இத்திரியைத் துவங்கி எழுதச் சொன்ன சிவாஜி சாருக்கு என் மனமார்ந்த நன்றி.
இரண்டு மூன்று பக்கங்களுக்குள் முடித்து விட நினைத்தால் அது நீண்டு கொண்டே செல்கிறது. அடுத்த பதிவில் முடிக்க முயல்கிறேன்.
இனி என் ஊருக்குச் செல்வோம்.
நான் பிறந்த ஊர் காரைக்கால். ஆனால் நன்றாக நினைவு தெரிந்தது முதல் வளர்ந்த ஊர் திருநள்ளாறு என்பதால் என் ஊர் என்றதுமே முதலில் நினைவுக்கு வருவது இவ்வூர் தான்.
காரையிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தள்ளியிருக்கும் கிராமம் தான் திருநள்ளாறு. இவ்வூர் சனிப்பெயர்ச்சிக்குப் பெயர் பெற்ற ஊர். சனியால் பிடிக்கப்பட்டு நாடிழந்து அவதியுற்ற நளன், இவ்வூரில் உள்ள குளத்தில் குளித்து, தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் வழிபட்ட பிறகு, துன்பங்கள் அனைத்தும் நீங்கி நலம் பெற்றதாக தலப் புராணம் கூறுகிறது. எனவே ஒவ்வொரு சனிப்பெயர்ச்சியின் போதும், இவ்வூருக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.
பத்துப் பனிரெண்டு தெருக்களுடன் கூடிய சற்றே பெரிய கிராமம் திருநள்ளாறு. இவ்வூரைச் சுற்றிப் பேட்டை, செல்லூர், சுப்பராயபுரம் எனக்குட்டிக் குட்டிக் கிராமங்கள் இருந்தன.
இவ்வூரின் நடுநிலைப் பள்ளிக்குத் தலைமை யாசிரியராக என் தந்தை பொறுப்பேற்ற போது, நான் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அதுவரை காரையில் குடியிருந்த நாங்கள், தந்தையின் பணிமாற்றம் காரணமாகத் திருநள்ளாற்றுக்குக் குடி பெயர்ந்தோம்.
இப்பள்ளியின் வளாகத்திலேயே எங்களுக்கு வீடு ஒதுக்கப் பட்டிருந்தது. இப்பள்ளிக்கூட வீட்டு நினைவுகள் தாம் என்றென்றும் பசுமையான நினைவுகளாக என் நினைவுக் குறிப்பில் இடம் பெற்றுள்ளன.
’அரசினர் நடுநிலைப் பள்ளி,’ என்ற பெயர் தாங்கிய பலகையைச் சுமந்த வண்ணம், பள்ளியின் இரும்புக் கதவு காட்சியளிக்கும். அதைச் சுற்றி நான்கு புறமும் ஓங்கிய மதிற் சுவர்கள். இரும்புக்கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தால், ஒரு பெரிய மைதானம். அதில் கிழக்குப் பக்கம் வாதாம் மரமும் இடப்பக்கம் ஒரு பெரிய வேப்ப மரமும் இருந்தன. வேப்பமரத்தைத் தாண்டிப் போனால் எங்களது வீடு. வாசற் புறமும் அடுப்பங்கரையும் கூரையால் வேய்ந்தது. நடுவில் ஒரு ஹால் மட்டும் ஓட்டு வீடு. வேப்பரமரமும் வாதாம் மரமும் வானுயர வளர்ந்து, தம் கிளைகளைப் ப்ரப்பிக் கொண்டு மைதானம் முழுவதையும், வெயிலை அண்டவிடாமல் காத்தமையால், எங்கள் வீடு எப்போதுமே குளு குளு என்றிருக்கும்.
பருவநிலை மாறுதலுக்கேற்ப, வாதாம் மரமும் தன் கோலத்தை மாற்றிக் கொண்டு விதவிதமாய்க் காட்சியளிக்கும். இலையுதிர் காலத்தில் இலைகள் அனைத்தும் மஞ்சளாகவும் சிவப்பாகவும் மாறி மைதானம் முழுக்கக் கொட்டிக் கிடக்கும். இலைமுழுதும் கொட்டி மொட்டையான பிறகு, இளவேனிற் காலத்தில் ஒவ்வொரு சிறு காம்பின் முனையிலும் கைகளைக் குவித்து வணக்கம் செய்வது போல் கூம்பு கூம்பாக துளிர்த்து நிற்கும் காட்சி! அடடா! எவ்வளவு அருமையான காட்சி!
