என் ஊர்....!!!!!

சிவா.ஜி

நட்சத்திரப் பதிவாளர்
இந்தப்பதிவை ஏன் இந்தப்பகுதியில் தொடங்கினேன்....நம் ஊரைப்பற்றிய நினைவுகள் என்றுமே சுவையான சம்பவங்கள்தானே.....மட்டுமல்லாது...மிகச் சுகமான சம்பவங்களும் கூட..

மன்ற உறவுகள்...இன்று சொந்த ஊர் விட்டு....வாழ்க்கையின் நகர்த்துகலுக்குள்ளாகி....நகரம் நாடியிருக்கலாம்.....நாடுகள்....மாறியிருக்கலாம்....ஆனால்...மனதின் உள்ளில்....அவர்கள் வளர்ந்த....அவர்களை வளர்த்த சொந்த ஊரின் நினைவுகள்.....இன்பமாய் உள்ளத்தில் அமர்ந்திருக்கும்.

தங்களின் சொந்த ஊரின் நினைவுகளை....பகிர்ந்துகொள்ளுங்கள் உறவுகளே......!!!
 
பாஸ்..

ஆயிரங்கள் தொடும்போது பிரத்யேகப் பதிவு கொடுத்தது ஒரு காலம்.. 20000 என நீங்கள் சொன்ன பின் மீண்டும் கொடுக்கலாமோ என்று எண்ணினேன். அதையே சற்று வித்தியாசமாக கொடுக்க வைத்து விட்டீர்கள்..

பிறந்த மண்ணையும் மன்றத்தையும் என்னாலும் மறக்க முடியாது. மன்றத்தில் இருபதாயிரம் தொடும் இந்த நேரத்தில் எந்தன் ஊரை நினைவு கூருகிறேன்..

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=24181

நன்றி பாஸ்
 
பாஸ்...நான் மன்றம் வராத நாட்களில் பதிந்த இந்த இரத்தினப் பதிவைக் காணக்கொடுத்தமைக்கு நன்றி. தெள்ளுதமிழில் சொல்லிச் சென்ற உள்ளம் கவர்ந்த சொந்த ஊரின் நினைவுகளை உங்கள் எழுத்தில் வாசிக்க வாசிக்க....நல்லக் காற்றை சுவாசித்ததைப்போல உணர்ந்தேன்.

இந்த சுவாசத்தை...மற்ற மன்ற உறவுகளிடமிருந்தும் பெற்று சுவாசிக்கும் ஆவலுடனே இத் திரியைத் தொடங்கினேன்.
 
ஆமாம் பாஸ்..

என் ஊர் எனும் போது நிமிரும் நெஞ்சும், அகலும் விழிகளில் ஏறும் அகலும், காண்போர் மனசுக்கு சாமரமாகும். அந்த சுகம் தரும் திரியாக இது நீளும்.
 
மிக உண்மை பாஸ்.

அன்பு உறவுகளே உங்கள் சொந்த ஊரைப்பற்றி சுவைபட சொல்லுங்கள்.....வாசிக்கும் உறவுகள்....ஒரு பதிவுக்கும் அடுத்தவரின் தன் ஊரைப் பற்றிய பதிவுக்கும் இடையில்...சற்று இடைவெளிக் கொடுக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.

வாசித்ததை சிலாகிக்க சந்தர்ப்பம் வேண்டுமென்பதாலேயேதான்.....!!!

புரிதலுக்கு நன்றி....உள்ளம் திறவுங்கள் உறவுகளே....!!!
 
பாஸ்..

ஆயிரங்கள் தொடும்போது பிரத்யேகப் பதிவு கொடுத்தது ஒரு காலம்.. 20000 என நீங்கள் சொன்ன பின் மீண்டும் கொடுக்கலாமோ என்று எண்ணினேன். அதையே சற்று வித்தியாசமாக கொடுக்க வைத்து விட்டீர்கள்..

பிறந்த மண்ணையும் மன்றத்தையும் என்னாலும் மறக்க முடியாது. மன்றத்தில் இருபதாயிரம் தொடும் இந்த நேரத்தில் எந்தன் ஊரை நினைவு கூருகிறேன்..

