நெஞ்சில் நிற்பவையும் ...சில எண்ணங்களும்...

Sundaram77

New member
இந்தத் தலைப்பின் கீழ் சில திரைப்படப்பாடல்களை இடுவதே என் ஆசை...
இங்கு பதிப்பவற்றில் பல எல்லோருக்கும் தெரிந்ததுதான்...
இருப்பினும் சில தகவல்கள் பலருக்கு புதியனவாய் இருக்கலாம்...
அந்த எண்ணத்தின் பிரதிபலிப்பே இவ்விழை...


தெரிவு செய்யும் பல பாடல்கள் பழையனவாய் இருப்பது தவிர்க்கமுடியாதது...எனக்கு கர்நாடக இசை தெரியாதெனினும்
அதன் மீது பெரும் மதிப்பும் அதன் பரிமணங்கள் மீது ஆழ்ந்த மரியாதையும் உண்டு ( கர்நாடக இசை என்பது நம் தமிழிசைதான் என்பதில் எனக்கு அசைக்கமுடியாத நம்பிக்கையும் உண்டு ) . இதனாலேயே நான் ரசிக்கும் பாடல்களில் அமைதியான கட்டுக்கோப்பும் , இனிமையும் , அழுத்தமும் , அதேநேரத்தில் குழைவும் எதிர்பார்ப்பவன்.

உணர்ச்சியின் வெளிப்பாடு முக்கியம் எனும் எதிர்பார்ப்பும்
இனிய தமிழின் சொற்கள் தூய்மையுடனும், தெளிவுடனும் உச்சரிக்கப்படுதல் அதனினும் அவசியம்
என்பதே என் தேர்வுகளின் அடிப்படைகள்...


இங்கு தரப்படும் தரவுகள் பல புத்தகங்களில் இருந்தும் , இணையத்திலிருந்தும் தொடுக்கப்பட்டவையே .
இந்தத் தகவல்களுக்குக் காரணமான அனைவருக்கும் எனது நன்றி உரித்தேயாகும்....
என்ன ஒன்று , பல பாடல்கள் நான் கேட்கும்போதே தட்டியதாகும்...

பின்னூட்டங்கள் இடுவோர்க்கும் என் நன்றிகள்...

அன்பன்,
சுந்தரம்
 
Last edited:
பி.பி.ஸ்ரீநிவாஸ் ...ஓர் அஞ்சலி....

ஓ...இந்தப்பாடல்தான் ...நெஞ்சை வருடும் இப்பாடல் பற்றி....,

ஸ்ரீதரின் அற்புதமானப் படங்களில் ஒன்றான ' சுமை தாங்கி ' யில்
கண்ணதாசனின் படைப்பை மெல்லிசை மன்னர்களின் இசைக்கோப்பில்
பி.பி.ஸ்ரீநிவாஸ் பாடிய ' மயக்கமா கலக்கமா ' என்ற திரைப்பாடல் மறக்கக் கூடியதா...



நம்பிக்கையை இழந்து, வாழ்வின் புயலில் சிக்குண்டு திக்கு தெரியாது திகைக்கும் ,
பலருக்கு அப்பாடல் திசை காட்டும் கலங்கரை விளக்காய் இன்று வரை திகழ்கிறது..!

இன்று நல்ல திரைப்பாடல்களை நல்கி - நல்ல நிலையிலும் இருக்கும் - கவிஞர் வாலிக்கு
அவரின் இப்பாடல் கீதோபதேசமாகவே இருந்ததை அவரே
கூறுவதைப் படியுங்களேன்..

நான் சிரமப்பட்ட நாட்களில் எனக்கு உதவியவர் சிறந்த பின்னணிப் பாடகரும், பன்மொழி வித்தகருமான
பி.பி.ஸ்ரீனிவாஸ் என்று நானும்...இந்த நூற்றாண்டும்...என்னும் புத்தகத்தில் கவிஞர் வாலி குறிப்பிட்டுள்ளார்.
இதோ அவரது வரிகளில்...



"சிரம நாள்களில் எனக்கு உதவியவர் பி.பி.ஸ்ரீனிவாஸ்.
கஷ்டப்பட்ட காலத்தில் அவர் காசு கொடுத்து என் இரைப்பையை நிரப்பியிருக்கிறார்.

நான் வறுமைக்கடலில் மூழ்கியபோதெல்லாம், என் முடியைப் பிடித்துத் தூக்கிக் கரையில் போட்டுக் காப்பாற்றியவர்.
இனியும் காலம் தள்ள முடியாது என்று நினைத்த போது மதராஸுக்கு ஒரு பெரிய வணக்கத்தைப் போட்டுவிட்டு,
மதுரைக்குப் போய்விடலாம் என்று முடிவு கட்டினேன்.
தந்தை மறைந்துபோனார்; தாயோ பம்பாயில் நோய்ப்படுக்கையில் இருக்கிறாள்.
எனக்காக நானே அழுதுகொள்ள வேண்டுமே தவிர, ஈரம் துடைப்பார் எவருமேயில்லை.
இந்த லட்சணத்தில், சினிமாவை விடாமல் பிடித்துக் கொண்டு தொங்குவது, புத்திசாலித்தனமல்ல என்று புரிந்துகொண்டேன்.
கைவசம் இருந்த நீலப்பெட்டியையும், சிகப்பு ஜமுக்காளத்தையும் தூக்கிக்கொண்டு மறுநாள் மதுரைக்கு புறப்பட இருந்தேன்.
அப்போது பி.பி.ஸ்ரீனிவாஸ் என் அறைக்கதவைத் தட்டினார். அவரிடம் ஒரு பாட்டு பாடுங்கள் என்றேன்.

அவர் சிறிது சிந்தித்துவிட்டு வெளியாக இருக்கும் "சுமைதாங்கி' என்னும் படத்தில் கண்ணதாசன் எழுதிய,
விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்திருந்த ஒரு பாடலை முழுமையாகப் பாடிக்காட்டினார்.
பாட்டு வரிகள் என் செவியில் பாயப்பாய, மதுரைக்குப் பயணமாவதை ரத்துச் செய்து,
சென்னையிலேயே தங்கிவிடுவது என்று முடிவு செய்தேன்.
ஆம்! ஒரு சினிமாப் பாட்டு என் திசையை மாற்றியது; என் எதிர்காலத்தை நிர்ணயித்தது.
நான் தொடர்ந்து போராடுவதற்கான தெம்பையும் தெளிவையும் என்னுள் தோற்றுவித்தது.

