அவதார் [Avatar] - திரை விமர்சனம்

avatar-poster-james-cameron.jpg




ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்து சக்கை போடு போட்டு, இன்னும் எல்லார் மனதிலும் நீங்காமல் இடம் பிடித்திருக்கும் படத்தை நான் என்னவோ சென்ற வாரம் தான் புளூ ரே தொழிற் நுட்பத்தில் அதி துல்லியமாக இரு பரிமாணங்களில் மட்டுமே பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.. திரையரங்கில் பார்க்க இயலாத சூழலால் இத்தனை காலம் காத்திருந்த எனக்கு சொர்க்க லோகம் சென்ற உணர்வை படம் ஏற்படுத்தத் தவறவில்லை.

படத்தின் நாயகன் தனது வெகு எதார்த்தமான நடிப்பாலும் தனது உணர்வுகளை வெளிப்படுத்தும் பாங்கிலும் நம்மை கட்டிப் போட்டு விடுகிறார். பெண்டோரா கிரகத்தில் இருக்கும் புது விதமான நாவி இன ஜீவராசிகள், அந்த கிரகத்தின் இயற்கை கொண்டிருக்கும் அழகு, அவர்கள் இருக்கும் அந்த வெள்ளைப் பூ,விழுதுகள் கொண்ட ஒளிரும் கடவுள் மரம் என நம்மூர் மாயஜாலக் கதைகளைக் கண் முன் விரிய வைத்து வாய் மூடாமல் பார்க்க வைத்த அத்தனை தொழிற் நுட்பக் கலைஞர்களுக்கும் சிரம் தாழ்த்தி வாழ்த்த வேண்டும் போல் தோன்றுகிறது.


எப்போதும் ஏலியன்ஸ் எனும் வேற்று கிரக ஜீவராசிகள் நம் கிரகத்தை ஆக்ரமிப்பது போலே சிந்தித்துக் கொண்டிருந்த ஹாலிவுட் இப்போது முதல் முறையாக மனிதர்கள் வேற்று கிரகத்தை நோக்கிப் படையெடுப்பது போல் அமைத்திருப்பது வித்தியாசத்திலும் வித்தியாசம்.


மனிதர்கள் அவதாராக மாறி அந்நாவி இனத்தோடு சேர்ந்து அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அங்கிருக்கும் கனிம வளத்தைக் கொள்ளை அடிக்கும் திட்டத்தோடு மில்லிட்டரி படையும் அறிவியலாளர்களும் சேர்ந்து பெண்டோரா கிரகத்தை ஆக்கிரமிக்கிறார்கள்.


கதா நாயகர் அறிமுகமும் அவர் அவதாராக இயங்கி நாவி இனத்தோடு சேர்ந்து பயிற்சி பெறுகையில் நடக்கும் குறும்புகளும் நம்மை வெகுவாக ரசிக்க வைக்கின்றன. அப்படி மாறுவது மாட்டிரிக்ஸ் படத்தில் வருவது போலவே மூளை கொண்டு அவதாரை இயக்கும் படி அமைத்திருக்கிறார்கள். தொட்டால் ஒளிரும் பூக்கள், நடக்கும் போது ஒளிரும் புல்வெளி, வண்ணமயமான மரங்கள், பூக்கள், தொங்கும் மலை, விழுதுகளில் முன்னோர் சத்தம் கேட்கும் திறன் என இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை காணுகையில் நாம் எத்தனை இயற்கை அன்னையை தண்டித்துக் கொண்டிருக்கிறோம் என்று தோன்றியது.


