது, சமையலிலும், வாழ்க்கையிலும்.

இவ்வாறாக, அனேகமாக அனைவரும் மதியவேளை எழுந்து, இரவில் விழித்து காலம் ஓடியது. தொலைபேசி ஒழுங்கு செய்து தருவதாகக் கூறியவர்களைக் காணோம். கிட்டத்தட்ட 10 நாட்கள் ஆகிவிட்டது. வீட்டாருடன் தொடர்பு கொள்ள முடியவில்லை. முகவர்கள் கதைக்கும்போது கேட்டால், நாளை ஒழுங்கு செய்கின்றோம் என்ற பேச்சில் வழுவாத நாண(ந)யம் கொண்டவர்கள் என்பது எமக்குத் தெரிந்திருந்தாலும், ஏக்கம் அவர்களின் ஏமாற்றுத்தனத்தைக்கூட நம்பச் செய்தது.

இப்படி நாட்கள் கடந்து செல்கையில், ஒரு நாள் அதிகாலை ஆழ்ந்த உறக்கத்திலிருந்த எம்மை, ஒருவர் உலுக்கி எழுப்பினார்...

தொடர்ச்சி... (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=229450&postcount=35)

ஓவியன்
26-06-2007, 03:40 AM
அப்பப்பா அக்னி!, புதிதாக வந்தவர்கள் உங்களை என்ன செய்யப் போகிறார்களோ என்று யோசித்துக் கொண்டிருக்கு அவர்களும் உங்களைப் போன்றவர்கள் என்பது திருப்பு முனையாக அமந்தது, அது உமது எழுத்தாற்றலுக்கு ஒரு எடுத்துக்காட்டு.

தவிர தொடரும் உங்கள் தவிப்பு பதை பதைக்க வைக்கிறது, தொடர்ந்து எதிர்பார்கிறேன் உங்கள் பசுமை நாடிய பயணங்களை.

இதயம்
26-06-2007, 05:49 AM
நீங்கள் எழுதியிருக்கும் பயண அனுபவத்தில் வெளிநாட்டு வேலையை பெற கொடுக்க வேண்டிய விலை, உங்கள் தவிப்பு, எதிர்பார்ப்பு, அவநம்பிக்கை, கனவு எல்லாம் தெரிகிறது. வேலை தேடி தாயகத்தை விட்டு செல்லும் மனிதர்கள் ஒரு பயணிகளைப்போல் இல்லாமல் பணயக்கைதிகளைப்போல் ஆனதை உங்கள் அனுபவம் தெளிவாக சொல்கிறது. இந்த அனுபவங்கள் ஏற்கனவே அது போன்ற கசப்பான அனுபவங்களை பெற்றுவிட்ட நண்பர்கள் அறிந்து கொள்வதோடு மட்டும் இல்லாமல், இனி வெளிநாடு வரத்துடிக்கும் ஒவ்வொரு தமிழனும் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம். அப்போது தன் இது போன்ற சூழ்நிலைகளை, கஷ்டங்களை தவிர்க்கவும், சமாளிக்கவும் அவர்களுக்கு ஏதுவாக இருக்கும். எனவே இதை படிக்கும் நண்பர்கள் இந்த அனுபவங்களை தங்களோடு முடித்துக் கொள்ளாமல் மற்ற நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்பது என் வேண்டுகோள்.

ஒரு அனுபவக்கட்டுரையை திருப்பங்கள் நிறைந்த நாவல் போல் எழுதும் அக்னி அவர்களின் அபார எழுத்து திறமைக்கு என் பாராட்டுக்கள்..!

ஓவியன்
26-06-2007, 06:00 AM
நீங்கள் எழுதியிருக்கும் பயண அனுபவத்தில் வெளிநாட்டு வேலையை பெற கொடுக்க வேண்டிய விலை, உங்கள் தவிப்பு, எதிர்பார்ப்பு, அவநம்பிக்கை, கனவு எல்லாம் தெரிகிறது. வேலை தேடி தாயகத்தை விட்டு செல்லும் மனிதர்கள் ஒரு பயணிகளைப்போல் இல்லாமல் பணயக்கைதிகளைப்போல் ஆனதை உங்கள் அனுபவம் தெளிவாக சொல்கிறது. இந்த அனுபவங்கள் ஏற்கனவே அது போன்ற கசப்பான அனுபவங்களை பெற்றுவிட்ட நண்பர்கள் அறிந்து கொள்வதோடு மட்டும் இல்லாமல், இனி வெளிநாடு வரத்துடிக்கும் ஒவ்வொரு தமிழனும் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம். அப்போது தன் இது போன்ற சூழ்நிலைகளை, கஷ்டங்களை தவிர்க்கவும், சமாளிக்கவும் அவர்களுக்கு ஏதுவாக இருக்கும். எனவே இதை படிக்கும் நண்பர்கள் இந்த அனுபவங்களை தங்களோடு முடித்துக் கொள்ளாமல் மற்ற நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்பது என் வேண்டுகோள்.

ஒரு அனுபவக்கட்டுரையை திருப்பங்கள் நிறைந்த நாவல் போல் எழுதும் அக்னி அவர்களின் அபார எழுத்து திறமைக்கு என் பாராட்டுக்கள்..!

உண்மைதான் அண்ணா!

தாயகத்திலிருக்கும் பல உறவுகளுக்கு புலம் பெயர்ந்து நம்மவர் அனுப்பும் பணம் மட்டும் தான் தெரிகிறது அதற்காக அவர்கள் பட்ட பட்டுக் கொண்டிருக்கின்ற அவலங்கள் தெரியவில்லை, அது எல்லோருக்கும் தெரிய இந்த அக்னியின் தொடர் உதவும், அதற்கு நீங்கள் கூறிய மாதிரி நாங்களும் உதவ வேண்டும்.

அக்னி
26-06-2007, 04:51 PM
நன்றி ஓவியன், நன்றி இதயம்...
எனது பயண அனுபவத்தை நான் எழுத வேண்டும் என்ற எண்ணம், நான் ஐரோப்பா வந்தவுடன் தோன்றியிருந்தாலும், சந்தர்ப்பங்களும் தகுந்த களமும் கிடைக்கவில்லை. தமிழ் மன்றம் வந்ததும் இங்கு எனது கனவு நிறைவேறலாம் என்று எண்ணினேன். அதற்கு ஆதவன் அவர்களும் ஊக்குவித்தார்கள். முதற் பகுதியில் பெற்றுக் கொண்ட வரவேற்பு, சுருக்கமாக பதிந்து போகும் எண்ணத்தை, விரிவாக எழுதத் தூண்டியது. அதற்கு, இந்தக் பதிவை கண்டு சென்றவர்களின் ஊக்குவிப்புத்தான் காரணம்.
உங்களின் ஊக்குவிப்பில், நான் தொடருவேன்...
ஒரு நாள், இரு நாள் பயணமல்ல...
கிட்டத்தட்ட இரு வருடங்கள் தொடர்ந்த பயணம்...
அந்த அனுபவங்கள்... நிச்சயமாக முடிந்தளவுக்கு என்னால் பதியப்படும். தொடர்ந்தும் இணைந்திருங்கள்...
நன்றி!

அக்னி
26-06-2007, 11:42 PM
இப்படி நாட்கள் கடந்து செல்கையில், ஒரு நாள் அதிகாலை ஆழ்ந்த உறக்கத்திலிருந்த எம்மை, ஒருவர் உலுக்கி எழுப்பினார்...
ஒக்ரோபர் மாத நடுப்பகுதியில் துயில் கொண்டிருந்த எங்களை "எழும்புங்கோடா" என்ற குரல் திடுக்கிட வைத்து எழுப்பியது எங்கள் அனைவரையும். எழுப்பியவர், முன்னர் ஜேர்மனியில் வசித்தவர். திருமணம் செய்து, அவரது மனைவி மகவை வயிற்றில் தாங்கியிருந்த வேளையில், ஜேர்மன் அரசினால் தாயகத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டு, பிறந்த மகனையும், மனைவியையும் சேர்வதற்காக மீண்டும் பயணம் மேற்கொள்பவர்.

என்னவோ ஏதோவென்று பதைத்து எழும்பிய நம்மை, சாளரத்தோரம் நின்றபடி அழைத்தார் அந்த அண்ணா. விரைந்த எம்மை வெளியே பார்க்கப் பணித்தார். பார்த்ததும் அசைவை இழந்து விட்டோம். வெளியே முழுவதும் வெள்ளை மழை பொழிந்திருந்தது. பனி படர்ந்த நிலமகள் எங்களில் அநேகமானோருக்கு புதிது. சாளரத்தினூடாக கையைவிட்டு வருடிப் பார்த்தேன். அளைந்தேன். குளிர்மை உடலெங்கும் சில்லிட்டது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெள்ளையாக, மென்மையாக படர்ந்திருந்த பனி, அப்போதும் பூவாகத் தூவிக் கொண்டிருந்தது. ஆனால், சுதந்திரமாக பார்க்க, அனுபவிக்க முடியவில்லை. எமது வீட்டின் கட்டுகளை அறுக்க முடியாமல், மனதில் ஒருவித கிளுகிளுப்பான உணர்வுடன், அன்றைய பொழுதை பனி பற்றிய கதைகளிலேயே வியப்புடன் கழித்தோம். ஆனால், அழகுதான் ஆபத்தின் உறைவிடம் என்பது, எமக்குத் தெரியவில்லை. இதே பனியும் குளிரும் எமது வாழ்வில் தரப்போகும் அனுபவங்களை நாம் அப்போது உணரவில்லை. மனம் மகிழ்ச்சியில் திளைக்க, சாளரத்தினூடாக கையில் பட்ட பனித்துகள்களை அள்ளி ஒருவர்மீது ஒருவர் எறிந்து விளையாடிக் கொண்டிருந்தோம்.

பனிப்படலம் தந்த ஆசை அன்று என்னையும் வெளியே சென்று பார்க்க வேண்டும் என்ற முடிவை எடுக்கவைத்தது. இரவானதும், ஒரு சிலருடன் நானும் வெளியேறி நாம் இருந்த தெருவைச் சுற்றி வந்தோம். மனதில் பயமாய் இருந்தாலும், பனியின் அழகில் மெய்மறந்து திரிந்தேன். ஒருநாள் முழுவதும் கொட்டியதால் நிறைந்திருந்த பனியினுள் கால்கள் புதைய நடந்து திரிந்து விட்டு, திறந்திருந்த ஒரு கடையில், (பெட்டிக்கடைகள் வரிசையாக பல இருந்தன. அநேகமான உணவுப்பொருட்களை வாங்கக் கூடியதாக இருந்தது) சில பல பொருட்களை, குடிவகைகளை வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தோம். ஏறத்தாழ 15 நாட்களின் பின் வெளியே சென்று வந்தது மனதுக்குள் ஒரு உற்சாகமாக இருந்தது.

வழமை போலவே, அன்றைய இரவும் எமது விழிப்பு இருந்தது. அப்போது ஒருவர் ஒரு திறப்பை எடுத்து வந்தார். எங்கோ ஒரு மூலையில் இருந்ததாக கூறி முன் கதவைத் திறக்க முனைந்தார். ஏதோ ஒரு சிறிய வித்தியாசத்தில் உள்ளே நுழைந்தாலும் திறக்க மறுத்தது. பல தடவைகள் முயன்றபின், நாளை பகலில் ஏதாவது செய்வோம் என்ற எண்ணத்தில் விலத்தி போகும்போது, அருகிலிருந்த அடுத்த வெளிக்கதவில் (இரு கதவுகள் என முன்னரே குறிப்பிட்டுள்ளேன்) தற்செயலாக முயற்சிக்க அது திறந்து கொண்டது. எமக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. உடனேயே பாதணிகளையும், மேலணியும் அணிந்து கொண்டு சத்தம் போடாமல், வெளியே சென்றோம். எமது பாத அடையாளங்கள் பனியில் தெரிந்ததால், முகவர்கள் நாம் வெளியே சென்றதை தெரிந்துவிடுவார்கள் என்பதால், ஒருவர் காலடி மீது காலடி வைத்து, வீட்டின் பின்னே சென்றோம். பின்பக்கம் நீளமான வளவாக இருந்தது. அங்கே சத்தம் போடாமல், அக்கம் பக்கம் கவனித்தபடி பனியின் குளிர்மையையும், அது கொட்டும் சுகத்தையும் அனுபவித்தபின் திரும்பிவரும் போது பார்த்தால், எமது பாத அடையாளங்கள் பனியால் மூடப்பட்டிருந்தன. உடம்பில் சிறியதாக குளிரேற அனைவரும் உள்ளே வந்து, வெப்பமாக்கியின் வெப்பத்தை சற்று உயர்த்திவைத்துவிட்டு உறங்கினோம்.

