அனுபவ குறள் - புத்தகம்!!

மீனாகுமார்;264309 said:
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பைத் தரும்.


இக்குறளும் அதே கருத்துக்களையே வலியுறுத்துகின்றது.

இன்றைய நவீன தேர்வு முறைகள் இந்த தெரிந்து தெளிதலின் ஓர் அங்கமே.

அருமை மீனாகுமார் அவர்களே!

குறிப்பாய் வினாவும் கொடுத்து, ஒன்றுக்கு மேற்பட்ட விடைகளில் இருந்து
சரியானதைத் தேர்வு செய்யும் முறையில் −

இதுதான் சரி என்ற உறுதியும்
மற்றவை ஏன் தவறு என்ற தெளிவும் வேண்டும்!


உங்கள் இல்லத்துணைவி தேடும் படலத்திலும்
குறள் பின்புலத்தில் நின்று உதவியது அருமை!

வாழ்வின் எந்தச்சூழலுக்கும் ஒரு குறள் பின்னணியில் பொருந்துவது
உண்மையே..


அரிய தொடருக்கு என் பாராட்டுகள்!
 
இந்தியர்கள் கடுமையான உழைப்பாளிகள். அவர்கள் மிகவும் பலவித முயற்சி மேற்கொள்பவர்கள் என்று ஒரு வயதில் பெரிய மூத்த வெள்ளைக்காரர் ஒருவர் என்னிடம் கூறினார். நம்மிடமுள்ள ஒரு நல்லதொரு பண்பை அவர் கூர்ந்து கவனித்திருக்கிறார்.

ஒரு இந்தியர், சாலையில் இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கிறார். திடீரென்று ஒரு மரம் நடு சாலையில் விழுந்து சாலையை முழுவதுமாக மறைத்து விடுகிறது. ஒரு ஓரத்தில் இரண்டு சிறிய மரங்களுக்கிடையில் சில தடுப்புகள் இருக்கின்றன. அவைகளைக் களைந்தால் சிறிய வாகனங்கள் சென்று விடும். இந்த இந்தியர் உடனே இறங்கி அந்த தடுப்புகளை அகற்றி வாகனத்தை கிளப்பிக் கொண்டு சென்று விடுவார். அவருக்கு பின்னால் வருபவரும் அதையே பயன்படுத்தி சென்றுவிடுவார். சிறிய இடைவெளி கிடைத்தாலும் நாம் அதை சரியாக பயன்படுத்திக்கொள்வோம். ரயில்வே கேட் போட்டிருந்தாலும் நம் மக்கள் சைக்கிளைத் தூக்கிக் கொண்டு கிளம்பி விடுவார்கள். இதே மரம் வேறு வளர்ந்த நாடுகளின் சாலைகளில் விழுந்திருப்பின், யாரும் இறங்கி வந்து அதை அகற்றி செல்ல மாட்டார்கள். ஆனால், 911, 999 போன்ற எண்களை சுழற்றி காவல்காரர்கள் வந்து அப்புறப்படுத்தியபின்தான் செல்வார்கள். அதுவரை பொறுமையாக தத்தம் வாகனத்தில் அமர்ந்திருப்பர்.

இன்றைய இந்தியர்களின் வெற்றிக்கு ஆங்கிலம் தெரிந்து கல்வி கற்றலும் மட்டுமே காரணமில்லை. அதோடு கூடிய நம் கடுமையாக உழைக்கும் பண்பும், முயற்சியுடைமையுமே ஆகும்.

முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.


முயற்சி செய்யவில்லையென்றால் இல்லாமை செயலாமை என எல்லா ஆமைகளும் புகுந்து விடும்.
 
உழைத்து சாப்பிட்ட உணவே உடலில் சேரும். பிறரை ஏமாற்றி சேர்த்த பொருள் நம்மிடம் இருந்தாலும் தக்க சமயத்தில் உதவாமல் போகும் என்று கூறுவர். எது எப்படியோ... தெய்வம் உங்களுக்கு அருள் கொடுக்கவில்லையென்றாலும், நீங்கள் முயற்சி செய்து உழைத்த உழைப்பு உங்களுக்கு தக்க கூலி தரும் என்கிறது குறள்.

