ஆதவா
New member
மகதீரா வந்தபொழுது நம் மன்றத்தில் விமர்சனம் பதித்தேனா(பதித்தோமா) என்று நினைவிலில்லை, ஆனால் அதன் திரைத்தொழில் நுட்பம் குறித்து பேசியது ஞாபகத்திற்கு வருகிறது. பொதுவாகவே தெலுங்கு படமென்றால் ஒரு சில மதிப்பீடுகள் எனக்குண்டு. மசாலாத்தனமும், கிளூகிளுப்பும் தமிழைக் காட்டிலும் அதிகம், புராண, கடவுள, விட்டலாச்சாரிய படங்களின் ஓட்டங்கள், குறிப்பிடும்படியான தொழில்நுட்ப அறிவும் அதிகம் என்று. தவிர தமிழைப் போல நல்ல வியாபார வட்டாரமும் அதிகம். இவையாவற்றிற்கும் கொஞ்சம் கொஞ்சமாக எனக்குள்ளேயே மாற்றுக்கருத்து உருவாகிவருகிறது. பொதுவாக தெலுங்கு படம் பார்க்கும் அனைவருக்குமே..
எஸ்.எஸ்.ராஜமெளலி எனும் இயக்குனரை மகதீரா வந்த பொழுதுதான் தெரியும். ஆயிரத்தில் ஒருவன் வந்த சமயம் அதைவிட பிரம்மாண்டமாய், திரைக்கதை நேர்த்தியாய் எடுக்கப்பட்ட படம் என்று தேடிப்பிடித்து தரவிறக்கிப் பார்த்தேன். சொல்லவேண்டியதேயில்லை அந்த படம் இந்திய அளவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றால் அது மிகையென சொல்லமுடியாது. அதே இயக்குனரின் நான் ஈ, கொஞ்சம் எதிர்பார்ப்பை அதிகம் கூட்டிய படம் என்பதற்கு ஒரே காரணம், “கிராஃபிக்ஸ்” எனப்படும் திரைத்தொழில்நுட்பம்!! என்னைப் பொறுத்தவரையிலும் எந்திரனின் கிராஃபிக்ஸ் நுட்பம் ஒட்டுமொத்த இந்தியமொழி படங்களிலெயே குறிப்பிடும்படியான முன்னேற்றத்தை அடைந்தது என்பதை மறுக்கமுடியாது. அதேசமயம் மகதீராவும் குறைந்ததல்ல. இப்பொழுது நான் ஈ யும்!
ஒரு திரைப்படம் வெற்றிபெற மிகமுக்கிய காரணம் அத திரைக்கதை! வெறும் கிராஃபிக்ஸ் காட்சிகள் மட்டும் இருந்துவிட்டால் போதாது, திரைக்கதை எனும் உத்தி நம்மை சலிப்படையாமல் பார்க்கச் செய்ய வேண்டும். அதனை மிக நேர்த்தியாக செய்திருக்கிறது நான் ஈ. கிராஃபிக்ஸுடனான ஒரு பொழுதுபோக்கு திரைப்படம் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணமாக இருக்கிறது இப்படம்.
கதை ஒன்றும் பெரியதாக, சிக்கலானதாக இல்லை, சொல்லப்போனால் விட்டலாச்சாரியா காலத்து கதை எனும் பொதுவான போக்கில் சொல்லிவிடமுடியும். காதலுக்காக தன்னைக் கொன்றவனை மீண்டும் மறுபிறவி எடுத்து பழிவாங்கும் கதைதான். மகதீராவும் இதேமாதிரியான கதையில் இருந்தாலும் அது சொன்னவிதமும் இது சொன்னவிதமும் ஒரே மரத்தின் இரு நீண்ட கிளைகளைப் போல வெகுவாக மாறியிருக்கிறது. அங்கேதான் இயக்குனர் ஜெயிக்கிறார். ஒரு தந்தை, மகளுக்கு சொல்லும் பெட்டைம் ஸ்டோரி மாதிரிதான் கதை ஆரம்பிக்கிறது. நானிக்கும் சமந்தாவுக்கும் காதல், ( கொஞ்சம் அழுத்தமற்ற காதல் என்றாலும் கதைப்படி அவர்கள் காதலர்கள் என்று சொன்னால் போதும் என்று இயக்குனர் நினைத்திருக்கலாம் ) பெண்களின் மேல் எப்போதும் மோகம் கொண்டலையும் சுதீப் ஒரு மிகப்பெரிய தொழிலதிபர். சமந்தா மேல் காதல் கொள்ளும் அவருக்கு இடையெ நிற்பது நானியின் காதல், வேறென்ன? நானியை தீர்த்துக் கட்டிவிட்டு சமந்தாவிடம் அனுதாபம் காட்டுகிறார். நானி ஒரு ஈயாக மறுபிறவியெடுத்து எப்படி சுதீப்பைக் கொல்கிறார் என்று திரைக்கதையில் காட்டுகிறார்கள்.