அடுத்த நாள் பார்த்தால், பனி விழுவது நின்று விழுந்த பனி கரையத் தொடங்கியிருந்தது. குளிர் கடுமையாக இருந்தது. ஜேர்மனியில் இருந்து வந்திருந்த அண்ணா கூறினார்; பனி விழும்போது குளிர் தெரியாது என்றும், பனி கரையும்போது குளிர் கடுமையாக இருக்கும் என்றும், அப்போது, நிலம் நடக்கமுடியாதபடி வழுக்கும் என்றும் கூறியிருந்தார். அடுத்த இரவு, வெளியே செல்ல முயற்சித்து, பனியில் நடக்கமுடியாமல் வழுக்கவே உடனேயே வீட்டிற்குள் திரும்பிவிட்டோம். (விண்வெளியில் நடப்பதற்கு கடுமையாக திட்டம்போட்டு நடப்பார்களே அது போலவேதான் இருந்தது எமது வீட்டிற்கு வெளியே செல்லும் நிகழ்வுகளும். ஏனென்றால், முகவர்கள் வருவார்களோ என்று கண்காணிக்க ஒருவர், அக்கம்பக்கம் கண்காணிக்க ஒருவர் என்று எமது திட்டமிடல்கள் ஏராளம்) நாம் கடும் குளிருக்கென்று கொண்டு வந்த உடைகள், பாதணிகள் யாவும் பயனற்றவை என்று புரிந்தது. எமக்கு முன்னரே வந்திருந்த நண்பர்களிடமிருந்து, அவர்களுக்குத் தெரிந்த ருஷ்கி வார்த்தைகள், மற்றும் எண்கள் முதலியவற்றை எவ்வாறு சொல்வது என்று கேட்டுத் தெரிந்து கொண்டோம். வாய்வழியாக ஒரு மொழி முன்னர் வந்த பயணிகளிடமிருந்தும் கடத்தப்பட்டு, எம்மிடமும் பரவியது.

அன்றைய தினம் பிற்பகலில், அன்று எமக்கு இறைச்சி அனுப்பிவைப்பதாக முகவர் ஒருவர் தொலைபேசியில் தெரிவித்தார். எமது முகவர்களுக்கு சாரதி வேலை செய்யும் அந்த நாட்டவர் ஒருவர், ஒரு பொதியைக் கொண்டு வந்து தந்தார். இதற்கிடையில், அவர்கள் எமக்குத் தந்திருந்த பெரும்பாலான உணவுகள் முடியும் தறுவாயில் இருந்ததால், ஒரு பேப்பரில் குறித்து, முகவரிடம் கொடுக்குமாறு கூறினோம். அந்த சாரதியும் சென்றபின்னர், நாம் அந்த இறைச்சிப் பொதியைப் பிரித்துப் பார்த்தோம். நீண்ட நாட்களின் பின் இறைச்சி உண்ணப்போகின்றோம் என்ற அவாவில் (அவா என்று சொல்வதற்காக நான் வெட்கப்படவில்லை. நாக்குக் காய்ந்து போன நிலையில் ஆசை என்பதை விட அவா என்பதே பொருத்தமானதாகும்) இறைச்சிப் பொதியைப் பார்த்தால், ஒரு சிறிய இறைச்சித் துண்டுடன் அதிகளவான கொழுப்பும், சுத்தம் செய்யப்படாத குடல்களும் இருந்தன. ஏமாற்றாமாக இருந்தாலும் ஒரு மாற்றமாக வந்த அந்த பொதி எமக்கு சுவையாகத்தான் இருந்தது உணவில். குடலை சுத்தம் செய்து மூன்று தடவைகள் நன்றாக அவித்துப் பின்னரே சமைக்க முடிந்தது. ஆனாலும், அதுவாவது கிடைத்ததே என்ற சந்தோஷத்தில் கொழுப்பு, குடல்கள் உண்ண விரும்பாதவர்களுக்கு இறைச்சியை அதிகமாகக் கொடுத்து, எல்லோருமாக பங்கிட்டு உண்டபின், ஏலவே எடுத்து வைத்திருந்த ஒரு பகுதியை ஒரு பையிலிட்டு, ஒரு சாளரத்தினூடாக வெளியே தொங்கவிட்டோம் அடுத்தநாள் உணவுக்காக. வெளியேதான் குளிசாதனப்பெட்டியாக சூழல் இருக்கிறதே. அதனால், பழுதடையாது இருப்பதற்காக அவ்வாறு செய்தோம்.

இவ்வாறு மேலும் இரு நாட்கள் சென்றநிலையில், உணவுப்பொருட்கள் முடியும் நிலைக்கு வந்திருந்தது. அதைத் தெரிவித்தும் எமக்கு இன்னமும் அனுப்பப்படவில்லை. அத்துடன் அவர்களாகத் தொடர்பு கொண்டால்தான் கதைக்க முடியும் என்ற நிலையும் இருந்ததால், இருந்த உணவுப் பண்டங்களை மிக சிக்கனமாக பயன்படுத்தினோம். ஏற்கனவே, ஒரு நாளில் இரு தடவைகள் மட்டுமே உண்ணுங்கள் என்று முகவர்கள் கட்டளையிட்டிருந்தார்கள். நாமும் நாவையும், வயிற்றையும் அடக்கி இரு தடவைகள் மட்டுமே உண்டு வந்தோம். அதுவும் அடுத்தடுத்த நாட்களில் இன்னமும் சிக்கனமாகிப் போனது.

இப்படியாக நிலைமை இறுக்கமான நிலையில்,

தொடர்ச்சி... (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=230250&postcount=36)

அக்னி
28-06-2007, 03:47 PM
இப்படியாக நிலைமை இறுக்கமான நிலையில்,

உணவுப் பொருட்களில்,அரிசி, மா முழுவதும் தீர்ந்து விட்டது. எண்ணையோ முழுவதும் முடிந்து போனது. நாம் கள்ளமாக வாங்கியும் போதவில்லை. கையிருப்பில் காசும் பயணத்திற்காக, அவசர நிலைமைகளுக்காக ஒதுக்கி வைத்ததைத் தவிர வேறில்லை. கொஞ்ச கத்தரிக்காய் மட்டும் இருந்தது. உணவுப் பொருட்கள் வரும் என்று காத்திருந்து வராத நிலையில், பகலிலேயே வெளியே இருவர் சென்று அரிசி வாங்கி வந்தார்கள். உணவு வர, எத்தனை நாட்கள் எடுக்குமோ என்ற அச்சத்தில், அரிசியைக் கஞ்சியாகக் காய்ச்சி, கத்தரிக்காயை, இறைச்சி என்ற போர்வையில் வந்த கொழுப்பில் கறிசமைத்து, மேலும் இரு நாட்களை ஓட்டினோம். இரு நாட்களின் பின் தொலைபேசி ஒலித்தது.

ஆவலுடன் ஓடிச்சென்று தூக்கினார் அந்த வீட்டிற்கு முகவரால் பொறுப்பாக நியமிக்கப்பட்டவர். உணவுப் பொருட்கள் தீர்ந்துவிட்டது. கத்தரிக்காய் மட்டுமே உள்ளது என்று அவர் கூற மறுமுனை ஏதோ சொல்லிவிட்டுப் அழைப்பை நிறுத்திவிட்டது. சோர்ந்து போனது அவரது முகம். என்ன சொன்னார்கள் என்று கேட்க, அவர் சொன்னார், என்ன தெரியுமா? கத்தரிக்காயை அவித்து உப்புடன் உண்ணச் சொன்னார்களாம். பசியினால் ஏற்பட்ட களைப்பையும் மீறி மனதில் ஆயிரம் வலிகள் சுள்ளிட்டது. யாருமே பிச்சைக்காரர்களில்லை. தாயகத்தில் ஓரளவேனும் வசதியாய் இருந்தவர்களே. உணவுக்காக இந்தளவு சிக்கனம் பிடித்தது அனைவருக்கும் புது கடுமையான அனுபவமே.

இதிலும் கொடுமை என்னவென்றால் இந்த பதிலைக் கூறியவரும் ஒரு பயணியே. சிறியவயதுடையவர். ஆனால், அவர்கள் வசதியான பயணிகள். அவர்கள் சொந்தங்கள் முகவர்களுக்கு அடிக்கடி காசு அனுப்பிவைப்பதனால் இந்தப் பாகுபாடு. ஆனால், உணவுக்காக பிறிதாக செலவழிக்க வேண்டும் என்று எந்த முகவருமே, பயண ஆரம்பத்தில் கூறியதில்லை. ஆனால், அவர்கள் பணம் காய்க்கும் பயணிகள் என்பதால் இந்த வேறுபாடு. அந்த நாட்டிற்கான முகவரிடம் சலுகைகளைப் பெறுவதற்காக, இப்படியானவர்கள் சிலர் சாதாரண பயணிகளை தகாத சொற்களாலும் வைவார்கள். வயது குறைந்த இவரும் பயணிகள் மட்டத்தில் பெரிதாகப் பேசப்படுபவராம் என்றார்கள் எம்முடன் இணைந்து கொண்ட நண்பர்கள். முகவர்களும் இப்படியான பயணிகளால் ஆதாயம் வருவதால் அவர்களை வெளியில் அழைத்துச் செல்வதும், தேவையான சகலவற்றையும் வழங்குவதும், மற்ற வீடுகளுக்கு பொறுப்பாக விடுவதும், வீடுகளுக்கான பொருள் விநியோகத்தின்போது அனுப்பிவைப்பதுமாக அற்பசுகம் காட்டி, பலரைத் தமது கைகளுக்குள் செல்லப்ப்யணிகளாக ஆக்கி வைத்திருந்தார்கள். ஆனால், இந்த குறுநில மன்னர்களுக்கு புரியவில்லை, தாங்கள் செல்லாத செல்லப்பயணிகள் என்பது. ஆனால், சாதாரணமான நாங்கள், எல்லா வகையிலும் செல்லாப் பயணிகள் ஆகிவிட்டோம்.

தாயகத்தில் நாங்கள் அனுபவித்த செல்வாக்குகள், எம்மை யாரும் சீண்டிப்போனால், தட்டிக் கேட்ட பலம், எல்லாவற்றிற்கும் மேலாக உணவு கேட்டபோது எமக்குக் கிடைத்த பதில் என்பன பலருக்கும் வேதனையான, காட்டமுடியாத கோபத்தை தந்திருந்தது.

தாயகத்தில், இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள், தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் என்று இரு பிரதேசங்கள் உண்டு. நான் சிறுவயது முதலே இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழ்ந்தபடியால், இராணுவத்தினரின் கட்டுப்பாடுகள், அன்றைய நாட்களில் எனக்குத் தாக்கம் தந்ததில்லை (இன்று நிலைமை தலைகீழ், தமிழர்கள் எல்லோரும் பிரச்சினைகளைச் சந்திக்கறார்கள், சொல்லொணாத் துயரம் அனுபவிக்கிறார்கள்). ஆனால், தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் வாழ்பவர்கள், வெளிநாட்டுப் பயணங்கள், கல்வி, தொழில், மருத்துவம் என்ற இன்னோரன்ன தேவைகளுக்காக வரும்போது இராணுவத்தினரால் பல்வேறு நெருக்குதல்களை சந்திப்பார்கள். அதனால், அவர்கள் தமது தேவைகளைப் பூர்த்தி செய்யுமட்டும், வெளியே தேவையற்று நடமாடுவதில்லை. அதன் தாக்கத்தின் காரணமாக, நாடு விட்டு வெளிவந்தும், இப்படியான நிலையிலும் அநேகமானோர் எதிப்புத் தெரிவிப்பதே இல்லை. ஏனென்றால், எதிர்த்தால், தண்டனையாக பயணங்கள் நடைபெறும்போது, எதிர்ப்பவர்களை இறுதியாகவே தெரிவுசெய்வார்கள் முகவர்கள். அல்லது உணவுக்கட்டுப்பாடு, வசதியற்ற வீடுகளுக்கான மாற்றம் என்பற்றையும் எதிர்கொள்ள நேரிடும். இதனைச் "சாட்டர்" என்று பயண வட்டாரத்தில் சொல்வதுண்டு. அதனால், அனைத்தையும் பொறுத்துக் கொள்வார்கள்.

என்னுடன் இருந்தவர்களில் நான் மட்டுமே இராணுவக்கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வளர்ந்தவன் (ஜேர்மனியில் இருந்து திரும்பி வந்த அண்ணாவைத் தவிர). அதனால், மற்றவர்கள் காக்கும் பொறுமை எனக்கு வரவில்லை. தவிர, எனது முகவர், எனது நகரத்தைச் சேர்ந்தவர். எனது உறவுகள், நண்பர்களிடம் எனது நிலை தெரியவந்தால், அவரைத் துவைத்தெடுத்து விடுவார்கள். அத்தோடு எனது முன்கோபம், யாரிடமும் பின்விளைவு யோசிக்காமல் சண்டை போடுதல், கைநீட்டுதல் என்பனவும், எனக்கு அளவுகடந்த கோபத்தை ஏற்படுத்தி இருந்தது.

கொந்தளித்துக் கொண்டிருந்த வேளையில், தொலைபேசி ஒலிக்க, நான் எமது வீட்டுப் பொறுப்பாளரைத் தள்ளிவிட்டு தொலைபேசியைத் தூக்கினேன். எதிர்முனையில், முகவர்களிலொருவர். நான் சொன்னேன், உணவு முடிந்து விட்டது. உணவு போடமுடியாவிட்டால் வெளியே போய் வாங்கப்போகின்றேன் அல்லது காவல்துறையினரிடம் சென்று சரணடைந்து தாயகம் திரும்பப் போகின்றேன் என்று நான் எகிற, மறுமுனையிலிருந்து முகவர், உங்களுக்கு உணவு அனுப்பிவைத்திருக்கின்றோம், அதைச் சொல்லத்தான் தொலைபேசி எடுத்தோம் என்றார். நான் உடனே சொன்னேன் தாயகத்திற்கு தொலைபேசி அழைப்பு வேண்டும் என்று. நாளை கட்டாயம் வருவதாகக் கூறி அவர் இணைப்பைத் துண்டிக்கவும், வீட்டின் முன்னே வாகனம் ஒன்று வந்து நிற்கும் சத்தம் கேட்கவும் சரியாக இருந்தது. ஜன்னலூடு பார்க்க, சாரதியோடு ஒரு துணைமுகவரும், அவருடன் இன்னுமொரு சிறியவரும் பொருட்களைக் சுமந்து வீடு நோக்கி வந்தார்கள்.