தெய்வத்தா னாகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.


சோம்பல் இல்லாதவன் வீட்டில் தாமரையில் வாழும் திருமகள் சென்று வாழ்வாள். சோம்பலுடையவன் வீட்டில் மூதேவி வாழ்வாள்.

மடியுளான் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளாள் தாமரையி னாள்.
 
எந்த ஒரு செயலையும் திரும்ப திரும்ப செய்யும் போது தளர்ச்சியும் சோர்வும் ஏற்படும். இவையிரண்டையும் வலிமையான மனதினால் ஆன இடைவிடாது முயற்சி மேற்கொண்டு எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடித்தல் வேண்டும். இதற்கு பிறவற்றின் துணையையும் அணுகலாம். உதாரணமாக, சோர்வு தெரியாமலிருக்க நம் முன்னோர்கள் பாட்டு பாடுவார்கள். களத்திலும் மேட்டிலும் வேலை செய்யும் போது பாடுவதற்கென்றே பல பாடல்களையும் உருவாக்கினார்கள். நாற்று நடும் போது ஒரு பாடல். அறுவடை செய்யும் போது ஒரு பாடல் என்று....

அருமை யுடைத்தன்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.


இதற்கு எதிர்மறையாக முயற்சியில்லாமல் ஒரு செயலைச் செய்யாமல் விட்டவரை இந்த உலகம் கைவிட்டு விடும்.

வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.
 
விடாமுயற்சி செய்து ஒரு செயலை செய்து முடித்து விட வேண்டும் என்ற ஊக்கம் ஒருவனிடம் இல்லையென்றால் அது கோழைத்தனம் கொண்ட பேடியின் கையில் இருக்கும் ஆண்மையில்லாத வாள் போன்றதாகும் என்கிறார் வள்ளுவர்.

தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும்
.

மேலும், விடாமுயற்சியுடையவரிடத்து பிறருக்கு உதவி செய்தல் என்ற பெருமை தரக்கூடிய பண்பு குடி கொண்டிருக்குமாம்.

தாளாண்மை யென்னுந் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை யென்னுஞ் செருக்கு.
 
கிராமங்களில் சிலர் எந்த வேலை கொடுத்தாலும் தயங்காமல் செய்து தருவார்கள். இவர்களிடம் பலர் பல்வேறு வேலைகளைச் சொல்லுவர். இவர்களுடைய சலிப்பில்லாமல் வேலை செய்யும் தன்மையால் இவர்கள் இவரைச் சுற்றியுள்ள அனைவரது உள்ளங்களையும் கொள்ளை கொண்டு விடுவர். இது போல், விடாமுயற்சியுடன் தன் அலுவல்களை மட்டுமின்றி தம் சுற்றத்தாரின் அலுவல்களையும் செய்பவன் அவர்களின் தூணாவான்.

இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றுந் தூண்.


முயற்சி இல்லாதவன் எல்லா விதியையும் நோவான். நல்ல விதி இல்லாமல் இருப்பது ஒருவருக்கு பழியன்று. ஆனால் அறிய வேண்டியதை அறிந்து முயற்சியில்லாமல் இருப்பது நீங்காத பழியைத் தரும்.

பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி.
 
வெல்லவே முடியாது என்று கருதப்படும் ஊழையும் தம் பக்கம் காண்பர், விடாமுயற்சியுடையவர்.

ஊழையும் உப்பாக்கம் காண்பர் உலைவின்றித்
தாளா துஞற்று பவர்.
 