"சுமைதாங்கி' படத்தில் பின்னாளில் இடம்பெற்று மிக மிகப் பிரபலமான அந்தப் பாடல் மயக்கமா? கலக்கமா?
கண்ணதாசன் எனக்குச் செய்த கீதோபதேசமாகவே அமைந்தது''
.


கண்ணதாசனின் வார்த்தைகளின் வலிமைக்கும் வழிகாட்டுதல்களுக்கும் ...
பி.பி.ஸ்ரீநிவாஸின் கருணை தோய்ந்த மானுடத்திற்கும் ....

இதை விட சாட்சியங்கள் என்ன வேண்டும்..!!!


அப்பாடல் :

மயக்கமா? கலக்கமா?
மனதிலே குழப்பமா?
வாழ்க்கையில் நடுக்கமா?...

வாழ்க்கையென்றால் ஆயிரம் இருக்கும்
வாசல்தோறும் வேதனையிருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்
(மயக்கமா)

ஏழை மனதை மாளிகையாக்கி
இரவும் பகலும் காவியம் பாடி
நாளைப் பொழுதை இறைவனுக்களித்து
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு
(மயக்கமா)


அன்பன்,
சுந்தரம்
 
அருமையான பாடல் சுந்தரம். எனக்கும் இந்த பாடல் பிடிக்கும்.
 
தமிழே ஆன கோவிந்தராஜனும் இனிமையே ஆன ஜிக்கியும்...!


கோவிந்தராஜனும் ஜிக்கியும் இணைந்து பாடிய பாடல்கள் மிக அபூர்வம்...
ஆனாலும் இப்பாடலுக்கு ஈடோ இணையோ இருக்க முடியாது...
பாடலின் - கவிதை என்பதுதான் சாலவும் பொருத்தமாக இருக்கும் - பொருளும் அதற்கிசைவான இனிமை
சேர்க்கும் மெட்டும் ...ஓ ...என்ன சொல்லினும் நிறைவாகாது ...கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்ட ஆசை...
அது முடியாது ...நானும் இசை அறிஞர் B M சுந்தரம் செய்தது போல்
ஜி.ராமனாதனின் தாளில் மானசீகமாக விழுகிறேன் ; என்னால் இப்போது
அதைத்தான் செய்ய முடியும்...




அவன் :
அன்பே என் ஆரமுதே
வாராய்

அவள் :
அன்பே என் ஆரமுதே
வாராய்

அவன் :
தென்றல் அலை மீதினிலே
திங்கள் பிறைத் தோணியிலே
தேன் மொழி உனை அழைத்தே செல்வேனே...

அவள் :
வெண்ணிலவுக் கிண்ணியிலே
என்னிதயக் காதலையே
உண்ணும் மதுவாய் நினைத்தே தருவேனே

அவன் :
வண்ணமிகு வானவில்லை
பொன்னுடையாய் முடித்தே
வல்லியுனக்கே பரிசாய்த் தருவேனே

அவள் :
கண்சிமிட்டும் தாரகையை
முல்லை மலராய் தொடுத்தே
காதல் மணமாலையாக அணிவேனே

அவன் :
மின்னல் ஒளிக் கோடுகளால்
மேகமென்னும் வெண்திரையில்
உன்னழகை ஒவியமாய் வரைவேனே

அவள் :
விண்ணில் மழைத்தாரகளை
வீணைநரம்பாக்கி , அதில்
இன்னொலியை மீட்டி இசைப் பொழிவேனே



இந்தப்பாடலில் அன்பே என்று தொடங்கும் போதே, இரண்டாவது அட்சரத்தை அப்படியே நீட்டுகிற அருமை . அதைத்
தொடர்ந்த தபேலாவின் மெல்லோசை ஒரு ஆவர்த்தம் . காதலின் வழி இதுதான் என்று காட்டுவதைப் போல் ,
' அன்பே என் ஆரமுதே வாராய் ' ...மெதுவாக அசைந்தாடிவருகிற பல்லக்கைப்போல் இலக்கிய நயத்துடன் நடைபோடுகிறது பாடல் .

காதல் பித்தின் லாகிரியை காற்றினிலே கலந்து , ராகத்தின் அசைவுகளை காண்பித்து , வானவீதியிலே
நடத்திக் காட்டுவது போல் கானவீதியிலே வலம் வரச் செய்கிறார் இராமனாதன்.
காவியச்சுவையின் சிகரங்களாகத் திகழும் இத்தகைய வரிகள் இவ்வளவு அழகான இசைப்பீடத்தில்போய்
உட்காருவது அபூர்வத்திலும் அபூர்வம் .
இந்தப்பாடல் ஒரு சொளந்தர்ய லகரி...
இன்பரச வாரி !



கோமதியின் காதலன் ( 1955 )
கோவிந்தராஜன் , ஜிக்கி
கு. மா . பாலசுப்ரமணியன்
ஜி.ராமனாதன்


மேலே உள்ளதன் ' வார்த்தையும் வடிவமும் ' என்னுடையதல்ல ; நெட்டில் சுட்டதும் அல்ல .
ஒரு புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது ; அதன் ஆசிரியர்க்கு என் நன்றி !

ஒன்று மட்டும் என்னால் புதிதாகச் சேர்க்க முடியும் .
இந்தப் பாடலின் கவிஞர் பின்னாளில் ' திருவாசக ' சொற்பொழிவுகளில் பலரின் மனதை
உருக்கியதில் ' திருவாசக மணி ' என்று போற்றப்பட்டவர் !


 
அருமையான திரிக்கு செறிவான தொடக்கம்
தொடர்ந்து எழுதுங்கள் சுந்தரம்
 
வாலிக்கு அஞ்சலி....