அவர்கள் வீட்டை நெருங்கி வரவும், பின்னதாக வந்து எம்முடன் இணைந்த நண்பர்களில் ஒருவர் சொன்னார், வந்து கொண்டிருக்கும் சிறியவரின் பெயரைக் குறிப்பிட்டு இவர்தான் எம்மைக் கத்தரிக்காய் அவித்து உண்ணச்சொன்னவர் என்று. அவர் வேறு சமயங்களில் உள்ளியையும் (வெள்ளைப்பூண்டு) சுட்டு உண்ணச்சொன்னவராம். முகவரின் அனுக்கிரகம் அவருக்கு இருந்ததால், வயதுமீறி, அனைவரையும் மரியாதையின்றி கெட்டவார்த்தைகளினால் வைதாலும், எல்லோருமே பொறுத்துக்கொண்டார்கள். எல்லாமே முகவர்களின் வழிநடத்தலே. உணவு கேட்டவனுக்கு கல்லைப்போட்டு உண் என்று சொன்னதைப்போல, உணவு கேட்க மனிதாபிமானமில்லாமல் பதில் சொன்ன அந்தச் சிறுவனைக் கண்டதும் என்னால் கோபத்தை அடக்கமுடியவில்லை. (பதினேழு வயதே தொடங்கவில்லையாம் அவருக்கு. என்னைவிட நான்கு வயது குறைந்தவரானாலும், மிகவும் மெலிந்த தேகம் கொண்ட ஒரு வாடியவர்)

அவர்கள் வீட்டின் கதவைத் திறந்து பொருட்களோடு உள்ளே நுழைய, கோபத்தில் என்னை மறந்த நான்...

தொடர்ச்சி... (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=254767&postcount=59)

அமரன்
28-06-2007, 03:51 PM
அக்கினி புலம்பெயர்ந்து வாழும் அழேக இலங்கை நண்பர்கள் கடந்து வந்தபாதை இது. பல நண்பர்கள் சொல்லக்கேட்டிருக்கின்றேன். இப்போது உங்கள் பதிவு மூலம் இன்னும் ஆழமாக உணர முடிகின்றது. உங்கள் இரண்டு வருட பயணத்தை தொடர்ந்து தாருங்கள்.
அன்புடன்

அக்னி
28-06-2007, 04:05 PM
அக்கினி புலம்பெயர்ந்து வாழும் அழேக இலங்கை நண்பர்கள் கடந்து வந்தபாதை இது. பல நண்பர்கள் சொல்லக்கேட்டிருக்கின்றேன். இப்போது உங்கள் பதிவு மூலம் இன்னும் ஆழமாக உணர முடிகின்றது. உங்கள் இரண்டு வருட பயணத்தை தொடர்ந்து தாருங்கள்.
அன்புடன்

நன்றி அமரன், தொடர்ந்தும் முயற்சிக்கின்றேன்.

எனது நினைவுகளிலிருந்து சுவடுகள் மறையும்முன்,
எங்காவது பதித்துவிட வேண்டும் என்றே மனதில் எண்ணியிருந்தேன்.
தளம் தந்த தமிழ்மன்றத்திற்கு நன்றி...

அன்புரசிகன்
29-06-2007, 09:41 AM
இன்றுதான் முழுக்கதைகளையும் வாசித்தேன். பொறுமை இல்லை. அந்த பாதகனை என்ன செய்தீர்கள்?

அக்னி
30-06-2007, 12:53 AM
இன்றுதான் முழுக்கதைகளையும் வாசித்தேன். பொறுமை இல்லை. அந்த பாதகனை என்ன செய்தீர்கள்?
நன்றி ரசிகன்... பயணத்தில் இணைந்து கொண்டதற்கு...
தொடர்ந்தும் இணைந்திருங்கள்...
சொல்கின்றேன் அடுத்த பாகத்தில்...
கொஞ்சம் வேலைப்பளு... விரைவில் தொடர்கின்றேன்... (இரு நாட்களில்)
மன்னிக்க...

அமரன்
30-06-2007, 07:34 AM
நன்றி ரசிகன்... பயணத்தில் இணைந்து கொண்டதற்கு...
தொடர்ந்தும் இணைந்திருங்கள்...
சொல்கின்றேன் அடுத்த பாகத்தில்...
கொஞ்சம் வேலைப்பளு... விரைவில் தொடர்கின்றேன்... (இரு நாட்களில்)
மன்னிக்க...

அக்னி இது பயண முகவர் சொல்வதுபோன்று பம்மாத்து இல்லையே....:smilie_abcfra: :smilie_abcfra: :smilie_abcfra:

அக்னி
30-06-2007, 11:29 AM
அக்னி இது பயண முகவர் சொல்வதுபோன்று பம்மாத்து இல்லையே....:smilie_abcfra: :smilie_abcfra: :smilie_abcfra:

நான் பயண முகவர் இல்லையே...:grin:

ஓவியன்
30-06-2007, 11:43 AM
அக்னி!

ஒருவேளை உணவிற்காய்!, மன்றாட வேண்டிய நிலையில் இருப்பது மனிதராய் இருக்கும் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் என்றுமே வரக் கூடாத ஒன்று!

சுடுகிறது வரிகள்!

தொடருங்கள் நண்பா! − கைகொடுக்கக் காத்திருக்கிறேன்.

அக்னி
30-06-2007, 11:58 AM
அக்னி!

ஒருவேளை உணவிற்காய்!, மன்றாட வேண்டிய நிலையில் இருப்பது மனிதராய் இருக்கும் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் என்றுமே வரக் கூடாத ஒன்று!

சுடுகிறது வரிகள்!

தொடருங்கள் நண்பா! − கைகொடுக்கக் காத்திருக்கிறேன்.

இதுவாவது பரவாயில்லை... இதைவிட மோசமாக உணவிற்காக பாடுபட்ட கதைகளையும் தொடரில் கண்டு கொள்வீர்கள்.

நன்றி இணைந்திருப்பதற்காக...

அமரன்
30-06-2007, 09:16 PM
இதுவாவது பரவாயில்லை... இதைவிட மோசமாக உணவிற்காக பாடுபட்ட கதைகளையும் தொடரில் கண்டு கொள்வீர்கள்.

நன்றி இணைந்திருப்பதற்காக...
அப்போ படிக்க மாட்டாரா....

இதயம்
01-07-2007, 04:59 AM
உங்களுடைய அனுபவம் மிக சுவையாக இருக்கிறது என்றால் நீங்கள் பட்ட கஷ்டத்தை பார்த்து ஏளனம் செய்தது போலாகிவிடும். விறுவிறுப்பாக இருக்கிறது என்றால் பொய்யாக புனையப்பட்ட கதையை குறித்தது போலாகிவிடும். படித்து மனம் கஷ்டப்பட்டது என்றால் எழுதி நீங்கள் அடுத்தவர்களை கஷ்டப்படுத்திவிட்டீர்கள் என்றாகிவிடும். நல்லபடிப்பினை என்றால் நீங்கள் ஏமாந்ததாகிவிடும். ஆனால், நான் சொன்ன அனைத்து உணர்வுகளும் உங்கள் அனுபவத்தில் இருக்கிறது. நமக்கு நடந்த ஒரு கெட்ட அனுபவத்தை பொய் கலக்காமல் எழுத வேண்டுமென்றால் நம்மை பாதிக்கும் நிறைய விஷயங்களை அனுசரித்துக்கொள்ள வேண்டியிருக்கும். அதற்கு நேர்மை ரொம்ப அவசியப்படும். அந்த நேர்மை உங்கள் எழுத்துக்களிலேயே மின்னுகிறது. பாவம், ரொம்ப தான் கஷ்டப்பட்டிருக்கிறீர்கள். உங்களோடு ஒப்பிடும் போது நான் பட்ட ரயில் அனுபவம் எவ்வளவோ பரவாயில்லை. உங்களின் பகிர்தலால் அந்த பாரத்தை எங்களிடம் பகிர்ந்ததால் அதை இறக்கி வைத்த நிம்மதி. எங்களுக்கு அதை பகிர்ந்து, உங்கள் சோகத்தை பங்கிடுவதிலும், இது போல் இனி நடக்காதிருக்க ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கையும் கிடைக்கிறது. தொடரட்டும் உங்கள் நல்ல பணி..!

இந்த அனுபவத்தை நீங்கள் கதைகள் பகுதியில் இட்டதில் உடன்பாடில்லை. காரணம், பொய்யான சம்பவங்களை கொண்டு புனையப்பட்ட கற்பனைக்கதையல்ல. ஒரு இளைஞன் எதிர்கால கனவுகளுடன் அந்நிய தேசம் போய் பசி, ஏக்கம், தூக்கம், பொருள், நம்பிக்கை, கனவு தொலைத்து கஷ்டப்பட்ட அனுபவம். இந்த அனுபவம் எங்களுக்கு நிறைய நீதி சொல்கிறது. எனவே இதற்கு சரியான இடம் "நீதிக் கதைகள், சுவையான சம்பவங்கள்" என்பது என் தாழ்மையான கருத்து. நன்றி அக்னி..!

அக்னி
01-07-2007, 09:27 AM
நன்றி இதயம்!
உங்களின் தீர்க்கமான பார்வைக்கு..,
உண்மையிலேயே, அன்று அனுபவித்த துன்பங்களை, நினைத்துப் பார்த்தால்,
இன்று சுவையான சம்பவங்களாக, சிரிப்பைத்தான் தருவதுண்டு.
ஆனாலும் ஆழம் அறியாமல் மோகம் கொண்டு வெளிநாடு தேடி ஓடுவோருக்கு,
எனது அனுபவங்கள் சிறு படிப்பினையாகவேனும் இருக்க வேண்டும் என்ற
எண்ணத்திலேயே மன்றத்திலே இந்த பயணத்தை ஆரம்பித்தேன்.
உங்களின் பரிந்துரைக்கேற்ப, மேற்பார்வையாளர்களின் துணையோடு,
திரியை இடம் மாற்றி விடுகின்றேன்...

maxman
02-07-2007, 07:19 PM
மனம் கணக்கிறது நன்பரே, புலம்பெயரும் ஒவ்வொருவரும் கவணிக்க வேண்டிய தொடர்.


பகிர்ந்துகொன்டமைக்கு நன்றி அக்னி

தொடரட்டும் இந்த தொடர்


அன்புடன்
மாக்ஸ்மேன்

அக்னி
02-07-2007, 07:46 PM
மனம் கணக்கிறது நன்பரே, புலம்பெயரும் ஒவ்வொருவரும் கவணிக்க வேண்டிய தொடர்.


பகிர்ந்துகொன்டமைக்கு நன்றி அக்னி

தொடரட்டும் இந்த தொடர்


அன்புடன்
மாக்ஸ்மேன்

மிக்க நன்றி மாக்ஸ்மேன்...

தங்கவேல்
05-07-2007, 01:10 AM
அக்னி, நெஞ்சுக்குள் நெருப்பு.. இயலாமையால் கண்ணீர். வேதனையில் மனம் விம்முகிறது. எமது சகோதரன் பட்ட பாட்டை எண்ணி. காலத்தின் கோலங்களில் மனிதன் வாழ்வு ...தூண்டிலில் சிக்கிய மீன்...

அன்புரசிகன்
07-07-2007, 03:34 PM
அது சரி... எங்கே அடுத்த எபிஸோட்?

அக்னி
07-07-2007, 03:49 PM
அக்னி இது பயண முகவர் சொல்வதுபோன்று பம்மாத்து இல்லையே....:smilie_abcfra: :smilie_abcfra: :smilie_abcfra:

அது சரி... எங்கே அடுத்த எபிஸோட்?


அமரன் சொன்னது பலிக்கின்றது...
சிற்சில காரணங்கள் எனது நேரத்தை பறிக்கின்றது...
விரைவில், முடித்துவிட்டு வந்து பதிக்கின்றேன்...

இளசு
07-07-2007, 05:24 PM
அன்புள்ள அக்னி

ஏனோ அவசரகதியில் இத்தொடரை வாசிக்க விரும்பவில்லை..

இன்று நேரம் அமைந்து முழுக்க வாசித்தேன் ..

இதயம் அவர்களின் பின்னூட்டங்கள் காணும்போதெலாம் நானே எழுதியதைப்போல் ஓர் உணர்வு..

கத்திரிக்காயில் உப்பிடச் சொன்னதைக் கேட்ட உட்கோபம்..ஆற்றாமை..
குளிரில் வாட்டி, நடந்தால் வழுக்கவைக்கும் பனியின் மேல் காதல்
இரு வாரங்களுக்கு மேல் அடைபட்டு வெளியில் சென்ற புத்துணர்வு
பலத்த ஆயத்தம் செய்து வெளிவரும் பகீரதப்பிரயத்தனம்..
சொந்த மண்ணை ஒவ்வொரு கணமும் ஒப்பிட்டு குமுறும் மனம்..
குடலை உண்டு கறியை சிலருக்கு தந்த குணம்
வெட்டவெளியே குளிர்சாதனமாக்கிய சாதுர்யம்
கொழுப்பே எண்ணெய், பனியனே புட்டு அவிக்க துணை..
இடையிடையே இனிப்பான பழங்களும் 'பழச்சாறும்..'