அனைத்து குறள்களின் விளக்கம் தறகால ஏற்படி அமைந்துள்ளது அருமை நன்றி மீனாகுமார் அவர்களே
 
அடுத்து ஒரு செயலை எவ்வாறெல்லாம் ஆராய்ந்து சிறப்பாக செய்ய வேண்டும் என்பதை வினைசெயல்வகை அதிகாரத்தில் காண்போம்.

ஒரு திட்டத்தை நீங்கள் செயல்படுத்த வேண்டுமென்றால், என்னவெல்லாம் தேவை -

1. பொருள்
பணம். மற்றும் இதர பொருட்கள்.
2. கருவி
சரியான கருவிகள்.
3. காலம்
எந்த மாதம், நாட்கள், மற்றும் எவ்வளவு நாட்கள். கால அட்டவணையோடு.
4. வினை
என்ன செய்ய வேண்டும், அதை எப்படிச் செய்ய வேண்டும் என்ற அறிவு.
5. இடம்
எங்கெங்கு எதை எதை செய்ய வேண்டும் என்ற திட்டம்.

உதாரணத்திற்கு, நீங்கள் வீடு கட்டுவதாக வைத்துக் கொள்வோம். அதற்கு தேவையான பணத்தை ஏற்பாடு செய்ய வேண்டும். பின்னர், இடம். எங்கு வீடு கட்டுவது என்று. அதற்குரிய நிலத்தை வாங்க வேண்டும். கட்டுமான பணிக்கு தேவையான பொருட்களை முடிவு செய்ய வேண்டும். எந்த பொறியாளர் தலைமையில் எந்த குழு இதை செய்யும் என்பதையும் ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும். மேலும், வீட்டு திட்டம் வரைய வேண்டும். அரசாங்கத்தில் உரிய அனுமதி பெற வேண்டும். வீடு கட்டுவது என்பது வாழ்வில் ஒரு முறையோ இல்லை சில முறையோ மட்டுமே வாய்க்கும் அரிய சந்தர்ப்பமாகும். இதைப் பற்றி மட்டுமே ஒரு முழு புத்தகமே எழுதலாம். எனினும், இந்த உதாரணம், ஒரு செயலைச் செய்யத் தேவையானவைகளை அற்புதமாக நம் கண்முன் நிறுத்தும்.

பொருள்கருவி காலம் வினைஇடனோடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்
.
 
Last edited:
அடுத்து என் மனதில் நிற்கும் சில குறள்களைக் காண்போம்.

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.


பொறாமை, ஆசை, சினம், தீமைதரும் கடுஞ்சொல் இந்த நான்கையும் நீக்கி இடைவிடாமல் நிற்பதே அறமாகும்.

அறத்தை ஏன் கடைப்பிடிக்க வேண்டும் ? அறத்தை கடைப்பிடிப்பதே சான்றோர்களின் செயலாகும்.

அறத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்தால் நம் வாழ்வும் நம்மைச் சுற்றியிருப்பவர் வாழ்வும் சிறப்பாக இருக்குமென்று வள்ளுவர் கூறுகிறார். ஆகவே தான் அறத்தைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.
அறம் என்பது நேரடியாக ஒரே பொருளைக்குறிப்பதாக இல்லை. அறம் என்பது பலவற்றைக் குறிக்கும் சொல்லாகும். அறன் என்பது பற்றி பல குறள்களில் குறிப்புகளைக் காணலாம்.
 
அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்பது இல்லாயின் நன்று.


அறன் என்பது இல்லற வாழ்கையேயாகும். அதிலும் பிறர் பழிச்சொல் கூறாதிருப்பின் மிகவும் நன்மையைத்
தரும். ஆகவே இல்லற வாழ்க்கையை நல்லபடியாக நடத்திச் செல்ல வேண்டும். அதுவே சிறந்தது.

நல்ல அருமையான பழங்கள் ஓர் தட்டில் இருக்கும் போது யாராயினும் கடினப்பட்டு காய்களை எடுத்து
உண்பார்களா ? அதே போல் தான், நல்ல இனிமையான சொற்கள் இருக்கும் போது, கடுஞ்சொற்களைப்
பயன்படுத்துவதுமாகும்.