வாலிக்கு அஞ்சலிதான் இப்பாடல் ...ஆனால் வாலியின் சொற்பெருக்கிலேயே...




f73a26e9-189b-476e-b20b-7e7ccd403cd0_s_secvpf1.jpg


c1a186e5-dd68-4fa5-9f53-7bbaa956ba661.jpg



கண்ணதாசனே ! – என்
அன்பு நேசனே !
நீ
தாடியில்லாத தாகூர் !
மீசையில்லாத பாரதி !
சிறுகூடற் பட்டியில்
சிற்றோடையாய் ஊற்றெடுத்து
சிக்காகோ நகரில்
சங்கமித்த ஜீவ நதியே !
உனக்கு
மூன்று தாரமிருப்பினும் – உன்
மூலா தாரம் முத்தமிழே !
திரைப் பாடல்கள்
உன்னால் -
திவ்வியப் பிரபந்தங்களாயின !
படக் கொட்டகைகள்
உன்னால்
பாடல் பெற்ற ஸ்தலங்களாயின !
நீ
ஆண் வேடத்தில்
அவதரித்த சரஸ்வதி !
கண்ணனின் கைநழுவி
மண்ணில் விழுந்த
புல்லாங்குழல் !

அயல் நாட்டில்
உயிர் நீத்த
தமிழ்நாட்டுக் குயிலே !
பதினெட்டுச்
சித்தர்களுக்கும்
நீ
ஒருவனே
உடம்பாக இருந்தாய் !
நீ
பட்டணத்தில் வாழ்ந்த
பட்டினத்தார் !
கோடம்பாக்கத்தில்
கோலோச்சிக் கொண்டிருந்த
குணங்குடி மஸ்தானே !
நீ
தந்தையாக இருந்தும்
தாய் போல்
தாலாட்டுக்களைப் பாடியவன் !

இசைத் தட்டுகளில் மட்டுமல்ல -
எங்கள் நாக்குகளிலும்
உன்
படப் பாடல்கள்
பதிவாகி யிருக்கின்றன !
உன்
மரணத்தால்
ஓர் உண்மை புலனாகிறது..
எழுதப் படிக்கத் தெரியாத
எத்துணையோ பேர்களில் -
எமனும் ஒருவன்.
அழகிய கவிதைப் புத்தகத்தைக்
கிழித்துப் போட்டுவிட்டான் !

- கவிஞர் வாலி
(கண்ணதாசன் மறைந்தபோது எழுதிய இரங்கல் கவிதை)



இக் கவிதையின் இவ்வரிகள்

உன் மரணத்தால்
ஓர் உண்மை புலனாகிறது..
எழுதப் படிக்கத் தெரியாத
எத்துணையோ பேர்களில் -
எமனும் ஒருவன்.
அழகிய கவிதைப் புத்தகத்தைக்
கிழித்துப் போட்டுவிட்டான் !



இன்றைக்கு வாலிக்கும் பொருந்தும்தானே....


அன்பன்,
சுந்தரம்
 
என்னைப் பொருத்தவரை சமீபத்திய பாடல்....!!!



மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் கூடலே ஓ மோகம் வந்ததோ
மோகம் வந்ததும் ஓ மௌனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது
(மாலையில்..)

வருவான் காதல் தேவன் என்றும் காற்றும் கூற
வரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீற
வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்து பாட
ஒரு நாள் வண்ண மாலை சூட
வளர்த்தேன் ஆசை காதலை நெஞ்சமே பாட்டெழுது
அதில் நாயகன் பேரெழுது
(மாலையில்..)

கரைமேல் நானும் காற்று வாங்கி விண்ணை பார்க்க
கடல் மீன் கூட்டம் ஓடி வந்து
கண்ணை பார்க்க அடடா நானும்
மீனைப் போல கடலில் பாயத் தோணுமோ
அலைகள் வெள்ளி ஆடை போல
உடலின் மீது ஆடுமோ நெஞ்சமே பாட்டெழுது
அதில் நாயகன் பேரெழுது
(மாலையில்..)


படம்: சத்ரியன்
இசை: இளையராஜா
பாடியவர்: ஸ்வர்ணலதா
இயற்றியவர் : வாலி



புதுப் பாடல்களில் எனக்கு பிடித்தவை நிரம்பவே உண்டு !
இளையராஜாவின் பாடல்களே ஏராளம் உள்ளனவே ...இன்னும் பலர் உள்ளனரே...
அப்புறம் எல்லோரும் கொண்டாடும் ஏ.ஆர்.ஆர்...ஏனெனில் அவரின் என் மீதான தாக்கம் மிகக் குறைவு...
என்னைப் பொறுத்தவரை ஒரே காரணம், நினைவில் நிற்பவை மிக மிகக் குறைவு என்பது மட்டுமே...

இந்தப்பாடல் என் மனதை மிகவும் கொள்ளை கொண்ட பாடல் , காரம்...
காதலில் வீழ்ந்த ஒரு பெண்ணின் மென்மையும் தூய்மையும் நிறைந்த மனவெளிப்பாட்டை,
தெளிவான நீரோடை போன்ற ஒரு மெட்டில் , ஸ்வர்ணலதா நம் உணர்விலும் உயிரிலும்
ஒன்றச் செய்யவில்லையா - உபயதாரர்கள் , இளையராஜாவும் , வாலியும் தான்...!


ஸ்வர்ணலதா(மறைவு :12 செப்டம்பர் 2010) பற்றி இணையத்தில் எடுத்தது இது...

ஸ்வர்ணலதா .. தனிமையில் கரைந்துபோன ஒரு குரல் ...........

ஒரு பாடகி.. பாடகி மட்டும்தான். இசையை தவிர வேறொன்றும் தெரியாத தேவதை...
தனக்கென்று குடும்பம், குழந்தை என எதையும் ஏற்படுத்தி கொள்ளாமல்
இசைக்காகவே பிறந்து இசையிலேயே வாழ்ந்து இசையோடு தன்னை மறித்து கொண்டவர்..

ஸ்ரேயா கோசலுக்கான இடம் முதலில் ஸ்வர்ணலதாவுடையது .. சகலமொழிகளிலும் சரளமாக பாடும் திறமை,
அளவில்லா இனிமை, பாடிய எல்லா பாடல்களும் ஹிட், இந்திய மொழிகளில் அத்தனையிலும் பாடிய அசாத்திய திறமை,
பாட வந்த பத்தே வருடங்களில் ஏழாயிரம் பாடல்களை பாடிய பாடகி.. ஓய்ந்து வந்த இளையராஜா ,
எழுந்து வந்த ரகுமான்,இருவருக்கும் ஸ்வர்ணலதா ஆதர்சன பாடகி..


அன்பன்,
சுந்தரம்
 
மயக்கம் எனது தாயகம்....