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=24181

நன்றி பாஸ்


திரி கண்டேன்...!!!. அமரன் அவர்களின் எழுத்தில் நான் பிறந்த மண் மட்டக்களப்பின் பசுமையான நினைவுகள் என் மனத்திரையில் நிழல் போல் ஓட ஆரம்பித்திருக்கின்றது. எண்ணங்கள் கோர்வையாகும்போது திரியில் பகிர ஆசை.
 
வாங்க ஜெயந்த்....வாங்க டாக்டர் சார்...உங்களின் மனம் திறத்துலுக்காகத்தானே இந்தப் பகுதி....சொல்லுங்கள்....கேட்க மிக ஆவலாய் இருக்கிறோம்.
 
வாழ்வின் காற்றுப்போக்கில், எங்கெங்கோ புலம்பெயர நேர்ந்தாலும், சொந்த ஊர் நினைவுகள் சுகமாய், சோலைப்பசுமையாய், என்றென்றும் நெஞ்சில் தித்திக்கும்..

அத்தகைய ஒரு ஆனந்த அசைபோடலுக்கு களம் அமைத்துத் தந்திருக்கும் எங்கள் சிவாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி..!
 
இத்திரியைத் துவங்கி எழுதச் சொன்ன சிவாஜி சாருக்கு என் மனமார்ந்த நன்றி.

இரண்டு மூன்று பக்கங்களுக்குள் முடித்து விட நினைத்தால் அது நீண்டு கொண்டே செல்கிறது. அடுத்த பதிவில் முடிக்க முயல்கிறேன்.

இனி என் ஊருக்குச் செல்வோம்.

நான் பிறந்த ஊர் காரைக்கால். ஆனால் நன்றாக நினைவு தெரிந்தது முதல் வளர்ந்த ஊர் திருநள்ளாறு என்பதால் என் ஊர் என்றதுமே முதலில் நினைவுக்கு வருவது இவ்வூர் தான்.


காரையிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தள்ளியிருக்கும் கிராமம் தான் திருநள்ளாறு. இவ்வூர் சனிப்பெயர்ச்சிக்குப் பெயர் பெற்ற ஊர். சனியால் பிடிக்கப்பட்டு நாடிழந்து அவதியுற்ற நளன், இவ்வூரில் உள்ள குளத்தில் குளித்து, தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் வழிபட்ட பிறகு, துன்பங்கள் அனைத்தும் நீங்கி நலம் பெற்றதாக தலப் புராணம் கூறுகிறது. எனவே ஒவ்வொரு சனிப்பெயர்ச்சியின் போதும், இவ்வூருக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.

பத்துப் பனிரெண்டு தெருக்களுடன் கூடிய சற்றே பெரிய கிராமம் திருநள்ளாறு. இவ்வூரைச் சுற்றிப் பேட்டை, செல்லூர், சுப்பராயபுரம் எனக்குட்டிக் குட்டிக் கிராமங்கள் இருந்தன.

இவ்வூரின் நடுநிலைப் பள்ளிக்குத் தலைமை யாசிரியராக என் தந்தை பொறுப்பேற்ற போது, நான் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அதுவரை காரையில் குடியிருந்த நாங்கள், தந்தையின் பணிமாற்றம் காரணமாகத் திருநள்ளாற்றுக்குக் குடி பெயர்ந்தோம்.

இப்பள்ளியின் வளாகத்திலேயே எங்களுக்கு வீடு ஒதுக்கப் பட்டிருந்தது. இப்பள்ளிக்கூட வீட்டு நினைவுகள் தாம் என்றென்றும் பசுமையான நினைவுகளாக என் நினைவுக் குறிப்பில் இடம் பெற்றுள்ளன.