கதா நாயகன் அவதாராகி ஒரு இடத்தில் அக்கிரக நாய்களோடு போராடி கொன்று போடுகையில் உடன் உதவ வரும் நாவி இன கதா நாயகியிடம் நாயகன் நன்றி சொல்ல, அதற்கு நன்றி சொல்லும் காரியம் செய்ய வில்லை நாம். இது நடந்திருக்கக் கூடாது.. இம்மிருகங்கள் தேவையில்லாமல் இறந்து விட்டன என்று சொல்லி சில மந்திரங்கள் சொல்லி அதன் ஆன்மாக்கள் சாந்தியடையச் செய்யும் நாயகி மனதில் உயர்ந்து நிற்கிறார். அவர்கள் கிரகத்தின் இயற்கை மேல் அவர்கள் கொண்ட அன்பும், அவர்களின் வாழ்க்கை அதனோடு இயைந்து போன மாண்பும் படமெங்கும் கண்டு வியக்க வைத்தது. நம்மில் இழந்து கொண்டிருக்கும் மர நேசம் நாயகி மூலம் படத்திலேனும் காண நேர்ந்தது.


படத்தில் வரும் மிருகங்கள் எனில், ஆங்காங்கே வரும் காட்டு யானை, நீண்ட வித்தியாசமான தந்தம் போன்ற எழும்பமைப்புடன் வந்து அசர வைக்கிறது.. கூடவே பச்சை, நீலம், சிவப்பு வண்ண ராட்சஸ பறவைகள், விசிறி போல் பறக்கும் பூச்சி, ஒளிரும் பூச்சிகள், காண்டாமிருகம் போன்ற மிருகம், ஓ நாய்கள், குதிரைகள் என அனைத்துமே வித்தியாசமான கற்பனைத் திறனில் படைக்கப் பட்டு கண்களுக்கு விருந்தாகிறது.


மனிதர் நினைப்பதை செய்யும், குதிரை, வண்ண ராட்சஷப் பறவை என எல்லாமே அசர வைக்கிறது.


மனிதப் படை அந்த கடவுள் மரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கையில் ஏனோ என் கண்களிலும் ஈரம் பனிக்கிறது.. அதுவரை அத்தனை அழகான வனமாக இருந்த அந்த இடம், சிறிது நேரத்தில் மூச்சு முட்டும் கரும் புகையோடு சாம்பல் காடாக காணுகையில் மனம் துடிக்கிறது.. ஏனோ நம் ஊரில் சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் பல நூறு பெரும் மரங்களை வெட்டி, வெகு சில அரளிச் செடிகளை நட்டுச் சென்ற நமது அரசு நினைவுக்கு வந்து மேலும் வேதனைப்படுத்தியது.


ஒரு இடம் பசுமையாய் இருக்கையிலும், சாம்பல் காடாய் மாறுகையிலும் பார்ப்பதற்கு நிறைய திடம் வேண்டும்.. அந்த திடம் என்னிடம் இப்படம் பார்க்கையில் இல்லாமல் போனதை உணர முடிந்தது.. அதுவரை அத்தனை அழகான கிரகமாகக் காட்டப்பட்ட பெண்டோரா, மனிதர்களின் தாக்குதலால் எப்படி சிதறடிக்கப்படுகிறது என்று இதை விட எவரும் துல்லியமாகக் காட்ட முடியாது.


கதா நாயகன் போன்றே இந்த கிரகத்தின் மீது தீராத பாசமும், காதலும் கொண்ட மற்ற மனிதர்களும் எப்படி தங்களது முயற்சியை மேற்கொண்டு பெண்டோராவைக் காப்பாற்ற முற்படுகிறார்கள் என்பதை வெகு அழகான கோர்வையான படமாக்கல் மூலம் அசர வைத்திருக்கிறார்கள். முக்கிய வேடத்தில் கதா நாயகருடன் வரும் வயதான பெண், வில்லனாக வரும் மில்லிட்டரி படை கேப்டன் முகத்தில் இருக்கும் வித்தியாசமான காயத்தாலும், கடும் உறுதி படைத்த முக பாவத்தாலும் நடிப்பில் பின்னி எடுத்திருக்கிறார்கள்.