மயக்கம் எனது தாயகம்
மௌனம் எனது தாய்மொழி
கலக்கம் எனது காவியம்
நான் கண்ணீர் வரைந்த ஓவியம் (மயக்கம்)

பகலில் தோன்றும் நிலவு
கண் பார்வைக்கு மறைந்த அழகு
திரை மூடிய சிலை நான்
துன்பச் சிறையில் மலர்ந்த மலர் நான் (மயக்கம்)

நானே எனக்குப் பகையானேன் – என்
நாடகத்தில் நான் திரை ஆனேன்
தேனே உனக்குப் புரியாது
அந்த தெய்வம் வராமல் விளங்காது

விதியும் மதியும் வேறம்மா – அதன்
விளக்கம் நான் தான் பாரம்மா
மதியில் வந்தவள் நீயம்மா – என்
வழி மறைத்தாள் விதியம்மா (மயக்கம்)

திரைப்படம்: குங்குமம் (1963)
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இசை : கே.வி.மகாதேவன்
வரிகள் : கண்ணதாசன்


'குங்குமம்' படத்தில்
ஒப்புமையை நினைத்துக் கூடப் பார்க்க முடியா தமிழ்க் குரலோன்
- அய்யோ , இவனுக்கு என்ன அடைமொழி கொடுப்பினும் மனம் திருப்தியுற மாட்டேன் என்கிறதே -

சௌந்தரராஜன் பாடிய 'மயக்கம் எனது தாயகம்' என்ற பாடலில்தான் எப்படி உணர்ச்சிகள் பொங்குகின்றன...!!!

அந்தப் பாடல் சூழலுக்கு ஏற்ப , அவன் குரலில் தொனிக்கும் மட்டில்லா ஆதங்கமும் ,
எல்லையில்லா துயரத்தைக் கண் முன் சித்திரம் ஆக்கும் விந்தையும் ,
முடிவிலா சுய கழிவிரக்கமும் ...ஓ..ஓ...டி.எம்.எஸ் அன்றி யாரால் அந்தக் குரலில் இத்தனையும் கொட்ட முடியும்...


மயக்கம் எனது தாயகம்
மௌனம் எனது தாய்மொழி
........................................
நானே எனக்குப் பகையானேன் – என்
நாடகத்தில் நான் திரை ஆனேன்


அவன் நாத மகிமைக்கும் தமிழின் அழகை எல்லாம் தன் நாவினால் பல்லாண்டு காட்டிய
- இன்றைய தொழில் நுட்பத்தால் என்றும் காட்டும் -

சௌந்தரராஜனை வணங்கத்தானே தோன்றுகிறது...


அன்பன்,
சுந்தரம்
 
வர்ணனை கள் வெகு நேர்த்தியாய் வருகின்றன
தொடருங்கள்
 
சுவையான திரி... பாடல் சார்ந்த கலைஞர்களின் உணர்வுகளையும் பிரதிபலிப்பது அருமை !!
 
இனிமையிலும் இனிமையான ஓசை நயத்தில்....!



தோழி:

சித்திரப்பூவிழி வாசலிலே வந்து

யார் நின்றவரோ ? - இந்தக்

கட்டுக் கரும்பினைத் தொட்டுக் குழைந்திட

யார் வந்தவரோ ?

தலைவி:

தென்றல் அழைத்துவர - தங்கத்

தேரினில் வந்தாரே !

புன்னகை மின்னிட வந்து அருகினில்

நின்றவர் என்னவரே ! - இடம

தந்த என் மன்னவரே ! ( சித்திரப் )

தோழி:

கட்டழகில் கவி கம்பன் மகனுடன்

ஒட்டி இருந்தவரோ ? - இந்தப்

பட்டு உடலினைத் தொட்டனைக்கும் கலை

கற்றுத் தெளிந்தவரோ ? - உனை

மட்டும் அருகினில் வைத்து தினம் தினம்

சுற்றிவருபவரோ ! - நீ

கற்றுக் கொடுத்ததை ஒத்திகை பார்த்திடும்

முத்தமிழ் வித்தகரோ ? - கலை

முற்றும் அறிந்தவரோ ? - காதல்

மட்டும் தெரிந்தவரோ ? ( சித்திரப் )

தலைவி:

வண்ணக் கருவிழி தன்னில் ஒரு விழி

என்று அழைப்பதுவோ - பசும்

பொன்னிற் புதியதை கண்ணன் எனப்பெயர்

சொல்லித் துதிப்பதுவோ - ஒளி

மின்னிவரும் இரு கண்ணசைவில் கவி

மன்னவன் என்பதுவோ - இல்லை

தன்னைக் கொடுத்தெனை தன்னில் மறைத்தவர்

வண்ணப்புது மலரே - அவர்

நெஞ்சம் மலரனையே - மனம்

எங்கும் நிறைந்தவரே ! ( சித்திரப் )



பாடல் ஆக்கியோன் : மாயவநாதன்
இசைத்தவர்கள் : L R.ஈஸ்வரி, P.சுசீலா
இசைக் கோர்த்தவர்கள் : மெல்லிசை மன்னர்கள்
படம் : இதயத்தில் நீ



நண்பர்களே !
உடுமலை நாராயணக் கவி தொடங்கி , கு.வெ. பாலசுப்ரமணியம் , கா.மு.ஷெரீப்,...
கண்ணதாசன், பட்டுக்கோட்டை, வைரமுத்து ... இன்றைய ந.முத்துக்குமார் வரை தமிழ்த்திரைப்
பாடல்களை இலக்கியத் தரத்தோடு கொடுத்தவர்கள் பலர் ...இருப்பினும் மேலே உள்ள பாடல்
போன்று மொழி லாவகத்துடன் கற்பனை வளமும் சந்தச் சுவையும் மிகுந்த பாடல்கள் மிகக் குறைவே..!

திரைப்பாடல்களில் இது ஒரு வாடாமலரே...!!!

இதை வாசித்துப் பார்த்தாலே இதன் சந்தம் மயக்கம் தரும்...!

பாட்டும் நல்ல துள்ளோட்டத்துடன் அமைந்திருக்கும் அன்பர்களே..!

மகிழ்ச்சிப் பாய்ச்சலும் இனிமை வெள்ளமும் கூட்டும் L R ஈசுவரியும் தேன்சுவையே குரல் எனக்கொண்ட P சுசீலாவும்
இப்பாட்டை இன்பமயமாய் ஆக்கி உள்ளனர்....!!!
கிடைப்பதற்குள் தரமான சுட்டியினைத் தந்திருக்கிறேன்.