ஏப்ரல் மாதத்தில் வேப்பமரப் பூக்கள் மைதானம் முழுக்க பாய் விரித்தது போல் கொட்டிக் கிடக்கும். இவை சுழட்டி விடப்பட்டப் பம்பரம் போல் சர் சர் என்று சுழன்று தரையில் விழும் காட்சியை இன்றைக்கெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அம்மா தரையில் தடுக்கைப் போட்டு இப்பூக்களைச் சேகரித்து வெயிலில் காய வைத்து சுவையான வேப்பம்பூ ரசம் வைப்பார்.
பள்ளி அமைந்திருந்த தெரு தான் ஊரின் முக்கிய வீதி. காரையிலிருந்து அம்பகரத்தூர், பேரளம் செல்லும் பேருந்துகள் இந்த வீதி வழியாகவே செல்லும். இத்தெருவின் நடுநாயகமாகப் பள்ளி அமைந்திருந்தது. பள்ளியின் இடப்புறம் ஏழெட்டு க்ட்டிடங்கள் தள்ளி தபால் நிலையம், அதிலிருந்து நாலைந்து கட்டிடங்கள் தாண்டி பேருந்து நிலையம். இதன் பக்கத்தில் சிறிய கடைத் தெரு இருந்தது. மளிகை, காய்கறி போன்ற மிகவும் இன்றியமையாத பொருட்கள் தவிர மற்ற சாமான்கள், துணிமணி வாங்க காரைக்குத் தான் செல்ல வேண்டும். நல்ல தரமான ஹோட்டல்களோ, தங்கும் விடுதிகளோ இங்குக் கிடையாது.
பள்ளியின் இடப்பக்கத்தில் கொஞ்ச தூரத்தில் காவல் நிலையம். கிராமம் என்பதால் எல்லாமே கூப்பிடு தூரத்தில் தான்.
எங்கள் தெருவிற்குப் பக்கத்துத் தெருவில் தான் கோவில் அமைந்திருந்தது. எங்கள் வீட்டிலிருந்து பார்த்தால் கோயிலின் சொர்க்க வாசல் தெரியும். ஏகாதசி அன்று மட்டும் இக்கதவு திறக்கப்படும். அதற்குப் பக்கத்தில் ஒரு பெரிய குளம் இருந்தது. இப்போது இந்தக் குளம் இருந்த இடம் தெரியாமல் தூர்த்துக் கட்டிடங்களை எழுப்பி விட்டார்கள்.
எங்கள் வீட்டுக்கு நேர் எதிரே இரண்டு மூன்று குடிசைகள். அதில் யார் யார் இருந்தார்கள் என்பதெல்லாம் இப்போது நினைவிலில்லை. அதில் ஒன்று மட்டும் அம்மணி வீடு.
அம்மணி மலையாளி. அன்றலர்ந்த ரோஜா மலர் போல அவ்வளவு அழகாக இருப்பார். அவரது அம்மாவின் கட்டுக்காவலை மீறி எப்போதாவது எங்கள் வீட்டுக்கு ஓடி வருவார். அம்மாவும் துரத்திக் கொண்டே பின்னால் வருவார். எங்கள் வீட்டு வாசலில் இருக்கும் கனகாம்பரத்தைக் காட்டி, ”இதைப் பறித்துக் கொள்ளவா?” என்று கேட்பார். நாங்கள் சரி என்று தலையாட்டியவுடன், அதைப் பறித்துக் கொண்டு நல்ல பிள்ளையாக தம் அம்மாவுடன் வீட்டுக்குத் திரும்பி விடுவார்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்பதால் இவரது மனநிலை பிறழ்ந்து விட்டதாக என் அம்மா மூலம் கேள்விப்பட்டேன். மனநோய் பற்றிய விழிப்புணர்வு அப்போது இல்லாத காரணத்தால், எல்லோரும் இவரைப் பைத்தியம் என்றே கிண்டலாகக் குறிப்பிட்டனர்..
அவருக்குப் பேய் பிடித்திருப்பதாகச் சொல்லி அம்மணியின் அம்மா, மந்திரவாதிகள் பலரை வீட்டுக்கு வரவழைத்தார். பேயை விரட்டுகிறேன் என்ற பெயரில் அம்மந்திரவாதிகள் அப்பெண்ணை என்ன பாடு படுத்தினார்க்ளோ, எப்படியெல்லாம் கொடுமை செய்தார்களோ என இப்போது நினைத்துப் பார்க்கும் போது நெஞ்சம் நடுங்குகிறது..