இது ஒரு சமூகப்பொறுப்புள்ள ஆவணம்
பட்டவர்கள், படப்போகிறவர்கள் அனைவருக்கும் பாடம்..

என் பாராட்டுகள் இச்சீரிய பணிக்கு..

நேர்மையும் எழுத்து வன்மையும் மெருகேற்றும் இத்தொடருக்கு என் தொடர் ஊக்கங்கள்..

அக்னி
07-07-2007, 05:36 PM
நன்றி அண்ணா!
சில வேலைப்பளுக்களால், மனம் ஒன்றித்து தொடரமுடியவில்லை.
விரைவில் அவற்றைத் தீர்த்துவிட்டு தொடர்ந்தும் எழுதி முடிப்பேன்.
எனது நீண்ட நாள் கனவு, எனது 2 வருட பயண அனுபவத்தைப் பதிவாக்க வேண்டும் என்பது...
மன்றத்தில் எனக்குக் கிடைத்த களம் எனது கனவை நனவாக்குகின்றது...

பாரதி
23-07-2007, 12:29 AM
அன்பு அக்னி,
நேரமும் சூழ்நிலையும் வாய்க்குமானால், இத்தொடரை தொடரவும்.
வாழ்வியல் நினைவுகூறல்களில் இது மிக*வும் சிறந்த ஒன்றாக பரிணமிக்கும்.

அக்னி
23-07-2007, 05:22 PM
அன்பு அக்னி,
நேரமும் சூழ்நிலையும் வாய்க்குமானால், இத்தொடரை தொடரவும்.
வாழ்வியல் நினைவுகூறல்களில் இது மிக*வும் சிறந்த ஒன்றாக பரிணமிக்கும்.

நிச்சயமாக...
சில நாட்களாக இருந்து வந்த நேரச்சிக்கல் இன்றுடன் ஓரளவு முடிவுக்கு வருகின்றது...
சிலநாட்களில், அடுத்த பதிவை இடுவதாகத் தான் எண்ணியிருந்தேன்...
இயலுமானால், ஒவ்வொரு நாளும் பதிவிடவே முயலுவேன்...
மிக்க நன்றி....

விகடன்
27-07-2007, 02:02 PM
ஆமாம் அக்னி.
ரஷ்யா எல்லாம் கடந்தா சென்றீர்கள்.
ரஷ்யா... லஞ்சம் கொடுத்தால் எதையும் செய்யலாம். ஆனால் கொடுமை என்னவென்றால்! ரஷ்ய மொழியில் லஞ்சம் என்ற ஒரு சொல்லே கிடையாதென்பது.
அதெற்கெல்லாம் புனிதப்பெயர் "பதாரக்" அப்படீன்னா "பரிசு" என்று பொருள்.
வாயை அசைக்காது கதைப்பார்க்கள். சொல்லின் ஆரம்பம் எது முடிவெது என்று அறிய முடியாது.


ஆனால், ஆறு மணி தாண்டியும் இலகுவில் விடிய மறுத்தது, நாம் அனுபவிக்கவிருந்த கருமை நாட்களைச் சுட்டிக்காட்டியது என்பதை, இப்போதுதான் உணரமுடிகிறது.

அப்படியானால் நீங்கள் குளிர்காலத்தில் சென்றிருக்கிறீர்கள். விடிவதற்கு 7 மணி தாண்டியிருக்குமே. 3 மணிக்கேல்லாம் இருள் சூழத்தொடங்கியிருக்குமே?






எம்மிடம் நாளை வருவதாகவும், வெளியே தாங்களே பூட்டி விட்டுப் போவதாகவும் சத்தமின்றி இருக்கும்படியும் கூறிவிட்டு, எமது பாதுகாவலர்கள், எம்மை வீட்டுச்சிறையில் வைத்துவிட்டு வெளியேறினார்கள்.


உண்மையிலேயே இது ஒருவகைச் சிறைதான்.



இரவும் மீண்டும் வந்தது. ஆனால், வருவதாகச் சொல்லிச் சென்றோரைக் காணவில்லை. முதற்பயணம் ஆகையால், எனக்கு மனதில் பயம் பிடித்துக் கொண்ட்து. ஆனால், வந்த உறவுகளில் சிலர், முன் அனுபவம் கொண்டவர்கள். அவர்கள் வேறு நாடுகளூடாகப் பயணம் செய்ய முயன்று, பிடிபட்டு, நாடு திருப்பப்பட்டு, இவ்வழியாக முயற்சிப்பவர்கள். அவர்கள் தைரியம் தர, சிறிது பயம் களைந்து காத்திருந்தோம்.



இந்த இடத்தில் முன்னனுபவம் கொண்டோரை நினைத்து நம்மை நாமே சமாதானப்படுத்துக்கொள்ள வேண்டியதுதான்.

விகடன்
27-07-2007, 02:24 PM
ஒரு நாளில் இரு தடவைகள் மட்டுமே உண்ணுங்கள் என்று முகவர்கள் கட்டளையிட்டிருந்தார்கள். நாமும் நாவையும், வயிற்றையும் அடக்கி இரு தடவைகள் மட்டுமே உண்டு வந்தோம்.


உணவையும் மட்டுப்படுத்தி குளிர்காலத்தில் உண்பதென்பது கொடுமையிலும் கொடுமை




எனது முகவர், எனது நகரத்தைச் சேர்ந்தவர்.


அக்னி.
யாரப்பா அந்த தியாகி. எங்களுக்கு சொல்லிவைக்கலாம் அல்லவா?
நாமும் முகவர்களை தேடி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டால் அவரை தவித்துக்கொள்ளலாமல்லவா?



அவர்கள் வீட்டின் கதவைத் திறந்து பொருட்களோடு உள்ளே நுழைய, கோபத்தில் என்னை மறந்த நான்




தர்ம அடியா அக்னி?

அக்னி
13-08-2007, 12:31 AM
அவர்கள் வீட்டின் கதவைத் திறந்து பொருட்களோடு உள்ளே நுழைய, கோபத்தில் என்னை மறந்த நான்...

அவரை அறைந்துவிடவேண்டும் என்று பாய்ந்து செல்ல, என்னுடன் இருந்தவர்கள் என்னை இழுத்துப்பிடித்து தடுத்துவிட்டார்கள். ஜேர்மனியிலிருந்து வந்திருந்த அண்ணா, திடகாத்திரமானவர். அவருக்கும் அடக்கமாட்டாத ஆத்திரம். அவர் கையை முறுக்கிக் கொண்டு செல்ல, நானும் என்னை பிடித்திருந்தவர்களிடமிருந்து விடுவித்துக் கொண்டு அவருடன் இணைந்து, அடிக்கவேண்டும் என்ற ஒரே நோக்கில் சென்றேன். நிலைமையின் தீவிரம் உணர்ந்து இடையில் புகுந்த துணைமுகவர், எம்மை எச்சரித்து, தடுத்து, அந்தச் சிறுவனை வெளியே வாகனத்தில் சென்று காத்திருக்குமாறு கூற, அவரும் உடனடியாக வெளியே சென்று விட்டார். முகவரும் எமக்குரிய உணவுப் பொதிகளை வைத்துவிட்டு, சென்றுவருவதாகக் கூறிச் சென்றுவிட்டார்.

காய்ந்து போன வயிறு உணவை நாட, சமைத்து உண்டுவிட்டு, பொழுதை வழமைபோலவே சீட்டு விளையாட்டில் கழித்துக்கொண்டிருந்தோம்.

நடுநிசி தாண்டியிருந்தது. சில வாகனங்கள் வந்து நிற்கும் சத்தங்கள் கேட்டது. பிரதான முகவர்கள் உள்ளே வந்தார்கள். வந்து நடந்த பிரச்சினை, மற்றும் பயணவிபரங்கள் அனைத்தையும் பற்றி மழுப்பலாகவே நீண்ட நேரமாகக் கதைத்துக் கொண்டிருந்தார்கள். மதுவும், சிகரெட்டும் இட்டு வசப்படுத்தும் கலை, மிக நன்றாகவே அவர்களுக்குக் கைவந்திருந்தது. மிகவிரைவில் பயண ஒழுங்குகள் சரிவரும் என்று கூறிவிட்டு, என்னையும், இன்னும் இருவரையும் புறப்படச்சொன்னார்கள். இங்கு தொலைபேசி வசதி இல்லை ஆகையால், தொலைபேசி வசதிக்காக இன்னுமொரு வீட்டிற்குக் அழைத்துச் செல்வதாகவும், பின்னர், சில நாட்களின் பின் இங்கு மீண்டும் அழைத்துவந்து விடுவார்கள் என்றும் கூறினார்கள். பழகியவர்களைப் பிரிவது, மனதிற்குக் கடினமானதொன்றே. ஆனாலும் எங்களது குறிக்கோளை அடைய மனதில் ஆசாபாசங்களுக்கு இடம் தருதல் தகுந்ததல்ல என்பது புரிந்தே இருந்ததால், புறப்பட்டோம்.

ஒரு வாகனம் எங்கள் மூவரையும், ஒரு துணைமுகவரையும் சுமந்தபடி இன்னுமொரு வீடு நோக்கிச் சென்றது. அந்த வீடு ஒரு தொடர்மாடிக் கட்டிடத்தில், மூன்றாவது மாடியில் அமைந்திருந்தது. உள்ளே நாம் வருவதாக செல்லிடப்பேசியில், துணைமுகவர் தெரிவித்திருந்ததால், நாம் வாசல் சென்றதுமே, காத்திருந்த அந்த வீட்டிற்குரிய பொறுப்பாளரான பயணி கதவைத் திறந்துவிட உள்நுழைந்தோம். கதவை மூடியபின்னர்தான் மின்விளக்குகளை ஒளிர விட்டனர். பார்த்ததும் ஏங்கிவிட்டேன். வீடு முழுவதும் காணும் இடமெல்லாம், பயணிகள் படுத்திருந்தனர். கால் வைத்து போவதற்கே கடினமாக இருந்தது. ஏறத்தாழ 25 பயணிகள் அந்த வீட்டில் இருந்ததை உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.

சிறிதாக இருந்த இடத்தில் எமது பயணப் பைகளைத் தலையணையாக்கிப் படுத்துறங்கினோம். விடியும்வரை நித்திரை வரவில்லை எனக்கு. சிறியகுழுவாக 12 பேருடன் தொடங்கிய பயணம், இன்று ஒரு வீட்டுக்குள் 25 பேருக்கும் மேற்பட்டோருடன் முடங்கிக் கிடக்கின்றதே. எதிர்காலம் எப்படியாகும் என்ற பயத்துடன், கண்களை இறுக்க மூடியபடி, படுத்திருந்தேன். விடியும் வேளையில் ஒவ்வொருவராக எழுந்து, காலைக்கடன்களை முடிக்க சென்றார்கள்.

பலர் இன்னமும் எழும்பாமலே படுத்திருந்தனர். அங்கு சமைப்பதற்கு, முறைபோட்டு, தினமும் குறிப்பிட்ட அளவானோர் சமையலில் ஈடுபடுவார்களாம். அன்றைய தினத்திற்குரியவர்கள், அனைவருக்கும் தேநீர் வைத்துத் தந்துவிட்டு, சமையலைத் தொடங்கிவிட்டார்கள்.

அப்போது, அந்த வீட்டிற்குப் பொறுப்பானவர் வந்து எம்மோடு கதைக்கத் தொடங்கினார். அவரும் முகவர்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றவராம். அவரது கதையில், தான் தான் எல்லாமே செய்து முடிப்பது போன்ற தொனி தென்பட்டது.

நான் சிறிது தலைமுடி வளர்த்திருந்தேன். வெளிநாடு செல்வதற்காக, பிரத்தியோகமாக, நாகரீகமாக ஒரு முடிதிருத்துமிடத்தில், வெட்டியபின்னர்தான் பயணம் செய்திருந்தேன். ஆனாலும் வந்து நீண்ட நாட்களாகிவிட்டதால், எனது தலைமுடி, கொஞ்சம் அதிகமாகவே வளர்ந்திருந்தது. என்னைப் பார்த்த வீட்டின் பொறுப்பாளர், முடியை வெட்ட வேண்டும் என்றார். நான் ஏன் என்றேன். இல்லாவிட்டால் எனக்குத்தான் சிரமம் என்றார். நான் பரவாயில்லை என்று சொல்லிவிட்டேன். இவர் யார் என்னை முடி வெட்ட சொல்ல என்று மனதினுள்ளே கோபம் வேறு. ஆனால், சூழலுக்கேற்ப பொறுமையும் கொஞ்சம் எனக்கு வந்திருந்தது. அவரும் வற்புறுத்தவில்லை. அப்போதுதான் சுற்றுமுற்றும் பார்த்தேன். கூடுதலாக அனைவருமே, மிகவும் கட்டையாகவே முடி வைத்திருந்தனர். உரையாடியதில், அனைவருமே வந்து சில மாதங்களாகிவிட்டதை தெரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. அவர்களும் கூறினார்கள், குளிப்பதற்குரிய, சலவைப்பொருட்கள் மிகவும் குறைவாக வருவதாலும், நீண்ட நாட்கள் இருக்கவேண்டிய சூழ்நிலை இருப்பதாலும், இவ்வளவு முடியை வைத்திருந்தால் எனக்கே சிரமம் என்று தெளிவுபடுத்தினார்கள்.