’அரசினர் நடுநிலைப் பள்ளி,’ என்ற பெயர் தாங்கிய பலகையைச் சுமந்த வண்ணம், பள்ளியின் இரும்புக் கதவு காட்சியளிக்கும். அதைச் சுற்றி நான்கு புறமும் ஓங்கிய மதிற் சுவர்கள். இரும்புக்கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தால், ஒரு பெரிய மைதானம். அதில் கிழக்குப் பக்கம் வாதாம் மரமும் இடப்பக்கம் ஒரு பெரிய வேப்ப மரமும் இருந்தன. வேப்பமரத்தைத் தாண்டிப் போனால் எங்களது வீடு. வாசற் புறமும் அடுப்பங்கரையும் கூரையால் வேய்ந்தது. நடுவில் ஒரு ஹால் மட்டும் ஓட்டு வீடு. வேப்பரமரமும் வாதாம் மரமும் வானுயர வளர்ந்து, தம் கிளைகளைப் ப்ரப்பிக் கொண்டு மைதானம் முழுவதையும், வெயிலை அண்டவிடாமல் காத்தமையால், எங்கள் வீடு எப்போதுமே குளு குளு என்றிருக்கும்.

பருவநிலை மாறுதலுக்கேற்ப, வாதாம் மரமும் தன் கோலத்தை மாற்றிக் கொண்டு விதவிதமாய்க் காட்சியளிக்கும். இலையுதிர் காலத்தில் இலைகள் அனைத்தும் மஞ்சளாகவும் சிவப்பாகவும் மாறி மைதானம் முழுக்கக் கொட்டிக் கிடக்கும். இலைமுழுதும் கொட்டி மொட்டையான பிறகு, இளவேனிற் காலத்தில் ஒவ்வொரு சிறு காம்பின் முனையிலும் கைகளைக் குவித்து வணக்கம் செய்வது போல் கூம்பு கூம்பாக துளிர்த்து நிற்கும் காட்சி! அடடா! எவ்வளவு அருமையான காட்சி!

ஏப்ரல் மாதத்தில் வேப்பமரப் பூக்கள் மைதானம் முழுக்க பாய் விரித்தது போல் கொட்டிக் கிடக்கும். இவை சுழட்டி விடப்பட்டப் பம்பரம் போல் சர் சர் என்று சுழன்று தரையில் விழும் காட்சியை இன்றைக்கெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அம்மா தரையில் தடுக்கைப் போட்டு இப்பூக்களைச் சேகரித்து வெயிலில் காய வைத்து சுவையான வேப்பம்பூ ரசம் வைப்பார்.

பள்ளி அமைந்திருந்த தெரு தான் ஊரின் முக்கிய வீதி. காரையிலிருந்து அம்பகரத்தூர், பேரளம் செல்லும் பேருந்துகள் இந்த வீதி வழியாகவே செல்லும். இத்தெருவின் நடுநாயகமாகப் பள்ளி அமைந்திருந்தது. பள்ளியின் இடப்புறம் ஏழெட்டு க்ட்டிடங்கள் தள்ளி தபால் நிலையம், அதிலிருந்து நாலைந்து கட்டிடங்கள் தாண்டி பேருந்து நிலையம். இதன் பக்கத்தில் சிறிய கடைத் தெரு இருந்தது. மளிகை, காய்கறி போன்ற மிகவும் இன்றியமையாத பொருட்கள் தவிர மற்ற சாமான்கள், துணிமணி வாங்க காரைக்குத் தான் செல்ல வேண்டும். நல்ல தரமான ஹோட்டல்களோ, தங்கும் விடுதிகளோ இங்குக் கிடையாது.

பள்ளியின் இடப்பக்கத்தில் கொஞ்ச தூரத்தில் காவல் நிலையம். கிராமம் என்பதால் எல்லாமே கூப்பிடு தூரத்தில் தான்.


எங்கள் தெருவிற்குப் பக்கத்துத் தெருவில் தான் கோவில் அமைந்திருந்தது. எங்கள் வீட்டிலிருந்து பார்த்தால் கோயிலின் சொர்க்க வாசல் தெரியும். ஏகாதசி அன்று மட்டும் இக்கதவு திறக்கப்படும். அதற்குப் பக்கத்தில் ஒரு பெரிய குளம் இருந்தது. இப்போது இந்தக் குளம் இருந்த இடம் தெரியாமல் தூர்த்துக் கட்டிடங்களை எழுப்பி விட்டார்கள்.