எங்கள் வீட்டுக்கு வருகை தரும் விருந்தினரைக் கோவிலுக்கு அழைத்துப் போவது என் வேலை. சுவாரசியமாக விளையாடிக் கொண்டிருக்கையில் என்னைக் கூப்பிட்டு, வீட்டுக்கு வந்தவர்களைக் கோவிலுக்கு அழைத்துச் செல்லச் சொல்வார் அம்மா. என்னைத் தவிர மற்ற அனைவரும் விளையாட்டைத் தொடர, நான் மட்டும் பாதியில் கைவிட்டுக் கோயிலுக்குச் செல்லும் போது கடுப்பாக இருக்கும். ஏற்கெனவே பார்த்துப் பார்த்துச் சலித்துப் போன இடங்களுக்குத் திரும்பத் திரும்ப உறவினரை அழைத்துச் சென்று காண்பித்தல், பிடிக்காத வேலையாகவிருந்தாலும், அம்மாவின் உத்தரவுக்குப் பய்ந்து வேறு வழியில்லாமல் செய்து வர வேண்டியதாயிற்று. எனவே ’கோயிலுள்ள(!) ஊரில் குடியிருக்க வேண்டாம்,’ என்ற புது மொழி, அப்போது எனக்குள்ளே உதயமாயிற்று.
கோயிலுக்கு எதிரில் இருந்த சன்னதி தெருவில் தான் பெரும்பாலான தோழிகளின் வீடுகள் அமைந்திருந்தன. அதனால் அடிக்கடி நான் அங்குச் செல்வது வழக்கம். அதற்கு நேர் எதிரே தேர் ஒன்று நிறுத்தப் பட்டிருக்கும். நாங்கள் அந்த ஊரில் இருந்தவரை அது ஓடிப் பார்த்ததில்லை. காரைக்கால் வந்த பிறகு அந்தத் தேர் ஓடியது பற்றிக் கேள்விப்பட்டேன். தேரை இழுக்கும் போது ஏற்பட்ட கோளாறினால், தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளானது என்றும், அதில் சிலரது கால்கள் (என் நண்பியின் அண்ணன் உட்பட) முறிந்து விட்டன என்றும் கேள்விப்பட்டேன்.
அந்தத் தேரடிக்குப் பக்கத்தில் தெப்பக்குளமிருந்தது. சன்னதி தெருவிலிருந்தவர்கள் இந்தக் குளத்தில் தான் நீராடுவார்கள். இக்குளத்தைப் பற்றி எழுதுகையில் என் தோழி சுந்தரியின் நினைவு வருவதைத் தவிர்க்க இயலவில்லை. அவளுடன் இக்குளத்துக்கு ஓரிருமுறை நான் சென்றிருக்கிறேன்.
எனக்கு நீச்சல் தெரியாதென்பதால், கரையில் ஏக்கத்துடன் (சற்றுப் பொறாமையுடனும் தான்) அவளைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்க, அவள் மூச்சைத் ’தம்’ கட்டிக் குளத்துக்குள் மூழ்குவதும், பின் நீந்திக் கொண்டே குளத்தைச் சுற்றி சுற்றிக் குதியாட்டம் போட்ட வண்ணமுமாய் இருப்பாள். சில சமயம் குளத்துக்குள் போனவளைக் காணோமே என நான் பதட்டத்துடன் பார்க்க, அவளோ தண்ணீருக்கடியில் தம் பிடித்துக் கொண்டே சென்று நட்டநடுவில் திடீரென்று மேலெழும்பி, அங்கிருக்கும் கோபுரத்தைத் தொட்டுக் கொண்டு சிரிப்பாள்.
எனக்குத் தெரியாத ஒன்று, அவளுக்குத் தெரிந்திருப்பதில் அலாதிப் பெருமை அவளுக்கு. ஒன்பதாவது வகுப்பில் இவள் தேர்ச்சி பெறாமையால், எனக்கும் இவளுக்கும் இருந்த நட்பில் இடைவெளி விழுந்து விட்டது.
பல ஆண்டுகள் கழித்து காரையில் இவளைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதாகச் சொன்னாள். கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அது தான் அவளுடனான கடைசிச் சந்திப்பு. தெப்பக் குளத்தின் நீர்க்குமிழி போலவே, அவளது வாழ்வும் புற்று நோய் காரணமாக அற்பாயுசிளில் முடிந்து போன விஷயம் தெரிய வந்த போது மனம் மிகவும் வேதனைக்குள்ளானது.
(தொடரும்)