ஆக, இறுதியாக எனது முடியை ஒட்ட வெட்டி விடுவதென்ற முடிவுக்கு வந்தேன். சிறிய வயதில் என் தலைமுடியை கொஞ்சம் கட்டையாக வெட்டிவிட்டார்கள் என்பதற்காக, பாடசாலைக்குப் போகமாட்டேன் என்று அடம்பிடித்தது, மனதில் நிழலாட, வெட்டப்பட்டு விழுந்த முடிகள் என்னை பார்த்து எள்ளி நகையாடின. முதன் முறையாக ஒட்ட முடி வெட்டப்பட்ட எனது தலையைப் பார்த்த போது, சிறைத்தண்டனை பெற்ற கைதிகள் போன்றவர்களே நாமும் என்ற, எண்ணம் மேலோங்கியது. ஒரு வழியாக என்னை நானே தேற்றிக்கொண்டேன்.

அப்போது அங்கேயிருந்த செல்லிடப்பேசி ஒலித்தது. உடனே, எல்லோரும் பொறுப்பாளரைப் பார்க்க, பொறுப்பாளர் அதற்குப் பதிலளித்தார்.

பின்னர், அங்கிருந்தவரில் ஒருவரை நோக்கி...

தொடர்ச்சி... (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=327464&postcount=61)

அக்னி
13-08-2007, 12:54 AM
நண்பர்களே, சில கால வேலைப்பளுவினால் தொடராமல் விட்ட பசுமை நாடிய பயணங்கள் மீண்டும் தனது பயணத்தைத் தொடரும்...

சிறிய சம்பவங்களையும் விபரிப்பதற்கான காரணம் வயது, பால் வேறுபாடின்றி, ஒவ்வொருவரும் கொண்ட தாக்கங்களை, நான் பெற்ற அனுபவங்களினூடாக வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காகவே.

தொடர்ந்தும் வாசித்து, புலம்பெயர் பயணத்தின் கடுமையான தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

நன்றி!

அக்னி
21-02-2008, 03:56 AM
பின்னர், அங்கிருந்தவரில் ஒருவரை நோக்கி...
”உமக்குத்தான் அழைப்பு...”
என்று தொலைபேசியைக் கொடுக்க, அந்த பயண நண்பரும் சென்று பேசத் தொடங்கினார்.
அப்போது அநேகமான பயண நண்பர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டார்கள். ஒவ்வொருவர் கரங்களிலும், அவர்கள் உறவுகளின் தொலைபேசி இலக்கங்கள். புதிய தகவல் பரிமாற்றம். அதாவது, பேசுபவரிடம் தமது உறவுகளின் தொலைபேச இலக்கங்களைக் கொடுத்து, அறிவித்து, அழைக்கச் சொல்லுவார்கள்.
தொலைபேசியில் பேசிய நண்பரும் தான் பேச வேண்டியவைகளைப் பேசிய பின்னர், நான்கைந்து சக நண்பர்களின் உறவுகளின் இலக்கங்களைக் கொடுத்து தகவல் அறிவிக்கச் செய்தார். அத்தோடு, என்னையும் சைகையால் அழைத்து, எனது வீட்டுத் தொலைபேசி இலக்கத்தைக் கேட்டு, எனது அம்மாவிடமும் அறிவிக்கச் செய்தார்.
இங்கு முக்கியமாக நான் ஒன்றைக் குறிப்பிட வேண்டும்.
யாரென்றே தெரியாதவர்கள், அறியாத எமக்காக, எமது உறவுகளுக்குத் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி தகவல் அறிவித்தார்கள். இது அவர்களுக்கு இரட்டைச் செலவானாலும், அநேகமாக, யாருமே அறிவிப்பதாகச் சொல்லி ஏமாற்றியதில்லை.
இன்றும், அவர்களுக்கு எனது மானசீக நன்றிகளை அனைவர் சார்பிலும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஒரு வழியாக அம்மாவிடம் எப்படிப் பேசுவது என்றிருந்த எனது ஏக்கம், எப்போது எனக்காகத் தொலைபேசி ஒலிக்கும் என்ற எதிர்ப்பார்ப்பானது. அன்று முழுவதும் தொலைபேசி ஒலிக்கும் போதெல்லாம், எனது எதிர்பார்ப்பு ஏமாற்றத்திலேயே முடிந்தது. எதிர்பார்த்தே, அன்றைய இரவில் தூங்கத்தில் ஆழ்ந்துவிட்டேன்.

அதிகாலை நேரம் இருக்கும். என்னை யாரோ தட்டி எழுப்பினார்கள். திடுக்கிட்டு விழித்தெழுந்த என் முன்னே தொலைபேசியை நீட்டினார்கள். வாங்கினால், மறுமுனையில் அம்மாவின் குரல்...
எனக்குள் ஆயிரம் உணர்ச்சிகள். எல்லாவற்றையும் அம்மாவிடம் சொல்லி, திரும்பிச் சென்று, மடியில் தலைவத்து அழுதிட, ஆறுதல் தேடிட, உணர்ச்சிகள் உந்த, அம்மாவின் பாசக்குரல் என் நலம் விசாரிக்க, சுதாகரித்துக் கொண்டேன். என் கடினங்களை அவர்கள் மேல் சுமத்தி, அவர்களைச் சோகப்படுத்த வேண்டாமென்று கணத்தில் தீர்மானித்துக் கொண்டேன்.
ஆனால், குரல் ஒத்துழைக்க மறுத்து நடுங்கியது. வார்த்தைகள் அடைத்தன. ஒரு வழியாக நிதானமாகிக் கொண்டு, உடனடியாகவே சாதாரணமாகப் பேசத் தொடங்கினேன்.
பெற்று வளர்த்தவர் அல்லவா? குரலில் வித்தியாசத்தைக் கண்டு கொண்டார். நித்திரையால் இப்போதுதான் எழும்பினேன் என்றும், பனிக்குளிரினால் சற்றே தடிமன் (ஜலதோஷம்) என்றும் சமாளித்து விட்டு, எனது முகவரிடம் எனது பயணத்தை சீக்கிரமாக முன்னெடுக்கச் சொல்லுமாறு பேசிவிட்டு, எனது மாமாவுடனும் (அம்மாவின் தம்பி) பேசினேன். அவரும் எனது முகவருடன் இறுக்கமாகக் கதைப்பதாகச் சொல்லிவிட்டு, கொஞ்ச நேரம் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்து விட்டனர். அதற்கு முன்னர், என்னைப் போலவே தாயக தொடர்பு மட்டுமிருந்த ஒரு பயண நண்பரின் பெற்றோருக்கு அறிவிக்கும்படி அவர்களது தொலைபேசி இலக்கத்தையும் கொடுத்தேன்.

நாங்கள் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். நான் இருந்த கிர்கிஸ்தான் நாட்டிற்கு, எம் தாயகத்திலிருந்து பேசுவது என்பது மிகவும் செலவுமிக்கது. அடிக்கடி பேசுவதற்கு முடியாது. இதனால், பொருளாதார ரீதியில் எனது குடும்பம் நெருக்கடிக்குள்ளாகும் நிலை தோன்றும்.
ஆகவே, அவசியத் தேவைகள் ஏற்படின் மட்டுமே, இனி தொடர்புகொள்ளச் சொல்ல வேண்டும் என்று மனதில் தீர்மானித்துக் கொண்டேன்.

அம்மாவுடன் பேசிய சந்தோஷம். ஆனால், மனம் முழுதும் அழுத்தம். அந்த நாளும் விடிந்தது.

இப்படியே, மேலும் இரண்டொரு நாட்கள், கழிந்த நிலையில்...

தொடர்ச்சி... (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=328023&postcount=69)

பாரதி
21-02-2008, 07:14 AM
நான் மிகவும் எதிர்பார்க்கும் தொடர்களில் இதுவும் ஒன்று. சொந்தப்பிரச்சினைகள் ஓரளவுக்கு தீர்ந்து இத்தொடரை தொடர்வதற்கு மிகவும் நன்றி. இத்தொடரும் வரலாற்றில் ஒரு முக்கிய ஆவணமாக திகழப்போகிறது. தொடருங்கள் அக்னி.

இளசு
21-02-2008, 07:29 AM
பாரதி சொல்வதுபோல் - இது அத்தியாவசிய வகைப் படைப்பு..
வெறும் அழகியல் படைப்பல்ல..

பூக்கள் அழகுதான்
ஆனால் நெற்கதிர் அதைவிட...

அதைப்போல் இப்பதிவு..

அக்னி தொடர்வதில் மகிழ்ச்சி...

யவனிகா
21-02-2008, 08:07 AM
முதலில் இருந்து படித்து விட்டு பின்னூட்டம் இடுகிறேன் அக்னி. நிச்சயம் தவற விடமாட்டேன்.

அமரன்
21-02-2008, 09:10 AM
அநேக பதிவுகள் படைப்புகள்.
சில படைப்புகள்
ஆழ்மனம் படிமங்களின் பதிவுகள்.
அதில் இதுவும் ஒன்று.

நினைவுகள் சில சினேகங்களாக..
ஸ்நாக்காகி கொள்ளுமா?
ஸ்நேக்காகி கொல்லுமா?
புரிந்தும் புரியாமலும் இருப்பவர்களில்
நானும் ஒருவன்!!

தொடர்க அக்னி:icon_b::icon_b:!!

ஓவியன்
21-02-2008, 09:49 AM
போராடிப் பெற்ற வெற்றிகள் என்றென்றும் பொன்னானவையே...

இந்த நெடிய பசுமை நாடிய பயணத்தின் உண்மையான பெறுபேறு, சென்ற வாரம் தான் அக்னியை எட்டியுள்ளது....

அதற்கும் இந்த தொடரை தொடர்ந்து முன்னெடுப்பதற்கும் என் மனதார்ந்த வாழ்த்துகள் நண்பா...!!

யவனிகா
21-02-2008, 03:00 PM
படிக்கக்படிக்க மனம் கனத்துப் போனது சகோதரா...
கண்களில் நீர் திரையிட்டதும் உண்மை...
வார்த்தைகள் எல்லாமும் கூட வெறுமையும், பயத்தையும் பிரிதலையும் அச்சு மாறாமல் பிரதிபலிக்கிறது.
வீட்டில் இதைப் பற்றிய பேச்சு தான்.
இன்னும் எத்தனை எத்தனை பேரோ இது போல...
எண்ணிப் பார்க்கவே அஞ்சுகிறது மனம்...

அக்னி
22-02-2008, 11:59 PM
வாசித்துப் பின்னூட்டமிட்ட
பேரிதயப் பாரதி அண்ணா, இளசு அண்ணா, யவனிகா, அமரன், ஓவியன்
அனைவருக்கும் மிக்க நன்றி.
இது, நிகழ்ந்த நிகழ்வுகளின் பதிப்பு.
என்னைப் புடம்போட்ட காலப் பதிவு.
தொடர்ந்தும் இணைந்திருக்க வேண்டுகின்றேன்.

அக்னி
23-02-2008, 02:13 AM
இப்படியே, மேலும் இரண்டொரு நாட்கள், கழிந்த நிலையில்...
அடுத்து வந்த ஓர் இரவில், மீண்டும் பிரதான முகவர்கள் வருகை செய்தனர். மனித உணர்வுகளைத் தொலைத்த பணப்பேய்கள். பணத்தின் வாசம் வீசினாலே, திரும்பிப் பார்க்கும் அவர்களை நினைக்கையில் இன்றும் என் இதயம் எகிறித் துடிக்கும்.
வந்தவர்கள், தமது வழக்கமான பாணியில், அதாவது, எப்போது அனுப்பி வைப்பீர்கள் என்ற கேள்வியைப் பயணிகளிடமிருந்து தவிர்ப்பதற்காக, குடிவகைகளையும், சாதாரணமாக வீட்டில் கிடைக்காத உணவு வகைகளையும் கொண்டு வந்திருந்தனர்.
”யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே”
என்பதற்கிணங்க, பிரதான முகவர்கள் வரப்போகின்றனர் என்றால், குடிவகைகளும், இறைச்சி என்ற பெயரில் குடலும் கொழுப்பும் (முன்னரேயே கூறியது போல்), வேறு சில உணவு வகைகளும் (குடிக்கும்போது அவர்களே காலி செய்துவிடுவார்கள்) அவர்களுக்கு முன்பே வந்துவிடும். இவையாவது வித்தியாசமாகக் கிடைக்கின்றதே என்பதற்காகக் காலப்போக்கில் அவர்கள் வருகையை எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டோம்.

வந்தவர்கள், வசியப்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். அந்த சூழலைச் சற்றே விபரிக்க விரும்புகின்றேன். வீட்டின் அனைத்து இடங்களிலும், எப்போதும் பயணிகள். பிரதான முகவர் வந்தால், வீட்டின் வரவேற்பறையில் நடுநாயகமாக, உள்ளதில் நல்ல கதிரையில் அல்லது கட்டிலில் அமர்ந்து கொள்வார். அவரது கைத்தடிகளான, உபமுகவர்களும், வீட்டுப் பொறுப்பாளர்களும் ஆங்காங்கே அமர்ந்து கொள்ளுவார்கள். அவர்களின் முன்னே, பயணிகளான நாம் பெரும்பாலும் தரையில் அமர்ந்திருப்போம். வகுப்பறைபோலக் காட்சியளிக்கும். கெட்ட வார்த்தைகளில் ஒரு சொற்பொழிவே அங்கே நடக்கும். கைத்தடிகள் சத்தமிட்டுச் சிரிக்க, நாம் எம் நிலையை நொந்தபடி சத்தமின்றி பல்லைக் காட்டுவோம். சிறியதொரு வார்த்தைக்கும் அடைமொழியாக ஒரு கெட்டவார்த்தை இருக்கும்.