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.


பிறருக்கு இம்சை தராத சொற்களைப் பயன்படுத்துபவரை யாவரும் விரும்புவர். எவரையும் நாம் தீண்டும் போது அவருக்கும் நமக்கும் இடையே ஒரு சிறு திரைச்சுவர் உருவாகும். நல்ல சொல் திறமையுடையவர் இது போன்ற கடுமையான சொற்களைப் பயன்படுத்தி யாரையும் புண்படுத்தமாட்டார். இத்தகைய குணத்தைக் கொண்டவருக்கு நன்மை அடுத்த பிறவியிலும் வந்து சேரும் என்கிறது குறள்.

சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பந் தரும்.


உறவினராயிருப்பினும், நண்பராயிருப்பினும் ஒருவருக்கு தகுந்த நேரத்தில் தக்க உதவி செய்தால் அது உலகத்தை விட மிகப் பெரியதாகும்.

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.


இந்த உதவி செய்தவரைக் காட்டிலும் உதவி பெற்றவருக்குத் தான் இதன் மகிமை விளங்கும்.
 
மனிதன் நிலத்தை என்னவெல்லாம் செய்கிறான். தோண்டுகிறான், துளையிடுகிறான், உருக்குலைக்கிறான்... ஆனால் அந்த நிலம் இவனை ஏதாவது திருப்பிச் செய்ததா ? அவன் செயல்கள் யாவையும் நிலமானது பொறுத்துக் கொள்கிறது. இத்தகைய குணத்தைப் போன்று தம்மை இகழ்பவரையும் பொறுத்துக் கொள்வது ஒருவருடைய மிகச் சிறந்த பண்பாகும்.

அகல்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகல்வார்ப் பொறுத்தல் தலை.


பிறர் செய்யும் தீங்கை நாம் மன்னித்து விடுதல் வேண்டும். செருக்கினால் தீமைகளை ஒருவர் செய்யும் போது அதை நம் பொறுமையினால் வெல்ல வேண்டும். இதே கருத்தை பல குறள்களில் வலியுறுத்துகிறது குறள்.

இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.


விருந்தினரைப் போற்றாமல் இருப்பது வறுமையுள் வறுமையாகும். அதே போல் அறிவில்லாதவர் செய்யும் செயல்களைப் பொறுத்திருப்பது வன்மையுள் வன்மையாகும்.

எப்போதாவது அல்லது எந்த சூழ்நிலையிலாவது பிறருக்குத் தீமை செய்யாலாமா ? மறந்தும் கூட கூடவே கூடாது என்கிறார் வள்ளுவர். அவ்வாறு செய்தால் அத்தீமையை எண்ணியவருக்கே தீமை வந்து செய்யுமாறு செய்யும் அறம்.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு.
 
இன்னும் என் மனதைக் கவர்ந்த பல குறள்கள் உள்ளன. ஆனால், அவையெலாம் எழுதுவதற்கு இன்னும் பல காலமாகலாம். இருப்பினும் நான் சொல்ல வந்த கருத்தை தெளிவாக எடுத்துரைத்த திருப்தி இருக்கிறது. இதன் முடிவுரையாக, திருக்குறளை இன்று எப்படிப் பயன்படுத்துவது என்பதைக் கொடுக்கிறேன்.

முடிவுரை:

இன்று திருக்குறளைப் பயன்படுத்துவது எப்படி -

காலத்தை வென்ற குறள் ஒவ்வொரு காலத்திலும் அதன் சூழ்நிலைகளுக்கு ஏற்ப பொருளைத் தந்து மனிதருக்கு உதவியாயிருப்பது யாவருமறிந்த ஒன்று. இக் குறள் தற்போதைய காலத்திற்கு பொருந்தும் வகையில் பலர் பல வகைகளில் திருக்குறளைக் காண்கிறார்கள். சிலர் ஒரு திருக்குறளை எடுத்துக் கொண்டு பல ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். ஒரு சில குறள்களின் முழு ஆழத்தினை இன்னும் உணரமுடியவில்லை என்பது ஒரே குறளுக்கு பலர் பலப்பல புது அர்த்தங்கள் கொடுப்பதிலிருந்து தெரிகிறது.