எங்கள் வீட்டுக்கு நேர் எதிரே இரண்டு மூன்று குடிசைகள். அதில் யார் யார் இருந்தார்கள் என்பதெல்லாம் இப்போது நினைவிலில்லை. அதில் ஒன்று மட்டும் அம்மணி வீடு.

அம்மணி மலையாளி. அன்றலர்ந்த ரோஜா மலர் போல அவ்வளவு அழகாக இருப்பார். அவரது அம்மாவின் கட்டுக்காவலை மீறி எப்போதாவது எங்கள் வீட்டுக்கு ஓடி வருவார். அம்மாவும் துரத்திக் கொண்டே பின்னால் வருவார். எங்கள் வீட்டு வாசலில் இருக்கும் கனகாம்பரத்தைக் காட்டி, ”இதைப் பறித்துக் கொள்ளவா?” என்று கேட்பார். நாங்கள் சரி என்று தலையாட்டியவுடன், அதைப் பறித்துக் கொண்டு நல்ல பிள்ளையாக தம் அம்மாவுடன் வீட்டுக்குத் திரும்பி விடுவார்.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்பதால் இவரது மனநிலை பிறழ்ந்து விட்டதாக என் அம்மா மூலம் கேள்விப்பட்டேன். மனநோய் பற்றிய விழிப்புணர்வு அப்போது இல்லாத காரணத்தால், எல்லோரும் இவரைப் பைத்தியம் என்றே கிண்டலாகக் குறிப்பிட்டனர்..

அவருக்குப் பேய் பிடித்திருப்பதாகச் சொல்லி அம்மணியின் அம்மா, மந்திரவாதிகள் பலரை வீட்டுக்கு வரவழைத்தார். பேயை விரட்டுகிறேன் என்ற பெயரில் அம்மந்திரவாதிகள் அப்பெண்ணை என்ன பாடு படுத்தினார்க்ளோ, எப்படியெல்லாம் கொடுமை செய்தார்களோ என இப்போது நினைத்துப் பார்க்கும் போது நெஞ்சம் நடுங்குகிறது..


எங்கள் வீட்டுக்கு வருகை தரும் விருந்தினரைக் கோவிலுக்கு அழைத்துப் போவது என் வேலை. சுவாரசியமாக விளையாடிக் கொண்டிருக்கையில் என்னைக் கூப்பிட்டு, வீட்டுக்கு வந்தவர்களைக் கோவிலுக்கு அழைத்துச் செல்லச் சொல்வார் அம்மா. என்னைத் தவிர மற்ற அனைவரும் விளையாட்டைத் தொடர, நான் மட்டும் பாதியில் கைவிட்டுக் கோயிலுக்குச் செல்லும் போது கடுப்பாக இருக்கும். ஏற்கெனவே பார்த்துப் பார்த்துச் சலித்துப் போன இடங்களுக்குத் திரும்பத் திரும்ப உறவினரை அழைத்துச் சென்று காண்பித்தல், பிடிக்காத வேலையாகவிருந்தாலும், அம்மாவின் உத்தரவுக்குப் பய்ந்து வேறு வழியில்லாமல் செய்து வர வேண்டியதாயிற்று. எனவே ’கோயிலுள்ள(!) ஊரில் குடியிருக்க வேண்டாம்,’ என்ற புது மொழி, அப்போது எனக்குள்ளே உதயமாயிற்று.

கோயிலுக்கு எதிரில் இருந்த சன்னதி தெருவில் தான் பெரும்பாலான தோழிகளின் வீடுகள் அமைந்திருந்தன. அதனால் அடிக்கடி நான் அங்குச் செல்வது வழக்கம். அதற்கு நேர் எதிரே தேர் ஒன்று நிறுத்தப் பட்டிருக்கும். நாங்கள் அந்த ஊரில் இருந்தவரை அது ஓடிப் பார்த்ததில்லை. காரைக்கால் வந்த பிறகு அந்தத் தேர் ஓடியது பற்றிக் கேள்விப்பட்டேன். தேரை இழுக்கும் போது ஏற்பட்ட கோளாறினால், தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளானது என்றும், அதில் சிலரது கால்கள் (என் நண்பியின் அண்ணன் உட்பட) முறிந்து விட்டன என்றும் கேள்விப்பட்டேன்.