இந்த சுட்டி காணொளிக்கானது :
இங்குதான்!

அன்பன்,
சுந்தரம்
 
Last edited:
பலமுறை கேட்டபாடல்தான்!ஆனால் வர்ணனையை வாசித்துவிட்டு வரிகளை வாசித்தால் ஓசை நயமும் சந்த நயமும் இதமளிக்கின்றன!
 
புரட்சிக்கவிஞனின் இன்பம் சேர்க்கும் விதம்...

துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா?
துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா?
எமக்கின்பம் சேர்க்க மாட்டாயா?

அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ
அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ
அல்லல் நீக்க மாட்டாயா? கண்ணே
அல்லல் நீக்க மாட்டாயா?

வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே
வாழ்வில் உணர்வு சேர்க்க - எம்
வாழ்வில் உணர்வு சேர்க்க - நீ
அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால்
ஆடிக் காட்ட மாட்டாயா? கண்ணே
ஆடிக் காட்ட மாட்டாயா?


படம் : ஓர் இரவு (1951)
பாடியவர் : எம்.எஸ்.ராஜேஸ்வரி, வி.ஜே. வர்மா
பாடலாசிரியர் : பாரதிதாசன்
இசை :சுதர்சனம்



புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் பல பாடல்கள் திரைக்கு வந்துள்ளன ..
ஆனாலும் இப்பாடலுக்கு ஒரு சிறு வரலாறு உண்டு !
இதற்கு முதலில் இசை அமைத்தவர் இசைப்பேரறிஞர் தண்டபாணி தேசிகர் ;
சரியான இசைத்தேர்விற்கு அவர் மூன்று ஆண்டுகள் எடுத்துக்கொண்டதாகக் கூறியுள்ளார்...
ஏனோ தானோ என்றில்லை ...முழு ஈடுபாட்டோடு முயன்றும்
மூன்றாண்டுகள் என்றால் ...அவரின் தேடலை என்னென்பது ...
அவ்வாறெல்லாம் இன்று யார் உளர்...



Thunbam Nergayil & MMDD !!


May I share some of the solemn observations regarding this PATTU ,beautifully and comely penned by the great poet Bharathidasan!

The song was set to tune by Isai Peraringar , the great M M Dhandapani Desikar , an ardent exponent of Thamizhisai !
He devoted more than two years to find the most suitable melody for this song....any one interested may click here!
HERE!


Some pious comments are here :


Barathidasan's Thunbam Nergayil in Desh made so many heads sway in gaiety and fulfillment.

Dhandapani Desikar on composing Thunbam nergayil. The song is written by Bharathidasan. R.Sudharsanam used this composition in the movie Or Iravu.



The suppression of the senses releases a negative force. The process of sublimation needs a spiritual path.
Rag Desh can provide that. Its positive energy gives one serenity, peace, inner joy, right valour, universal love and patriotism.


Of late this song is haunting me!
After listening to this song everyone at home started humming Desh!
What words and what tune!
This is really soul stirring!!



Wow - is all I have to say about this Bharathidasan masterpiece. One unmitigated number that emphasizes on the beauty of Tamil.
A lullaby that affirms its sweetness.
I am so thankful to Appa for being adamant about me learning Tamil.
I remember shying away from this Dravidian language when I was much younger, when English was the 'it' jargon.
Now, years later - I am indebted wholeheartedly to his then, insistence.
How else could I appreciate magical lyrics like these, had I not learned this great language?
So, here goes - Thanks Appa - for instilling me with monumental passion and respect towards my mother tongue, Tamil.
Tuesday is here. Mark it as a terrific one. It will.
Life is ALWAYS about seeing the bright side.


அன்பன்,
சுந்தரம்


P S : M. M. Dhandapani Desikar (1908-1972) could easily reach all of the octaves with a rich voice and was in demand for this reason.
He specialized in Tamil kritis and made appearances on several films.
He was the professor and Head of the Department of Music at the Univerisity of Annamalai.

He is known for his book on music and language called Isai Tamizh Paamalai.

 
ஜிக்கியின் தேவகானங்கள்...



துன்பம் சூழும் நேரம்
என்னைக் கொஞ்சம் பாரும்
இன்னல் யாவும் தீரும்
இன்பம் வந்து சேரும்
( துன்பம் )
அன்பு மேவும் ரூபம்
வாழ்வின் அமர தீபம்
அளவில்லாத தாபம்
அடைந்தென்ன லாபம்
( துன்பம் )
உலகில் இன்பம் கோடி
உணர வேண்டும் நாடி
வீணாக மனம் வாடி
தோனாத பதில் தேடி
( துன்பம் )


திரைப்படம் : அமரதீபம் 1956
பாடியவர் : பிள்ளவாள்ளு கஜபதி கிருஷ்ணவேணி - ஜிக்கி
இயற்றியவர் : K.P.காமாட்சி( ) ! ? கே.எஸ். கோபாலகிருட்டிணன்
திரையிசை : T.சலபதி ராவ்



தமிழ்த் திரைப்பட உலகுக்கு தெலுங்கர்களின் பங்கு மிக அதிகம் ! அதுவும் , 50-களில் அவர்களது பங்களிப்பு
மதிப்பு வாய்ந்தது - திரைப்படத்தின் அனைத்து துறைகளிலும் !!
கண்ணாம்பா, வரலட்சுமி போன்றோர்...கண்ணாம்பா தெலுங்குகாரரெனினும் அவரது தமிழ் உச்சரிப்பு தமிழைத் தாய்மொழியாகக்
கொண்டவர்களைக்கூட வியக்க வைத்தது என்னவோ மெய் ! அந்தக்காலக் கனவுக்கன்னி அஞ்சலிதேவி தெலுங்கர்தான் !
சாவித்திரியை யாரேனும் மறக்க முடியுமா...நடிகையர் திலகம் அல்லவா அவர் !

இப்பொழுது இந்த இடுகைக்கு வருகிறேன்...

போன இடுகையில் ' துன்பம் ' எனும் சொல்லில் ஆரம்பிக்கும் புரட்சிக்கவியின் பாடலைப் பார்த்தோம் .
அதே சொல்லில் ஆரம்பாகும் எனக்குப் பிடித்த இன்னொரு பாடல்தான் மேலே உள்ளது !
T. சலபதிராவ் என்பவரே இதன் இசை அமைப்பாளர் ; இவரின் முதல் தமிழ்ப்படமே இதுதான் - வெற்றிப்படமும் ஆயிற்று!