Avatar%20movie%20image%20%282%29.jpg


கதா நாயகன், அவருக்கு உதவும் ஹெலிகாப்டர் ஓட்டும் பெண், அவன் நண்பர் இருவர் என நால்வர் படை எப்படி மனிதர்களின் தாக்குதலை எதிர் கொள்கிறது என்பதை படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

வேர்கள் கொண்டு அவர்கள் காட்டும் ஒரு முக்கிய காட்சி அசர வைக்கிறது.. நம் ஆணி வேர் வரை பாயும் அவரது கற்பனைத் திறன் சிலிர்க்க வைக்கிறது.


படத்தை முப்பரிமாணத்தில் காணாதது வெகுவான வருத்தத்தை எனக்கு அளிக்கிறது.. என்றாவது பார்த்து விடுவேனென மனதில் நம்பிக்கை மட்டுமே நிலைக்கிறது. ஜேம்ஸ் கேமரூன் இப்படத்துக்காக ஒரு புதிய வகை கேமிராவைக் கண்டறிந்தார் என கேள்விப்பட்டேன். இத்தனை வயதிலும் எத்தனை விடா முயற்சியும் ஈடுபாடும் இருந்தால் இவரால் இது சாத்தியமாகும் என எண்ணி எண்ணி வியக்கிறேன்.


அவதார் - நிச்சயம் அவதாராக மாறி ஒரு நாளேனும் அக்கிரகத்தில் உலவும் வாய்ப்பு கிடைக்காதா என ஏங்க வைக்கிறது.. இது எட்டாக் கனியாகினும், நம்மைச் சுற்றி இருக்கும் இயற்கையை முடிந்த வரைக் காக்கவும், அழிக்காமல் தடுக்கவும் செய்தால் அதுவே நமக்கு பெண்டோரா போன நிறைவைத் தரும் என்பது திண்ணம்.


அவதார் - ஐ சீ யூ. ( ஐ சீ யூ என்றால் ஐ லவ் யூ என்று நாவிகள் பேசும் மொழியில் அர்த்தமாம்..)
 
Last edited:
பூமகளின் பார்வையில் அவதார் இன்னமும் அழகு பெறுகின்றது.

படத்தின் அம்சங்களை நிஜத்தோடு செய்யும் ஒப்பீடு,
இந்த விமர்சனத்தின் அதி சிறப்பு.

இந்த விமர்சனத்தை வாசிப்பவர்களுக்கு பூமகளின் மனமெ(மே)ன்மை புரியும்.
இயற்கைமீது கொஞ்சமேனும் கரிசனம் வரும்.

படத்தைப் பார்க்காததால் இதற்குமேல் படம்பற்றிச் சொல்லமுடியாது.
படத்தைப் பார்த்தாலும் இதற்குமேல் படம்பற்றிச் சொல்லமுடியாதெனத்தான் நினைக்கின்றேன்.

பூமகளுக்கு என் நிறைவான பாராட்டு...
 
வெகு தாமதமான விமர்சனம் ஆகையால் சூடு ஆறிப் போன பண்டமாய் யாரும் புசிக்க மாட்டார்கள் என எண்ணிய எனக்கு முத்தான பின்னூட்டமிட்டு ஊக்கமளித்த அக்னி அண்ணாவுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

அவதார் நிஜமாகவே அருமையான படம்.. இன்னுமா பார்க்கவில்லை அக்னி அண்ணா..?? உங்களைப் போன்றவர்களுக்கு மகுடம் சூட்டும் படமல்லவா இது?? அண்ணியோடு கட்டாயம் பாருங்கள்.

நான் முதலில் எழுத வேண்டாம் என தான் நினைத்தேன்.. ஆனாலும், படம் பற்றிய என் எண்ணத்தைக் கட்டாயம் பதிவாக்க எண்ணினேன்.. எப்போது விமர்சித்தாலும் விமர்சனம் விமர்சனம் தானே இல்லையா அண்ணா?