வெட்கக்கேடான உண்மை நிலை என்னவென்றால் காலப்போக்கில் எங்கள் பேச்சிலும் கெட்ட வார்த்தைகள் புகுந்து கொண்டன. அதிலிருந்து மீளவே எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. இதைச் சொல்வதற்கு நான் வெட்கப்படவில்லை.
இப்படியாக, சூழ்நிலை, எம் இயல்புகளை மாற்றியமைத்தன என்பதை வேதனையோடு குறிப்பிட வேண்டியது என் கடப்பாடாகின்றது.

பேச்சிலும், செயலிலும் முன்மாதிரியாக இருப்போம்.
எம் சந்ததிக்கு நல் வழிகாட்டியாக வாழ்வோம்.

கொண்டு வந்த குடிவகைகள் காலியாகையில் விடிகாலையாக, அவர்களும் இடத்தைக் காலி செய்துவிடுவார்கள்.
அன்றும் அதுவே நடந்தது. ஆனால், அதற்கு முன்னர் எம்மிற் சிலரை வேறு இடங்களுக்கு, அடுத்த நாளிரவு மாற்றப்போவதாகச் சொல்லிச் சென்றனர். அதில் நானும் ஒருவன்.

அதற்குக் காரணம் என்னவென்றால்,
ஒரு உப முகவர் என்னுடன் பேசிக்கொண்டிருந்தார். எனது நகரம் பற்றியும் எனது நண்பர்கள் பற்றியும் கேட்டறிந்து கொண்டார். நானும் எனக்குப் பல நண்பர்கள் இருக்கின்றார்கள் என்றும் எனது நகரத்தின் இயல்பில்லா நிலையினால் (அங்கு பல்வேறு தமிழ் ஆயுதக் குழுக்களினாலும் இளைஞர்கள் வசியப்படுத்தப்பட்டு, தேவையற்ற பிரச்சினைகளில் பலப்பரீட்சைகள் நிகழ்வதுண்டு.) கூடுதலானவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லக் காத்திருக்கின்றார்கள் என்றும், சொன்னதன் விளைவே எனது இடமாற்றம். ஏனென்றால், என் மூலமாக எனது நண்பர்களின், தெரிந்தவர்களின் முகவர்களாக மாறிப் பயன்பெறும் நோக்கம் என்பது, இடம்மாறிய ஒரு சில நாட்களில் புரிந்து போனது.

அடுத்த நாள் நடுநிசி நெருங்குகையில் எனக்கு இடமாற்றம் கிடைத்தது.
நாடுகள் மாறக் காத்திருந்தால் வீடுகள்தான் மாற முடிந்தது.
விதியின் வன்செயலா... புரியவில்லை.

நான் மட்டும் தனியே அழைத்துச் செல்லப்பட்டேன். மனதினுள் இனம் புரியாத பயத்துடன், தாயிடம் இருந்து வலுக்கட்டாயமாகப் பிரிக்கப்பட்ட குழந்தையின் மனநிலையுடன் இருந்த என்னை, ஒரு ரஷ்ய சாரதி (முகவர்களுக்காக வேலை செய்ய பல ரஷ்யர்கள் உள்ளனர்) அழைத்துச் சென்று, ஒரு அடுக்குமாடிக் கட்டிடத்தின் மூன்றாவது (என நினைக்கின்றேன்) மாடியிலுள்ள ஒரு வீட்டின் முன்னே நிறுத்தினார்.

அழைப்புமணியை அழுத்தினார். வீட்டினுள்ளோ, கதவிலோ, எந்த சலனமோ சத்தமோ இல்லை. மீண்டும் அழுத்தினார். இப்படி சில முறை முயற்சித்தபின் செல்லிடப்பேசியை எடுத்து யாருடனோ (ரஷ்ய மொழியில்) பேசினார்.

ஏதும் புரியாமல், செய்வதறியாமல் நான் நின்றிருக்கையில்...
”க்ளிக்...”

தொடர்ச்சி... (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=330000&postcount=74)

பூமகள்
23-02-2008, 05:42 AM
எத்தனை எத்தனை இன்னல்கள்..!!

வாழ்க்கை பயணத்தின் மிக இக்கட்டான கால கட்டத்தின் வரிகளைப் படிக்கையிலேயே.. என்னுள் எழுந்த பல உணர்வுகள்..!!!

தமிழர் என்ற உணர்வையும் மீறி.. மனிதம் தலைதூக்கி நிற்கிறது..!!

அம்மாவின் பிரிவில் முதன் முதலில் குரல் கேட்டு உடைந்து அதை காட்டிக் கொள்ளாத பேச்சி சாதுர்யத்தினைக் கண்டு என்னுள் அழுகை உடைந்து கண்ணில் தெறிப்பதை கட்டுப்படுத்த முடியவில்லை.

அக்னி அண்ணா... எத்தனை எத்தனை இன்னல்கள்.. இது போல் இன்னும் எத்தனை எத்தனை சகோதர்கள் மீளாத் துயரில் ஆறா ரணத்தோடு வாடுகிறார்களோ...!!

மனம் கனத்துவிட்டது அண்ணா..!! நேற்றிரவு முதல் படித்து படித்து இன்று தான் முடிக்க முடிந்தது.. உங்கள் மனநிலையை என்னில் ஏற்றி வலி உணர முடிந்தது.

தொடருங்கள்..!!
புலம்பெயர் வாழ்வின் வலி மிக்க நாட்களை நினைவு கூர்ந்து பலருக்குப் பயன்படும் படி செய்த உங்கள் குணம் பாராட்டுதலுக்குரியது.

உங்கள் மேல் தீராத அன்பு கொண்டு இந்த சகோதரி என்றும் இருப்பாள். :)

ஆறட்டும் இவ்வகை காயங்கள்..!!
மகிழ்ச்சி மட்டுமே பொங்கட்டும்
இனி எப்போதும் உங்கள் வாழ்வில்..!!

சிவா.ஜி
23-02-2008, 06:20 AM
கடந்து வந்த பாதையின் கடினம்...வரிகளில் தெரிகிறது.காத்திருப்பு என்பது அதுவும் நிச்சயமில்ல நிலையில் எத்தனை வேதனை மிகுந்தது என்பதை உணர முடிகிறது.

சொந்த ஊரில் நிம்மதியாய் இருக்க முடியாமல்...பிழைத்துக் கிடந்தால் மீண்டும் உறவுகளைப் பார்ப்போம் என்று புலம் பெயரும் சகோதர்களின் கண்ணீர் கதையை படிக்கும் போது கண்கள் கலங்குகின்றன.கல கலப்பான அக்னி கடந்து வந்த பாதையில் எத்தனை துயரங்கள்...?
நினைக்கவே நெஞ்சம் நடுங்குகிறது...உறவுகளாய் நாங்கள் இருக்கிறோம் அக்னி....இனி எல்லாம் நலமே என்ற நம்பிக்கையோடு இருங்கள்.வெகு விரைவில் அன்னையையும் அன்னை தேசத்தையும் தரிச்சிக்கப் போகிறீர்கள்.இந்த பசுமை நாடிய பயணத்தின் முடிவு பசுமை மிக்கதாகவே இருக்கும்.

அக்னி
23-02-2008, 12:38 PM
பயணத்தில் இணைந்து கொண்டதற்கும், ஊக்கத்திற்கும் மிக்க நன்றி பூமகள், சிவா.ஜி அவர்களே...

ஓவியன்
25-02-2008, 06:53 AM
பேச்சிலும், செயலிலும் முன்மாதிரியாக இருப்போம்.
எம் சந்ததிக்கு நல் வழிகாட்டியாக வாழ்வோம்.


ஆயிரத்திலொரு வார்த்தை அக்னி, அப்படியே வழி மொழிகின்றேன்...
கடைப்பிடிக்கவும் விளைகின்றேன், மிக்க நன்றி...!!

அக்னி
28-02-2008, 10:16 PM
ஏதும் புரியாமல், செய்வதறியாமல் நான் நின்றிருக்கையில்...
”க்ளிக்...”

சத்தத்துடன் கதவு திறந்தது. உள்ளே முதல்நாள் பிரதான முகவருடன் வந்திருந்த ஒருவர் நின்றிருந்தார். ரஷ்ய சாரதியைப் பார்த்து, தாம் காவல்துறைதான் வந்துவிட்டதோ என எண்ணிவிட்டதாகவும், அதனாலேயே திறக்கவில்லை என்றும் கூறினார். அந்த வீட்டிலும் பயண நண்பர்கள் நிறைந்திருந்தார்கள். இரண்டு படுக்கை அறைகள், வரவேற்பறை, சமையலறை, கழிவறை அடங்கலான அந்த வீட்டிற்கு, கதவைத் திறந்தவரே பொறுப்பாக இருந்தார். அவரும், அவரது நண்பரும் (நான் அந்த வீட்டிற்குச் செல்கையில், அவரது நண்பர் தாயகத்திற்கு சென்றிருந்தார்.) முகவருக்கு மிக நெருக்கமானவர்கள் என்பதனால், அந்த வீடே சற்று வசதியானதாக இருந்தது. அதாவது உணவு தொடர்ச்சியாகக் கிடைத்து வந்தது. ஆனால், மதுவகைகள் நிறைவாகக் கிடைத்து வந்தது.

நானும் பொறுப்பாக இருந்தவரும் தாயகத்தில் ஒரே நகரத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் இதுவரை நாம் சந்தித்துக் கொண்டதில்லை. அவருக்கோ வயது அதிகம். என்னைப்பற்றி விரிவாக விசாரித்து அறிந்து கொண்டார். அவரது சில உறவினர்களும் பயணிப்பதற்காக அங்கு தங்கியிருந்தனர். அவர்கள் எனது வயதை ஒத்தவர்கள் என்பதனால், நாம் விரைவில் பரிச்சயமாகிவிட்டோம்.

ஒரு சில நாட்கள் சாதாரணமாகக் கழிந்தது. அப்படியாக இருக்கையில் அடுத்து வந்த நாட்களில் ஒரு நாள் பொறுப்பாளர் மிகுந்த சந்தோஷமாக, செல்லிடப்பேசியில் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார். பேசி முடித்ததும், தனது நண்பர் தாயகத்திலிருந்து திரும்பவும் வந்துவிட்டதாகச் சொன்னார். (விடுமுறையில் செல்வதுபோல் சென்று வந்தாலும், உண்மையிலேயே பிரதான முகவர் பலிக்கடாவாகத்தான் அவரை வைத்திருந்தார். இறுதியில் அவரை கைவிட்டுவிட்டார்கள் என அறிந்தேன். அதுவரை மதுவும், மாதுவுமாக அவரை மயக்கி வைத்திருந்தனர். அவரும் மது, மாது மயக்கத்திலேயே இருந்தார்.)

அன்று, முன்னிரவு...
தாயகத்திலிருந்து திரும்ப வந்தவர் வீட்டிற்கு வந்துவிட்டார். கதவைத் திறந்ததுமே, அனைவருக்கும் வணக்கம் சொன்னார். என்ன... மிகவும் பண்பானவர் என்று நினைக்கின்றீர்களா..? அதுதான் இல்லை. வணக்கமாக வந்தது உரத்த குரலில் கெட்ட வார்த்தை.

நம் எல்லோருக்கும்தான் பழக்கமாகிவிட்டதே. அத்தோடு வழக்கமாக இருந்ததால், அது நம் பழக்கவழக்கமாகவே மாறிவிட்டது.

வந்தவர் (இனி இவர்தான் இந்த வீட்டிற்குப் பொறுப்பாளர்), இதுவரை தான் இல்லாததால்தான் பயணம் தடைப்பட்டிருந்தது போல பேசிவிட்டு, இனி எல்லோரும் செல்ல ஒழுங்குகள் விரைந்து மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.
பின்னர், வழமை போலவே திறக்கப்பட்டது, மதுப் போத்தல். அவர் தாயகத்திலிருந்து வாங்கி வந்த மது. மதுவைக் குடித்துவிட்டு, அன்று சமைத்த உணவை உண்டுவிட்டு, விடிகாலை ஆகிவிட, மிக அமைதியாக (அன்றுமட்டும்தான் அமைதி) படுத்துவிட்டார். நாமும்தான்.

அடுத்தநாள் காலை 10 மணியளவில், பேச்சுக் குரல்கள் எழுப்பி விட்டன. தலையைத் தூக்கிப் பார்த்தால், மீண்டும் மது சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தது. அலைபாயும் வயதாகையால், இலகுவாக ஈர்க்கப்பட்டோம்.
பொழுதுபோக்க சீட்டாட்டம், பொழுதை மறக்க மது...
இப்படியே எங்கள் வாழ்க்கை வித்தியாசமான பாதையில் பயணிக்கத் தொடங்கியது.

வாங்கி வந்த மது முடிந்ததும் பொறுப்பாளர் வொட்கா வாங்கப் போவதாகச் சொல்லி எழுந்து தனது பணப்பையிலிருந்து 100$ ஐ எடுத்தார். அங்கு "சோம்" (som) எனப்படும் பணமே பாவனையிலிருந்தாலும், நாங்கள் நாடுகள் மாறிப் பயணிக்கவேண்டியிருந்ததால், அமெரிக்க டொலர்களிலேயே பணத்தை வைத்திருப்போம்.