ஒரு சோகமான சூழலில் பாடப்படும் இப்பாடலில் மென்மையும் இனிமையும் கட்டுங்கடங்காதது !
அவ்வார்த்தைகளின் வலிமையைத்தான் என்னென்பது ...ஜிக்கி எனும் கிருஷ்ணவேணியின் குரலினிமை அதனையும்
விஞ்சியதே ! பாடுவதெற்கெனவேப் பிறவி எடுத்ததாகவே சொன்னவர் ஜிக்கி..!

'அவன்' , ' அனார்கலி ' ஆகியத் திரைப்படங்களில் அவரின் பாடல்களில் காணப்படும் இனிமைக்கு எல்லையேது...
'கல்யாணப்ப்ரிசு'-ல் இடம் பெற்ற ' துள்ளாத மனமும் துள்ளும் ' ஒன்று போதுமே...

தூய்மையும் இனிமையும் தெளிந்த உச்சரிப்பும் ஒன்றோடு ஒன்று போட்டியிடும் விந்தையை அவரின் எல்லாப்
பாடல்களிலும் காணலாம் ...

இதை இயற்றியவர் K S கோபாலகிருஷ்ணன் என்றே தெரிகிறது ; ஆயினும் K P காமாட்சிசுந்தரம் எனவும் சில இடங்களில்
உள்ளது.


அன்பன்,
சுந்தரம்
 
ஒரு சாதிக்க இயலா மாபெரும் கலைஞன்...



புத்தியுள்ள மனிதனெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதனெல்லம் புத்திசாலி இல்லை
புத்திசாலி இல்லை..

பணமிருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லை
மனம் இருக்குக்ம் மனிதரிடம் பணம் இருப்பதில்லை
பணம் படைத்த வீட்டினிலே வந்ததெல்லம் சொந்தம்
பணம் இல்லாத மனிதருக்கு சொந்தம் எல்லாம் துன்பம்.

(புத்தியுள்ள மனிதனெல்லாம்........)

பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை
காதல் கொண்ட அனைவருமே மணமுடிப்பதில்லை
மணமுடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை
சேர்ந்து வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை

(புத்தியுள்ள மனிதனெல்லாம்........)

கனவு காணும் மனிதனுக்கு நினைப்பதெல்லம் கனவு
அவன் காணுகின்ற கனவினிலே வருவதெல்லம் உறவு
அவன் கனவில் அவள் வருவாள் அவனை பாத்து சிரிப்பாள்
அவள் கனவில் யார் வருவாள் யாரை பாத்து அணைப்பாள்

(புத்தியுள்ள மனிதனெல்லாம்........)


படம்: அன்னை(1962)
இசை: ஆர். சுதர்சனம்
வரிகள்: கவிஞர் கண்ணதாசன்
பாடகர்கள்: ஜே பி சந்திரபாபு



சொந்த வாழ்க்கை ...சோகம்தான் ...சாதாரண சோகம் அன்று...
நகைச்சுவை நடிகராக மற்றவர்களை சந்தோசப் படுத்திய இவரின் சொந்த வாழ்க்கை மகிழ்ச்சிகாரமானதாக இல்லை.
அவர் திருமணம் செய்துகொண்ட பெண் முதலிரவில் வேறொருவரைக் காதலிப்பதாகக் கூறவே, மறுநாள் அவரை மரியாதையுடன் அனுப்பிவைத்தவர்.

அவருக்குப் பொதுவாகவே தன் நடிப்பின் மீது எப்பொழுதும் ஒரு கர்வம் உண்டு,
ஆகையால் ‘நினைத்ததை செயல்படுத்தியே தீருவேன்’ என்ற பிடிவாத குணம் கொண்டதால் பலரால் திமிர் பிடித்தவன் என்று புரிந்துகொள்ளப்பட்டார்.
கண்ணதாசன் அவரை வைத்து படம் - ' கவலை இல்லாத மனிதன் ' என்று நினைவு - எடுத்த போது
சந்திரபாபுவின் கவலை அவரை மட்டும் அரிக்கவில்லை ;கண்ணதாசனையும் அரிக்கலாயிற்று !

உண்மையில் இப்பாடல் வரிகள் யாருக்கும் சிந்தனையைத் தூண்டக்கூடியதெனினும் சந்திரபாபுவின் புத்தி தெளிதற்கே
கண்ணதாசன் இப்படி எழுதியதாகச் சொல்வோருண்டு !!

சரி, வேறு கோணத்தில் பார்ப்போமே ; சந்திரபாபுவின் ஆளுமைக் குணங்கள் பல ; இந்நிகழ்ச்சி அதற்கோர் எடுத்துக்காட்டு .


என்னதான் நடந்தது ...

குடியரசுத்தலைவர் மாளிகை நிகழ்வுக்கு முன்னர் நடந்தது இது ...

( இது இணையத்தில் எடுத்தது அல்ல ; இணையத்திலும் இல்லையென்றே நினைக்கிறேன் )

பாகிஸ்தானை இந்திய ராணுவம் முறியடித்த 1965 . படை வீரர்களுக்கு உற்சாகம் ஊட்ட தென்னாட்டுக் கலைஞர் குழு ஒன்று
எல்லைகளுக்குச் சென்று கலை நிகழ்ச்சிகள் வழங்கியது. குழுவில் சிவாஜி, பத்மினி, சாவித்திரி , ஜெயலலிதா , சந்திரபாபு,
விசுவனாதன் , கண்ணதாசன்...ஜலந்தர் நிகழ்ச்சியில் நடந்ததுதான் இந்நிகழ்வு !

சந்திரபாபு வாயாலேயேக் கேட்போமே...

" ஜவான்களுக்கு மட்டும்தான் கலைநிகழ்ச்சி என்று சொல்லியிருந்தார்கள்... என்ன காரணமோ பொதுமக்களையும் உள்ளே
விட்டுவிட்டார்கள்...25,000 பேர்களுக்கு மேல் கூட்டம்...
M S V ஹார்மோனியம் வாசிக்க P B S , P சுசீலா பாட ஆரம்பித்தார்கள்.

இந்திப்பாட்டைப் பாடு என்றொரு குரல் எழுந்தது . பின்பு , பத்மினி எங்கே ? அவரை ஆடச் சொல்லுங்கள் என்ற கோஷம் வலுத்தது....