அதெப்படி ஈயால் ஒரு மனிதனைக் கொல்ல முடியும்? என்று கேள்வி கேட்பவர்கள் இந்த படத்தைப் பார்க்கலாம்.. சூழல் ஒத்து வந்தால் செய்யமுடியுமோ என்று ஒரு கணம் யோசிக்கவைக்கிறது இந்த ”ஈ”. உதாரணத்திற்கு நமது மூக்கில் ஈ புகுந்துவிட்டால் நாம் என்ன செய்வோம் என்று ஒரு கணம் யோசித்தால் போதும்..
நானி, கொஞ்ச நேரமே வந்தாலும் சுமாராகவே நடித்திருந்தாலும் பரவாயில்லை... ஒத்துக்கொள்ளுகிறது மனம். சமந்தா ஒரு அழகு தேவதை. (ரொம்ப பழைய டயலாக்கா இருக்கோ?) நடிப்பும் நன்றாகவே இருக்கிறது. இவர்களை விட வில்லன் சுதீப்தான் படத்தை முழுக்க தாங்கி நிற்கிறார். மிக அற்புதமான நடிப்பு, கிராஃபிக்ஸ் ஈ என்பதால் பார்க்காத ஒன்றை மனதில் இருத்தி நடிப்பது அவ்வளவு சுலபமல்ல, மிக அற்புதம்.
ஈ க்கான கிராஃபிக்ஸ் மிக அற்புதம், தரமான முன்னேற்றம், ஒரு நிஜ ஈயை கண்ணில் நிறுத்தி ஆட்டம் ஆடியிருக்கிறார்கள் படக்குழுவினர். அதுமட்டுமல்ல, வெகு சில இடங்களில் வரும் சிஜி துருத்திக் கொண்டு நிற்காமல் மிக கவனமாக நுணுக்கமாக அமைந்திருப்பதுதான் மிகப்பெரிய முன்னேற்றம்.. சொல்லப்போனால் இவ்வளவு கிராஃபிக்ஸ் நேர்த்தியோடு ஒரு முழு திரைப்படம் இதுவரை இந்திய அளவிலேயே வெளிவரவில்லை என்று சொன்னால் அது மிகையானதல்ல..
சந்தானம் படத்தினிடையே ஒரு நிமிடமும், அதன் தொடர்ச்சியாக படம் முடிவில் பலநிமிடங்களும் வந்து கிச்சு கிச்சு மூட்டுகிறார்.
ஒளி, ஒலி, வசனம், இசை என எல்லாமே சரிசமமாக இருக்கிறது. பாடல்கள் சுமார்தான் என்றாலும் பாடல் வந்துபோவதே தெரியவில்லை, சலிப்பில்லை
தெலுங்கு வாடைக்கு ஒரு மந்திரவாதி வந்தாலும் பெரியதாக எந்த “எஃபெக்ட்”உம் இல்லை!!
ஈயின் வாழ்நாளே ஓரிரண்டு நாட்கள்தான் என்றாலும் அந்த லாஜிக் “கதை சொல்லலில்” கிடையாது என்பதால் தைரியமாக ரசிக்கலாம்.
குடும்பத்தோடு குதூகலமாக கொண்டாட அருமையான திரைப்படம் ஈ!!!!