அறிவுரை கேட்பது கடினமானது தான். வாழ்க்கை ஆனந்தமாக செல்லும் போது அறிவுரைகள் தேவைப்படாது. அதே வாழ்க்கையில் புயல் அடித்து தவிக்கும் போது ஆதரவு தோள்களும் அறிவுரைகளும் தேவைப்படும். இதே அறிவுரைகளை முதலிலேயே அறிந்து வாழ்வில் கடைப்பிடித்தால், பின்னால் வரப்போகும் துன்பங்களில் இருந்து தப்பிக்கவும் அதைக் கையாளவும் உறுதுணையாக இருக்கும். அப்போது வாழ்வு தொடர்ந்து இனிக்கும்.

திருக்குறள் உலகப்புகழ் பெற்றது என்பதை யாவருமறிவர். இதனாலேயே இப்போது திருவள்ளுவர் தம் இனத்தவர், தம் மதத்தவர், தம் சாதிக்காரர் என்று பலர் கூறிக் கிளம்பியிருக்கிறார்கள். இவர்கள் வள்ளுவர் கூறியிருக்கும் திருக்குறளிலேயே உதாரணத்தையும் எடுத்துக் கூறுகிறார்கள். இன்னும் சிலர் திருவள்ளுவர் ஒருவரே அல்லர். அவர் பல முனிவர்கள் கூறியதை வெறுமனே தொகுத்தவர் என்றும் புதுப்புது கதைகள் விடுகின்றனர். இது சான்றோர்களுக்கு உகந்த செயல் அல்ல. திருவள்ளுவர் எவராயிருந்தாலும் அவர் கூறிய கருத்துக்களை எடுத்து அவற்றை தம் வாழ்வில் கடைப்பிடித்து வருவதுதான் தகுந்த செயலாகும்.

திருக்குறள் நமது பொக்கிஷம். திருக்குறளை நன்றாக ஆராய்ந்து ஒவ்வொரு துறைக்கும் எப்படி இது பொருந்தும் என்பதையும் நல்ல நூற்களாக உருவாக்கி, அதன் பெயரில் நல்ல பாடத்திட்டங்களும்(Courses) உருவாக்கி சான்றிதழ்களும்(Certification, Just like Project Management Courses in the west) வழங்கிட வேண்டும். இந்த சான்றிதழ்கள் வேலை பார்க்கும் இடங்களில் பெருமை மிக்கதாக கருதப்பட வேண்டும்.

சிவகாசியில் இருக்கும் நீங்கள் சென்னைக்கு செல்வது எப்படி என்று என்னைக் கேட்பீர்களேயானால், என்னால் வரைபடம் கொடுத்தும், செல்வதற்கான வழிமுறைகள் கொடுத்தும் உதவமுடியும். ஆனால், நீங்கள் தான் அதைப் பயன்படுத்தி தலைநகர் சென்னைக்கு செல்ல வேண்டும். அதே போல் தான், நான் திருக்குறளில் இருந்து பத்து சதவிகித குறட்களை எடுத்து எப்படி நமது வாழ்வில் பயன்படுத்தலாம் என்பதை இங்கே அனுபவ குறளாக கொடுத்திருக்கிறேன். திருக்குறள் கடலில் சில மீன்களை உங்களுக்கு பிடித்து கொடுத்து அதை மேலும் எப்படி பிடிக்க வேண்டும் என்பதையும் கூறிவிட்டேன். நீங்கள் திருக்குறளை பயன்படுத்தி உங்கள் வாழ்வில் வெற்றியும் இன்பமும் காண எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

முற்றும்.

நன்றி,
ஆக்கம்: மீனாகுமார்.
 