100$ மாற்ற முடியுமா என வினவினார். யாரிடமும் மாற்றிக் கொடுக்க இருக்கவில்லை. கடைசியில் யாராவது 10$ தாருங்கள் பின்னர் தருகின்றேன் என்று சொல்லி ஒருவரிடம் வாங்கி, ஒருவரை அருகிலிருந்த பெட்டிக்கடைக்கு அனுப்பி வைத்தார். நான் அந்த வீட்டை விட்டு வேறிடம் செல்லும்வரை, அந்த 100$ ஐ அவர் மாற்றவும் இல்லை. அதைக் காட்டியே மற்றவர்களிடம் டொலர்கள் வாங்குவதை நிறுத்தவும் இல்லை. ஆனால், மது குடிக்கவிரும்பும் அனைவருக்கும் சிறிதேனும் தினமும் கிடைத்தது.
இடையிடையே, நல்ல உணவுகளும் கிடைத்தாலும், அநேகமாக எமக்கு அங்கே வழங்கப்பட்டது நூடில்ஸ்.

நூடில்ஸ் என்றதும் புருவத்தை உயர்த்தாதீர்கள். மிகவும் தரம் குறைந்த (பாவனைக்காலம் முடிவடைந்ததாயிருக்கலாம்) நூடில்ஸ், எமது இரு உணவு வேளைகளில், ஒரு வேளை உணவாக தினசரி ஆக்கப்பட்டது. நூடில்ஸை அவித்து, அதனுடன் உருளைக்கிழங்கு குழம்பு வைத்து, நூடில்ஸின் மேல் ஊற்றி சாப்பிடுவோம். இதுதான் நூடில்ஸ் உணவு. உருளைக் கிழங்குக் குழம்பு என்றால், உருளைக்கிழங்கைத் தேடிப் பிடித்தலே அரிதாக இருக்கும்.

அத்தோடு, எனது நண்பர்களுக்கு முகவரைப் பரிந்துரைக்கலாமே என்ற மூலைச்சலவை வேறு நடந்தது. எனக்கு மட்டுமல்ல, அங்கிருந்த அனைவருக்கும் இந்த மூளைச்சலவை நடந்தது எனலாம்.
எதற்குமே பிடி கொடுக்காமல், சமாளித்து வந்தேன்.

சிலர் தமது செலவுகளுக்கென, வெளிநாட்டில் இருக்கும் உறவுகளிடமிருந்து, பணம் தருவிப்பார்கள். உபமுகவர்களின் பெயர்களுக்கு வரும் பணம், சொற்பமே அவர்கள் கரங்களுக்கு வரும். சிலருக்கு அதுவும் கிடைப்பதில்லை.

பணம் என்றால் போதும்...
முகவர்கள் முதலைகளாகி விடுவார்கள்...

இப்படியாக எமது நாட்கள் நகர்ந்து செல்கையில், ஒரு நாள் பிற்பகல், அழைப்பு மணி ஒலித்ததோடு, பிரதான கதவும் தட்டப்பட்டது...

டொக்... டொக்... டொக்...

தொடரும்...

அக்னி
28-02-2008, 10:26 PM
யாருடைய பெயரையும் நான் இங்கே பயன்படுத்தவில்லை. நினைவில் நின்றாலும் குறிப்பிட விரும்பவில்லை.
இது வாசிப்பதில் சற்றே சிரமத்தை ஏற்படுத்தினாலும், தெரிந்தோ தெரியாமலோ எம்மைச் சிரமப்படுத்திய யாரையுமே பெயர் குறிப்பிட்டு சுட்டிக் காட்ட விரும்பவில்லை.
எத்தனையோ வழிகள், எத்தனையோ முகவர்கள், எத்தனையோ ஏமாற்றுக்காரர்கள்...
இவர்கள் நடுவில், எம்மை சிரமத்திற்குள்ளாக்கினாலும், எம் பணத்திற்தான் என்றாலும், நாம் உயிர்வாழ உணவளித்த அவர்களுக்கு நன்றியறிதலாக, அவர்கள் பெயர்களை இங்கே தவிர்க்கின்றேன்...

பாரதி
29-02-2008, 12:46 AM
தொடர்ச்சியாக நூடுல்ஸ்..! தொடர்ந்து மது...!
மனங்களை மயக்கி மாதங்களை ஓட்டும் மாயவித்தை..
எத்தனை துயரம்... ஹும்...

தொடருங்கள் அக்னி.

அன்புரசிகன்
29-02-2008, 04:20 AM
மீண்டும் ஓரே மூச்சில் வாசித்து முடித்தேன். அனேகமாக கேட்ட கதைகள் தான். இதுபோன்ற அனுபவங்கள் எனக்கில்லை என்றாலும் சிலரிடம் கேட்டறிந்திருக்கிறேன். தொடருங்கள் அக்னி.

பூமகள்
01-03-2008, 09:32 AM
நூடில்ஸ் வாழ்க்கை.. :icon_ush::frown:
நானும் அனுபவித்திருக்கேன் அக்னி அண்ணா..!!:frown:

அந்த துயர் பட்டு வந்த பின்.. இப்போதெல்லாம் நூடில்ஸ் பார்த்தா அது நீண்டு ஏனோ என் கழுத்தை நெரிப்பது போல் தான் தோன்றுகிறது.. :traurig001::traurig001:

பணம் எந்த விதத்தில் வந்தாலும் வாய் பிழக்கும் கூட்டத்தில் சிக்கி.. இத்தனை துயர் படும் நெஞ்சங்கள் இன்னும் எத்தனை உளவோ??

உங்கள் நல் மனம் இங்கே அந்த கொடியவர்களின் பெயர் குறிப்பிடாமல் விடும் பண்பிலேயே தெள்ளிய ஓடை நீராய் புலப்படுகிறது அண்ணா..!!

விளம்பரப் படுத்த அவர்கள் ஒன்றும்... தேசப் போராளிகள் அல்ல.. வேசப் பெருச்சாளிகள்.:sauer028::sauer028::sauer028:

உங்கள் பண்புக்கும் துயர் பட்டு மீண்டு வந்து.. எங்கள் முன் வைக்கும் இந்த உண்மையான கல்வெட்டு பதிவிற்கும் நான் தலை வணங்குகிறேன் அண்ணா..!:icon_rollout:

தொடருங்கள் உங்கள் பயணத்தை..!!
முட்களை பூக்களாக மாற்றும் அன்புடன் நாங்களும் உங்களுடனே நடையிடுகிறோம்..!!:icon_b::icon_b:

சிவா.ஜி
01-03-2008, 09:46 AM
தங்களைப் பற்றி அதிகம் கேள்வி கேட்டு தொல்லைதரக் கூடாது என்பதற்கான உத்தி மது வகைகளை கொடுப்பது.பணம் திண்ணிக்கழுகுகளாக இருந்த முகவர்களின் கொடுமையான கரங்களில் அகப்பட்டுக்கொண்டு விடியலுக்காக நீங்கள் அனைவரும் பட்ட கஷ்டங்களைப் பார்க்கும்போது மனது வேதனைப் படுகிறது.இப்படியுமா மனிதர்கள் இருப்பார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது..
உங்களின் இந்த பயணத்தில் நாங்களும் உடன் வருகிறோம் அக்னி...தொடருங்கள்

அன்புரசிகன்
02-07-2008, 11:18 AM
எச்சூஸ் மீ... மே ஐ கம் இன்....

இன்னா நடக்குது சாரே..... மற்றவங்க கதையை படிக்கிறதுல நமக்கு இருக்கிற ஆர்வம் உங்களுக்கு தெரியாததா????

அக்னி
25-01-2009, 02:06 PM
இப்படியாக எமது நாட்கள் நகர்ந்து செல்கையில், ஒரு நாள் பிற்பகல், அழைப்பு மணி ஒலித்ததோடு, பிரதான கதவும் தட்டப்பட்டது...

டொக்... டொக்... டொக்...

யாரேனும் எம்மவர்கள் வருவதென்றால்,
அலைபேசி முன்னரே தெரிவித்திருக்கும்.

தட்டும் சத்தம் வில்லங்கத்தை உணர்த்தியது.
வீடெங்கும் வியாபித்திருந்த மெலிதான பேச்சுச் சத்தமும் நின்றுபோனது.
வீட்டின் பொறுப்பாளர்,
பூனை நடை நடந்து, கதவின் வெளிப்பார்க்கும் துவாரத்தினூடாக பார்த்தார்.
முகம் மாறிய நிலையில், மெல்லத் திரும்பி, மெலிதான சத்தத்தில் “பொலிஸ்” என்று எச்சரித்துவிட்டு,
நிலையை பிரதான முகவருக்கு அறிவிப்பதற்காக, அலைபேசியோடு அறை மூலையில் ஒதுங்கினார்.

தொடரும் சோதனைகள்...
அனைவரும் பேச்சற்று, மூச்சின் சத்தம் கூட கேட்டுவிடுமோ என்ற அச்சத்தில், உறைந்த நிலையிலிருந்தோம்.
இதற்குள், கதவடியிலும், மற்றும் சாளரங்களின் திரைச்சீலைகளினூடாகவும், கண்காணிப்பையும் சிலர் தொடங்கிவிட்டோம்.

தட்டிய காவற்துறையினர் கதவு திறக்காததினால்,
திரும்பிச் சென்றதை,
வாயிலில் கண்காணித்துக்கொண்டிருந்தவரும், சாளரத்தினூடாக அடுக்குமாடிக் கட்டிடத்தின் பிரதான வாயிலைக் கண்காணித்துக் கொண்டிருந்தவரும் தெரிவிக்க,
நிலைமை சிறியதாக இயல்பானது.

ஆனாலும்,
மீண்டும் வருவார்கள் என்ற அச்சம் காரணமாக,
சத்தமேதும் வெளிப்படுத்தாது, அனைவரும் தயார்நிலையை அடைந்தார்கள்.

தயார்நிலை என்றால்,
எம்மாற் அணிய முடியுமான அளவிற்கு, எமது உடைகளை அணிந்து கொள்வதுதான்.
உடைமைகள் என்று பெரியதாக ஏதுமற்ற நிலையில், இருப்பவற்றையும் இழந்துவிட்டால், அது நம்மைத்தான் தாக்கும் என்பதை இந்தச் சில மாதங்களிலேயே தெரிந்திருந்தோம்.

பிற்பகலும் இரவும் இணையும் நேரத்தில்,
மீண்டும் கதவு தட்டும் சத்தம்...

இப்போது தொடர்ச்சியாகப், பலமாகத் தட்டப்பட்டுக்கொண்டேயிருந்தது.
கூடவே, காவற்துறையின் அதிகாரக் குரலும்.

அன்று இரவிற்காகச் சமைக்கக்கூட முயலவில்லை. பயத்திற் பசியும் தெரியவில்லை.
ஆனால், பயத்தோடு சோர்வும் எம்மைச் சூழ்ந்தே இருந்தது.

பிரதான முகவர், இனியும் இதே வீட்டில் இருக்கமுடியாது எனத் தெரிவித்துவிட்டதாக, வீட்டின் பொறுப்பாளர் கூறிவிட்டார்.
காவற்துறையினர் அகன்றால், இன்றிரவு இடமாற்றம் நிச்சயம் எனக் கூற,
காவற்துறையினர் அகலவேண்டும் என்ற பல மனங்களின் வெளிக்காட்டத பிரார்த்தனைகள் பலித்தது.

காவற்துறையினர் அகன்றுவிட்டனர்.
நாளை நிச்சயமாக திரும்பிவருவர் எனவும், அப்போதும் கதவு திறக்கப்படாவிட்டால், வீட்டின் கதவையுடைத்து உள்நுழைவார்கள் என்றும்,
முன்னர் அனுபவம் பெற்றவர்கள் கூறிவிட்டனர்.

இன்றிரவுக்குள் எப்படியும் மாற்றிவிடுவார்கள் என்ற நம்பிக்கையுடன்,
தூங்காமற் காத்திருக்க,
நடுநிசியாகையில், மீண்டும், செவிகளை ஊடுருவியது, கதவைத் தட்டும் ’டொக்’ ’டொக்’ சத்தம்...

தொடரும்...

அக்னி
25-01-2009, 02:10 PM
நண்பர்களே...
நீண்ட இடைவெளி விட்டுவிட்டேன். மன்னிக்க...

எனது பயணம் நீளத் தொடங்குகையில், சில குறிப்புகளை ஒரு காகிதத்திற் குறித்துக்கொள்ளத் தொடங்கினேன்.
அது, நான் முன்னர் இருந்த நாட்டில் பத்திரமாக இருந்தது.
இப்போது, அது மீண்டும் என்னிடம் வந்துவிட்டது.
அக்குறிப்புகளை வைத்துக்கொண்டு, விரிவாக, விடாமற் தொடர முயற்சிக்கின்றேன்.

சிவா.ஜி
25-01-2009, 02:36 PM
உங்கள் அனுபவங்களை வாசிக்கும்போது சொல்லவொனாத ஒரு திகில் மற்றும் வேதனை மனதில் எழுகிறது அக்னி. நாங்களெல்லாம் நினைத்துகூட பார்க்கமுடியாத சூழலில், தைரியத்துடன் இருந்து, அத்தனை சோதனைகளையும் கடந்து வர எத்தனை மன உறுதி தேவைப்படும். உங்களை எண்ணி வியக்கிறேன் அக்னி. தொடருங்கள். உடன் பயணிக்கிறோம்.

பாரதி
26-01-2009, 12:03 AM
இந்தத்தொடரை படிக்கும் போது அச்சமும் வேதனையும்தான் வருகிறது. கூடவே எப்படி இத்தனை இடர்களை சமாளித்து, தாக்குப்பிடிக்கும் மனப்பக்குவமும் இருக்கிறது என்பதை எண்ணி வியப்பும் வருகிறது. அந்த சூழலிலும் குறிப்புகள் எடுத்துக்கொண்டீர்களா..?!!