அந்தத் தேரடிக்குப் பக்கத்தில் தெப்பக்குளமிருந்தது. சன்னதி தெருவிலிருந்தவர்கள் இந்தக் குளத்தில் தான் நீராடுவார்கள். இக்குளத்தைப் பற்றி எழுதுகையில் என் தோழி சுந்தரியின் நினைவு வருவதைத் தவிர்க்க இயலவில்லை. அவளுடன் இக்குளத்துக்கு ஓரிருமுறை நான் சென்றிருக்கிறேன்.

எனக்கு நீச்சல் தெரியாதென்பதால், கரையில் ஏக்கத்துடன் (சற்றுப் பொறாமையுடனும் தான்) அவளைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்க, அவள் மூச்சைத் ’தம்’ கட்டிக் குளத்துக்குள் மூழ்குவதும், பின் நீந்திக் கொண்டே குளத்தைச் சுற்றி சுற்றிக் குதியாட்டம் போட்ட வண்ணமுமாய் இருப்பாள். சில சமயம் குளத்துக்குள் போனவளைக் காணோமே என நான் பதட்டத்துடன் பார்க்க, அவளோ தண்ணீருக்கடியில் தம் பிடித்துக் கொண்டே சென்று நட்டநடுவில் திடீரென்று மேலெழும்பி, அங்கிருக்கும் கோபுரத்தைத் தொட்டுக் கொண்டு சிரிப்பாள்.

எனக்குத் தெரியாத ஒன்று, அவளுக்குத் தெரிந்திருப்பதில் அலாதிப் பெருமை அவளுக்கு. ஒன்பதாவது வகுப்பில் இவள் தேர்ச்சி பெறாமையால், எனக்கும் இவளுக்கும் இருந்த நட்பில் இடைவெளி விழுந்து விட்டது.

பல ஆண்டுகள் கழித்து காரையில் இவளைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதாகச் சொன்னாள். கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அது தான் அவளுடனான கடைசிச் சந்திப்பு. தெப்பக் குளத்தின் நீர்க்குமிழி போலவே, அவளது வாழ்வும் புற்று நோய் காரணமாக அற்பாயுசிளில் முடிந்து போன விஷயம் தெரிய வந்த போது மனம் மிகவும் வேதனைக்குள்ளானது.

(தொடரும்)
 
Last edited:
தெளிந்த நீரோட்டம் போன்ற வர்ணனை..

அழகாகச் சொல்கிறீர்கள்..

தொடருங்கள் கலை..!
 
ஊர் பற்றிச் சொல்லத் துவங்கியதும் மடை திறந்த வெள்ளமெனப் பாயும் நினைவுகளும் அவற்றுக்கு ஈடு கொடுக்கும் எழுத்துக்களும் வெகு அற்புதம்.

பள்ளிக்கூட வீடும், மரங்களும் பற்றிய வர்ணனை அலாதி ரசனை. பாராட்டுகள் அக்கா.

பழகிய மனிதர்கள் பற்றிய மனம் கனக்கும் ஞபகக் குறிப்புகளோடு உங்களுடனேயே நாங்களும் பயணித்துவருகிறோம், திருநள்ளாற்றின் வீதிகளில்.

தொடரும் நினைவுகளுக்காய் ஆவலுடன் காத்திருக்கிறேன்.
 
காலத்தின் கட்டாயத்தால் தத்தம் ஊர்களைப் பிரிந்து வாழ்ந்தாலும், அவற்றின் நினைவுகளின் பெரும்பாரம் சுமந்து தவிக்கும் பலரையும் இளைப்பாற்றும் வகையில் ஓர் அருமையானத் திரியைத் துவங்கியிருக்கும் சிவாஜி அண்ணாவுக்கு என் மனம் நிறைந்த நன்றியும் பாராட்டும்.

அனைவரது ஊர்களைப் பற்றியும் அனைவரையும் அறியச் செய்யும் அற்புத முயற்சி இது.
 
அரியதோர் பதிவு நினைவலைகளின் தொகுப்பினை இந்த தொகுப்பு தொகுக்கின்ற வேளையில் நானும் சேர்ந்தே அவர்களின் நினைவலைகளிநூடே பயணிக்கிறேன் ....
 