மைக்கை வைத்திருக்கும் இடத்திற்குப் போனேன் ...( இதனை இங்கே சொல்லிடுதல் நலம் - சந்திரபாபு முறையான கல்வி போதனை
பெற்றவர் இல்லையாயினும் , ஒர் அம்மையாரின் தொடர்பினால், நல்ல ஆங்கிலம் எழுதவும் பேசவும் வல்லவராய் இருந்தார் )
இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர் யார் ? ...
அவர் உடனே இங்கே வர வேண்டும் என ஓங்கிச் சொன்ன்னேன் ; ஒரு கர்னல் வந்தார்.
இதுதான் நீங்கள் நிகழ்ச்சி நடத்தும் லட்சணமா என்று சொல்லிவிட்டு
நான் பேசுவதை அப்படியே இந்தியில் மொழிபெயர்க்கச் சொன்னேன்...

இதோ இங்கே உட்கார்ந்திருக்கும் குள்ளமான ஆள் யார் தெரியுமா ? அவர்தான் எங்கள் பிரபல சங்கீத டைரக்டர் விஸ்வனாதன்.
உங்கள் சங்கர் - ஜெய்கிஷனை விட உயர்ந்தவர்....

இதோ சிவாஜிகணேசன்...ஆசியாவிலேயே சிறந்த நடிகர் ...நான் யார் தெரியுமா ...

இந்தியாவின் சிறந்த ஹாஸ்ய நடிகர் நான் தான்... உங்கள் ஹாஸ்ய நடிகர்களையேக் கேட்டுப்பாருங்கள்
( கேட்டிருந்தால் பூம் ,பூம், பூம் மாடு மாதிரி தலையசைத்திருப்பார்கள் - சந்தேகமென்ன..!? )
நான் நடிகன் மட்டுமல்ல ... தயாரிப்பாளர் , டைரக்டர் , கதாசிரியன் ,
பாடாகன் , நாட்டியக்காரன் ... எல்லாமே... இப்போது நான் பாடப்போகிறேன்...தமிழ்ப்பாட்டுதான் பாடப்போகிறேன் ;
நீங்கள் அதை கேட்கத்தான் போகிறீர்கள்... அதை அடுத்து சில இந்திப்பாடல்களும் பாடுவோம் ...பத்மினியும் நடனமாடுவார்..."

கலைநிகழ்ச்சி பின்னர் சிறப்பாய்த்தான் முடிந்திருக்கும் ... அதிருக்கட்டும் ...அத்தனை பேர் சென்றிருக்கையில் இவர்தான்
இந்த ஆளுமையை கொண்டிருந்தார் ...அதுதான் சந்திரபாபு என்ற நாயகன்...

ஆணவக்காரன் என்று சொல்லக்கூடிய அளவுக்கு துணிச்சல்காரன் ... தற்பெருமைக்காரன் என்று பிறர் நினைக்கும் அளவிற்கு தன்னம்பிக்கை உள்ளவர்...
தன் , தங்கள் சுயமரியாதைக்குப் பங்கம் என்றபோது சிங்கம்போல் கர்ஜித்த தன்மான மிக்கவர் அன்றைய சந்திரபாபு.

நீக்குப்போக்கும் , உலகியல் போக்கும் உணராத - உணர்ந்தாலும் , அதற்கு ஈடுகொடுக்காத - காரணத்தால் வழுக்கி விழுந்தவர் ;
அப்படி வழுக்கியவரை கரை ஏற்ற முயாலாது, மேலும் அமுக்கி , முங்கிப்போய் மூச்சுத்திணறச் செய்தவர்கள்தான் புரட்சித்திலகங்கள் ஆனார்கள்....

எப்படியாயினும் சந்திரபாபு என்பவன் ஒரு மாமனிதன் ...சந்தேகமே வேண்டாம்...

அவருக்குத் திருமணம் நடந்த சாந்தோம் சர்ச்சின் இன்னொரு கோடியில்தான் அவர் கல்லறை உள்ளது .
அக்கல்லறை அருகில் செல்வோர் இம்முணுமுணுப்பை இப்போதும் கேட்கலாம்...


" என்னைத் தெரியலையா , இன்னும் புரியலையா , குழந்தை போலே என் மனசு , என் வழியோ என்றும் ஒரு தினுசு ..."


அன்பன்,
சுந்தரம்
 
ஏரிக் கரையின் மேலே ....



ஏரிக் கரையின் மேலே
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஏரிக் கரையின் மேலே போறவளே பெண்மயிலே
என்னருமைக் காதலியே என்னைக் கொஞ்சம் பாரு நீயே
அன்னம் போலே நடை நடந்து சென்றிடும் மயிலே
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே

தென்னை மரச் சோலையிலே சிட்டுப் போல போற பெண்ணே
ஏஏஏ..ஏ.. ஏஏஏஏ.. ஏஏ.. ஏஏஏஏஏஏஏ... ஏஏஏ....
தென்னை மரச் சோலையிலே சிட்டுப் போல போற பெண்ணே
சிட்டுப் போல போற பெண்ணே
நில்லு கொஞ்சம் நானும் வாரேன் சேர்ந்து பேசிப் போவோம் கண்ணே
நில்லு கொஞ்சம் நானும் வாரேன் சேர்ந்து பேசிப் போவோம் கண்ணே

அன்னம் போலே நடை நடந்து சென்றிடும் மயிலே
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே

மாமரத் தோப்பினிலே மச்சான் வரும் வேளையிலே
மச்சான் வரும் வேளையிலே
மாமரத் தோப்பினிலே மச்சான் வரும் வேளையிலே
கோவம் கொண்ட மானைப் போலே ஓடலாமோ பெண்மயிலே
கோவம் கொண்ட மானைப் போலே ஓடலாமோ பெண்மயிலே

அன்னம் போல நடை நடந்து சென்றிடும் மயிலே
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே



படம்: முதலாளி 1957
இயற்றியவர்: கவிஞர் கா.மு. ஷெரிஃப்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: டி.எம். சௌந்ததரராஜன்



மேற் கண்ட முதலாளி படத்தை தயாரித்தவர் எம்.ஏ.வேணு.. M A V பிக்சர்ஸ் என்ற
நிறுவனத்தைத் தொடங்கி ' மாங்கல்யம் ' , ' பெண்ணரசி ' , ' டவுன் பஸ் ' என்ற படங்களை ஏற்கனவே இவர் தயாரித்திருந்தார் ...
மூன்றிலும் இசை அமைப்பாளர் மகாதேவர்தான் ...
மூன்றிலும் டி எம் எஸ் பாடியிருந்தார் .