இது போன்ற நல்ல பதிவுகளுக்காக நாங்கள் என்றும் காத்திருக்க முடியும். தொடருங்கள் அக்னி.

ரங்கராஜன்
26-01-2009, 03:02 AM
அக்னி இந்த திரியை இப்பொழுது தான் பார்த்தேன், இன்னும் படிக்கவில்லை. படித்தவுடன் விமர்சனம் எழுதுகிறேன்.

நிரன்
26-01-2009, 03:49 PM
தல இப்பத்தான் இதைக் கண்டு பிடிச்சன் எல்லாவற்றையும் வாசிக்கனுல்ல

வாசிச்சிட்டு வாறன் :)

செல்வா
18-05-2010, 04:39 PM
அப்படியே... அதை முடிச்சிட்டு இந்தப்பக்கமும் உன் பார்வையைத் திருப்பு அக்னி.
(தொடர்கதை முடித்துவிட்ட நிம்மதியில்)
பழிவாங்கும் படலத்தில்
செல்வா.. :)

sarcharan
19-05-2010, 12:48 PM
தல, அப்புறம் என்ன ஆச்சு? ஒரு வருஷம் ஆச்சு.. கதைய காணல.. போலீஸ் வந்துட்டாங்களா?
தொடருங்கள்...

கலையரசி
19-05-2010, 01:29 PM
இன்று தான் இந்தத் திரி கண்ணில் பட்டது.
பசுமையை நாடிய பயணம் பாதை மாறி பாலைவனத்தில் அல்லவா கொண்டு விட்டு விட்டது. உங்களது இந்த வேதனைக் கதையினை ஒரே மூச்சில் படித்து முடித்து விட்டேன்.

சொந்த அனுபவங்களைப் படிக்கையில் ஒரு மர்ம நாவலைப் படிப்பது போல் இருந்தது.
வீட்டில் வேளா வேளைக்கு வாய்க்கு ருசியாகச் சாப்பிட்டு சுகமாக இருந்து விட்டுச் வெளிநாட்டில் சிறைபட்டுச் சாப்பாட்டுக்குக் கூட பிச்சைக்காரர் போல் இருக்க வேண்டிய நிலை வரின் எவ்வளவு கஷ்டம்? அதுவும் கத்தரிக்காயை உப்புப் போட்டு அவித்துச் சாப்பிடு என்று சொல்ல அந்த ஆளுக்கு எவ்வளவு கொழுப்பு இருக்கும்?

அம்மாவுடன் தொலைபேசியில் பேச வாய்ப்புக் கிடைத்த போது அம்மாவைக் கஷ்டப்படுத்த விரும்பாமல் உண்மைகளை மறைத்து ஜலதோஷம் என்று சமாளித்த பொறுப்பு மிக்க பிள்ளையாக நடந்து கொண்ட விதம் மனதை மிகவும் நெகிழச் செய்து விட்டது.
பணத்தாசை பிடித்த முகவர்களின் பெயர்களைக் கூடக் கூறாமல் கட்டுரை எழுதியதில் கயவர்களைக் கூட மன்னிக்கும் உங்கள் பெருந்தன்மை தெரிகிறது.
மனதை மிகவும் பாரமாக்கிய கட்டுரை. தொடர்ந்து எழுதுங்கள்.

அக்னி
25-05-2010, 02:30 PM
நடுநிசியாகையில், மீண்டும், செவிகளை ஊடுருவியது, கதவைத் தட்டும் ’டொக்’ ’டொக்’ சத்தம்...

நடுநிசியை ஊடுருவி வந்த சத்தம், செவிப்பறை தாக்கப், பயத்தில் வந்தும் வராத நித்திரை முற்றிலும் விட்டகல, சத்தமற்றுப் பரபரப்பானது வீடு முழுமையும். கதவுக் கண்காணிப்புத் துவாரத்தினூடாக எட்டிப் பார்த்த வீட்டிற்குப் பொறுப்பானவர், ‘ட்ரைவர் வந்திருக்கின்றார்’ என்று சொல்ல நிம்மதிப் பெருமூச்சுக்கள் சற்றே நிசப்தம் கலைத்தன.

திறந்த கதவினூடாக நுழைந்த ரஷ்ய நாட்டைச் சேர்ந்த, நமது முகவர்களிடம் பணியாற்றிய சாரதி ஒருவரிடமிருந்து,
‘பி.....த்’ (சிவா.ஜி புரிந்து கொள்வார், மற்றவர்கள் அது ஒரு கெட்ட வார்த்தை எனத் தெரிந்துகொள்க...) ‘தவாய்’ ‘விஸ்திரி’ (விரைவாக என அர்த்தப்படும்) என்ற வார்த்தைகள் மெல்லிய அதிகாரத்தோடு தெறித்தன...

ஒலித்த அலைபேசியில் முகவர் அனைவரையும் வேறு வீடுகளுக்கு அனுப்பிவைக்கவுள்ளதாக வீட்டின் பொறுப்பாளரிடம் தெரிவிக்க, அவர் அதனை நம்மிடம் தெரிவித்தார். அந்த நெருக்கடி நிலையிலும் தன்னோடு முண்டியவர்களை வசதி குறைந்த வீடுகளுக்கு அனுப்பி வைத்துப் பழிவாங்கவும் அவர் தவறவில்லை. ஓர் சக பயணி அற்ப சுகத்துக்காக முகவர்களை அண்டித் தன்நிலை மறந்து தன்னைப்போன்ற பயணிகளிடம் எதேச்சாதிகாரம் காட்டும் இழிநிலை மனதைப் பிசைய, அந்த வீட்டிற்கு வந்து பழகிய ஓர் சிலருடன் நானும் வீட்டின் வாசல் தாண்டிப் போனேன்

கீழே மூன்று மகிழுந்துகள் காத்திருக்க, நான்கு நான்கு பேராக மகிழுந்துகளில் ஏறி அமர்ந்த பின்னர், இன்னும் இருவர் மூவர் மகிழுந்துகளிற் திணிக்கப்பட்டனர். வெளியே பார்க்க முடியாதவாறு நசுங்கிப் பிதுங்கிய நிலையில் நாமிருக்கச் பனியிற் சறுக்கிச் சறுக்கி சற்று நேரம் ஓடி ஓய்ந்தது மகிழுந்து. ஒருவாறு திணிக்கப்பட்டவர்கள் இழுத்தெடுக்கப்பட, ஏறி அமர்ந்திருந்த நாம் ஒவ்வொருவராக இறங்கினோம். நான் முன்னர் இருந்த தனிவீட்டிற்குத்தான் வந்திருந்தோம். மனதில் சற்று மகிழ்ச்சி.

வெண்பனி வெளிச்சத்தோடு குளிரும் சேர்ந்துதர சுத்தமான காற்றை ஆழ உள்ளிழுதேன்.

என்னுடன் தாயகத்திலிருந்து வந்தவர்கள் நினைவில் வர, ஓடிச்சென்றேன். ஓர் சிலரைத் தவிர மற்றவர்கள் இருந்தனர். கட்டிப்பிடித்து மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டோம். அன்றிரவு ‘வொட்காப் பார்ட்டி’ வைத்துவேறு கொண்டாடினோம். என்னுடன் வந்தவர்களில் ஒருவர் அந்த வீட்டிற்குப் பொறுப்பாளராகப் பதவியுயர்வு செய்யப்பட்டிருந்தார். என்னுடன் எந்தவிதமான முரண்பாடுகளும் இல்லாதபோதும், மற்றவர்களோடு முரண்படும் மனிதராகக் குறுகிய காலத்தில் மாறிவிட்டிருந்தார். உணவில்லாமல் நம்முடன் இருந்தவர், முகவர் கட்டளைக்கேற்ப, உணவை அளந்து பங்கிடும் அளவிற்கு இருந்தது அவரில் மாற்றம்.

இவையெல்லாம் நிகழ்ந்தபோதும் பயணம் பற்றி மட்டும் எதுவுமே நிகழவில்லை. எப்போது நம்மை ஏற்றுவார்கள் என்ற எண்ணமும் பேச்சும் எப்போதும் சுழன்றுவரும். அலைபேசித் தொடர்பிருந்ததால், வீட்டாருடன் கதைக்கும்போதெல்லாம், நமது முகவர்களுக்கு அழுத்தம் கொடுக்கச் சொல்லுவோம். என்னதான் அழுத்தம் கொடுத்தாலும், அசைய மறுத்து அந்தப் புள்ளியிலேயே அழுந்தி நின்றது நம் பயணம்.

இடைக்கிடையில், கிர்கிஸ்தானில் பிரதான முகவராகச் செயற்பட்டவர், தனது பரிவாரம் சூழ வந்து செல்வார்.

ஒரு நாள்,
‘புதுசா ஒரு ரூட் ஒண்ணு இருக்கு, அடுத்த கிழமை பத்துப்பேர் போறாங்க’
என்ற செய்தியோடு வந்தார் அவர்.

நமக்கோ மகிழ்ச்சி. இனிப் பயணம் விரைவாக அமையும் என்ற நம்பிக்கை துளிர்த்தது.

வொட்காப் போத்தல்கள் தாராளமாய் உடைக்கப்பட்டன. இரண்டு மூன்று ரவுண்டுகள் முடிந்தபின்னர்,
அவர் தொடர்ந்தார்...
‘ஆனா, என்ன பிரச்சினை என்றால், இந்த ரூட்டுக்குச் செலவு அதிகம். உங்கட ஏஜென்சிக்காரங்க பேசின காசுக்கு மேல தரமாட்டாங்களாம். அதால, இந்தப் புதுரூட்டில போறவங்க 500$ எனக்குத் தரணும்’
என்றார்.

எனக்குப் போதை இறங்கிவிட்டது. நான்தான் வெளிநாட்டில் யாரையும் நம்பி வரவில்லையே...
ஆனால், மற்றவர்களோடு நானும் தருகின்றேன் எனத் தலையை ஆட்டிவைத்தேன்...

எல்லாம் முடிந்ததும் அந்த முகவர் என்னையும் இன்னும் இருவரையும்
‘வெளிக்கிடுங்க’ என்றார்...

தொடரும்...

கலையரசி
25-05-2010, 02:52 PM
இந்த முறையாவது ஏமாற்றாமல் பயணத்தை விரைவாக அமைத்துக் கொடுப்பார்களா எனக் கவலை கொள்ளச் செய்கிறது உங்கள் பதிவு. விரைவில் தொடருங்கள்.

சிவா.ஜி
25-05-2010, 03:04 PM
யாரையும் தெரியாத வேற்றுநாட்டில்...முகவரின் பிரதிநிதியை மட்டுமே நம்பி...பயணம் என்று என அறியாத நிலையில், சட்டத்துக்கும் பயந்து வாழ்ந்த அந்த நாட்களை உங்கள் எழுத்தில் காணும்போது...பெரும் சங்கடம் தோன்றுகிறது அக்னி.

கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும்போதே....அரசியல் செய்பவர்களும் உங்களுக்கிடையில் இருந்திருக்கிறார்கள். சாப்பாட்டுக்கு இல்லாதவர்....சாப்பாடு அளிப்பவராக மாறியதைப் பார்த்தால் எனக்கு சிறையில் இருக்கும் கன்விக்டட் வார்டன்கள் என்பவர்களை நினைவு படுத்துகிறது.

அந்த 500 டாலர்களும்...முகவருக்கா...இல்லை இந்த இடைத்தரகருக்கா....யா...நிஷ்நாயோ....

ரொம்ப நாளைக்குப் பிறகு பயணங்கள் தொடர்கிறது...தொடருங்கள். உங்கள் இலக்கையடையும்வரைக் கூடவே வருகிறோம்.

பாரதி
27-05-2010, 04:27 PM
அங்கும் “டாலரி”ன் ஆதிக்கம்தானா..!?
உடனிருந்தோரும் உள்ளம் உடைக்கும் காரியத்தில் ஈடுபட்டனரா..? ஹும்...
சூழ்ந்திருக்கும் இருள் நீங்க வேண்டுமென்ற வேண்டுதல் இல்லாமல் இருக்க வாய்ப்பில்லைதான்.
தொடருங்கள்.

அக்னி
27-05-2010, 04:56 PM
நன்றி உறவுகளே...

இப்பயண காலத்திற்தான் (2000-2002) யூரோ அறிமுகமானது என நினைக்கின்றேன்.
அதனால், அப்போதெல்லாம் யூ.எஸ். டொலரிற்தான் பணப்பரிவர்த்தனை எல்லாமே...

கீதம்
27-05-2010, 10:44 PM
என் 'காத்திருப்பு' கவிதைக்கான உங்கள் பின்னூட்டம் கண்டபோதே மனம் கனத்தது. முழு விவரங்களையும் அறிய நேர்கையில் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

எத்தனை இடையூறுகள், துயரங்கள், எதிர்காலத்தைப் பற்றிய கேள்விக்குறிகள்! படிக்கப் படிக்க உங்கள் அனைவரின் கையறுந்த நிலை கண்முன் விரிகிறது. உங்கள் அனுபவங்கள் அடுத்தவர்க்குப் பாடமாகட்டும். தொடருங்கள் உங்கள் பயண நினைவுகளை.

Hega
16-04-2012, 05:00 PM
முதல் பதிவு படித்து விட்டேன் அக்னி சார்.

மீதியையும் நேரம் கிடைக்கும் போது படித்து புரிந்து கொள்கிறேன். நீங்க அப்பப்போ மீதியை தொடரலாமே...