Last edited:
மீனாகுமார் திருகுறள் விளக்கத்தை நீங்கள் உங்கள் ஸ்டைலில் செய்து வ்ந்தீர்கள். அதை முற்றும் என்று பார்த்தவுடன் வருத்தம் அடைந்தேன். இன்றை நவீன வாழ்கையில் உங்கள் அளவுக்கு யாராலும் விளக்க முடியாது.
ஆனால் நீங்கள் கடைசியில் சொன்னீர்களே ஒரு வார்த்தை மீன் பிடிக்க தான் கற்று கொடுப்பேன், பிடித்து தந்து கொண்டே இருக்க மாட்டேன் என்று அந்த வாக்கியம் மிக முக்கியமானது. சுலபமாக நீங்கள் சொல்வதை மட்டும் படித்து கொண்டிருந்தால் பலன் கிடைக்காது. அதை நம் அனுபவத்தில் இருந்து உனர்ந்து கொண்டு தான் அடாப்ட் செய்ய வேண்டும் என்பதை கூறி முடித்த உங்களை பாராட்டுவதோடு நில்லாமல் இந்த தெய்வீக பனிக்கு உங்களுக்கு 1000 இபணம் என் மகிழ்ச்சிக்காக* தருகிறேன்
 
முற்றும்.
நன்றி,
ஆக்கம்: மீனாகுமார்
இதுக்காகவே காத்திருந்தேன். இனி முழு விருந்தையும் ருசிக்கவேண்டியதுதான். நன்றி மீனாகுமார்.
(படுக்கும்போது அப்பபோ தனி மடலிலும் இங்கேயும் தொல்லை கொடுப்பேன். இப்பவே அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றேன்)
 
அனுபவக் குறள்கள் அனுபவிக்க வைத்த குறள்கள்...
முற்றும் என்பதில் முற்றுப்புள்ளியிட்டு, எமக்குத் தொடக்கப்புள்ளி ஆக்கிவிட்டீர்கள்...
மிக்க நன்றி...
பாராட்டுக்கள்...
(இறுதியான பதிவுகள் இன்னமும் கொள்ளவில்லை. நிச்சயம் கொள்ளுவேன்...)
 
அற்புதமான ஒரு பாதுகாக்கப்படவேண்டிய பதிவு.குறளின் குரலாக ஒலித்த மீனாகுமார் அவர்களுடைய இந்த முயற்சி மிக மிக பாராட்டப்பட வேண்டியது. எவ்வளவு அழகாக,எவ்வளவு விளக்கமாக...எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தார்போல்..இந்நாளைய உதாரணங்களுடன் எந்நாளும் பயன்படும் வகையில் மீனாகுமார் அவர்களின் பதிவு இருக்கிறது. மனம் நிறைந்து பாராட்டுகிறேன்.
 
குறள் கொண்டு நவின வாழக்கை அர்த்தங்கள் கொடுத்த தங்களின் படைப்பு மிகவும் முக்கிய பதிவு வருங்காலத்தில் பலருக்கு பயனுள்ளதாக அமையும் வாழ்த்துக்கள்
 
என்னோடு கூடவே வந்து, எனக்கு தொடர்ந்து ஊக்கமளித்த அனைத்து நெஞ்சங்களுக்கும் மிக்க நன்றி.

எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கேளுங்கள்.. அமரன். எனக்கும் சிந்திக்க கூடிய வாய்ப்பு அது.
 
அன்பு மீனாகுமார்,

இந்த அரிய தொடருக்கு உங்களை எத்தனைப் பாராட்டினாலும் தகும்..

இன்றைய தலைமுறைக்கான குறள் விளக்க தலைமைப் பதிவு இது..

இதைத் தொகுத்து நூலாக்க என் பரிந்துரை...

உங்களுக்கு வந்தனமும் பாராட்டும் நன்றியும் சமர்ப்பிக்கிறேன்..
 
Back
Top