படம் பார்த்த பின் படம் பற்றிய உங்கள் எண்ணத்தையும் சொல்லுங்கள் அண்ணா. :)
 
எத்தனை நாளானால் என்னம்மா....இதைப்போல அற்புதமான படத்துக்கு....மிக வித்தியாசமான விமர்சனம் எழுதி எங்களை ரசிக்க வைத்துவிட்டாய்.

அக்னி சொன்னதைப்போல...இந்த விமர்சனத்தின் சிறப்பே...இன்றைய நிஜத்தை தொடர்பு படுத்தின ஏக்க வரிகள்தான். உண்மைதான்....அற்புதமான இயற்கையை கொஞ்சங்கொஞ்சமாக அழித்து...அரளிச்செடி நடும் இந்த சமுதாயத்தை நினைத்தால் வேதனையாக இருக்கிறது.

படத்தை நான் திரையரங்கில்தான் பார்த்தேன். படம் முடியும்வரை ஒரு பிரமிப்பில்தான் அமர்ந்திருந்தேன் என்பது உண்மை. கேமரூனின்...கடின உழைப்பு ஒவ்வொரு ஃபிரேமிலும் தெரிகிறது. பிரம்மாண்டமான படத்தின் மூலம்...சொல்லப்பட்டக் கருத்து மிகச் சிறப்பானது.

தங்கையோட சிறப்பு விமர்சனம்....என்னைக் கவர்ந்த திரைப்படத்துக்கு இன்னும் மெருகு சேர்க்கிறது. நன்றிம்மா பூ.
 
இதுவரை வந்த james cameron படங்களில் இந்த படம் அவருக்கு ஓர் மைல்கல் என்றால் அது மிகை அல்ல.. நான் இந்த படத்தை 3Dயில் பார்த்தேன்... அற்புதம்... அதை காண கண் கோடி வேண்டும்...
தாமதமான விமர்சனம் என்றாலும் அதை ரசிக்கும்படி செய்த பூமகளுக்கு நன்றி பல..
 
கேமரூனின்...கடின உழைப்பு ஒவ்வொரு ஃபிரேமிலும் தெரிகிறது.
சும்மா பொய் சொல்லாதீங்க சிவா.ஜி...

சுவரில மாட்டியிருந்த படப் ஃபிரேமப் பார்த்தேன். தெரியல...
ட்ரெய்ன் ஜன்னல் ஃபிரேமிலயும் எதுவும் தெரியல...
ஏன்... முன்னாடி இருக்கறவரோட கறுப்புக் கண்ணாடி ஃபிரேமிலயும் எதுவும் தெரியல...

:cool:
 
என்னாலும் கூட முப்பரிமாணத்தில் காண முயலவில்லை. பண்டோரா கிரகம் தொடர்பான காட்சிகள் மிக அருமை. அதை நீங்கள் எடுத்து சொன்ன விதமும் மிக நன்று. பாராட்டுக்கள்
 
அடேங்கப்பா மாலையில் தான் இந்த திரியை பார்த்தேன், அதற்குள் பல பதில்கள் வந்து குவிந்துள்ளது.............. வாழ்த்துக்கள் பூ

இந்த அவதார் படத்தை பார்த்தமட்டில் எனக்கு சில ஏமாற்றங்கள் இருக்கிறது......... தொழிநுட்பத்த்தை தவிர்த்து பார்த்தால் அப்படியே நம் தமிழ் படத்தை பார்த்த மாதிரி இருக்கு,

ஆனால் எனக்கு பிடிச்ச விஷயம் என்றால் இதில் இந்திய நம்பிக்கைகள் பல செயல்படுத்தி இருப்பது.......... நாம் வானத்தில வாழ்பவர்களை கடவுள் என்று நம்புவோம்............ அதுவும் கிருஷ்ணன்,,,,,,,,,,,, ராமர் என்று நீல நிறத்தில் இருப்பவர்களை கடவுள் என்று நம்புவோம்.............. அதே போல வேறு கிரகத்தில் வசிக்கும் நபர்களை நீல நிறத்தில் காட்டி இருப்பது சந்தோஷத்தை தருகிறது.............. அதே போல பெயரையும் நம் மொழியில் அவதார் அதாவது அவதாரம் என்பது போல வைத்து இருப்பது சந்தோஷமே.