இப்பாடல் ' ஃபோக் ' ( folk ) பாணியில் தான் எழுதப்பட்டிருந்தது !
ஆனாலும் இசை கர்நாடக பாணியில் இருக்க வேண்டுமென்பது தயாரிப்பாளர் அவா !
K V M தயங்கித்தான் ' ஆரபி ' ராகத்தில் இசை அமைத்து டி எம் எஸ்ஸைப் பாடச் செய்தாராம்...
பாட்டின் ஆரம்பத்திலேயே வேணுவிற்கு வேணுகானம் கேட்டது போல் இருந்ததாம் ;
இன்றளவும் நமக்கும் அப்படித்தானேப் படுகிறது..!!

கா.மு.ஷெரீப் மிகச் சிறந்த கவிஞர் மட்டுமல்லர் ; சீரிய பண்பாளரும் கூட !
தமிழ் மீதும் தமிழ்ப் பண்பாட்டினும் மீதும் மிகுந்த பற்றும் கொண்டவர் !!
அவர் ஒரு திரைப்பாடலைக் கேட்டவுடன் இனிமேல் நான் திரைப்படங்களுக்குப் பாட்டு
எழுத முடியாது எனச் சொல்லி திரை உலகைப் புறந்தள்ளி ஒதுங்கிக் கொண்டார்..

பழம்பாடலாசிரியரான அவர் அப்பாடலைக் குறித்து சொன்னது என்ன தெரியுமா..
" ஒழுக்கக்கேடு இது. தமிழ்க் கலாசாராமும் பெண்மையும் இது போன்ற பாடல்களால் இழுக்கப்படுகின்றன "
இது ' வண்ணத்திரை' என்ற இதழில் அவர் சொன்னதாகும்...
சரி , இப்படி அவரைச் சொல்ல வைத்தப் பாடலைச் சொன்னால் ஆச்சரியமாய் இருக்கும் ...
அப்பாடல் , வாலி எழுதியது ; அவரை முகஞ்சுளிக்க வைத்த வரிகள் :

" நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்
அவன் மாம்பழம் வேண்டுமென்றான் "

இதற்கே அன்றைக்கு அவர் அம்முடிவை எடுத்தாரெனில் அதற்குப் பின் வந்த
- இப்பொழுது வந்து கொண்டிருக்கின்ற - பாடல்களைக் கேட்டால் என்ன செய்திருப்பாரோ...!!!???


அன்புடன்,
சுந்தரம்


பி.கு : ஜான் , உங்களுக்கு மட்டும்தான் இங்கு வரவும் பின்னூட்டம் இடவும் மனதிருக்கிறது ; நன்றி !
 
ஏரிக்கரையின் மேலே டி.எம்.எஸ்ஸின் ஆல் டைம் க்ரேட்களுள் ஒன்று...
நன்றி சுந்தரம்
பின்னூட்டங்களைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்
திடீரென வந்து நிறையப் பின்னூட்ட்ங்களிடுவார்கள்!!
 
நம்பிக்கை இழப்போர்க்கு ஊக்கம் தரும் ...

நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்

இளவேணில் உன் வாசல் வந்தாடும்
இளந்தென்றல் உன் மீது பந்தாடும்
(நலம் வாழ..)

மனிதர்கள் சிலநேரம் தடம் மாறலாம்
மனங்களும் அவர் குணங்களும் நிறம் மாறலாம்

இலக்கணம் சில நேரம் தவறாகலாம்
எழுதிய அன்பு இலக்கியம் பிழையாகலாம்
விரல்களைத் தாண்டி வளர்ந்ததை கண்டு
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு
இதில் என்ன பாவம் எதர்கிந்த சோகம் கிளியே...

(நலம் வாழ..)

கிழக்கினில் தினம் தோன்றும் கதிரானது
மறைவதும் பின்பு உதிப்பதும் இயல்பானது

கடலினில் உருவாகும் அலையானது
விழுவதும் பின்பு எழுவதும் மரபானது
நிலவினை நம்பி வெளிச்சத்தின் எல்லை
ஒரு வாசல் மூடி மறுவாசல் வைப்பான் இறைவன்.
(நலம் வாழ..)


படம்: மறுபடியும்
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
பாடலாசிரியர்: வாலி


சொக்கத்தங்கம் எனச் சொல்லக்கூடிய பாடலிது!
சோர்ந்த மனத்திற்கு நம்பிக்கையையும் உற்சாகத்தையும்
தரும் இதமான சொற்களின் இனிய சேர்க்கை இது..!

Surely, ' THE BEST WORDS IN THE BEST ORDER..! '

இளையராஜாவின் அற்புதம்...!
S P B யின் வருடலான இசைப்பு...!
வாலியின் மற்றுமொரு வைரம்...!

அன்புடன்,
சுந்தரம்
 
மனங்கவரும் பாடல்களோடு பல புதிய தகவல்களையும் தந்து அசத்துகிறீர்கள். நன்றியும் பாராட்டும். தொடர்ந்து வழங்குங்கள்.

சில பதிவுகள் பின்னூட்டங்களையும் மீறி மனத்துக்கு ஒருவித அமைதியை நல்கி மௌனமாய் திரும்பச்செய்துவிடும். ரமணி அவர்களின் கவிதைகள் அந்தமாதிரியான சுகானுபவம் தரக்கூடியவை. நான் அவற்றைத் தொடர்ந்து வாசித்தாலும் இதுவரை பின்னூட்டமிட வார்த்தைகள் வரவில்லை. மலைப்புடன் வியப்புடன் தொடர்ந்து ரசித்துக்கொண்டிருக்கிறேன்.

இங்கு தாங்கள் வழங்கும் திரைப்பாடல்களும் அந்த வகையில் சில பழைய நினைவுகளைக் கிளறி ஆசுவாசப்படுத்துகின்றன. பின்னூட்டங்கள் இல்லையென்பதாலேயே எவரும் ரசிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்துவிடவேண்டாம். தொடர்ந்து வழங்குங்கள். ஒரு அற்புதமான ஆவணப்பதிவாக நம் மன்றத்தில் என்றென்றும் அவை நிலைத்திருக்கும்.
 
Back
Top