கலையரசியின் ஊர்நினைவுகள் , நம்மை அந்த ஊருக்கே அழைத்துச் செல்கின்றன.
 
கலையரசி மேடத்தின் எழுத்தைப் பற்றி சொல்லவும் வேண்டுமா? அதுவும் மனதுக்கு நெருக்கமான தான் வளர்ந்த ஊரைப்பற்றி எழுதும்போது பாவாடைக் கட்டிய சிறுமியாகவே மாறித்தான்...வார்த்தைகளை வடித்திருப்பார்.

சொந்த ஊர் நினைவு என்பது நம்ம நாம் வாழ்ந்த அந்தக்காலத்துக்கே கொண்டுபோய்விடும் மந்திரவித்தை....அதே மந்திரவித்தையோடு மந்திரக்கோலை எழுதுகோலாய் பிடித்து எழுதியதைப்போன்ற எழுத்து. அனைத்தையும் நினைவுபடுத்தி, இடையில் நகைச்சுவையாய் தனக்குத்தோன்றிய ‘கோவிலுள்ள ஊரில் குடிருக்க வேண்டாம்’ என புதுமொழியை குறும்பாய் தெளிக்கும் எதார்த்தம்.

இடையில் பிரிந்த தோழி..நிரந்தரமாய் பிரிந்ததை வாசித்து மனம் வேதனையடைந்தது.

இன்னும் சொல்லுங்கள் மேடம்.
 
வாழ்வின் காற்றுப்போக்கில், எங்கெங்கோ புலம்பெயர நேர்ந்தாலும், சொந்த ஊர் நினைவுகள் சுகமாய், சோலைப்பசுமையாய், என்றென்றும் நெஞ்சில் தித்திக்கும்..

அத்தகைய ஒரு ஆனந்த அசைபோடலுக்கு களம் அமைத்துத் தந்திருக்கும் எங்கள் சிவாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி..!

மிக மிக உண்மை ராஜா சார்....உலகின் எங்கோ ஒரு மூலையில் சந்திக்கும் யாரோ ஒருவர் நானும் உங்கள் ஊர்தான் எனச் சொல்லும்போது ஏற்படும் ஆனந்தத்துக்கும், அந்நியோந்யத்துக்கும் அளவில்லை.

உங்கள் பதிவையும் இத்திரி பெற்றதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி ராஜா சார்.
 
ரொம்ப நன்றிம்மா கீதம் தங்கையே....இத்திரியில் உங்கள் நினைவலைகளையும் காணும்போது இன்னும் மகிழ்வேன்.

அனைவரின் எண்ணங்களையும் இங்கே ஆனந்தத் தொகுப்பாய்க் காண வேண்டுமென்ற பேராவல் எனக்கு.
 
இத்திரியைத் துவங்கி எழுதச் சொன்ன சிவாஜி சாருக்கு என் மனமார்ந்த நன்றி.

இரண்டு மூன்று பக்கங்களுக்குள் முடித்து விட நினைத்தால் அது நீண்டு கொண்டே செல்கிறது. அடுத்த பதிவில் முடிக்க முயல்கிறேன்.

இனி என் ஊருக்குச் செல்வோம்.

................................... தெப்பக் குளத்தின் நீர்க்குமிழி போலவே, அவளது வாழ்வும் புற்று நோய் காரணமாக அற்பாயுசிளில் முடிந்து போன விஷயம் தெரிய வந்த போது மனம் மிகவும் வேதனைக்குள்ளானது.

(தொடரும்)

அருமை...!!! தொடருங்கள் சகோதரி.
 
கலையரசியின் சொந்த ஊர் வர்ணனை என்னை அந்த ஊருக்கே அழைத்துச் சென்று மெய்யாக அனுபவிக்கும்படிச் செய்தது. மிக நல்ல ஊர். மிகத்துல்லிய வர்ணனை.. எழுத்துத் திறமையை தங்களிடம் கற்கவேண்டும் கலையரசி.. வியந்து நிற்கிறேன்.

தொடருங்கள்..!!
 
Back
Top