அதே போல பூ ஒரு விஷயத்தில் உன்னை பாராட்ட வேண்டும் சகோதிரியே............ எத்தனை நாட்கள் ஆனாலும் பிடித்த படத்தை பற்றி எவ்வளவு காலம் தாழ்த்தி வேண்டுமானாலும் விமர்சனம் எழுதலாம்......... பிடித்தவர்கள் படிப்பார்கள கவலை வேண்டாம்........ அந்த படைப்பின் வெற்றி விமர்சனம் மூலமாக கிடைக்க வாய்ப்பு இருக்கிறது
 
அருமையான விமர்சனம்...
இந்த வயதிலும் சிறப்பான படத்தை.. கொடுத்துக் கலக்கியுள்ளார்...
நன்றி பூமகள்
 
தமிழ் மன்றத்தில் தான் இப்படத்தை பற்றி பார்த்தேன்..
தற்போது மீண்டும் ஒரு விமர்சனம்..

அழகான படம் அவதார்
 
பூமகளின் விமர்சனம் படம் பார்க்காதவர்களையும் பார்க்கத்தூண்டிவிடும். படத்தை அணுஅணுவாக அனுபவித்திருக்கிறார் என்று அழகிய விமர்சனம் சொல்கிறது.

இந்தப் படத்தை IMAX தியேட்டரில், பிரமாண்டமான முப்பரிமாணத்தில், குடும்பத்துடன் காணும் வாய்ப்புக் கிடைத்ததை பெருமையுடன் பகிர்ந்துகொள்ளவிரும்புகிறேன்.
 
வாழ்த்துக்கள். நல்லா இருக்குங்க உங்க விமர்சனம். எத்தனையோ படம் பார்க்கிரேன். ஆனால் இந்த படம் மட்டும் என்னால் பார்க்க முடியவில்லை. இப்ப வரைக்கும்.
 
அருமை

படத்தை போலவே மனதை கொள்ளை கொள்ளும் விமர்சனம்.

ஜேம்ஸ் கேமரூன் (மொழிமாற்றம் செய்து) படித்தால் சந்தோஷப்படுவார். ஒரு படைப்பாளியின் படைப்பை, அதன் நோக்கத்தை அறிந்து ரசிப்பது, படைப்பாளிக்கு மகிழ்ச்சி அளிக்க கூடியது.

படத்தில் ‘ஒளிந்திருக்கும் செய்தியை’ உணர்ந்து, ரசித்து அனுபவித்து, விமர்சனம் செய்தது அருமை.

முப்பரிமாணத்தில் அமைந்த படம் போலவே, படக்காட்சிகளை நடைமுறைக்கு ஒப்பிட்டு, மூன்றாவது பரிமாண நோக்கில் அமைந்திருந்த விமர்சனம் வெகு சிறப்பு.

வாழ்த்துக்கள் பூமகள் - இனி உங்க விமர்சனங்களை நம்பி படம் பார்க்கலாம் போல.

கொசுறு : சுறாவுக்கு நீங்க விமர்சனம் எழுதுனா எப்பிடி எழுதுவீங்க... :)
 
இன்று மாலை 6.30 மணிக்கு......

நாலாவது முறையாக அவதார்!!! (3D யில்)!!!!:sport009:

பார்க்கப் போறேனே.....:icon_b: !!!!!
 
கே கே... நான் தியேட்டர்ல இருக்கேன் :icon_b:

இன்னும் 15 நிமிஷத்தில படம் போட்டுருவாங

(இப்பதிவு அலைபேசியின் வழியாக பதியப்படுகிறது)
 
Back
Top